
Post No. 15,494
Date uploaded in Kumbakonam, India – 14 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (43)
ராமாயணத்தில் வரங்கள் (43) விஸ்வகர்மா நளனின் அன்னைக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘அணை கட்டுவதும் ஸமுத்திரத்தைத் தாண்டுவதும்’
என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் விஸ்வகர்மா நளனுடைய அன்னைக்கு அளித்த வரம் பற்றிய இன்னொரு குறிப்பையும் காண்கிறோம்.
நளன் ஶ்ரீ ராமரிடம் தன்னைப் பற்றி விரிவாகக் கூறுகிறான்.
“நான் விஸ்தாரமான சமுத்திரத்தின் மீது தந்தையினது சாமர்த்தியத்தை உபயோகித்து அணையைக் கட்டுவேன். மந்தர மலையில் விஸ்வகர்மாவினால் எனது அன்னைக்கு கொடுக்கப்பட்ட வரமாகிய (அனுக்ரஹமாகிய) நான் அவரது ஔரஸ புத்திரன். விஸ்வகர்மாவிற்குச் சமமானவன்” என்று இப்படி நளன் கூறுகிறான்.
மம மாதுர்வரோ தத்தோ மந்தரே விஸ்வகர்மணா!
ஔரஸஸ்தஸ்ய புத்ரோஹம் சத்த்ருஷோ விஸ்வகரமணா ||
யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண் 50
மந்தரே – மந்தர மலையில்
விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவினால்
மம – எனது
மாது: – அன்னைக்கு
தத்த: – கொடுக்கப்பட்ட
வர: – வரமாகிய (அனுக்ரஹமாகிய)
அஹம் – நான்
தஸ்ய – அவரது
ஔரஸ – ஔரஸ\
புத்ர: – புத்திரன்
விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவிற்கு
சத்ருஷ: – சமமானவன்
நளன் மேலும் அடக்கமாகக் கூறிக் கொள்கிறான்:”சமுத்திரராஜன் உள்ளது உள்ளபடி சொன்னான். ஆகவே நான் நினைப்பூட்டப்பட்டவனாக ஆகிறேன். அன்றியும் பிறரால் சொல்லப்படாதவனாய் எனது குணங்களை நானே சொல்லிக் கொள்ள மாட்டேன். சமுத்திரத்தின் மீது சேதுவை கட்ட நான் வல்லமை உள்ளவன். ஆகவே இப்பொழுதே வானரோத்தமர்கள் சேதுவைக் கட்டட்டும்.”
இதனால் திருப்தி அடைந்த ராமர் அணை கட்ட ஆணை இட்டார். உடனே வானரர்கள் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று மரங்களைப் பெயர்த்து இழுத்து வந்தனர்.
சேது அணை கட்டுவதானது ஆரம்பம் ஆயிற்று.
இந்த ஸ்லோகத்தில் விஸ்வகர்மா நளனது அன்னைக்கு வரம் கொடுத்த செய்தி மட்டும் உள்ளது. நளனது அன்னையைப் பற்றியோ அல்லது எதற்காக எப்பொழுது இந்த வரம் கொடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் இல்லை.
நளனது அன்னை வரம் பெற்ற செய்தியை மட்டும் இங்கு நாம் அறிகிறோம்.
*