WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,506
Date uploaded in London – 18 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (44)
ராமாயணத்தில் வரங்கள் (44) இந்திரன் ஜாம்பவானுக்கு வரம் அளித்தது!
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘அணை கட்டுவதும் ஸமுத்திரத்தைத் தாண்டுவதும்’
என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் மூன்று வரங்கள் பற்றிப் பார்த்தோம். அடுத்து ‘வானரர்களது பராக்கிரமம் முதலியவற்றைச் சொல்வது’ என்ற இருபத்தியேழாவது அத்தியாயத்தில் இந்திரன் ஜாம்பவானுக்கு அளித்த வரம் பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.
இராமர் கடலைக் கடந்து இலங்கையை அடைந்ததைக் கேட்ட இராவணன் தன் ஒற்றர்களான சுகன், சாரணன் ஆகிய இருவரை அழைத்து வானர சேனையின் வலிமையை அறிந்து வருமாறு ஆணையிடுகிறான்.
அதன்படியே எண்ணற்ற வானரர்கள் கொண்ட சேனையை அந்த இரு ஒற்றர்களும் ஒளிந்திருந்து பார்வையிடுகின்றனர். இதைக் கண்ட விபீஷணன் அந்த இருவரையும் பிடித்து ராமர் முன்னே நிறுத்தி, “இவர்கள் இராவணனின் ஒற்றர்கள்” என்று கூறுகிறான்.
ராமர் புன்னகை புரிந்தவாறு அவர்களை விட்டுவிடச் சொல்கிறார்.
அவர்களை நோக்கி, “சேனையின் வலிமையை உள்ளது உள்ளபடி இராவணனிடம் சொல்வீராக” என்கிறார்.
அவர்களும் இராவணனிடம் வந்து வானர சேனையின் வலிமையைப் புகழ்ந்து கூறி யுத்தம் வேண்டாம் என்கின்றனர்.
அவர்கள் ஜாம்பவானைப் பற்றிக் கூறும் போது, இந்திரனிடமிருந்து ஜாம்பவான் பல வரங்களைப் பெற்றவன் என்று குறிப்பிடுகின்றனர் இப்படி:-
ஏதேன சாஹ்யம் சுமஹத்க்ருதம் ஷக்ரஸ்ய தீமதா |
தைவாஸுரே ஜாம்பவதா லப்தாஸ்ச பஹவோ வரா: ||
தீமதா – புத்திமானான
ஏதேன – இந்த
ஜாம்பவதா – ஜாம்பவானால்
தைவாஸுரே – தேவாசுர யுத்தத்தில்
ஷக்ரஸ்ய – இந்திரனுக்கு
சுமஹத் சாஹ்யம் – பேருதவி
க்ருதம் – புரியப்பட்டது
ச – அந்தக் காரணத்தினால்
பஹவ வரா: – பல வரங்களும் அவனால் அடையப்பட்டன.
யுத்த காண்டம் 27ம் அத்தியாயம் ஸ்லோக எண் 12
இப்படி ஜாம்பவானின் பெருமை கூறப்படுகிறது. இந்திரனால் அவன் பல வரங்கள் அடையப்பட்டான் என்பது கூறப்படுகிறது.
ஆனால் வரங்களைப் பற்றிய வேறு குறிப்புகள் இல்லை. எங்கு, எப்போது, எத்தனை வரங்கள் எதற்காக ஜாம்பவானுக்கு அளிக்கப்பட்டன என்ற விவரங்கள் இல்லை.
*