Post No. 15,538
Date uploaded in London – 27 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சுபாஷிதச் செல்வம்
பெண் மனத்தை யாரே அறிவார்?
ச. நாகராஜன்
பெண் மனத்தை யாரே அறிவார்?
கங்காயா வாலுக்யாம் வார்தரே ஜலம் மானம் மஹாகிரே:!
மதிமந்தோ விஜானந்தி மஹிலாயா மனஸ் து ந ||
புத்திசாலிகள் கங்கையின் கீழ் எவ்வளவு மணல் இருக்கிறது என்பதைச் சொல்லி விடுவார்கள். கடலில் எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைச் சொல்லி விடுவார்கள். மலையின் உயரம் எவ்வளவு இருக்கிறது என்பதையும் சொல்லி விடுவார்கள். ஆனால் ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் சொல்ல முடியாது!
தீயோருக்கு உடலெல்லாம் விஷம்!
தக்ஷாகஸ்ய விஷம் தந்தே மக்ஷிகாயா: ச மஸ்தகே |
வ்ருச்சிகஸ்ய விஷம் புச்சே சவாங்கே துர்ஜனஸ்ய து ||
ஒரு பாம்பின் விஷம் அதன் நச்சுப் பல்லில் இருக்கிறது. ஒரு விஷத் தேனீயில் விஷமானது அதன் தலையில் இருக்கிறது. ஒரு தேளின் விஷம் அதன் வாலில் இருக்கிறது. ஆனால் ஒரு தீயவனின் விஷமோ அவன் உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது.
செயலின் உயர்வு!
கச்சன் பிபீலகோ யாதி யோஜனானாம் ஷதான்யபி |
ப்ரகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி ||
ஒரு எறும்பானது மெல்ல நகர்ந்து செல்லும் போது அது பல யோஜனை தூரத்தைக் கடக்கிறது. பக்ஷிகளின் அரசனான கருடனோ கொஞ்சம் கூட நகராத நிலையில் ஒரு அடி கூட செல்லாது.
ஒரு யோஜனை என்பது ஒன்பது மைல் தூரம் ஆகும்.
கங்கையின் புனிதம்!
கங்கே தவ ந விவேகோ யத் த்வம் திவ்யான் கரோஷி பாதகின:|
விதிதர்மராஜஷாஸனமபி ஸ்தகயஸி ப்ரஸஹாத்ர ||
ஓ, கங்கா! உனக்கு பாகுபாடே கிடையாது. பாவிகளைக் கூட நீ தெய்வீக நிலையை அடையச் செய்கிறாய். நீ வலிமையுடன் விதி மற்றும் தர்மராஜாவான யமனின் ஒழுங்குமுறைகளைக் கூடத் தகர்க்கிறாய்.
கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி |
முச்யதே சர்வபாபேப்யோ விஷ்ணுலோகம் கச்சதி ||
கங்கா, கங்கா என்று தெய்வீகமான பெயரை உச்சரிக்கும் ஒருவன் நூறு யோஜனை தூரத்திலிருந்து அதைச் சொன்னாலும் அவன் அனைத்துப் பாவங்களிலும் விடுபடுகிறான்; விஷ்ணுவின் லோகத்தை அடைகிறான்!
**