ராமாயண தத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்! பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!(Post.15,543)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,543

Date uploaded in London – 28 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

26-3-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா 20-4-1975 ஶ்ரீ ராம நவமி அன்று ப்ருந்தாவனில் ஆற்றிய அருளுரை! 

ராமாயண தத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்! பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! 

ச.நாகராஜன்                 

ராமாயணம் ஒரு ஆழ்ந்த தெய்வீகமான உள்ளர்த்தத்தைக் கொண்டதாகும். 

தசரதன் என்றால் பத்து குதிரைகள் பூட்டப்பட்டுள்ள ரதத்தில் செல்பவர் என்று அர்த்தமாகும்.  அதாவது மனிதன் என்று பொருள்.

அவர் மூன்று குணங்களால் கட்டப்பட்டுள்ளார். அந்த குணங்களே அவரது மூன்று மனைவிகளாவர். 

அவருக்கு நான்கு மகன்கள் உண்டு. அவையே புருஷார்த்தமாகும்.

தர்மம் (ராமர்), அர்த்தம் (லட்சுமணன்), காமம் (பரதன்), மோக்ஷம் (சத்ருக்னன்).

கடைசியில் உள்ள மோக்ஷம் என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொண்டே

இந்த நான்கு குறிக்கோள்களும் மனிதனால் முறையாக உணரப்பட வேண்டும்.

லட்சுமணன் புத்தியை பிரதிநிதித்வம் செய்ய சீதை சத்தியத்தை பிரதிநிதித்வம் செய்கிறாள்.

ஹனுமானே கட்டுப்பாடுடன் பயிற்சி செய்யப்பட்ட தைரியம் என்னும் களஞ்சியமான மனம் ஆகும். ஹனுமானின் எஜமானரான சுக்ரீவன் பகுத்தறியும் திறனாகும். இவை அனைத்தும் தனக்கு உதவியாக இருக்க. ராமர் மறைந்திருக்கும் சத்தியத்தைக் கண்டு வெற்றியை அடைகிறார். இதுவே ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த இதிஹாசம் தரும் பாடமாகும்.

ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தில் ஒளிர்விடும் தர்மம் என்ற இந்த லட்சியத்தின் உயரிய அடிப்படையில் தான் இந்த தேசத்தின் பண்பாடு தன் அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இவற்றால் தான் மனிதனை அணிவித்து இறைவன் வழி காட்டுகிறார்.

இந்த இந்தியப் பண்பாட்டை விளக்கும் விதமாக மாபெரும் வீரனான அலெக்ஸாண்டரைப் பற்றிய கதை ஒன்று உண்டு.

இந்தியாவில் இருந்த போது இங்குள்ள கிராமங்களுக்கு முன் அறிவிப்பின்றி செல்வது அவனது பழக்கமாகும். விதி அவனை இங்கு அழைத்துக் கொண்டு விட்டதால் இந்த தேசத்தில் உள்ளோரின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் தெரிந்து கொள்ள அவன் விரும்பினான்.

ஒருநாள் அவன், ஒருவன் இன்னொருவனிடம் தங்கம் நிரம்பிய ஒரு பானையைக் கொடுத்து அதை ஏற்குமாறு கெஞ்சிக் கொண்டிருந்ததைக் கண்டான். அடுத்தவனோ அந்தப் பானையை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அந்தப் பானை இன்னொருவனிடமிருந்து அந்தப் பானை வைத்திருந்தவனுக்கு விற்கப்பட்ட நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அலெக்ஸாண்டர் அறிந்தான். நிலத்தை வாங்கியவன் தான் வாங்கியது நிலத்தை மட்டுமே தான் என்றும் ஆகவே அந்தப் பானை தனக்குச் சொந்தமில்லை என்றும் விவாதித்துக் கொண்டிருந்தான்.  விற்றவனோ நிலத்தை விற்று விட்ட பின்னர் அதற்குள் என்ன இருந்தாலும் அது தனக்குச் சொந்தமில்லை என்று உறுதிபடத் தெரிவித்து விட்டான்.

அலெக்ஸாண்டர் இந்த விவாதத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான். விவாதம் ஒரு முடிவுக்கு வரும் வழியாயில்லை.

கடைசியில் இதற்கு ஒரு முடிவு கட்ட கிராமத்தில் உள்ள பெரியவர்கள் அழைக்கப்பட்டனர். அலெக்ஸாண்டர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் பெரியவர்கள் சுலபமாக சந்தோஷம் தரும் ஒரு முடிவைக் கண்டனர்.

விற்றவனின் மகளை வாங்கியவனின் மகன் மணம் முடிக்க வேண்டும் என்பது தான் பெரியவர்கள் சொன்ன தீர்ப்பு. தங்கப்பானை வரதட்சிணையாக மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றனர் அவர்கள்!

அலெக்ஸாண்டர் மனிதனின் புனிதத் தன்மை எந்த அளவுக்கு உயர முடியும் என்பதை அறிந்து புளகாங்கிதம் அடைந்தான். நாடு பிடிக்கும் ஆசையுடன் தான் ஒவ்வொரு தேசமாக வந்து படைபலத்தால் அங்குள்ள சொத்துக்களை கொள்ளை அடிப்பதை நினைத்து அவன் வெட்கம் அடைந்தான்.

இந்தியாவின் அடித்தளமாக அமைந்துள்ள பழம்பெரும் பண்பாடு பற்றி அனைவரும் அறிய வேண்டும். அதை ஒவ்வொரு இந்தியனும் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் இது கற்பிக்கும் பாடம் பரவி, உலகம் முழுவதும் நலன் அடையும்.

++

Leave a comment

Leave a comment