உணவருந்தும் பழக்கத்தை விளக்கும் இடாடாகிமாஸ்! (ITADAKIMASU)(Post.15,547)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,547

Date uploaded in London – 29 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் பிப்ரவரி 2026 இதழில் வெளியான கட்டுரை! 

உணவருந்தும் பழக்கத்தை விளக்கும் இடாடாகிமாஸ்! (ITADAKIMASU) 

ச. நாகராஜன் 

இடாடாகிமாஸ் என்பது ஒரு ஜப்பானிய வார்த்தை. இது ஒருவர் சாப்பிடும்போது எப்படி அதை ஏற்று அருந்த வேண்டும் என்ற ஜப்பானியரது பாரம்பரிய பழக்கத்தைப் பற்றி விளக்கும் வார்த்தை. 

இந்த வார்த்தையின் அர்த்தம் – நான் பணிவுடன் பெறுகிறேன் என்பதாகும்.

நமக்குக் கிடைக்கும் உணவை எப்படி அது கிடைத்தது என்பதை நினைத்து உண்ண வேண்டும். அந்த உணவு உருவாகக் காரணமான விவசாயிகள், கறிகாய் தோட்டத்தில் வேலை பார்ப்போர், சமைக்கின்றவர்,அந்த உணவு உருவாகக் காரணமான உப பொருள்கள் ஆகிய அனைத்தையும் நன்றியுடன் ஒரு கணம் உண்பதற்கு முன்னர் நினைக்க வேண்டும்.

 இந்திய பாரம்பரியமும் கூட இதை வலியுறுத்துகிறது. உணவு வகைகள் பரிமாறப்பட்டவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்திய பின்னரே அதை உண்ண ஆரம்பிப்பது இந்தியர்களின் பாரம்பரியப் பழக்கமாகும்.

 அன்னம் பரபிரம்மம் என்பது நமது அறநூல்கள் கூறும் தத்துவம். அதாவது அன்னமே தெய்வம்; உணவானது பிரம்மத்தின் வடிவம் என்று பொருள்.

 வீட்டிலோ அல்லது ஒரு விருந்திலோ உணவையும் அதை அளிப்பவரையும் மதிக்கும் ஒரு பண்பே இடாடாகிமாஸ். தெளிவான மனநிலை என்னும் மைண்ட்ஃபுல்நெஸ்ஸுடன் உணவருந்தும் போது அது உடலுக்கு வலிமையையும் சக்தியையும் தருவதோடு உள்ள மேம்பாட்டையும் நல்குகிறது.

 இப்படிச் சாப்பிடும் போது தேவையான அளவே நாம் சாப்பிடுகிறோம்.

சுவைத்து, அதை நன்கு ஜீரணமாகும் படி கடித்துச் சாப்பிடுகிறோம்.

உணவின் மீது கவனத்துடன் மெதுவாகச் சாப்பிடுகிறோம்.

 டிவியைப் பார்த்தவாறோ அல்லது புத்தகத்தைப் படித்தவாறோ சாப்பிடக் கூடாது. மொபைல் போனை தூர வைத்து விட வேண்டும்.

 அவசரம் அவசரமாக உணவை விழுங்கி விட்டு அரக்கப் பரக்க ஓடும் இந்த வேக யுகத்தில் ஜீரணம் சம்பந்தமான வியாதிகள் வராமல் இருக்க ஒரு நல்ல வழி இடாடாகிமாஸ்!

 உணவு சமைப்பவரும் கூட உணவு தயாரிக்கும் உப பொருள்களின் மீது கவனத்தைச் செலுத்தி சமைக்கும் முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது இந்த இடாடாகிமாஸில் தான்! 

விருந்தை உண்டு முடித்த பின்னர் இடாடாகிமஷிடா என்று சொல்லி ஜப்பானியர் உணவை முடிப்பர்.

இந்தச் சொல்லுக்கான அர்த்தம் நான் விருந்தை பெற்றுக் கொண்டேன் என்பதாகும். 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பான் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது இந்தப் பழக்கம் பிரபலமானது.

அனைவரும் உணவைப் போற்றி மதிக்கவே இந்த பிரச்சினையை சுலபமாக ஜப்பான் சமாளித்தது. இரண்டாம் உலகப் போரின் போதும் ஜப்பானியர் உணவை இடாடாகிமாஸ் பழக்கத்தின் மூலம் வெகுவாக மதித்து தேவையான அளவே மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

 புத்த மதம் பரவலாகப் பரவிய போது அனைவரும் இந்தப் பழக்கத்தை ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 

உலக நாடுகள் இடாடாகிமாஸ் பழக்கத்தை இப்போது பெரிதும் மதித்துப் போற்ற ஆரம்பித்துள்ளன!

***

Leave a comment

Leave a comment