
Post No. 15,548
Date uploaded in London – 29 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 59
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 59
***
விபூதி பூசாத தமிழ்நாடு
பால் அறாத் திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே …
(பார்வதி தேவியின்) முலைப்பால் மணம் நீங்காத திருவாயால் நீ
(திருஞானசம்பந்தராக வந்து) பாடிய பாடல் உள்ள ஏடு (வைகையாற்றின்) நீரை எதிர்த்துப் போகவும்,
வாது செய் பாடல் தோற்ற இரு நாலாம் ஆயிரம் சமண் மூடர்
பாரின் மேல் கழு மீதே ஏறிட … வாது செய்த பாடலுக்குத் தோற்ற
எண்ணாயிரம் சமண மூடர்கள் இப்பூமியில் கழு மேல் ஏறவும்,
நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட பாதுகாத்து … திருநீற்றை
இடாதிருந்த தமிழ் நாடு ஈடேற (திரு நீறு அனைவருக்கும் தந்து)
பாதுகாத்து,
அருளாலே கூன் நிமிர் இறையோனும் ஞாலம் ஏத்தியதோர்
மா தேவியும் ஆலவாய்ப் பதி வாழ்வாமாறு எ(ண்)ணும் … உனது
திருவருளால் கூன் நிமிர்ந்த பாண்டியன் நெடுமாறனும், உலகெலாம்
போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவியான (பாண்டியன் மனைவி)
மங்கையர்க்கரசியும், திருஆலவாய் என்ற மதுரையில் உள்ளவர்களும் நல் வாழ்வு அடையும்படி திருவுள்ளத்தில் நினைந்தருளிய
ஞான பாக்கிய பாலா வேலவ மயில் வீரா ஞான தீக்ஷித
சேயே … ஞான பாக்கிய பாலனே, வேலனே, மயில் வீரனே, ஞான
அறிவுரைகளைச் செய்த குழந்தையே,
காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ நாடு போற்றிய
பூவாளூர் உறை பெருமாளே. … காவிரி ஆறு நிறைந்து வரும்
கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள
பூவாளூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* பூவாளூர் லால்குடிக்கு அருகில் உள்ளது.
***
மலைகளுக்கு இடையே போட்டி
கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும்
குறும் தும்பையும் கொன்றையும் கமழ் சடில சம்புவும் கும்பிடும்
பண்புடைக் குரு நாதா … கூட்டமான படங்களை உடைய பாம்பும்,
கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய
தும்பையும், கொன்றை மலரும் நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே,
கன குடகில் நின்ற குன்றம் தரும் சங்கரன் குறு முனி
கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதி செய் … சிறப்பு வாய்ந்த
குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த
கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த*
நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே. … காவிரி
நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில்** வீற்றிருக்கும்
பெருமாளே.
* நாரதர் சூழ்ச்சியால் விந்திய மலை மேரு மலைக்குப் போட்டியாக உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் காவிரியை அழைத்து ஒரு கமண்டலத்தில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அகத்தியர் தென் தேசத்துக்குச் சென்று காவிரியின் நீரைப் பரப்பினார்.
** திருச்சிக்கு மேற்கே உள்ள குழித்தலைக்கு வடமேற்கே 1 மைலில் உள்ளது.
***
மகாபாரதக் கதைச் சுருக்கம்
பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட … தருமன் முதலாய பஞ்ச பாண்டவர்களை கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள,
சகுனி கவறால் பொருள் பங்கு உடை அவனி பதி தோற்றிட …
சகுனி ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும், ஊர்களையும் தோற்றுப் போனதினால்,
அயலே போய்ப் பண்டையில் விதியை நினையாப்
பனிரண்டுடை வருஷ முறையாப் பல பண்புடன் …
வேற்றிடத்துக்குச் சென்று தமது பண்டைய விதியை நினைத்து,
பன்னிரண்டு ஆண்டுகள் பல விதமான விதங்களில் இருந்து,
மறைவின் முறையால் திருவருளாலே வஞ்சனை நழுவி நிரை
மீட்சியில் … அஞ்ஞாத வாசமாக (ஓராண்டு சென்றபின்) இறைவன்
திருவருளால் சபத நாள் (13 ஆண்டுகள்) முடிவு பெற, (துரியோதனால் கவரப்பட்ட) பசுக்களை மீட்டபின்,
முந்து த(ம்) முடைய மனை வாழ்க்கையில் வந்த பின் உரிமை
அது கேட்டிட இசையா நாள் … முன்பு தங்களுக்கு இருந்த இல்லற
நிலையில் வந்த பிறகு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, (அதற்குத் துரியோதனன்) இணங்காத நாளில்,
மண் கொள விசையன் விடு தேர்ப் பரி உந்தினன் மருக
வயலூரக் குக … அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, போரில்
அர்ச்சுனன் விட்ட தேரின் குதிரையைச் சாரதியாகச் செலுத்திய
திருமாலின் மருகனே, வயலூரில் உள்ள குகனே,
வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே. … தேவர்கள்
சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில்* உறையும் பெருமாளே.
இப்பாடலில் மகாபாரத கதைச் சுருக்கத்தைக் காணலாம்.
***
கொங்கணச் சித்தர் செய்த அற்புதம்

மூலமெனக் கருடனில் ஏறி விண் பராவ அடுக்கிய மண்
பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே … ஆதி
மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம்
போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த
யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும்
திருமாலின் மருகனே,
கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின்
வீர கண ப்ரிய குமரா … கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்)
தரப்பட்ட*3 கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும்
மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே, குமரனே,
பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி …
கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களை அணைந்தவனே,
செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே. … செழிப்பான
கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்*4 வீற்றிருக்கும் பெருமாளே.
கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிரம் முதலிய
உலோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தார். எனவே இங்ஙனம் கூறப்பட்டுள்ளது.
(*4) ‘ராஜபுரம்’ இப்போது ‘ராசிபுரம்’ என வழங்கப்படுகிறது. இது சேலம் ரயில் நிலையத்திலிருந்து 20 மைலில் உள்ளது.
***
கொங்கணச் சித்தர், போகரின் சீடரான பதினெண் சித்தர்களில் ஒருவர், உலோகங்களை தங்கமாக மாற்றும் இரசவாதம் (Alchemy) மற்றும் முருகப் பெருமானை நேரில் தரிசித்து வரம் பெற்ற அற்புதங்களுக்குப் பெயர் பெற்றவர்.
பொன்மயமான திருப்பதி: கொங்கணச் சித்தர் திருப்பதி திருமலையில் தவம் செய்து, முருகப் பெருமானின் அருளால் அந்த இடத்தையே தங்கமயமான பொன்னாக மாற்றினார்.
இரசவாதம்: இவர் இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை தெரிந்தவராக (இரசவாதம்) அறியப்படுகிறார்.
முருகன் தரிசனம்: கொங்கணப் பிரதேசத்தில் பிறந்து, போகரிடம் யோகம் மற்றும் ஞானம் பயின்ற இவர், அம்பிகை மற்றும் முருகனை வழிபட்டு அவர்களின் தரிசனம் பெற்றார்.
வாலைக் கும்மி: இவர் அருளிய “வாலைக்கும்மி” என்னும் நூல், சித்திப் பெண்களை வழிபடும் முறையையும், ஞானத்தையும் விளக்குகிறது.
சமாதி: இவர் திருப்பதி திருமலையில் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் திருமலை பெருமாளின் பாதத்தில் சமாதியானார்.
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையில் இவரது தவபீடம் உள்ளது, இது புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகும்
தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்
சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்
தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து
மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.
தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.
இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.
கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.
—subham—
Tags- மலைகளுக்கு இடையே போட்டி கொங்கணச் சித்தர் செய்த அற்புதம் பற்றி அருணகிரி -59, விபூதி பூசாத தமிழ்நாடு, Part 59