London swaminathan in Bangkok, in front of palace.
Post No. 15,345
Date uploaded in Sydney, Australia – 19 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தாய்லாந்து மன்னர் அரண்மனை பற்றிய சுவையான தகவல்கள் (Post No.15,345)
லண்டன் சுவாமிநாதன் நேரில் கண்டவை
ஜனவரி 2026 ஐந்தாம் தேதி பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஆறு ஏழு தேதிகளில் தாய்லாந்து நாட்டின் தலைநகரமான பாங்காக் நகரில் முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்தோம் . அங்குள்ள கண்கவரும் இடங்களில் ஒன்று பிரமாண்டமான அரண்மனை ஆகும். நாங்கள் தங்கிய வில்லா தி கசோன் VILLA DE KHAOSAN ஹோட்டலிலிருந்து 15 நிமிடத்தில் நடந்தே சென்றோம் . அரண்மனைக்குள் நுழைவதற்கு டிக்கெட் உண்டு . டிக்கெட் கட்டணம் 500 பாட் BAHT (தாய் கரன்சி ; சுமார் 13 பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது 1500 ரூபாய் ). பாட் என்னும் பணம் நூறு சதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரண்மனைஅருகில் சாலைகள் அமைக்க பூமியைத் தோண்டியபோது பல சிலைகள் கிடைத்தன அவை சீனாவிலிருந்து வந்தவையென்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர் அவைகளும் நுழைவு வாசலிலேயே வைக்கப்பட்டுள்ளன
***
மரகத புத்தர்
அங்குள்ள மிக முக்கியமான புனிதமான சிலை மரகத புத்தர் ஆகும். உண்மையில் அது ஜேட் JADE என்னும் பச்சைக் கல்லினால் ஆனதுதான். மரகதக் கல் அளவுக்கு விலை மதிப்பில்லை என்றாலும் மிகப்பெரிய வரலாறு உடையது; இதன் உயரம் பீடம் உள்பட 66 செ..மீ இதைப் பற்றிய இரண்டு செய்திகள்
1.இது தாய்லாந்தில் 15 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதாக ஒரு செய்தி;
2.இன்னும் ஒரு செய்தி இது இந்தியாவில் செய்யப்பட்டது.
மிகவும் சுவையான விஷயம்- அது இந்தியாவிலிருந்து இலங்கை சீனா, லாவோஸ், கம்போடியா என்று பல நாடுகளுக்குச் சென்ற பின்னர், தாய்லாந்து அதைக் கைப்பற்றியதாகும். இப்போது பாங்காக் அரண்மனையில் உள்ளது அந்த மண்டபத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. வெளியிலிருந்து எடுக்கலாம்.
***
ஒரு நல்ல விஷயம் உடலின் பல பாகங்கள் தெரியும் படி உடை அணிந்தவர்களுக்கும், பேஷனுக்காக கிழிந்த டிரவுசர் போட்டுவரும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் அனுமதி இல்லை; வெளியே உடைகளை மாற்றிய பின்னர்தான் உள்ளே வரலாம் மைசூர் அரண்மனையிலும் இந்த விதி உண்டு. தாய்லாந்து அரண்மனையிலாவது செருப்பு அணிந்து செல்லலாம் மைசூர் அரண்மனையில் காலணிகளையும் கழட்டிய பின்னர்தான் உள்ளே செல்ல முடியும்
***
தாய்லாந்து (பாங்காக் ) அரண்மனை முழுதும் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் போல தங்க நிறத்தில் ஜொலிக்கிறது ஆனால் வேலூர் ஸ்ரீபுரம் கோவிலில் இருப்பது சொக்கத் தங்கம் ; பாங்காக் அரண்மனையில் இருப்பதோ இத்தாலியில் செய்யப்பட தங்க நிற மொசைக் கல்தான் ; இருந்த போதிலிலும் ஜொலிப்பதில் குறைவில்லை!
நிறைய புத்தர் சிலைகள் ஆங்காங்கே உள்ளன; தங்க நிறத்தில் கருடன்கள், நாகங்கள் ஆகியனவும் உண்டு. எல்லோரையும் கவர்வது தங்க நிறத்தில் ஆளுயரம் உள்ள அசுர பக்ஷி, அப்சரஸ், கின்னர கந்தர்வ உருவங்கள்; எல்லாம் தங்க வர்ண சிலைகள் .
***
Grand Palace Entrance, Bangkok, Thailand
ராமாயணக் காட்சிகள்
சுவர் முழுதும் ராமாயணக் காட்சிகள்
இந்த அரண்மனை நீண்ட வரலாறு உடையது அல்ல; சுமார் 250 ஆண்டு வரலாறு உடையதுதான். என்னை மிகவும் கவர்ந்தது- சுவர் முழுதும் தீட்டப்பட்டுள்ள ராமாயணக் காட்சிகள்தான் ; சுமார் 180 ராமாயணக் காட்சிகளை ஓவியங்களாக தீட்டியுள்ளனர் காரணம் என்னவெனில் தாய் மன்னர்கள் அனைவரும் ராம பக்தர்கள் இப்போது ஆளுபவரா பத்தாவது ராமன் கடந்த 250 ஆண்டுகளில் ராமன் 1 முதல் ராமன் பத்து வரை மன்னர்களாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர் இதற்கு முன்னர் இருந்த தலைநகர் அயோத்யா ; இது பாங்காக்கிலிருந்து சுமார் இரண்டு மணி தொலைவில் இருக்கிறது; பர்மாவுக்கும் சயாமுக்கும் நடந்த சண்டையில் பழைய அரண்மனை சேதமானது. சயாம் என்பது இந்த நாட்டின் பழையபெயர். அதற்குப் பின்னர் சாவோ பிரயா நதிக்கரையில் உள்ள பாங்காக் நகருக்கு மன்னர் முதலாம் ராமா 1782 – ஆம் ஆண்டில் இந்த அரண்மனையைக் கட்டி, குடியேறினார் ; பின்னர் ஆண்ட ராமக்கள் ஒவ்வொரு பகுதியாகக் கட்டி அரண் மனையை விரிவுபடுத்தினார்கள்.
இப்போது நாட்டை ஆளும் மன்னர் பத்தாவது ராமா ஆவார்
அரண்மனையில் கோல்டன் காபி கடை உள்ளது மிகவும் அருமையான காப்பி அங்கே கிடைக்கிறது
அரண்மனைக்குள் சின்ன மியூசியங்களும் உள்ளன இதில் நாட்டின் ஜவுளி, கைத்தறி முதலியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
***
இந்த இடத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் படுத்த நிலையிலுள்ள நீண்ட மிகப்பெரிய புத்தர் சிலை உள்ளது அதைப் பார்ப்பதற்கு தணிக் கட்டணம் கொடுக்க வேண்டும்.
மரகத புத்தருக்கு பல விலை உயர்ந்த, தங்கத்தினால் செயப்பட்ட பலவகை அங்கிகள் உள்ளன. இந்துக்கள் கோவிலில், தேவி சிலைகளுக்கு வெவ்வேறு அங்கிகளை சார்த்துவது போல மரகத புத்தருக்கும் ஆண்டில் குறிப்பிட்ட தினங்களில் உடைகளை மாற்றுகிறார்கள் அதில் வைரம் முதலிய ரத்தினைக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடக்கும் அரசர் நிலத்தை உழும் தினத்தில் பிராமண புரோகிதர்கள் சடங்குகளை நடத்துகிறார்கள் . திருவெம்பாவை ஓதப்படுவது பற்றி பல அறிஞர்கள் முன்னரே எழுதியுள்ளனர்.
***
எங்கும் சம்ஸ்க்ருதம்
தாய்லாந்தில் சாலை மார்க்கமகாப் பயணம் செய்தால் ஸ்ரீநகர், இந்திரா, மஹா , ராஜ போன்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களை நிறையவே காணலாம்.
அரண்மனையில் நடைபெறும் விழாக்கள்:
ஏப்ரல் மாதம் – புத்தாண்டு ; தமிழ்ப் புத்தான்டு தினத்தில்;
இது தவிர மன்னர்கள் பதவி ஏற்ற தினங்கள்
***
அப்சரஸ் அழகிகள்
ஐந்து தலை நாகம்
கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோவில் மாடல்/மாதிரி
தாய்லாந்து அரண்மனையில் லண்டன் சுவாமிநாதன்
மரகத புத்தர் உள்ள மண்டபம்
கம்போடியாவில் உள்ள புகழ்பெற்ற அங்கோர் வாட் MODEL மாதிரி ஒன்று இங்கே உள்ளது
அரண்மனைக்குள் நுழையும் போது அது பற்றிய துண்டுப் பிரசுரத்தை வாங்கிவைத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
—subham—
TAGS– ராமாயணக் காட்சிகள் ,சம்ஸ்க்ருதம், தாய்லாந்து மன்னர், பாங்காக், அரண்மனை, சுவையான தகவல்கள்,பத்தாவது ராமா, மரகத புத்தர்













