நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2 (Post No.4835)

Date: MARCH 21, 2018

 

 

Time uploaded in London- 6-30 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4835

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL. The may be subject to copyright.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் மாத இதழான ஹெல்த்கேர் மார்ச் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. முதல் கட்டுரை வெளியான தேதி 10-2-18 கட்டுரை எண் 4723

 

நடைப்பயிற்சியே நல்ல மருந்து – 2

 

ச.நாகராஜன்

 

7

சில ஆண்டுகளுக்கு  முன்னர் எவ்வளவு தூரம் ஒருவர் ஒரு நாளைக்கு நடக்க வேண்டும் என்று கேட்டிருப்போமேயானால் அறிவியல் பூர்வமான பதில் வந்திருக்காது.

ஆனால் இன்றோ அப்படியில்லை.

ஏராளமான ஆய்வுகள் 10000 காலடி நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன.

அடிப்படை உண்மை இது தான்:- நடைப்பயிற்சி ஆரோக்கிய மேம்பாட்டைத் தருகிறது என்பதே.

ஒவ்வொரு 20 காலடி நடைக்கும்  ஒரு கலோரி எரிக்கப்படுகிறது. ஆக 10000 அடிகள் ஒரு நாளைக்கு எடுத்து வைத்தால் 500 கலோரி குறைகிறது! ஒரு வார முடிவில் இது ஒரு பவுண்ட் எடைக் குறைப்பிற்குச் சமம்!

 

8

எவ்வளவு தூரம் நடந்தோம் எத்தனை ஸ்டெப்ஸ் வைத்தோம் என்பதைக் கணக்கிடுவது இப்போது சுலபம். அதற்கென Pedometer உள்ளது. வாட்ச் போல கையில் கட்டிக் கொள்ளும் மீட்டர் எளிதானது; விலை குறைவானது; எவ்வளவு நேரம் நடந்தோம். எத்தனை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தோம் என்பதை இது துல்லியமாகக் காட்டும்.

அர்பானா சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மக்கின்லி ஆரோக்கிய மையம் என்ற மையம் உள்ளது. இது தரும் ஒரு தகவல் சுவையானது.

ஒரு நாளைக்கு 2500 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் – நீங்கள் மிக மோசமான அளவு செயல்பாடற்றவர்!

ஒரு நாளைக்கு 5000 ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடற்றவர்!

5000 முதல் 7500 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால், பரவாயில்லை, ஓரளவு நீங்கள் செயல்பாடுள்ளவர் !

7501 முதல் 10000 வரை ஸ்டெப்ஸ் எடுத்து வைத்தால் நீங்கள் செயல்பாடுள்ளவர்.

10001க்கு மேல் என்றாலோ நீங்கள் அதிகம் செயல்பாடுடையவர்.

கலோரி எரிப்பை மேம்படுத்த 2000 ஸ்டெப்ஸ் என்ற அளவு ஒரு இலக்காகும். இது ஒரு மைல் தூரம் நடப்பதைக் குறிக்கிறது. அதாவது 100 கலோரி எடைக் குறைப்பிற்கு இது சமம்.

ஆக 10000 ஸ்டெப்ஸ் என்பது ஒரு மாஜிகல் நம்பர் – எடைக் குறைப்பிற்கான, ஆரோக்கித்தை உறுதி செய்வதற்கான ஒரு மாய எண் என்றே கருதப்படுகிறது!

 

9

10000 அடிகள் என்ன மாஜிக்கை உடலில் செய்யும்? நீங்கள் உணவால் பெறும் கலோரிகளை கணிசமான அளவு எரித்தால் தான் உடலின் எடை கூடுவது நிற்கும்.

பொதுவான ஒரு விதி என்னவெனில் ஒரு பவுண்ட் கொழுப்புச் சத்து 3500 கலோரிகளுக்குச் சமமாக ஆகிறது.

ஆக இதை அடைவதை ஒரு வார இலட்சியமாகக் கொள்ளலாம்.

ஆனால் பருமனாக ஒருவருக்கு இந்த விதி பொருந்தாது. ஏனெனில் அவர் நடப்பதற்குச் சற்று கூடுதல் சக்தி தேவையாக இருக்கிறது. 180 பவுண்டுள்ள ஒருவர் ஒரு மைல் தூரம் நடந்தால் அவர் 100 கலோரிகளையே எரிக்க முடியும் என்பது பொது விதி!

ஆனால் ஒல்லியான ஒரு நபர் இதே தூரம் நடந்தால் இன்னும் அதிக கலோரிகளை எரிக்க முடியும்!

அது மட்டுமல்லை, வேகத்தைப் பொறுத்தும் கலோரி எரிப்பு அமைகிறது!

சராசரி நடைப் பயிற்சியின் வேகம் மணிக்கு  3 மைல் ஆகும்.

இதை இன்னும் விளக்கமாகச் சொல்வது என்றால் 160 பவுண்ட் எடையுள்ள ஒருவர் மெதுவாக மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் 30 நிமிடம் நடந்தார் எனில் அவர் எரிப்பது 102 கலோரிகளாகும். ஆனால் அவரே மணிக்கு மூன்றரை மைல் வேகத்தில் நடந்தால் அவர் எரிப்பது 157 கலோரிகளாகும். அதாவது 54 சதவிகிதம் கூடுதலாக!

இது ஏன் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும்  சுலபம்!

வேகமாக நடந்தால் இன்னும் அதிக தூரத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் கடக்க முடியும், இல்லையா!

 

 

10

இன்னும் ஒரு சின்ன உண்மையும் இருக்கிறது! உங்களின் தற்போதைய எடைக்காக உங்களுக்கு 1800 கலோரி தினமும் தேவைப்படுகிறது எனக் கொள்வோம். ஆனால் நீங்களோ ஒரு நாளக்கு எடுக்கும் உணவில் 2300 கலோரிகள் உள்ளது என்றால், 10000 ஸ்டெப்ஸ் நீங்கள் தினமும் எடுத்து வைத்தாலும் அதிகப் படி உள்ள 500 கலோரியைத் தான் உங்கள் நடைப் பயிற்சி கழித்து பாலன்ஸ் செய்கிறது. ஆக மொத்தக் கணக்கில் ஜீரோ பாலன்ஸ் தான் இருக்கும்! எடை குறையாது.

10000 ஸ்டெப்ஸை Pedometerஐ வைத்துத் தான் போட்டேன், எடை குறையவில்லையே என்று அங்கலாய்க்கக் கூடாது!

உணவில் எடுத்தது 2300 கலோரிகள்

அன்றாடச் செயல்பாட்டில் எரித்தது 1800 கலோரிகள் + நடைப் பயிற்சியில் எரித்தது 500 கலோரிகள் = 2300 கலோரிகள்

பாலன்ஸ் 0. ஆக எடைக் குறைப்பு இருக்காது!

11

ஒவ்வொரு நீண்ட பயணமும் முதல் ஸ்டெப்பை எடுத்து வைப்பதில் தான் ஆரம்பிக்கிறது.

முயற்சியுடன் முதல் காலடியை எடுத்து வைத்தால் மற்றதெல்லாம் சுலபம்; நோக்கத்தை மனதில் இறுத்திக் கொண்டால்  அனைத்தும் தானே நடக்கும்! எல்லாம் உங்கள் கையில் தான் சார் இருக்கிறது என்று சொல்வது வழக்கம்!

ஒரு தடவையாவது, சற்று மாற்றிச் சொல்வோம்  – எல்லாம் உங்கள் காலில் தான் சார் இருக்கிறது!

வாழ்த்துக்கள்!

***

குறிப்பு : 1 பவுண்டு எடை = 0.45359 கிலோகிராம்

1 கிலோகிராம் எடை = 2.2046 பவுண்டு

கீழே தரப்பட்டுள்ள அட்டவணை உடல்பயிற்சி , கலோரி எரிப்பு, உடல் எடை ஆகியவற்றை உங்கள் எடைக்கும் பயிற்சிக்கும் தகப் பார்த்து  பயனடையலாம்!

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! –1 (Post No.4829)

Date: MARCH 19, 2018

 

 

Time uploaded in London- 5-10 am

 

 

WRITTEN by S NAGARAJAN

 

 

Post No. 4829

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மஹாபாரத மர்மம்

 

சூரியனோடு சுற்றும் ரிஷி – சூரிய ரகசியம்! – 1

 

ச.நாகராஜன்

 

மஹாபாரத மர்மங்கள் ஏராளம். அதை முழுதுமாக அறிந்து கொள்ள ஒரு ஆயுள் போதாது.

 

அது விளக்கும் அற்புத இரகசியங்களும் ஏராளம். விண்டுரைக்கும் மர்மங்களும் ஏராளம்.

அதில் ஒன்று தான் சூரிய தேஜஸின் ரகசியம்.

 

சாந்தி பர்வத்தில் 371,372,373,374,375 ஆகிய அத்தியாயங்களில் இதை முழுதுமாகப் படிக்கலாம்.

 

அத்தியாயம் 371 – நாகன் பிராம்மணரைக் கண்டு பேசியது

அத்தியாயம் 372 – நாகன் சூரியனிடத்துள்ள அதிசயங்களை பிராம்மணருக்குச் சொல்லியது

அத்தியாயம் 373 – சூரியன் தன்னிடம் பிரவேசித்த தேஜஸின் வரலாற்றைச் சொல்லியது

அத்தியாயம் 374 – பிராம்மணர் நாகனிடம் விடைபெற்றுச் சென்றது

அத்தியாயம் 375 – பிராம்மணருக்கும் நாகனுக்கும் நடந்த சம்வாதமான கதை உலகில் வந்த முறை

 

இந்த அத்தியாயங்களில் உள்ள சுவாரசியமான விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் இங்கு காணலாம்.

தர்மாரண்யன் என்ற பெயர் கொண்ட பிராம்மணன் நாகராஜனான பத்மநாபன் என்ற நாகனைப் பார்க்கச் சென்றான்.

அவனைச் சந்தித்த பத்மன், அந்த பத்மன் நானே என்கிறான்.

உடனே பிராம்மணன் உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று வந்துள்ளேன் என்று கூறி, “சூரியனிடம் நீ ஆச்சரியமான எதையாவது பார்த்திருந்தால் அதைச் சொல்ல வேண்டும்” என்று சொன்னான்.

 

உடனே பத்மன், “சூரிய பகவானானவர் அநேக ஆச்சரியங்களுக்கு இருப்பிடம். அவராலேயே மூன்று உலகங்களிலும் உள்ள அனைத்துப் பிராணிகளும் பிரவிருத்திக்கின்றன.

அவருடைய ஆயிரம் கிரணங்களிலும் நன்றாக சித்தி பெற்ற முனிவர்கள் தேவர்களுடன் கூட, கிளைகளில் பட்சிகள் போல ஆஸ்ரயித்துக் கொண்டு வசிக்கின்றனர்.

 

அவரிடமிருந்து பெரிய வாயுவானது கிளம்பி அவரது கிரணங்களை ஆஸ்ரயித்துக் கொண்டு ஆகாயத்தில் விருத்தி அடைகின்றது.

அவரிடம் இதை விட மேலான ஆச்சரியம் என்ன இருக்கிறது? அந்த வாயுவைப் பிரித்து வர்ஷா காலங்களில் ஜலத்தைப் பொழிகிறார்.

 

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய மண்டலத்தின் மத்தியில் இருந்து கொண்டு  அந்தர்யாமியானவர் பரமமான காந்தியினால் ஜ்வலித்துக் கொண்டு உலகங்களைப் பார்க்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய பாதம் போன்ற சுக்கிரன் ஆகாயத்தில் மேகமாகி வர்ஷா காலங்களில் ஜலத்தை விடுகிறது.

தான் விட்ட ஜலத்தை எட்டு மாதங்கள் இழுக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

அவருடைய விசேஷமான தேஜஸினால் ஆத்மா நிலைத்திருக்கிறது.

 

பூமி ஓஷதியைத் தாங்குகிறது.

அவரிடம் ஆதியந்தம் அற்ற தேவர் இருக்கிறார்.

இதை விட ஆச்சரியம் வேறு என்ன வேண்டும்?

முற்காலத்தில் சூரியனைப் போலப் பிரகாசிக்கின்ற இன்னொருவர் காணப்பட்டார்.

 

அவர் சூரியனுக்கு எதிரே வந்தார்.

அவரை நோக்கி சூரியன் தன் கைகளைக் கொடுத்தார்.

அவரோ தன் வலக் கையைக் கொடுத்தார்.

 

பிறகு அவர் சூரிய மண்டலத்தில் பிரவேசித்தார்.

க்ஷண காலத்தில் அவர் தேஜஸ் சூரியனோடு கலந்தது.

சூரியன் யார், வந்தவர் யார் என்று எங்களுக்குச் சந்தேகம் வர சூரியனிடமே வேறொரு சூரியன் போல வந்த அவர் யார் என்று கேட்டோம்.

சூரியன் பதில் சொல்லத் தொடங்கினார்.

– தொடரும்

 

 

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

Picture from Guruji Gopalavallidasar post.

Written by London Swaminathan 

 

 

Date: 18 MARCH 2018

 

 

Time uploaded in London – 7-02 am

 

Post No. 4827

Pictures shown here are taken by London swaminathan

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

ஆண்டாளும் ஆதி சங்கரரும் சொல்லும் அதிசய அழிஞ்சில் மரம் ! (Post No.4827)

உலக சைவ சித்தாந்த மஹாநாட்டில் கலந்துகொண்டு பேச வந்த அழைப்பினை ஏற்று மார்ச் 2018 முதல் வாரம் சென்னை சென்றேன். இடையிடையே எனது தம்பியுடன் க்ஷேத்ராடனம் செய்தேன்; பார்க்காத கோவில்களைப் பார்க்க ஆவல் கொண்டேன். சென்னைக்கு அருகில் காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றேன். பல அதிசயங்களைக் கண்டேன். ஒரு அதிசயம் பற்றி இக்கட்டுரையில் கதைக்கிறேன்.

 

அழிஞ்சில் மரம் என்பது ஒரு அதிசய மரமாகக் கருதப்படுகிறது. இது பற்றி ஆதி சங்கரர் சிவானந்த லஹரி ஸ்துதியில் பாடியுள்ளார். ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழியின் உரையிலும் இது காணப்படுகிறது. இந்த அதிசய மரத்தை சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்மரை வலம் வரும் இடத்தில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

 

மந்திரத்தால் மாமரம் வளருமா? என்பார்கள்; பெரியவாச்சான் பிள்ளை எழுதிய பேருரையில் இது பற்றி வியப்பான தகவலைத் தருகிறார்.

 

நாச்சியார் திருமொழி– நாலாம் திருமொழி– நாலாம் பாட்டு ‘ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட’– என்று துவங்கும்.

இதன் உரையில் காணும் விஷயத்தின் சுருக்கம் இதோ:-

கடம்ப மரம், காளியன் எனும் பாம்பு கக்கிய விஷத்தில் எரிந்து கருகியது. கண்ணன் காலடி பட்டவுடன் பூத்துக் குலுங்கியது. இது எப்படி சாத்தியம்? அட, விஷ்ணுவின் பாதம் எப்போதும் அமிர்தம் சுரப்பதால் இது நடக்கvமுடியாதா? ராமன் கால் பட்டவுடன் கல்லாகக் இருந்த அஹல்யா, அழகிய பெண்மணியாக எழுந்திருக்கவில்லையா?

“அங்கோலத் தைலம் தடவப்பட்ட மாம்பழக் கொட்டையைத் தரையில் நட்டால், அப்போதே முளைத்துப் பெரிய மரமாய் சாய்த்துப் பழுக்கும் என்று சொல்லும்போது, விஷ்ணுவினுடைய மேலான திருவடியில் அமுதம் வெள்ளமிடுகிறது — என்று வேதத்தால் சொல்லப்பட்ட பெருமானுடைய  திருவடி பட்டு பட்ட மரம் தளிர்க்கச் சொல்ல வேண்டுமோ?

 

 

அங்கோல மரம்= அழிஞ்சில் மரம்

 

அழிஞ்சில் மரத்தின் பழங்கள் அம்மரத்தின் கீழே உதிர்ந்திருக்கும்; வானில் மின்னல் மின்னினால், அக்கணத்திலேயே அப்பழம் மரத்திலே பழையபடி ஓட்டிக் கொள்ளும்; அக்கணத்தில் அப்பழத்தை எடுத்து வந்து தைலமாக்கி (எண்ணை ஆக்கி)  ஒரு மாங்கொட்டையில் தடவி தரையில் நட , அப்போதே முளைத்துப் பெரிய  செடியாகி காய்த்துப் பழுக்கும் என்பர்……………………”

 

இவ்வாறு உரைகாரர்கள் சொல்லுகின்றனர்.

 

ஆண்டாளுக்கும் முன்னர் அவதரித்த உலக மஹா தத்துவ ஞானி ஆதிசங்கரர் பக்த்திக்குச் சொல்லும் ஐந்து இலக்கணங்களில் அங்கோல மர விதைகளும் ஒன்று ஆகும்.

 

(ஆதி சங்கரர் கி.மு.வில் இருந்தவர் என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்னதற்கு நான் தமிழ் இலக்கிய சான்றுகளை அளித்து ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளேன்; இதே பிளாக்கில் படித்து இன்புறுக)

சிவானந்த லஹரியின் 61-ஆவது ஸ்லோகம்

‘அங்கோலம் நிஜபீஜ சந்ததி’ —- என்று துவங்கும். இதன் பொருளாவது:

உண்மையான பக்த்தி என்பதற்கு ஐந்து உதாரணங்கள் உள்ளன; ஈஸ்வரனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள உறவு- அங்கோல மரமும் அதன் விதைகளும், காந்தமும் இரும்பு ஊசியும், கற்புக்கரசியும் அவளது கணவனும், மரமும் அதைச் சுற்றிப் பற்றும் படரும் கொடியும், ஆறுகளும் கடலும் போலும் இணைந்து இருக்கும்.

 

இதற்கு பாஷ்யம் எழுதியோர் அங்கோல/ அழிஞ்சில் மரத்தின் அற்புத குணத்தை விளக்கியுள்ளனர். அங்கோல மர விதைகள் கீழே விழுந்தவுடன், மரத்தின் மீது  ஏறிச் சென்று ஒட்டிக்கொள்ளும் என்று.

 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ள இந்த நம்பிக்கையை விஞ்ஞான முறையில் ஆராய்வது நலம் பயக்கும்..

சிங்கப் பெருமாள் கோவில் பிரஹாரத்தில் மரத்தை ஒட்டி சுவரில் எழுதப்பட்ட அறிவிப்பு– இந்த மரத்தின் மீது ஆடையிலிருந்து ஒரு நூலைப் போடுவோருக்கு அறிவு வளரும்; மணம் முடிக்காதவர்கள் விரைவில் கல்யாணம் செய்வர்; குழந்தை இல்லாதவர் விரைவில் குழந்தை பெறுவர் என்று செப்புகிறது.

 

மருத்துவ நூல்களோவெனில் இதன் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை முதலிய மருத்துவ குணங்களை வருணிக்கிறது.

எப்படியாகிலும் இது ஒரு அதிசய மரமே.

அடுத்த முறை சிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சென்றால் நரசிம்மருடன் மரத்தையும் கண்டு களிக்க.

 

சிங்கப் பெருமாள் கோவிலின் நெற்றிக் கண் நரசிம்மர், சூடான மிளகு தோசை, நரசிம்மர் பூட்டு, சில் மாதங்களில் பெருமாள் மீது விழும் சூரிய ஒளி ஆகியன பற்றி அடுத்த கட்டுரையில் நுவல்கிறேன்.

இதுவரை இயம்பி யவற்றை நினைவிற் போற்றுக.

 

சுபம் சுபம்

 

(யாரைக் கடவுள் காப்பாற்றுவான்?  பிளாக்குகளிலும், ஃபேஸ்புக்கிலும் வரும் கட்டுரைகளைத் திருடாமல் — எழுதியவர் பெயருடன் வெளியிடுபவர்களைக் கடவுள் காப்பாற்றுவார். யாருக்கு அரசியல், சமூக விஷயங்களில் கருத்துச் சொல்லவும், குறை கூறவும், கண்டிக்கவும் உரிமை உள்ளது? மற்றவர் படஙகளையும் படைப்புகளையும் திருடாதவனுக்கு பேஸ்புக்கிலும் பிளாக்குகளிலும் கருத்துச் சொல்ல உரிமை உண்டு)

பூமி தினக் கொண்டாட்டங்கள் (Post No.4803)

Date: MARCH 3, 2018

 

 

Time uploaded in London- 6-50 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4803

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் பத்தாவது உரை

 

  1. விழிப்புணர்வை ஊட்டும் பூமி தினக் கொண்டாட்டங்கள்

 

ச.நாகராஜன்

 

உலகெங்கும் 192 நாடுகளில் ஏப்ரல் 22ஆம் தேதியை எர்த் டே (Earth Day)ஆக – பூமி தினமாகக் கொண்டாடுகிறோம்.

எப்படி பூமி தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் தேதி அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா பார்பாரா என்ற இடத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு 10000 கடல் பறவைகளை அழித்தது. 30 லட்சம் காலன் என்ற பெரிய அளவில் ஏற்பட்ட இந்த எண்ணெய்க் கசிவு மனித குலத்தைச் சிந்திக்க வைத்தது. இதனால் மனம் நொந்த அமெரிக்க செனேடர் கேலார்ட் நெல்ஸன் (Gaylord Nelson)  பூமியைக் காக்க விழிப்புணர்வு ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்து 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் முதல்  பூமி தினத்தைக் கொண்டாடினார்.

இதனால் உலகெங்கும் ஏராளமானோர் விழிப்புணர்வு பெற்றனர்.

பல்வேறு நாடுகளிலும் கடந்த 47 ஆண்டுகளில் சுற்றுப்புறச் சூழலைக் காக்கப் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

மனித குலத்திற்கே தீங்கு விளைவிக்கும் பல இரசாயனப் பொருள்களின் பயன்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

 

நீரைக் காக்க வேண்டிய அவசியத்தையும் காற்றைச் சுத்தமாகக் காக்க வேண்டிய அவசியத்தையும் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் வயதானோர் வரை அனைவருக்கும் இந்த தினத்தில் விழிப்புணர்வூட்டும் பிரச்சாரம் நடைபெறுகிறது.

 

நூறு கோடி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் தீவிர இயக்கமாக பூமி தினக் கொண்டாட்டம் இன்று ஆகி  விட்டது.

இதில் நாமும் பங்கு கொண்டு நம் பங்கிற்கு உரியதை ஆற்றுவது நமது கடமையாகும்.

ஆற்றிலிருந்து மண் வளம் சுரண்டப்படாமல் இருத்தல், நீரைச் சேமித்தல், பாதுகாத்தல், அசுத்தப்படாமல் வைத்திருத்தல், ஒளி மாசை அகற்றல், வாகனங்கள் வெளிப்படுத்தும் நச்சுப்புகையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றை அறவே இல்லாமல் ஆக்குதல், ஒலி மாசைக் கட்டுப்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், இயற்கை வளமான காட்டுச் செல்வத்தைக் காத்தல், அரிய விலங்குகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அருகி வரும் இனமாக ஆகி விட்ட திமிங்கிலங்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவை இனங்களைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு நலம் பயக்கும் திட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் பூமி தினம் உதவுகிறது.

ஒவ்வொருவரும் இதில் இணைந்து வளம் வாய்ந்த பூமியை உருவாக்குவோம்; நிலை நிறுத்துவோம்!

***

 

 

 

 

 

தமிழ் வணிகர்களின் பரிபாஷை (Post No.4801)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 7-49 AM

 

Post No. 4801

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு “யோக்கியர்களையும்” எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

முன்னால் நிற்கக்கூடிய வாடிக்கையாளருக்குதெரியக்கூடாது என்பதற்காக தமிழ் வணிகர்கள், விநோதமான பரிபாஷையைப் பயன்படுத்துவர். இது குறித்து செட்டியார்கள் கதை ஒன்றை பிரசுரித்தேன். இப்பொழுது பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த ஒரு நூலில் ஒரு பட்டியலே கொடுத்துள்ளார் ராஜகோபால பூபதி.

நூலின் பெயர் – மதிமோச விளக்கம் (115 விதமான தமிழ் மோசடிகளைக் கொண்ட நூல்)

எழுதியவர்- தூசி. இராஜகோபால பூபதி, வெளியிட்ட ஆண்டு-1907

எதிர்கால மொழி ஆராய்ச்சியாளருக்குப் பயனுள்ள குறிப்பு இது. இதோ அந்தப் பட்டியல்

 

 

 

பத்து செட்டியார்கள், மூன்று …

swamiindology.blogspot.com/2018/01/post-no-4664.html

26 Jan 2018 – WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. … முதலில் இருந்த செட்டி சொன்ன கருத்தை மற்றவர்கள் அறிந்து கொண்டார்கள்; ஆனால் பத்து திருடர்களும் ஏதோ பாட்டு என்று நினைத்து … Labels: திருடர்கள் செட்டியார்கள்பரிபாஷை பூனை யானைக்கு …

வைஷ்ணவ பரிபாஷை | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/வைஷ்ணவ-பரிபாஷ…

Written by S NAGARAJAN. Date: 30 May 2017. Time uploaded in London:- 6-44 am. Post No.3954. Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks. contact: swami_48@yahoo.com. தமிழ் இன்பம். வள்ளுவர் குறளில் கையாண்ட வ்டமொழிச் சொற்கள் என்ற கட்டுரையில் (கட்டுரை எண் 3873, வெளியான தேதி : 3-5-2017). வைஷ்ணவபரிபாஷை …

 

மயிர் நீப்பின் வாழாக் கவரி மான்! (Post No.4800)

Written by London Swaminathan 

 

Date: 2 MARCH 2018

 

Time uploaded in London – 6-37 AM

 

Post No. 4800

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

வள்ளுவனும் சாணக்கியனும் ஒரே கருத்தை பல உவமைகளால் அழகுபட வர்ணிப்பது பாரதீய சிந்தனைப் போக்கு — தென் குமரி முதல் வட இமயம் வரை ஒன்றே — இன்றும் அன்றும் ஒன்றே– என்பதைக் காட்டி நிற்கிறது. இதோ மேலும் சில அரிய கருத்துக்கள்.

 

மானம் இல்லாமல் வாழ்வதை விட சாவதே மேல் என்பதில் இருவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். தற்காலத்தில் தற்கொலைகளை ஆதரிப்பதில்லை. ஆனால் முக்காலத்தில் மானம் போனால் உயிர் போச்சு என்று கருதினர். கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் தண்ணீர் கொண்டுவர தாமதித்தவுடன், சிறைச்சாலையில் உயிர் நீத்த சம்பவத்தைக் கண்டோம்.

 

இதோ சாணக்கியன் கூற்று:-

 

வரம் ப்ராண பரித்யாகோ மானபங்கேன ஜீவனாத்

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம் மானபங்கே தினே தினே

சாணக்கிய நீதி 16-16

 

அவமானத்துடன் வாழ்வதை விட இறப்பதே மேல்; சாகும்போது அந்த நேரத்தில் மட்டுமே வலிக்கும்; அவமானத்துடன் வாழ்ந்தாலோ தினமும் துயரம்தான்.

 

இதோ வள்ளுவன் இயம்புவது:–

மயிர் நீப்பின் வாழாக் கவரிமா  அன்னார்

உயிர்நீப்பின் மானம் வரின் (குறள் 969)

 

உடம்பில் இருந்து ஒரு முடி நீங்கினாலும், கவரி மான் உயிரிழந்து விடும்;

அதுபோல மானம் போகுமாயின், உயிரையே விட்டு விடுவர் (உயர்ந்தோர்).

 

xxxx

கனியிருப்பக் காய் கவர்வது ஏனோ?

 

இனிய சொற்களைச் சொன்னால் எல்லோருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது;

ஆகையால் ஒருவர் அதைத்தான் பயன்படுத்த வேண்டும்;

பின்னர் ஏன் இனிய சொற்களை இயம்புவதில் கருமித்தனம்?

 

ப்ரிய வாக்யப் ப்ரதானேன ஸர்வே துஷ்யந்தி ஜந்தவஹ

தஸ்மாத்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா

சாணக்கிய நீதி – 16-17

இதோ வள்ளுவன் செப்புவது:-

 

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்குவது (குறள் 99)

 

இனிய சொற்கள் இன்பம் தருவதைக் கண்ணால் கண்ட  பின்னும், ஒருவன் கடுஞ் சொற்களைப் பயன்படுத்துவது ஏனோ!

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (குறள் 100)

 

நல்ல பழம் இருக்கும்போது யாராவது புளிச்சுக் கொட்டும் காய்களைத் தின்பார்களா?  இன்பம் பயக்கும் இனிய சொற்கள் இருக்கையில் கடும் சொற்களைப் பயன் படுத்துவானா?

 

ப்ரஸ்தாவஸத்ருசம் வாக்யம் ப்ரபாவஸத்ருசம் ப்ரியம்

ஆத்மசக்திஸமம் கோபம் யோ ஜானாதி ஸ பண்டிதஹ

சாணக்கிய நீதி 14-15

ஒருவன்  தன் புகழுக்கேற்ற இனிய சொற்களையும், இடத்துக்கு ஏற்ற காலத்துக்கேற்ற சொற்களையும், தன் வலிமைக்கு ஏற்ற கோபத்தையும் கொண்டிருந்தால் அவன் புத்திசாலி

 

xxxx

யாகாவா ராயினும் நாகாக்க

 

யதீச்சஸி வசே கர்தும் ஜகத் ஏகேன கர்மணா

பராபவாதஸஸ்யேப்யோ காம் சரந்தீர் நிவாரய

சாணக்கிய நீதி 14-14

ஒரே செயல் மூலம் உலகை வெல்ல ஆசையா? மற்றவர்களைக் குறை சொல்லாதபடி நாக்கை அடக்குங்கள். ( உலகே உங்கள் வசமாகிவிடும்)

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (127)

 

எதை அடக்காவிட்டாலும் நாவை (பேச்சு)/ நாக்கை அடக்குங்கள்; அல்லது சொன்ன சொல்லே பெரும் துன்பத்த உண்டாக்கும்.

 

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர் (711)

அவைக்கு ஏற்ற சொற்களைச் சொல்லுக; அந்தச் சொற்களின் ஆழத்தையும் தாக்கத்தையும் அறிந்து பேசுக

 

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)

 

சொல்ல வந்த விஷயங்களை  இனிதாக, அழகாகத் தொகுத்துக் கூறும் ஒருவனுடைய சொல்லைக் கேட்டு உலகமே அதன்படி உடனே செயல்படும்

 

xxx

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி 

 

யதா கனன் கனித்ரேண பூதலே நிந்ததி

ததா குருகதாம் வித்யாம் சுஸ்ருஷுர் அதி கச்சதி

சாணக்கிய நீதி   13-16

ஒருவன் நிலத்தடி நீரை எப்படி மண்வெட்டி, கோடரி மூலம் தோண்டி எடுக்கிறானோ, அதே போல ஆசிரியரிடம் உள்ள அரிய செல்வத்தை மாணவன் (கேள்விக் கணைகளால் தோண்டி) எடுத்துக் கொள்ளவேண்டும்

 

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு – குறள் 396

 

மணலைத் தோண்டி இறைக்க இறைக்க நீர் சுரந்து கொண்டே இருக்கும்; அதுபோல கற்கக் கற்க அறிவு வளரும்

 

 

xxxx

தலை விதி துரத்தி அடிக்கும்

யதா தேனுஸ்ஹஸ்ரேஷு வத்ஸோ கச்சதி மாதரம்

ததா யச்ச க்ருதம் கர்ம கர்தாரம் அனுகச்சதி

13-14

 

ஆயிரம் பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்றுக்குட்டி எப்படி அதன் தாயாரிடம் செல்கிறதோ அப்படியே அவனவன் செய்த கர்ம வினை அவனிடம் வந்து சேரும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந்   தான்முந்  துறும் (380)

 

விதியைவிட வலியது உண்டா? விதியை மாற்ற ஒரு வழி கண்டு பிடித்தாலும் அங்கும் அதுதான் முன்னே நிற்கும்

 

xxx

Rain water used in Thiruppullani; Facebook picture.

நீர் இன்றி

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் ஸுபாஷிதம்

மூடைஹி பாஷாணகண்டேஷு ரத்ன ஸம்க்ஞா விதீயதே

14-1

 

 

பூவுலகில் மூன்று ரத்தினங்கள் உள; தண்ணீர், உணவு, சான்றோரின் பொன்மொழிகள்; இதை அறியாத மூடர்கள் கற்களை ரத்தினம் என்று சொல்கின்றனர். (அதாவது உண்மையான ரத்னக் கற்களைவிட இவை மூன்றும் உயர்ந்தவை)

 

 

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு (20)

நீர் இல்லாமல் வாழ முடியாது; மழை இல்லாவிடில் தர்ம நியாம் இராது.

 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூவும் மழை (12)

உணவை உண்டாக்குவது மழை நீர்; உணவை உண்பார்க்குத் தானும் உணவு ஆவது மழை நீர்.

வள்ளுவன் வாழ்க! சாணக்கியன் வாழ்க!

 

–சுபம், சுபம்—

(பேஸ்புக்- கிற்கும் பிளாக்- குகளுக்கும் எப்படி நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை!!! அவ்வளவு அயோக்கியர்களையும் எனக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது; நான் எழுதியதை பெயரை நீக்கி விட்டு — என் பிளாக்-கின் பெயரை நீக்கிவிட்டுப் போடுகிறார்கள்; இன்னும் சிலர் கொஞ்சம் வரிகளை மாற்றியும், பாரா–க்களை மாற்றியும் வெளியிடுகிறரர்கள்; இது இரண்டாம் தரம்.; இவர்கள் அத்தனை பேரையும் காட்டிக் கொடுக்கிறது FACEBOOK AND BLOGS!)

 

 

 

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள் (Post No. 4796)

Date: MARCH 1,  2018

 

 

Time uploaded in London- 6-50 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4796)

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

2-3-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள எட்டாம் ஆண்டு முதல் கட்டுரை

அரை நூற்றாண்டு விண்வெளிச் சாதனைகள்ஒரு அரிய தொகுப்பு! – 1

.நாகராஜன்

1961இல் மனிதன் விண்ணில் பறந்து 56 வருடங்கள் உருண்டோடி விட்டன. என்னென்ன வியத்தகு சாதனைகளை மனிதன் சாதித்து விட்டான்! பாக்யா வாசகர்களுக்கான ஒரு எக்ஸ்க்ளுஸிவ் ரிபோர்ட் – அனைத்து சாதனைகளும் ஒரே இடத்தில்!

யூரி ககாரின்

1961,ஏப்ரல்,12. ரஷிய வீரரான யூரி ககாரின் 108 நிமிட விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து உலகை வியக்க வைத்துச் சாதனை படைத்தார்!

 

விண்வெளியில் முதல் வீரர்கள்

ககாரினை அடுத்து ஆலன் ஷெப்பர்ட் என்னும் அமெரிக்கர் 1961, மே,5ஆம் தேதி விண்வெளிக்கு ஏகினார்.

ரஷிய வீ ராங்கனையான வாலண்டினா தெரஷ்கோவா 1963,ஜூன் மாதம் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு விண்வெளி ஏகிய முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றார்; பெண் குலத்திற்கே பெருமை சேர்த்தார்! அவருடன் தேர்ந்தெடுக்க்ப்பட்ட ஸ்வெட்லானா சவிட்ஸ்கயா அப்போது அவருடன் பறக்க முடியவில்லை. காத்திருந்தார். 1982ஆம் ஆண்டில் தான் அவருக்கு அந்த வாய்ப்பு வந்தது.

விண்வெளியில் பறந்த முதல் அமெரிக்க பெண்மணி ஸாலி ரைட். ஸ்பேஸ் ஷட்டில் மிஷன் STS 7இன் ஒரு பகுதியாக 1983, ஜுன்18இல் அவர் விண்வெளியை அடைந்து சாதனை படைத்தார்.

விண்வெளியை ரஷியர்களும் அமெரிக்கர்களுமே சுமார் 20 ஆண்டுகள் சொந்தம் கொண்டாடின.இந்த இரு தேசங்களைத் தவிர முதலில் விண்வெளியில் நுழைந்தது  செக்கோஸ்லோவேகியா. 1978இல் சோவியத் சோயுஸ் 28 மிஷனில் செக்கோஸ்லோவேகிய வீரர் விளாடிமிர் ரெமக் விண்வெளி ஏகினார். இதன் பின்னர் ஏராளமான நாடுகள் தங்கள் தங்கள் நாட்டு வீ ரர்களை அமெரிக்க, ரஷிய விண்கலங்களில் விண்ணுக்கு அனுப்பின.

விண்வெளியில் அதிக வயதானவர்

அமெரிக்க செனேட்டர் ஜான் க்ளென் தனது 77ஆம் வயதில் டிஸ்கவரி STS -95 மிஷனில் 1998 அக்டோபரில் விண்ணில் பறந்தார்.இந்த மிஷனில் அவரது பயணம் இரண்டாவது பயணம். 1962 பிப்ரவரியில் அவரது முதல் பயணம் அமைந்தது. ஆக அவர் இன்னொரு அரிய சாதனையையும் நிகழ்த்தி விட்டார். மிக நீண்ட இடைவெளியான 36 வருடம் 8 மாதங்களில் பயணம் மேற்கொண்ட ஒரே வீரர் அவர் தான்!

விண்வெளிக்குச் சென்ற அதிக வயதான பெண்மணி என்ற பெருமையைப் பெறுபவர் பெக்கி விட்ஸன். வயது 57. 2016-2017இல் எக்ஸ்பெடிஷன் 50, 51இல் அவர் பறந்தார்.

விண்வெளியில் பறந்த இளைஞர்

ரஷியரான ஜெர்மன் டிடோவ் சோவியத் விண்கலமான வோஸ்டாக் 2இல் ஆகஸ்ட் 1961இல் பறந்தார். அப்போது அவரது 26வது பிறந்த தினக் கொண்டாட்டத்திற்கு ஒரு மாதமே இருந்தது.25 மணி நேர பயணத்தில் 17 லூப் பயணம் மேற்கொண்டு பூமியை  வலம் வந்த இரண்டாவது வீரர் இவர்.

டிடோவ் தான் முதலில் விண்வெளியில் தூங்கியவர் என்ற பெருமையைப் பெருகிறார். முதலில் ஸ்பேஸ் சிக்னெஸ் வியாதியால் அவஸ்தைப் பட்டவரும் அவரே. (இதை மோஷன் சிக்னெஸ் என்றும் சொல்வர்)

தெரஷ்கோவா விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி மட்டுமல்ல; 26 வயதில் பறந்த மிகக் குறைந்த வயதுடைய மஙகை என்ற அரிய புகழையும் பெறுகிறார். அவரது ரிகார்டை யாரும் இதுவரை முறியடிக்கவில்லை என்பது குற்ப்பிடத் தகுந்தது.

 

தொடர்ந்து அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தோர்

ரஷிய வீ ரரான வாலெரி போலியாகோவ் விண்வெளியில் தொடர்ந்து 438 நாட்கள் மிர் ஸ்டேஷனில் தங்கி இருந்து சாதனை படைத்தார். 1994 ஜனவரியிலிருந்து 1995 மார்ச் வரை இவர் அங்கு தங்கி இருந்தார்.

அமெரிக்கரான ஸ்காட் கெல்லி தொடர்ந்து 340 நாட்கள் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் 2015-16இல் தங்கி சாதனை படைத்தார்

அமெரிக்க விண்வெளி வீ ராங்கனை பெக்கி விட்ஸன் 289  நாட்கள் ஒரே பயணத்தில் ஸ்பேஸ் ஸ்டேஷனில் தங்கி இருந்ததால் அந்தப் பெருமையைப் பெறுகிறார்.

நாஸா வீரரான ஆலன் ஷெப்பர்ட் 1961,மே, 5ஆம் தேதி தனது மெர்குரி விண்கலமான ஃப்ரீடம் 7இல் பறந்து சாதனை படைத்தார்.

புல்லரிக்க வைக்கும் வெற்றிகள் – மகத்தான தியாகத்தால், உழைப்பால், அறிவுக் கூர்மையால், மனித குலத்தை உயர்த்தத் துடிக்கும் அர்ப்பணிப்பு மனோபாவத்தால்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

1894இல் ஆல்பர்ட் மைக்கேல்ஸன் இயற்பியலில் கண்டுபிடிக்க இனி ஒன்றுமே இல்லை என்றார். முதல் நோபல் பரிசு பெற்ற அவர் சொன்னதை உலகம் ஆமாம் ஆமாம் என்றது. ஆனால் பத்தே ஆண்டுகளில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது இயற்பியல் கொள்கையால் உலகின் போக்கையே மாற்றினார்.

அன்றிலிருந்து இன்று வரை நாளுக்கு நூறு கண்டுபிடிப்புகள்?!

இவையெல்லாம் சரிதானா என்று  ஆராயப் புகுந்தார் ஒருவர். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகப் பேராசிரியரான் ஜான் ஐயான்னிடிஸ் 2005இல் ஏன்  பெரும்பாலான ஆய்வுப் பேப்பர்கள் தவறானவை என்று (Why Most Published Research Findings Are False – John Ionnidis) ஒரு பரபரப்புப் பேப்பரை வெளியிட்டார்.

 

தன் சொந்த அபிலாஷைகளுக்காக நினைத்ததை வெளியிடுவோர் அதிகம். இவை ஊடகத்தால் பரபரப்புச் செய்திகளாக உலா வருகின்றன. ஆனால் இவை அனைத்தும் பின்னால் தவறானவை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தவறு என்பதை ஊடகங்கள் வெளியிடாமல் மௌனம் சாதிக்கின்றன.

இதனால் அறிவியல் ஆய்வுப் பேப்பர் என்றால் யாரும் மதிக்காத ஒரு நிலை ஏற்பட்டு விடும் என்கிறார் அவர்.

எதையும் உறுதி செய்து வெளியிடுவதே அறிவியல் ஆய்வு. அதற்கே இந்தப் பாடா என்று விஞ்ஞான உலகம் வியக்கிறது.

பேப்பரில் நடுப்பக்கத்தில் வெளியாகும் “பரபரப்பு” அறிவியல் செய்திகளை இனி சற்று ஜாக்கிரதையாகக் கண்காணிக்க வேண்டியது தான்!

***

 

விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள் (Post No.4776)

Date: 23 FEBRUARY 2018

 

Time uploaded in London- 5- 44am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4776

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

23-2-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு கடைசிக்) கட்டுரை

2018 விண்டர் ஒலிம்பிக்கில் ரொபாட்டுகள்!

Robots in 2018 Winter Olympics

.நாகராஜன்

“மற்ற எல்லா போட்டிகளும் தனிப்பட்ட நபர்களின் சாதனை. ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுக்களோவெனில் அனைவருக்கும் உரியவை”. – ஸ்காட் ஹாமில்டன்

2018 விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் பிப்ரவரி 8ஆம் தேதி ஆரம்பித்து 25ஆம் தேதி முடிவடைகிறது. இந்தப் போட்டிகள் தென் கொரியாவின் தலைநகரான சியோலுக்குக் கிழக்கே 80 மைல் தொலைவில் உள்ள பியாங்சாங் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. 35000 பேர்கள் வசதியாகப் பார்க்கக் கூடிய ஸ்டேடியம் இங்கு உள்ளது. அத்துடன் எந்தப் போட்டி நடக்கும் இடமும் 30 நிமிடத்தில் டிரைவ் செய்து போகும் அளவுள்ள தூரத்திலேயே உள்ளது. 3894 விளையாட்டு வீரர்கள் தங்கும் வீடுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2900  பேர் தங்க வசதியாக அருகிலேயே இன்னொரு தங்குமிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. 1924ஆம் ஆண்டு பிரான்ஸில் தான் முதல் விண்டர் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டி வருகின்றன.இந்த இடைவிடா போட்டியில் இப்போது விண்டர் ஒலிம்பிக் நடத்துவதில் வெற்றி பெற்றுள்ளது!

தென்கொரியாவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் 1988இல் நடந்தது. இப்போது இரண்டாவது முறையாக ஒலிம்பிக் இங்கு நடைபெறுகிறது! 15 வகை விளையாட்டுகளில் 102 நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தப் போட்டிகளுக்காக 259 செட் மெடல்கள் விசேஷமாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்த மெடல்கள் தாம் கனமானவை. தங்க மெடல் 1.29 பவுண்ட்; வெள்ளி மெடல் 1.28 பவுண்ட்; வெங்கல மெடல் 1.09 பவுண்ட்.

மெடலின்  முன் பக்கம் ஒலிம்பிக்கின் வளையங்கள் கொண்ட சின்னம் இருக்கும். பின் பக்கம் குறிப்பிட்ட விளையாட்டு, ஒவ்வொரு நிகழ்வின் பெயர் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும்!

சென்ற பத்தாண்டுகளில் நடந்த ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் ஆகும் செலவு 890 கோடி டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. அதிகமாக ஆன செலவு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தான்! 1500 கோடி டாலர்கள் செலவாயிற்று! தென்கொரியாவில் நடக்கும் இப்போதைய ஒலிம்க் போட்டிகளுக்கு ஆகும் உத்தேச செலவு 1000 கோடி டாலர்கள்!

ஆனால் வருமானமும் உண்டு. நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் உரிமைகள் உள்ளிட்டவை வருமானத்திற்கான வழிகள்!

தென்கொரியாவில் நடைபெறும் விண்டர் ஒலிம்பிக்கின் முக்கிய கதாநாயகன் ரொபாட் தான்!

 

ஏற்கனவே தென்கொரியாவில் விமானநிலையத்தைச் சுத்தம் செய்யும் பணியை ரொபாட்டுகள் தான் மேற்கொண்டுள்ளன! பல இடங்களில் அவைகளே ஆங்கிலத்தைப் பயிற்றுவிக்கின்றன. 2016இல் தென் கொரியாவில் இருந்த ரொபாட்டுகளின் எண்ணிக்கை 41000! இப்போதோ இன்னும் அதிகம்!

ஒலிம்பிக் விளையாட்டில் 85 ரொபாட்டுகள் தம் திறமைகளைக் காண்பிக்கும். ஒலிம்பிக் தொப்பிகளை அணிந்து  47 அங்குல ரொபாட்டான ஹ்யூபோ டிசம்பரில் ஒரு காரை ஓட்டிச் சென்று காண்பித்தது.  ஒலிம்பிக் டார்ச்சைக் கொண்டு சென்று ஒரு சுவரை ஒரு குத்து குத்தித் தனது வலிமையை அது காண்பித்தது! இதை உருவாக்கியவர் பேராசிரியர் ஓ ஜுன் ஹோ. அவரிடம் இந்த டார்ச்சை ரொபாட் கொடுத்தது. இது இரும்பு மனிதன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட அழிக்க முடியாத ரொபாட் என்பது குறிப்பிடத்தகுந்தது!

ஸ்கீயிங் போட்டியில் ரொபாட்டுகளும் கலந்து கொள்ளும் என்பது சுவையான் ஒரு செய்தி.

ரொபாட்டுகள் கொரிய மொழியில் பேசுவதோடு மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபடும் திறன் உடையவை. கொரிய மொழி, சீனம், ஆங்கிலம், ஜப்பானிய மொழி ஆகியவற்றில் இவை மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவை!

சூஹோரங் என்ற வெள்ளைப்புலியையே தென்கொரியா இந்த ஒலிம்பிக்கில் தனது அடையாளச் சின்னமாக அமைத்துள்ளது. சூஹோ என்றால் காப்பாற்றுதல் என்று பொருள்.ரங் என்றால் வெள்ளைப்புலி.

வெள்ளைப்புலி தான் தென்கொரியர்களுக்குப் பிடித்தமான பாதுகாக்கும் மிருகம்!.  ரொபாட்டுகள் வெள்ளைப்புலி முகவணியைக் கொண்டு ஆடும், பேசும்.

சுத்தப்படுத்துதல் என்பது ரொபாட்டுகளுக்குக் கைவந்த கலை. பிரஷை கையில் எடுத்துக் கொண்டால் எந்த இடமும் சுத்தம் தான்! ஒரு  மணி நேரத்தில் 900 சதுரமீட்டர் பரப்பைச் சுத்தம் செய்ய வல்லவை இவை! குப்பைகளை எடுக்கும்; குப்பைத் தொட்டியில் போடும் – யார் மீதும் மோதாமல்!

பெயிண்டிங் ரொபாட்டுகள் கலைவண்ணம் காணும் ரொபாட்டுகள். தேவையான டிசைனைச் சொன்னால் வரைந்து விடும். ஆயிரம் வண்ணங்களின் கலவை இவற்றிற்குத் தெரியும் என்பதோடு இவை 20 மீட்டர் உயரம் அளவு பணி செய்யும் திறமை படைத்தவை.6 of

இத்துடன் ரோபோ பிஷ் என்று ஒரு வகை ரொபாட்டுகள் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் நீருக்கு அடியில் நீந்தும். ஐந்து மீட்டர் ஆழம் வரை டைவ் அடிக்கும் இவை ஒரு அக்வேரியத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது வீரர்கள் கவலைப்படுவது  மனிதனுக்கு மனிதன் போட்டி போடும் நிலையிலிருந்து மனிதன் – ரொபாட் என்ற ரீதியில் போட்டி போட வேண்டிய நிலை எதிர்காலத்தில் ஏற்பட்டு விடுமோ என்பது தான்!

அப்படிப்பட்ட ஒரு காலத்தில் வின்னர் யார்? நீங்களே எளிதில் ஊகிக்கலாம்.

வந்து விட்டது ரொபாட்டுகளின் காலம்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஸ்டீபன் மக்னிக்கும் (Stephen Macknik) சூஸனா மார்டினெஸ் காண்ட் (Susana Martinez – Conde) ஆகிய இருவரும் நியூரோ ஸயின்ஸில் பெரிய விஞ்ஞானிகள். 1997ஆம் ஆண்டு ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலில் இருவரும் சந்தித்தனர். விஷுவல் கார்டெக்ஸ் (Visual Cortex) எனப்படும் கட்புலப் புறணியின் (perception) அகப்பார்வை பற்றி இருவரும் ஆராய்ந்து வந்தனர்.இருவரின் ஆராய்ச்சியும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இருவரையும் லண்டனில் உள்ள யுனிவர்ஸிடி காலேஜ் அழைத்தது.

இருவரும் நெருக்கமாகப் பழகினர். ஒருவேளை நாம் டேடிங் செய்கிறோமா என்றார் ஸ்டீபன். ‘டேடிங்கா! சந்தேகமாக இருக்கிறது; அப்படி ஒன்றும் இருக்காது’ என்றார் சூஸனா. ஆனால் தொடர்ந்த பழக்கத்தால் இருவரும் மணம் புரிய நிச்சயித்தனர்.

 

 

கண் இயக்கம் பற்றியும் மூளை எப்படி ஒளியின் பிரகாசத்தை உணர்கிறது என்பதைப் பற்றியும் அவர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வுகள் கண் பார்வை பற்றிய பல உண்மைகளை விளக்கியதால் அவர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர்.

 

 

நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவரின் அறிவியல் பார்வையிலும் அறிவிலும் அதிக ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளோம்.அநத உறவு எங்கள் இதய ஆழத்திலிருந்து எழுகின்ற ஒன்று.”என்கிறார் சூஸனா.

 

காதலுக்குக் கண்ணில்லை என்ற முதுமொழி ஒரு புறம் இருக்க கண் பார்வை ஆராய்ச்சியே காதலை உறுதி செய்து இருவரை இணைய வைத்த அதிசய சம்பவம் அறிவியலிலும் இப்படி உண்டு!

xxxx

 

 

4-3-2011 இதழில் தொடங்கிய அறிவியல் துளிகள் தொடர் இந்த இதழுடன் ஏழு ஆண்டுகளை முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தருணம் இது.

பாக்யா ஆசிரியரும் தமிழர்களின் இதயம் கவர்ந்த டைரக்டருமான திரு கே.பாக்யராஜ் அவர்களின் ஆக்க பூர்வமான சிந்தனையும் ஊக்கமுமே இதைச் சாத்தியமாக்கியுள்ளது. தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்கி வரும் வாசகர்களே அறிவியல் துளிகளின் பலம். அழகுற நாளுக்கு நாள்  நிறைந்த உள்ளடக்கத்துடனும் கூடுதல் வடிவமைப்புப் பொலிவுடன் மிளிரும் பாக்யா நிச்சயமாக தமிழ் பத்திரிகைகளில் கமர்ஷியல் சிந்தனையின்றி அறிவு பூர்வமாகத் திகழும் வித்தியாசமான பத்திரிகை என்பதை அனைவரும் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தத் தருணத்தில் பாக்யா ஆசிரியருக்கும், பாக்யா இதழ் தயாரிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றும் பாக்யா குழுவினருக்கும், தொடர்ந்து உற்சாக ஆதரவை நல்கி வரும் வாசகப் பெருமக்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எட்டாம் ஆண்டில் இன்னும் பல சுவையான அறிவியல் செய்திகளைப் பார்ப்போம். நன்றி.வணக்கம்.

*****

 

புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு (Post.4773)

Date: 22 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 7-53 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4773

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஒன்பதாவது உரை

 

  1. 9. உத்வேகமூட்டும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு ச.நாகராஜன்

 

2016ஆம் மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்த்துக்கல் நாடு ஒரு பெரிய சாதனையைச் செய்தது. மே மாதம் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி முடிய நாடு முழுவதும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியால் மட்டுமே இயங்கியது.

இதன் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து இப்படிப்பட்ட எரிசக்தியினால் ஒரு நாடு முற்றிலுமாக இயங்கமுடியும் என்பதையும் நிரூபித்தது.

 

 

சூரிய ஒளி, காற்று ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும் ஆற்றல் அல்லது எரிசக்தியையே புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி அல்லது ஆற்றல் என்று கூறுகிறோம்.

 

 

காற்றினாலும், சூரிய ஒளியாலும் ஹைட்ரோ – ஜெனரேடட் மின்சக்தியாலும் ஒரு நாடு திறம்பட இயங்க முடியும் என்ற இந்த நிகழ்வைத் தொடர்ந்து சோலார் பவர் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜேம்ஸ் வாட்ஸன், “இப்போது மிகவும் அதிசயக்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படும் இந்த நிகழ்வு எதிர்காலத்தில், மிகவும் சாதாரணமான அன்றாட நிகழ்வு ஆகி விடும்” என்கிறார்.

 

நமது நாட்டிலும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் காற்றின் சக்தியைப் பயன்படுத்தி பல்வேறு தொழில்களைச் செய்வதைப் பார்க்க முடிகிறது.

 

 

ஆனால் இந்த விஞ்ஞான முன்னேற்றத்தை மிகச் சரியாகப் பயன்படுத்தினால் ஏராளமான சூரிய ஒளியை, நாடு முழுவதும் வருடத்தில் நீண்ட நாட்கள் கொண்டிருக்கும் இந்தியா, மிகச் சிறந்த புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலைப் பயன்படுத்தும் வல்லரசாக, உயரும்.

புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலால் நமக்குக் கிடைக்கும் ஆதாயங்கள் ஏராளம் உள்ளன.

 

 

  • பூமியை வெப்பமயமாக்கும் நச்சுப் புகை வெளியேற்றம் முற்றிலுமாகக் குறையும் அல்லது பெரிய அளவில் குறைந்து விடும்.
  • உலக மக்களின் ஆரோக்கியம் மிகப் பெரிய அளவில் மேம்படும். நிலக்கரி மற்றும் இயற்கை வாயு தொழிலகங்களினால் காற்றிலும் நீரிலும் ஏற்படும் மாசின் அளவு குறையும். சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் மாசினால் சுவாசக் கோளாறுகளும், மூளை சம்பந்தமான வியாதிகளும், மாரடைப்பும், கான்ஸரும் ஏற்படுகின்றன. இப்படி புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலின் பயன்பாடு இளவயதில் இறப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும். தொழிலகங்களில் மிக அரிதான வேலை மணி நேர இழப்பையும் தவிர்க்கும்.

இவற்றை உணர்ந்து புதுப்பிக்கப்படக் கூடிய

ஆற்றலைப் பெரிதளவு பயன்படுத்துவோம்; பூமியை வெப்பமயமாக்கும் அபாயத்திலிருந்து காப்போம்!

***

 

 

விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள் (Post No.4769)

Date: 21 FEBRUARY 2018

 

 

Time uploaded in London- 5-18 am

 

 

Written by S NAGARAJAN

 

 

Post No. 4769

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் எட்டாவது உரை

 

  1. ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள்

 

ச.நாகராஜன்

 

 

நெதர்லாந்திலிருந்து முதலில் விண்வெளிக்குச் சென்ற பெருமையைப்      பெற்றவர் இயற்பியல் வல்லுநரான உப்போ ஜோஹன்னஸ் ஓகெல்ஸ் (Wubbo Johannes Ochkels )   

        யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி மூலம் 1985ஆம் ஆண்டு இவர்         விண்வெளிக்குப் பயணமானார்.

 

இவர் தனது மறைவிற்கு முன்னர் நீட்டித்த ஆற்றல் தீர்வுகள் பற்றி ஒரு கடிதத்தை உலகத்தினருக்கு எழுதினார்

 

அதில்,சமாதானத்துடன் ஒரே மனதைக் கொண்டசண்டை இல்லாத மனித  குல எழுச்சிக்காக அறைகூவுகிறார் ஓகெல்ஸ்.   

  விண்வெளியிலிருந்து பூமிப் பந்தைப் பார்த்த போது அவருக்கு உயரிய      ஆன்மீக அனுபவம் ஏற்பட்டு நல்ல புதிய சிந்தனைகள் மலர்ந்தன.

அருமையான மனைவிகுழந்தைகள்பேரப் பிள்ளைகள் என நல்ல வாழ்வு வாழ்ந்த அவருக்கு 2005ஆம் ஆண்டு  மாரடைப்பு ஏற்பட்டதுஒருவழியாக மீண்டார்

 

ஆனால் 2013, மே மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் புற்று நோய் இருப்பது    கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு இரண்டு வருடம் என்று நாள் குறித்து” விட்டனர்.

 

2014, மே மாதம் 18ஆம் தேதி மரணமடைந்த அவர் இறப்பதற்கு முதல் நாள் மருத்துவ மனையில் படுத்திருந்தபடியே தொலைக்காட்சி ஒன்றிற்குத் 

தனது கடைசி பேட்டியை அளித்தார்உணர்ச்சி ததும்ப மூச்சை இழுத்து விட்டுக்  கொண்டு அனைத்து சக்தியையும் ஒருங்கிணைத்துசக்தி வாய்ந்த தனது பேச்சில் அவர் உலகினரிடம், இந்த பூமி மிகவும் மதிப்பு வாய்ந்தது என்றும் அதை எப்படியேனும் காக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டிக் கொண்டார்.

 

 

இது ஒன்றே தான் நமக்கான வசிப்பிடம். இரண்டாவது பூமி இல்லை. என்றார் அவர். 

தனக்கு வந்தது போல பூமிக்கும் கான்ஸர் வந்து விடக் கூடாது என்ற      ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர்,” நம்முடைய பூமி கான்ஸரினால் பீடிக்கப்பட்டிருக்கிறதுஎனக்கு கான்ஸர் உள்ளதுமக்களில் ஏராளமானோர்  கான்ஸரினால் இறக்கின்றனர்என்றாலும், மனித குலம் எப்போதும் நீடித்து இருக்கப் போதுமான அளவு மனிதர்கள் உள்ளனர்.

நாம் நமக்கே சொந்தமான நமது பூமியைக் காக்க வேண்டும். என்றார் அவர்.

 

 

 “உற்சாகமும் ஆர்வமும் உள்ளொளியும் அணுகுமுறையும் இருக்கும்போது  மற்றவர்கள் நேசிக்க முடியாத அளவிற்கு பூமியை நீங்கள் நேசிக்க         ஆரம்பிப்பீர்கள்ஒன்றை உளமார நேசிக் ஆரம்பித்து விட்டால் அதை விட   உங்களுக்கு மனமே வராது. என்று அவர் உருக்கமாகக் கூறினார்.

அவரது தொலைக்காட்சி பேட்டியைக் கண்டோர் நெகிழ்ந்து உருகியதில்      அதிசயமே இல்லை.

நாட்கள் 44 நிமிடங்கள் விண்வெளியில் பறந்த வீரர் மண்ணில் வாழும்    மாந்தருக்குக் கூறிய அறிவுரைகளும் புதிய சிந்தனைக் கருத்துக்களும்       வளமானவைவரவேற்கப்பட வேண்டியவை; வாழ்ந்து காட்டப்பட வேண்டியவை!

***