தமிழ் ஒரு அதிசய மொழி!

tamil-1

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1376; தேதி அக்டோபர் 29, 2014.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் – – பாரதியார்

தமிழ் மொழிக்கும் சுமேரிய, மெசபொடோமிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் ஜப்பானிய, கொரிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் துருக்கிய, பின்லாந்திய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு — என்று 40 ஆண்டுக் காலமாகப் படித்துப் படித்து அலுத்துப் போய்விட்டது. சாத்தூர் சேகரன் என்ற தமிழ் மொழி ஆர்வலர் லண்டனுக்கு வந்தபோது – 1990 ஆம் ஆண்டு என்று நினைவு — அவரை BBC பி.பி.சி. “தமிழோசை” சார்பாக பேட்டி கண்டு பி.பி.சி.யில் ஒலிபரப்பினேன். அவர் எனக்கு சில புத்தகங்களை அன்பளிப்பாக அளித்தார். அதில் ஒன்று, செர்போ–க்ரோட் –( யூகோஸ்லாவியா என்று அப்போது இருந்த இடம்; இப்போது செர்பியா, குரோவேசியா Serbia and Croatia என்பன ) — மொழிகளுடன் தமிழுக்கு இருந்த “நெருங்கிய” தொடர்புகள் பற்றிய புத்தகம்!!

பேட்டி கண்டபோது அவரை உரிய மரியாதைகளுடன் நடத்திவிட்டு, பின்னர் தனிப்பட்ட முறையில் பேசுகையில் அவரது அணுகுமுறையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். அவர் கணக்குப்படி உலகில் உள்ள எல்லா மொழிகளும் தமிழில் இருந்து உருவானவை. அவர் அப்போதே 140 நூல்கள் எழுதி இருப்பதாகக் கூறினார். ஆங்கில—தமிழ் மொழி நெருக்கம் பற்றியும் பேசினார். உண்மை என்ன?

அப்போது லண்டனில் உள்ள சேனல் 4 Channel Four டெலிவிஷன் ஒலிபரப்பிய புதிய மொழியியல் கொள்கை பற்றி அவரிடம் கூறினேன். அதாவது மக்கள் எல்லோரும் ஒரே மொழி பேசிக்கொண்டிருந்தனர் – அவர்கள் சுவர்க்கத்தை எட்டிப் பிடிக்க கோபுரம் கட்ட முயன்றபோது— கடவுள் நீங்கள் எல்லோரும் பல மொழிகள் பேசி பிரிந்து செல்க —- என்று சபித்துவிட்டதாக பைபிளில் ஒரு கதை உண்டு. அது உண்மைதான்; உலகில் உள்ள மொழிகள் எல்லாம் ஒரே மூலத்தில் இருந்து வந்தவைதான் என்று ஒரு இஸ்ரேலிய மற்றும் ஒரு ரஷிய அறிஞர் கூறியது பற்றிய டாகுமெண்டரி (செய்திப்படம்) அது. இதை திரு. சாத்தூர் சேகரனிடம் சொல்லி அவர் இந்தக் கோணத்தில் இருந்தும் பார்க்கவேண்டும் என்றேன்.

tamil 2

அவரது பேட்டி ஒலிபரப்பைப் பாராட்டி பல நேயர்கள் எழுதியது உண்மை என்ற போதிலும் பலருக்கும் மொழி இயல் தெரியாது. மொழி வளர்ச்சிக் கும், எழுத்து வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு கூடத் தெரியாது. திருவள்ளுவர் இன்று உயிருடன் வந்தால் அவருக்குத் தமிழ் ஓரளவு புரியும்- ஆனால் தமிழ் எழுத்து அவருக்கு விளங்காது. ஏனெனில் எழுத்து உருமாறிப் போனது. நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பு நடத்துகையில் என்னை அறியாமல் “னை,, ணை, லை” – போன்ற எழுத்துக்களுக்கு பழைய எழுத்து முறையைப் போர்டில் (கரும் பலகை) எழுதுகையில் பயன்படுத்துவேன். உடனே சார், இது என்ன எழுத்து? என்று சிலர் என்னை இடை மறிப்பர். பெரியார் சொன்ன எழுத்து சீர்திருத்தத்துக்கு முன் நாம் (old orthography) அத்தகைய கொம்புள்ள/ துதிக்கை போடும் எழுத்துகளை — லை, னை — முதலியவற்றைப் பயபடுத்தினோம். ஆகவே மொழியும் எழுத்தும் காலப்போக்கில் மாறும் என்று அறிய வேண்டும்.

தமிழ் ஒரு அதிசய மொழி. இதில் இரண்டு எழுத்துக்கள் சேரும் போது என்ன மாற்றம் அடைகின்றன என்பனவற்றைக் கண்டு இது போல மற்ற மொழிகளில் உண்டா? என்றும் காண வேண்டும். இதை சந்தி இலக்கணம் என்பர். வடமொழியில் இது உண்டு. ஆகவே தமிழை வேற்று மொழிகளுடன் ஒப்பிட்டு — “இது அதுவே, அது இதுவே” — என்று முழங்கும் முன்னர் பல விஷயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். எந்த இரண்டு மொழிகளிலும் மேம்போக்கான சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை போதா. உண்மையில் வேற்றுமை உருபுகள், மொழிக்குள் உள்ள சந்தி இலக்கணம் ஆகியவற்றையும் ஒப்பிட வேண்டும்.

வேதங்களுக்கு காலம் நிர்ணையிக்க மாக்ஸ் முல்லர் கையாண்ட “குத்து மதிப்பான” முறை ஓரளவுக்கு உண்மை. ஆனால் இதையே தமிழ் மொழிக்கும் கையாண்டால் பல தமிழ் நூல்களின் காலம் கேள்விக் குறி ஆகிவிடும். அவர் சொன்னார்: “ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”. அப்படியானால் தொல்காப்பிய நடைக்கும் சங்க இலக்கிய நடைக்கும் பெரும் வேறுபாடு இருக்க வேண்டும் (.உண்மையில் அப்படி இல்லை. இதைப் பற்றி மூன்று தமிழ் சங்கங்கள் உண்மையா? என்ற கட்டுரையில் எழுதி விட்டேன்). அதே போல சங்க இலக்கியத்துக்கும் சிலப்பதிகாரத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். அப்படி இல்லை. அதிக அளவு வேறுபாடு இருக்கிறது. இளங்கோ காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்று என்று வாதிப்போருக்கு இதை நான் சொல்கிறேன்.

சுருங்கச் சொல்லின் மாக்ஸ்முல்லர் சொன்ன முறையை உலகில் வேறு எந்த மொழிக்கும் பயன்படுத்தவில்லை. இருந்த போதிலும் ரிக்வேதத்துக்கு அவர் நிர்ணயித்த காலம் கி.மு1200 என்று அப்போது ஏற்றுக் கொண்டனர். இப்போது அது தவறு என்பதற்கு வேறு சில சான்றுகள் கிடைத்துவிட்டன.

ஒரு உண்மையை யாரும் மறுக்க முடியாது — உலகில் மாறாத பொருள் எதுவுமே இல்லை. மாற்றம் என்பது இயற்கை நியதி (Change is inevitable).— நான் வகுப்பு எடுக்கும் போது, “ஒரு மொழி 200 மைல்களுக்கு ஒரு முறை மாறும், ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும்” — என்று குத்துமதிப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் சொல்லுவேன் ( நியூ கினி என்னும் தீவு இதற்கு விதி விலக்கு. அந்தத் தீவில் மட்டும் 700 மொழிகள் உள்ளன!! ) இதற்குக் கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும், எங்கள் நாட்டில் வேல்ஸ் ஆங்கிலம், ஸ்காட்டிஷ் ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும் தருவேன். உச்சரிப்பு மட்டுமின்றி சொல் வழக்குகள் முதலியனவும் வேறுபடும். எட்டாம் நூற்றாண்டில் எழுந்த ஆங்கில நூலின் எழுத்தும் , பொருளும் யாருக்கும் புரிவதில்லை!!

கீழ்கண்ட தமிழ் அமைப்பைக் காணுங்கள். இது போன்ற ஒற்றுமை தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் (சந்தி இலக்கணம்) ஓரளவு உண்டு. சம்ஸ்கிருதத்துடன் தொடர்புடைய ஐரோப்பிய மொழிகளில் உண்டு. தமிழைப் போலவே வேறு மொழிகளில் இருந்தால் அதை நன்கு ஆராய்தல் அவசியம்! அப்போதுதான் நாம் அவ்விரு மொழிகளும் “நெருக்கமானவை” என்று மேலும் ஆராய வேண்டும். இது ஒரு அம்சம் மட்டும்தான். இதுபோல வேறு பல அம்சங்களும் உண்டு. கட்டுரையின் நீளத்தைக் கருதி ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன்: உறவு முறை, எண்கள், நான், நீ போன்ற சொற்கள், வீடு வாசல் தொடர்பான சொற்கள் –முதலிய சுமார் 100 சொற்களில் – ஒற்றுமை இருக்க வேண்டும்.
tamil 3

விதி 1 (Rule 1 M-V-B/P)

ம – வ — ப – ஆகியன — பல மொழிகளில் இடம் மாறும். இது இயற்கையான மொழிப் பாகுபாடு. தமிழ் மொழிக்குள்ளேயே இதைக் காணலாம்
ம = வ= ப

முழுங்கு—விழுங்கு ( ம=வ )
முழி = விழி
மேளா- விழா
மாரி—வாரி
மல்லிப்புத்தூர் – வில்லிப்புத்தூர்
மண்டோதரி – வண்டோதரி
மயக்கு – வயக்கு
மானம்—வானம்
மிஞ்சு = விஞ்சு
மணிக்கிராமம் = வணிகக் கிராமம்

வ= ப
வங்கம் = பங்கம்
வங்காளம் = பெங்கால்
வந்தோபாத்யாயா = பந்தோபாத்யாயா

விதி 2 (Rule 2 R–L–D/T)

ர – ல – ட இடம் மாறும்.
இது பற்றி பாணினி சூத்திரம் கூட உண்டு. இந்த ஒலி மாற்றம் வேறு பல நாடுகளிலும் காணப்படுகின்றன என்பதை பலர் அறியார்.

( எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஐரிஷ்காரர்கள் வசித்தனர். அந்த வீட்டுச் சின்னப் பையன் என் மனைவியிடம் “க்லிஸ்ப், க்லிஸ்ப் தா” (klisp) என்று மழலை மொழியில் கேட்பான். உருளைக்கிழங்கு வறுவல் “க்ரிஸ்ப்” Crisp என்று சொல்லப்படும். நான் உடனே அட, மழலை வாயில் கூட ர என்னும் எழுத்து ல ஆக மாறுகிறதே என்று வியப்பேன்.))

ர = ல = ட
தார்வார் = தார்வாட்
சிம்மகர் – சிம்ம கட்

விதி 3 ( N- D/T)

ண் — ட் – இடம் மாறும். மேலே ல – ட – ர மாற்றத்தைக் கண்டோம். அப்படியானால் ண என்பது ட ஆக மாறி ல ஆகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.

இதை அறியாத பழைய மொழியியல் “அறிஞர்கள்” ட , ண போன்ற நாமடி ஒலிகள் இந்திய சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உண்டு என்றும் இதை அவர்கள் சிந்துவெளி திராவிடர்கள் இடமிருந்து கற்றதாகவும் எழுதி வைத்தனர். இதன் அடிப்படையே தவறு. அப்படியே அவர்கள் சொல்வதை நாம் ஏற்றாலும், இந்தியாவில் இருந்து போன இந்துக்கள் அங்கே போனவுடன் அந்த நாட்டு மக்கள் பேச்சுக்கேற்ப ஒலியை மாற்றிக் கொண்டனர் என்றும் வாதிட முடியும்.

இதை எழுதும்போது ஒரு சுவையான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் கொஞ்சம் காலத்துக்கு லண்டன் தமிழ் சங்கத்தின் மானேஜராகவும் பகுதி நேர வேலை செய்தேன். ஆண்டுதோறும் ஒரு நாள் தமிழ் பள்ளி ஆண்டு விழா நடத்துவோம். அப்போது திருக்குறள் போட்டி நடத்துவோம். எல்லா குழந்தைகளும் ஆங்கிலத்தில் குறளை எழுதி மனப்பாடம் செய்து கொண்டு வருவர்.

அகர முடல எலுட்டு எள்ளாம் ஆடி பகவன் முடட்ரே உலகு —

என்று பத்து குறளையும் ஒப்பித்தவுடன் விண்ணதிர கை தட்டிப் பரிசு கொடுப்போம். இது போல இலங்கையர்கள் அரங்கேற்றம் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் வாலிபர்களும் வாலிபிகளும் பாடும் பாட்டும் பேசும் பேச்சும் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அதை ஒப்பிப்பர். தமிழ் அறிவு மிகவும் சொற்பம் (எங்கள் வீட்டிலும் இதே கதைதான்!! நான் தமிழில் சொல்லச் சொல்ல அவர்கள் ஆங்கிலத்திலேயே விடை கொடுப்பர்) ஆக மொழி என்பது வாழும் இடத்திற்கேற்ப மாறும் என்று புரிந்துகொண்டால் “நாமடி” (ண, ட) ஒலிகள் பற்றிய சித்தாந்தம் நகைப்புரியதாகிவிடும். தமிழ் மொழிக்குள்ளேயே இந்த மாற்றங்களைக் காணும் போது நான் சொல்வது இன்னும் உறுதியாகிறது.

ண் = ட்
கண்+செவி = கட் செவி
மண் =கலம் = மட்கலம்

ள் = ட்
கள்+குடி = கட் குடியன்
தாள்+ தலை= தாடலை
வாள் + போர் = வாட் போர்

ல் = ற்
பல் + பொடி = பற்பொடி
கல் கண்டு = கற்கண்டு (கண்டு = கேன் டி)

பூதன் +தேவன் =பூதன்றேவன்
இலங்கைத் தமிழ்: –(கிரிக்கெட் = கிரிக்கெற், பிரென் ட் = பிரென்ற்)

tamil 4

விதி 4 Rule 4 N — R

ன் என்பது ர் ஆக மாறும்
ன் = ர்
அவன்+கள் = அவர்கள்
அவள்+ கள் = அவர்கள்
மனிதன் +கள் = மனிதர்கள்

விதி 5 Rule 5 L — N

ழ் = ன்

வாழ் + நாள் = வானாள்
பால் + நினைந்து = பானினைந்தூட்டும்

விதி 6 Rule 6 L+D=da

ழ்+த = ட

திகடச் சக்கரம் = திகழ் + தச + சக்கரம்

விதி 7 (Y — J)

ய = ச/ஜ
பங்கஜம் = பங்கயம்
தயரதன் –தசரதன்

இந்த ஜ – ச – ய- மொழி மத்திய கிழக்கு மேலை நாட்டு மொழிகளிலும் உண்டு.
யேசு – ஜீசஸ்
யூத – ஜூடா

விதி 8 Rule 8 sion = tion (S–T)

ச =ட
விஷம் = விடம்

ஆங்கிலத்திலும் ட என்பது ஷ ஆக மாறுவதைக் காணலாம்.
எடுகேஷன் = எடுகேடியன் (ஷன் = டியன்)
ஒரு உதாரணம் மற்றும் கொடுத்தேன். இது போல நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு.

விதி 9 Rule 9 ( J=S)

ராஜேந்திர சோழன் = ராசேந்திர
ஜெயலலிதா = செய லலிதா
ஷேக்ஸ்பியர் = செகப்பிரியன் !!!
ஜூலியஸ் சீஸர் = சூலியசு சீசர்
ஸ்டாலின் = சுடாலின்

(தமிழ் மொழியில் மெய் எழுத்து, மொழிமுதல் எழுத்தாக வராது. சம்ஸ்கிருதத்தில் மட்டுமே இது உண்டு!!)

ஒரு மொழியில் சில எழுத்துக்கள் இல்லாத போது வேறு ஒன்றைப் போட்டு நிரப்புவர். பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘’எஸ்’’ என்று சொல்ல முடியாததால் சிந்து நதி தீர மக்களை ‘’ஹி’’ந்து என்று அழைத்தனர். கிரேக்க, சீன யாத்ரீகர்கள், ஆங்கிலேய, பிரெஞ்சு ஆட்சியாளர்கள் முதலியோர் இந்திய மன்னர்கள் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் கடித்துக் குதறி விட்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே யாராவது தமிழுக்கும் – இதற்கும் தொடர்பு இருக்கிறது, தமிழுக்கும் – அதற்கும் தொடர்பு இருக்கிறது கதைத்தால் கொஞ்சம் சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். சொல்பவருக்கு எந்த அளவுக்கு வரலாறு தெரியும், மொழியறிவு உண்டு என்பதையும் பின்னணியில் பாருங்கள்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு (குறள் 423)

வாழ்க தமிழ்! வளர்க சம்ஸ்கிருதம்!!
(இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை இன்னும் ஒரு கட்டுரையில் கூறுவேன்)
contact swami_48@yahoo.com

சிந்து சமவெளி பாடகர்கள்: ஹாஹா, ஹூஹூ!!

two_thai_bronze_kinnara_
Kinnaras in Thailand

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1375; தேதி அக்டோபர் 28, 2014.

உலகின் முதல் அகராதி / நிகண்டின் பெயர் அமரகோசம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ளது. இதை அமரசிம்மன் என்பவர் எழுதினார். இது விக்ரமாத்தித்தன் -(கி.மு.முதல் நூற்றாண்டு)– காலத்தில் எழுதப்பட்டதாக செவிவழி வந்த செய்திகள் கூறின. ஆனால் கட்டாயம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன் இது இருந்ததற்கான சான்றுகள் உள. சுமார் 2000 ஆண்டுப் பழமையுடையது என்று கொண்டால் தவறில்லை. உலகின் முதல் நிருக்தம் ( கி.மு 800 சொற் பிறப்பியல் நூல்), உலகின் முதல் இலக்கண நூல் ( கி.மு 700 பாணீனீயம்), உலகின் முதல் காம நூல் (காம சூத்ரம்), உலகம் வியக்கும் டெசிமல் சிஸ்டம் ( தசாம்ச முறையின் மிகப்பெரிய எண்கள்; கி.மு.1000 வேத கால பிராமணங்களில் உள ) – ஆகிய அனைத்தையும் உண்டாக்கியோருக்கு ‘அகராதி’ என்பது ஒரு எளிய பணியே.

சிறு குழந்தைகள் சம்ஸ்கிருத பள்ளிக்குப் போனவுடன் இலக்கண வாய்ப்பாட்டையும், நாம லிங்கானுசாசனம் எனப்படும் அமரகோசத்தையும் மனப்பாடம் செய்ய வைத்துவிடுவர். வாழ்நாள் முழுதும் இதை மறக்க முடியாது. நானே பள்ளிக்கூட வகுப்பு முடிந்தவுடன் மதுரை மேலச்சித்திரை வீதி ஆடிட்டர் வீட்டு நடையில், தரையில் உட்கார்ந்து இப்படிக் கற்றவன். உலகமே வியக்கும் அற்புதமான வகையில் சம்ஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. நிற்க. சொல்ல வந்த விஷயம் வேறு.
kashmir Kinnara_600x450
Kinnars in Avantipur, Kashmir

அமரகோஷத்தில் ஒவ்வொரு கடவுளருக்கும் சொல்லுக்கும் உள்ள பல பெயர்கள் இருக்கின்றன. இதற்கு வியாக்கியானம் செய்த உரைகார்கள் அற்புதமான விஷயங்களை நமக்கு அளிப்பர். அவைகளை ஒருவன் கற்றால் அறிவு ஒளிரும். லண்டனில் ஒரு சம்ஸ்கிருத ஆசிரியரை வீட்டிற்கு அழைத்து கற்றுக்கொண்ட சில விஷயங்களை ஏற்கனவே ஆங்கிலத்தில் கொடுத்தேன். இன்று அமரகோசம் குறிப்பிடும் கந்தர்வர்கள் “ஹாஹா ஹூஹூ” பற்றி பார்ப்போம்.

“கந்தர்வானாம் (அஹம்) சித்ரரத:”
— என்று பகவத் கீதையில் (10-26) கண்ண பிரான் கூறுகிறார்.

மஹாபாரதம் மூலம் சித்ரரதனை நமக்குத் தெரியும். ஆனால் ‘’ஹாஹா’’, ‘’ஹூஹூ’’ பற்றி எங்குமே தகவல் இல்லை. கந்தர்வர் பற்றி வரும் விஷயங்களை வைத்து நாம் ஊகிக்கத்தான் வேண்டும்.

celestials
Gandharvas in Mamallapuram

கந்தர்வர் பற்றிய ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது; ஏனெனில்
1.ராமாயணமும் மஹாபாரதமும் கந்தர்வர்களை சிந்து சமவெளியுடன் தொடர்பு படுத்துகின்றன. ஆகவே சிந்து சமவெளி நாகரீக ஆட்சியாளர் பற்றி அறிய உதவும்.

2.வெள்ளைக்காரர்கள் வந்து ஆரியர், திராவிடர், முண்டா என்று இந்தியர்களை 3 கூறு போடுவதற்கு முன் நம் வடமொழி, தமிழ் மொழி இலக்கியங்கள் இந்தியர்களை 18 கூறுகளாகப் போட்டன. ஆனால் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் எழுதி வைத்தார்கள். அந்த 18 வகையினரில் கந்தர்வர் என்பவர் பாடகர்கள் — கின்னரர்கள் என்போர் வாத்யம் வாசிப்போர். துருக்கி வரை பல இசைக் கருவிகளுக்கு கின்னர, கின்னரி, தும்புரு, தம்புரா, டாம்போரின் என்று தான் பெயர்!!! ஆகவே வேத காலம் முதல் வழங்கும் கந்தர்வ என்னும் சொல் இசை ஆராய்ச்சி செய்வோருக்கு மிகவும் முக்கியம்.

chiron
Chirone from Greek mythology

சித்ரரதன் யார்?

மஹாபாரதத்தில் சித்ரரதன் பற்றி இரண்டு விஷயங்கள் வருகின்றன. இவன் கந்தர்வ இனத் தலைவன். இவன் தலைமையில் இருந்த படைகள் கௌரவர் படையைத் தாக்கவே கர்ணன் போன்ற பெருந் தலைவர்கள் உயிருக்குப் பயந்து ஓடி விட்டனர். துரியோதனனை கந்தர்வர்கள் கைது செய்தனர். அர்ஜுனன் போய் சமாதானம் பேசி மீட்டு வந்தான். ஏனெனில் சித்ரரதன் அர்ஜுனனின் நண்பன். அது என்ன கதை?

பஞ்சாப் (பாஞ்சாலம்) நோக்கி பாண்டவர்கள் சென்றபோது அவர்களை சித்ரரதன் தாக்கினான். அவனை அர்ஜுனன் கைது செய்து சிறைப் பிடித்தபோது, அவனது மனைவி கும்பிநாசி கெஞ்சவே, அவனை விடுதலை செய்தான். அவன் நன்றி பாராட்டும் முகத்தான் அர்ஜுனனுக்கு கந்தர்வ வகைப் போர்க்கலையை கற்றுக் கொடுத்தான். இருவரும் நண்பராயினர்.

கந்தர்வர்கள், ஒரு குறிப்பிட்டவகை போர்ப் பயிற்சியில் வல்லவர்கள். இசைக் கலையிலும் மன்னர்கள். அவர்களுடைய மனைவியரான அப்சரஸ் என்ன்னும் அழகிகள் நாட்டியக் கலையில் வல்லவர்கள் ஆகவே இந்தியாவில் இசை-நடனக் கலைக்குப் பெயர் கந்தர்வ வேதம். இது ஆய கலைகள் 64-இல் ஒன்று.

kinnari
Kinnari instrument

அர்ஜுனன், மாதலி ஓட்டி வந்த –ஸ்பேஸ் ஷட்டிலில்—விண்வெளிக் கப்பலில் — சென்று ஐந்து ஆண்டுக் காலத்துக்கு வேறு கிரகத்தில் வசித்தான். அப்போது சித்ர சேனன் என்னும் ஒரு கந்தர்வன் அவனுக்கு இசையையும் நடனத்தையும் பயிற்றுவித்தான். தேவலோக ஊர்வசி அர்ஜுனனைக் காதலித்து அங்கேயே இருக்கும்படி கெஞ்சினாள். அர்ஜுனன் மறுக்கவே ‘’நீ அலியாகப் போ’’ என்று சபித்தாள். சித்ர சேனன் இடைமறித்து சமாதான உடன்படிக்கை செய்தான். அதன்படி குறிப்பிட்ட காலம் மட்டுமே அவன் அலியாக முடிவு செய்யப்பட்டது .பிற்காலத்தில் அஞ்ஞாதவாச காலத்தில் அவன் அலியாகி– உத்தராவுக்கு நடனம் கற்பித்து கரந்துறை வாழ்வு நடத்த இது பயன்பட்டது.

இந்தக் கதையிலும் ராமாயணக் கதையிலும் பஞ்சாப், சிந்து மாகாணம் மட்டுமே கந்தர்வர்களுடன் தொடர்புபடுத்தப் படுகிறது. இப்போது ஒரு சந்தேகம் எழும். தேவ லோக கந்தர்வர்களுக்கும் பூலோக கந்தர்வர்க ளுக்கும் என்ன தொடர்பு? இதற்கு விடை என்னவென்றால் கந்தர்வர் என்னும் சொல்லும் கின்னரர் என்ற சொல்லும் பூவுலகில் வேறு பொருள் உடைத்து. இந்தியாவில் உள்ள எல்லா ஜாதிகளும், தாங்கள் கடவுள் அல்லது தேவர்களிடம் தோன்றியதாகக் கூறும். அதாவது தேவலோகம் வேறு, அவர்களுடன் தங்களை அடையாளம் காண விழையும் பூலோக வாசிகள் வேறு. இதனைப் புரிந்து கொண்டு இரு மட்டங்களில் – இரு வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெளிதல் வேண்டும்.

kinnara_1
Tumburu from Hindu Mythology

ராமாயணத்தில் பரதன் படையெடுத்து வென்ற இடம் சிந்து சமவெளி நகரங்கள் ஆகும்— இதை வருணிக்கும் வால்மீகி முனிவர் ‘’நன்கு கட்டப்பட்ட கட்டிடங்களும் நகரங்களும்’’ அங்கே இருப்பதாக வருணிக்கிறார். லாகூர் என்னும் பாகிஸ்தானிய நகரமும் லவன் – இராமனின் மகனால்- உருவாக்கப்பட்டது. ஆக கந்தர்வர் பற்றிப் பேசும் வடமொழி இலக்கியங்கள் மூன்று விஷயங்களைத் தெளிவு படுத்துகின்றன:–

1.பஞ்சாப், சிந்து மாகாணங்களில் கந்தர்வர் –கின்னரர் என்னும் ஒரு இனம் வசித்தது. (அங்குதான் மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்கள் உள்ளன).

2.அவர்கள் கட்டிடக்கலை மன்னர்கள். இசை நாட்டியத்துறை நிபுணர்கள். சிந்துவெளியில் கிடைத்த நடன மாதுவின் வெண்கலச் சிலை இதற்குச் சான்று. அங்குள்ள செங்கல் வீடுகளும் மிகப்பெரிய குளமும், குதிர்களும் இதற்குச் சான்று.

3.அவர்கள் குறிப்பிட்ட போர்க்கலையில் வல்லவர்கள். பரதன், துரியோதனன், அர்ஜுனன் ஆகியோரை அவர்கள் தாக்கியதே இதற்குச் சான்று. கர்ணனையும் உயிருக்குப் பயந்து ஓட வைத்தவர்கள்!!

Cantharus_Stathatou_Louvre_CA1987

Mycenaean Cantharus (Gandharva) from Louvre Museum, France

வேத காலச் சான்றுகள்:–
ஊர்வசி என்னும் பெண், ரிக் வேத காலத்திலேயே பிரபலமானவள். தேவலோகப் பெண்கள், கந்தர்வர்களின் மனைவியராவர். இது தவிர, போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் (20-25) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காந்தர்வாய பாலேய அக்னிவேஷ்ய என்னும் பெயர் இருக்கிறது. ஆக கந்தர்வர், அப்சரஸ் ஆகியோர் ரிக்வேத காலத்தில் இருந்ததும், அவர்கள் பஞ்சாப் சிந்து பிரதேசத்தில் வசித்ததும், அவர்கள் வடமொழிப் பெயர்கள் வைத்திருந்ததையும் வேத கால இலக்கியங்கள் உறுதி செய்கின்றன.

ashmoloean
Box with Kinnara figures in Asmolean Museum, Oxford, UK

இசை மன்னர்கள்
கின்னரர் என்ற பக்க வாத்தியக்காரர்களின் பெயரில் பல்வேறு வகை இசைக் கருவிகள் துருக்கி வரை இருக்கின்றன. கின்னரர் தலைவன் தும்புரு என்பவர், நாரதருக்கே இசை கற்பித்தவர். அவருடைய பெயரில் தம்பூரா, டாம்போரின் முதலிய கருவிகளும் பல நாடுகளில் காணப்படும். ஆக இசை ஆய்வுக்கும் ‘’கின்னரர் ஆய்வு’’ உதவும். தும்புரு போலவே குதிரை முகமும் மனித உடலும் கொண்ட ‘சிரோன்’ என்ற கிரேக்க தேவனும் குறிப்பிடத்தக்கவர். கிரேக்க நாகரீகத்துக்கு முன்னர் அங்கே நிலவிய மைசீனிய நாகரீகத்தில் ‘காந்தரோஸ்’ (கந்தர்வோஸ்??) என்பவர் இப்படிக் குதிரை உடலுடன் காட்டப்பட்டுள்ளார். இந்து மதக் கதைகள் இப்படி வெளிநாடுகளை அடையும்போது உருச் சிதைவதும், காலப்போக்கில் பழைய உண்மைக் கதைகள் மறைந்து புதுக்கதைகள் எட்டுக்கட்டபடுவதும் ஆய்வளர்களுக்கு புதுமை அன்று.

என்ன காரணத்தினாலோ கின்னரர்கள குதிரை உடல் அல்லது பறவை உடலுடன் சித்தரிக்கப் பட்டுள்ளனர். முகம் மட்டும் மனித முகம்!! இந்திய கின்னரர்- கந்தர்வர் உருவங்கள் தென்கிழக்காசியா முழுதும் பரவிக் கிடக்கின்றன. தாய்லாந்து நாட்டில் இது மிகவும் அதிகம். உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தோநேசியாவின் போரோபுதூர், கம்போடியாவின் அங்கோர்வட், ப்ராம்பனான், தாய்லாந்தின் பாங்காக் ஆகிய இடங்களில் இந்தியாவை விட அழகிய கந்தர்வர்- கின்னரர் உருவங்கள் இந்தியப் பண்பாட்டைப் பறை சாற்றி நிற்கின்றன.

kinnara in thailand musuem
Kinnara from Thailand Museum

தேவலோக கந்தர்வர் என்போரும் உண்மையே. ரமண மகரிஷிக்கு முந்திய, திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் பல அற்புதங்களைச் செய்து காட்டியவர். அவர் ஒரு இசைப் பிரியர். திடீரென வானத்தை உற்று நோக்கி இசைய ரசித்து மகிழ்வார். பக்தர்கள் கேட்டபோது வானுலக கந்தர்வர் பாடிக்கொண்டே போனதாகவும் அவர்கள் இசையைக் கேட்டு அதில் லயித்ததாகவும் கூறுவார். ஆக விண்ணுலக கந்தர்வர் என்றுமுளர். மண்ணுலக சிந்து சமவெளி கந்தர்வர் மண்ணில் கலந்துவிட்டனர் என்று கொள்வதில் தவறில்லை.

உலகம் முழுதும்— மைசீனிய நாகரீகம் வரை — கிடைக்கும் எல்லாத் தகவல்களையும், கின்னர, தும்புரு இசைகருவிகள் முதலியவற்றையும் இராமாயண, மஹாபாரத, சிந்து சமவெளி தகல்களுடன் ஒப்பிட்டால் மேலும் பல உண்மைகள் வெளியாகும். நான் முன்னர் எழுதியதுபோலவே சிந்து சமவெளி என்பது பல இன மக்கள்—பல வகை வழிபாட்டுடையோர்- ஒருங்கே வசித்த பூமி என்பதையும் நினைவிற் கொண்டால் பல புதிர்கள் விடுபட்டுப்போகும்!

Prambanan-Kinnara-bas-relief
Kinnaras from Prambanan, Cambodia

-சுபம்-

Gandharvas-Elephants

contact swami_48@yahoo.com

தினமணியும் முரசொலியும்!

MURASOLI

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1373; தேதி அக்டோபர் 27, 2014.

தினமணியில் ‘லவ் லெட்டர் நோட் புத்தகம்’ — என்ற முதல் பகுதியைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

இந்தப் பகுதி தினமணி ஆசிரியர் ( காலஞ்சென்ற ) ஏ.என்.சிவராமன் (A.N.S) அவர்களுடன், சப் எடிட்டர் என்ற முறையிலும், குடும்ப உறுப்பினர் என்ற முறையிலும் உள்ள தொடர்பு பற்றியது. நான் 1971 முதல் 1986 வரை மதுரை தினமணியில் சீனியர் சப் எடிட்டராக இருந்துவிட்டு 1987-ஆம் ஆண்டில் லண்டன் வந்து விட்டேன். பி.பி.சி. தமிழோசை ஒலிபரப்பா ளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆகவே இங்கே குறிப்பிடப்படும் சம்பவங்கள் அனைத்தும் 1987-க்கு முந்தையவை.

மதுரையில் நான் வேலை பார்த்த தினமணி அலுவலகத்தில்,
“டேய், முரசொலி என்னடா சொல்றான்: ‘ஏய் சிவராமா?-வா’ அல்லது ‘சிவராம அய்யரா?” என்று சொல்லி, சிரித்துக்கொண்டே எங்களை நோக்கி ஏ.என்.எஸ் வருவார்.

நாங்கள் தினமணிப் பத்திரிக்கையில் வேலை பார்க்கும்போது எங்களுக்கு முரசொலி, விடுதலை, தினத் தந்தி, தினமலர், மாலைமுரசு முதலிய பத்திரிகைகள், “எக்ஸேஞ்சு காப்பி” வரும் – அதவது நாங்கள் எங்கள் பத்திரிக்கையை அனுப்பினால் அவர்கள் தங்களுடைய பத்திரிக்கை ஒன்றை அனுப்புவர். அவைகளைப் படித்து, ரசித்து, சுவைத்து, சிரித்து, அசைபோட்டு மகிழ்வோம். அதை ஏ.என். எஸ். புரிந்துகொண்ட அளவுக்கு நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர், “டேய், முரசொலி என்னடா சொல்றான்: ஏய் சிவராமா?-வா அல்லது சிவராம அய்யரா?” என்பார். இதன் பொருள் என்ன?

தி.மு.க.கொள்கைக்கோ அல்லது ஆட்சிக்கோ பிடிக்காத, ஒவ்வாத செய்தியை தினமணி வெளியிட்டிருந்தால் அடுத்த ஓரிரு தினங்களுக்குள் தி.மு.க.வின் கட்சிப் பத்திரிக்கையான முரசொலியில் “ஏய் சிவராமா” என்று ஏக வசனத்தில் துவங்கி திட்டித் தீர்ப்பார்கள். ஆரம்ப காலத்தில் பார்ப்பனர் முதலிய ஜாதி விஷயங்களையும் இழுத்து வம்பு செய்வார்கள். பின்னர் அது குறைந்துவிட்டது.

தி.மு.க. அரசின் சில கொள்கைகளைப் பாராட்டி தினமணி எழுதிவிட்டால், மறு நாளைக்கே முரசொலி பத்திரிக்கையில் “சிவராம அய்யர் அவர்கள் கூட” — என்று பஹுவசனத்தில் தலையங்கம் எழுதுவர். ஓரிரவில் ஏக வசனம் பஹுவசனமாக மாறிவிடும். இதை நாங்கள் ரசிப்பது போலவே அவரும் மறு நாள் ரசிப்பார். இதைத்தான் “டேய், முரசொலி என்னடா சொல்றான்: ஏய் சிவராமா?-வா அல்லது சிவராம அய்யரா?” என்று கேட்பார். அதாவது மாற்றுப் பத்திரிக்கை கருத்துக்களையும்—குறிப்பாக அப்போது ஆட்சியில் இருக்கும் கட்சியின் கருத்துகளையும் — கவனிக்க வேண்டும் என்பதே இதன் சாரம்.

annadurai

அண்ணாதுரை டெலிபோன் ரகசியம்
1965 ஆம் ஆண்டில் ஜனவரி இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து 4, 5 மாதங்களுக்கு தமிழ்நாடு வன்முறைக்களமாக மாறியது. நாங்கள் எல்லோரும் அப்போது பள்ளி மாணவர்கள். “போலீஸ் மந்திரி கக்கா, மாணவர் என்ன கொக்கா? பக்தவத்சலக் குரங்கே மரத்தை விட்டு இறங்கு, தாய்த் தமிழ் இருக்க ———– யாள் இந்தி எதற்கு?” என்றெல்லாம் அர்த்தமே இல்லாமல் ரோட்டில் கோஷமிட்டுக்கொண்டு ஊர்வலம் செல்வோம். முடிந்தால் கற்களையும் வீசி எங்கள் வீர, தீர, சூரத் (அசுர) தனத்தைக் காட்டுவோம் ( அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்தது. பக்தவத்சலம் என்பவர் முதலமைச்சர், கக்கன் என்பவர் போலீஸ்/ உட்துறை அமைச்சர்)

தமிழ்நாட்டில் தீவைப்பு, மாணவர்கள் தீக்குளித்தல் முதலியன கட்டுக் கடங்காமல் போயின. அப்போதைய தி.மு.க.தலைவரும் பிற்கால முதலமைச்சருமான சி.என்.அண்ணாதுரை, தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனுக்கு போன் செய்து, இந்த வன்முறையை எப்படியாவது நிறுத்துங்களேன். பத்திரிகையில் கொஞ்சம் பெரிதாக எழுதினால் மக்கள் செவிசாய்ப்பரே என்று சொன்னார். அதற்கு “வன்முறையைத் தூண்ட மட்டுமே எல்லோராலும் முடியும், அதை நிறுத்த யாராலும் முடியாது. காட்டுத் தீ எப்படி முழுவதையும் எரித்துவிட்டு தானாகத் தணிகிறதோ அது போலத் தணியும்—என்று ஏ.என்.எஸ். பதில் சொன்னார். இது ஒரு ரகசிய (கான்பிடென்சியல்) விஷயம். இதை ஏ.என். எஸ்ஸே எங்கள் மேஜைக்கு அருகே வந்து பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.

திருநெல்வேலிக்காரன் என்பதற்கு என்ன அடையாளம் என்பதை ஒரு கெட்ட வார்த்தை சொல்லிக் காட்டி இப்படித் திட்டினால்தான் நெல்லைக்காரன் என்பார். அந்த கெட்ட சொல்— எழுத்தில் வடிக்கக் கூடாத சொல் என்பதால் இத்தோடு விடுகிறேன்.

அவர் நீண்ட கட்டுரைகள் எழுதும் போது எல்லாம் மதுரைக்கு வந்து விடுவார். பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் தங்குவார். ஏனெனில் சுதந்திரப் போராட்ட காலத்தில் என் தந்தை வேங்கடராமன் சந்தானம், ஏ.என்.எஸ் எல்லோரும் ஒரு சேரப் போராடி சிறை சென்ற தியாகிகள். சென்னையில் திருவல்லிக்கேணியில் அவரது வீட்டில் ஒரு நாள் சமையல்—- எங்கள் வீட்டில் ஒரு நாள் சமையம் —- என்று முறைவைத்து சமைத்துச் சாப்பிடுவார்களாம். அப்போது நான் பிறக்கக்கூட இல்லை. எல்லாம் என் அம்மா சொல்லித்தான் தெரியும். எனது தந்தை தன்னைப் பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. நான் அதற்கு நேர் மாறாக எவ்வளவு சுய புராணம் எழுதுகிறேன் என்று!!
dinamani

சென்னை தெருக்களில்
“வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறு ஒன்று கொள்வாரோ? – என்றும்
ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார், கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ?”

என்ற பாரதி பாட்டைப் பாடிக்கொண்டு ஊர்வலம் போவார்களாம்.
“மணிக்கொடிக் காலம்” — என்ற பி.எஸ்.ராமையா புத்தகத்தில் எனது தந்தை வெ.சந்தானம் பற்றி இரண்டு பக்கங்கள் எழுதி இருக்கிறார்.

அப்பலோ-13 விண்ணீல் சென்று சிக்கலில் மாட்டியது பற்றியும், குன்னர் மிர்தலின் ஏசியன் ட்ராமா புத்தக அடிப்படையில் ரஷ்யா முதலிய கம்யூனிஸ்ட் நாடுகளின் மற்றும் இந்தியப் பொருளாதாரம் பற்றியும், பெட்ரோல் விலை ஏறியபோது பெட்ரோலியம் பற்றியும் கட்டுரைகள் எழுதினார் ஏ.என்.எஸ். அப்போது எல்லாம் எங்கள் வீட்டுக் கூடத்தில்— (பிராமணர் வீடுகளில் ஹால் என்பதை இப்படி கூடம் என்றும் குறுகிய பகுதியை ரேழி என்றும், பின்பகுதியை முற்றம் என்றும் சொல்லுவர்) — உட்கார்ந்து கொள்ளுவார். அவரைச் சுற்றி மலை போல புத்தகங்கள் – நாலா புறங்களிலும் – குவிந்திருக்கும்.

எனது தம்பி ச. சூரியநாராயணன் அப்போது கெமிஸ்ட்ரி பேராசிரியர் (பின்னர் சரஸ்வதி நாராயணன் கல்லூரி பிரின்ஸிபால்). இன்னொரு தம்பி பிசிக்ஸ் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். ஆகையால் ஏதேனும் ரெபரன்ஸ் வேண்டுமானால் அவர்களைப் பார்க்கச் சொல்வார். பெட்ரோலியம் நெருக்கடி பற்றி கட்டுரை எழுதுகையில் விஞ்ஞான விஷயங்கள் எல்லாவற்றையும் என் தம்பிகளிடம் சொல்லி சரி பார்த்துக் கொள்வார். ஏனெனில் அவர், என் தந்தை எல்லாம், சுதந்திரப் போராட்டத்துக்காக பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள் — எத்தனை வயதிலும் புதிய விஷயங்களைக் கற்கலாம்—அது முடியும் – என்பதற்கு ஏ.என்.எஸ். ஒரு உதாரணம். மணிக் கணக்கில் உட்கார்ந்து எழுதுவார் படிப்பார்—ஆனால் அவர் எழுதியதைப் படிப்பது மிகக் கடினம். அவ்வளவு கிறுக்கலாக இருக்கும். மதுரையில் தினமணியில் வேலைபார்த்த சதாசிவம் என்ற மோனோ ஆப்பரேட்டர் (Mono Machine Operator) மட்டுமே அவர் எழுத்தைப் படிக்கமுடியும்.

எங்கள் வீட்டில் சாப்பிடும் போது என் அம்மா இன்னும் வேண்டுமா? இன்னும் வேண்டுமா? என்று உபசரிப்பார். இதோ பார், இப்படிக்கேட்டால் நான் கூச்சத்தினால் கொஞ்சம்தான் கேட்பேன். கூட்டு, காய்கறிகளை இப்படி வைத்துவிடு. நானே போட்டுக் கொள்கிறேன் என்பார். அதன்படியே செய்வோம்.

vedapatasala

பத்திரிக்கைகளில் சாமி, பூதம் என்று போடுவதெல்லாம் அவருக்கு அதிகம் பிடிக்காது. ஆனால் என் தந்தை இதற்கு நேர் மாற்று. முதல் பக்க தினமணியில் சாமி, சாமியார் செய்திகளைப் போடுவார். அதை ஏ.என்.எஸ். கிண்டல் செய்வார்.

டேய் சந்தானம் நெல்லை ஜில்லாவில் — (அவரது சொந்த ஊர் ஆம்பூர், நெல்லை மாவட்டம்) — ஒரு கோவிலுக்குப் போனேன். நீங்கள் யார் என்று கோவில் பட்டர் கேட்டார். தினமணி பத்திரிக்கை எடிட்டர் ஏ.என்.சிவராமன் என்றேன். சந்தானம் அல்லவா எடிட்டர், நீங்கள் இல்லையே- என்று சொன்னார் என்பார். என் தந்தை அதைக் கேட்டு ஒரு புன்சிரிப்பு மட்டுமே செய்வார். அந்த அளவுக்கு தென் மாவட்டங்களில் என் தந்தை சமயச் சொற்பொழிவுகள் நடத்தியும் அந்தச் செய்திகளை வெளியிட்டும் பிரபலமானவர்.

திடீரென்று ஏ.என்.சிவராமனுக்கு வேதங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று தோன்றிவிட்டது. அப்போது எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். எனது பெரிய அண்ணன் சீனிவாசனும், கடைசி தம்பி மீனாட்சிசுந்தரமும் அவருடன் மதுரை, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி வேத பாடசாலைகளுக்குச் சென்று எல்லா வேதங்களையும் டேப் ரிகார்டரில் பதிவுசெய்தனர். அற்புதமான ‘’கலெக்சன்’’ அது. பழைய கால கிரண்டிக் டேப்ரிகார்டரில் (ஸ்பூல் டைப்) செய்துவிட்டதால் பின்னர் பயன்படுத்த முடியவில்லை. டேப்புகள் மட்டும் என் தம்பியிடம் உள்ளன. வாக்ய பாடம், க்ரம பாடம் கன பாடம், ஜடா பாடம் என்று பலவகையில் ரிகார்ட் செய்தனர். இது பல மாதங்களுக்கு நடந்தது. இந்த ஆர்வத்தில் கண பாராயணம், ஜடா பாராயணம் என்றால் என்ன என்று தினமணியில் எழுதத் துவங்கினார். சில கடுமையான எதிர்ப்புக் கடிதங்கள் வந்தன. உடனே நிறுத்திவிட்டார். பத்திரிக்கை என்பது மதத்திற்கு அப்பாற்பட்டது என்பது அவர் கருத்து.

தொடரும்… …….. …………

இதே வரிசையில் நான் எழுதிய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.என் அப்பாவிடம் கற்றது (posted on 8-9-14)
2.என் அம்மாவிடம் கற்றது (4–10–2014)
3.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள் (posted on 9-9-14)
4.தினமணியில் ‘லவ் லெட்டர் நோட் புத்தகம்’ (20—10—2014)

தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!

rameswaram

Rameswaram Agni Theertham where ancestors are worshiped on important days.

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

உலகில் மிகவும் ஆச்சர்யமான பிறவிகள் இந்துக்கள். முன்னோர்களை அவர்கள் வழிபடும் முறை தனிச் சிறப்புடைத்து. இவர்கள் போல இறந்து போனோரைக் கொண்டாடும் இனம் உண்டோ என்றில், இல்லை என்று பகர ஒரு நொடியும் தேவை இல்லை. பெரிய தலைவர்கள் இறந்தால் அடக்கம் நடைபெறும் போது 21 முறை பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செய்வர். இதற்கு கடற்படை சம்பிரதாயமே காரணம் என்று கலைக் களஞ்சியங்கள் செப்பும். பின்னர் ஆண்டுதோறும் அவர்கள் கல்லறைக்குச் சென்று மலர் தூவுவர். ஆனால் இந்துக்களோ ஆண்டுக்கு குறைந்தது 96 முறை வணங்குவர். ஆதிகாலத்தில் மூன்று வர்ணத்தாரும் செய்த இக்கடன் இப்போது குறுகிப்போய் ‘’பிராமணர் மட்டும்’’ என்று ஆகிவிட்டது. அதுவும் அருகிப் போய் 96 முறைக்குப் பதில் 12 அல்லது 24 முறை என்று சுருங்கிவிட்டது. காலத்தின் கோலம்!!

தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐவேள்வி?

திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.

அதாவது கிருஹஸ்தன் என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.

thai amavasya

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பிள்ளை பெறுவது எதற்காக என்று புற நானூற்றில் கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் — சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பல புலவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்கு இடம் தர மறுத்த சோழ மன்னன் புதல்வன் பிறந்த பின் வருக — என்கிறான். புதல்வர் எதற்காக? பிண்டோதக் கிரியை என்னும் இறுதி யாத்திரைக் கிரியை செய்வதற்காகும் என்று உரைகாரர்கள் நவில்வர்.

உரைகாரர் சொன்னால் நாங்கள் நம்பவேண்டுமா? என்போருக்கு அகநானூற்றுப் புலவர் செல்லூர் கோசிகன் கண்ணனார் — (கௌசிக கோத்ரத்துதித்த கிருஷ்ணன் என்னும் புலவர்) — வாய்மொழியாக உண்மை அறிதல் நலம்:

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப்——— அகம்.66

பிள்ளைகள் இல்லாவிட்டால் நரகமா?

பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?

இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளிதின் விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று )

இதனால்தான் பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும் 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

TharpaNam Pic

இதோ அவர்கள் சொல்லும் அற்புத மந்திரங்கள்:
எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய) — அவர்கள் எல்லாம் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.

ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்கும்:

காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)

இவ்வாறு ஒரு ஆண் — தனது வம்சத்தில் பிறந்து இறந்த தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூவருக்கும் நீர்க்கடன் செலுத்திய பின்னர், தாயின் வம்சத்திலும் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எள்ளும் நீரும் இரைப்பர். இந்த ஆறு பேருடைய மனைவிமார்களும் இதே போல மரியாதை பெறுவர். எல்லோரும் இறந்து போயிருந்தால் இப்படி 12 பேருக்கும் வழிபாடு நடக்கும். இந்த அற்புத முறையை உலகில் வேறு எங்கும் காண முடியாது!!

இனி இந்துக்கள் – குறிப்பாக பிராமணர்கள் செய்ய வேண்டிய 96 இறந்தார் கடமைகளைத் தருகிறேன் (ஸ்ரீரங்கம் பி.ஜே.ஸ்ரீனிவாசன் எழுதிய நூலில் இருந்து)
அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்:

adi amavasya

12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)
இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.

-சுபம்-

தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி

tolkappian-katturai

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1369; தேதி அக்டோபர் 25, 2014.

( கேள்விகள் –சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-தொல்காப்பியத்திலிருந்து )
1.ஒல்காப் புகழ் தொல்காப்பியனாரே! தமிழனுக்கு கடவுள் யார்?
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (பொருள் 1-5)

2.துவக்கமே சுபமாக இருக்கிறது. விஷ்ணு, முருகன், இந்திரன், வருணன் நம் கடவுள்கள்.— வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம் என்று பனம் பாரனார் கூறுகிறாரே?

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்
தம்பொருள் வழா அமை இசைக்கும் சொல்லே (398)
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச் சொற் கிளவி (சூத்திரம் 400)

3.ஆம், புரிகிறது. செந்தமிழ் நிலத்தில் பேசும் இயற்சொற்கள் மாறாது– பக்கத்திலுள்ள 12 பகுதிகளிலிருந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள். இது தவிர திரி சொல், வட சொல் ஆகியனவும் உண்டு. ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், உணவு, மிருகம், மரம், பறவை, முரசு, தொழில், இசை ஆகியவும் உண்டா?

தெய்வம் உணா மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகை இ
அவ்வகை பிறவும் கருவென மொழிப. (பொருள் 1-18)

4.சரி. அதைப் பட்டியலில் பார்த்துக்கொள்கிறேன். மனிதர்களுக்கு ஆறு அறிவு என்றால் மற்ற உயிரகளுக்கு எவ்வளவு அறிவு?

புல்லும் மரமும் ஓரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நந்தும் முரளும் ஈரறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் மூவறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
நண்டும் தும்பியும் நான்கறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மாவும் புள்ளும் ஐயறிவினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
மக்கள் தாமே ஆறறிவுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

15FR-_TOLKAPPIYAM__1120361e

5.அது சரி, 1610 சூத்திரங்களில் 68 இடங்களில் ‘’என்மனார்’’ என்றும், 15 இடங்களில் ‘’வரையார்’’ என்றும் இன்னும் பல இடங்களில் ‘’என்ப, மொழிப’’ என்றும் கூறுகிறீர். இதைப் பார்த்தால் உமக்கு முன்னரே நிறைய விதிகள் இருந்து நீவீர் அவைகளத் தொகுத்தது போல் அல்லவோ இருக்கிறது?
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார் (சொல் 402)

6.யான் பெற்ற இன்பம் இவ் வையகம் என்றும் ‘’லோகாஸ் சமஸ்தோ சுகினோ பவந்து’’ — என்றும் பெரியோர்கள் கூறுகிறார்களே. நீங்கள். . . . ..

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்

7.உங்களுடைய உண்மைப்பெயர் த்ருணதூமாக்கினி என்று சிலர் சொல்லுகிறார்கள். நீங்கள் வேதம் கற்ற பார்ப்பனரா?
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற்கோடல் அந்தணர் மறைத்தே
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென

8.கடவுள் நம்பிக்கை இல்லாத தமிழரும் உங்கள் நூலைப் புகழ்கிறார்கள். நீரோ ‘’தர்மார்த்த காமம்’’ என்பதையும் கடவுளையும் பற்றிப் பேசுகிறீர். உண்மை என்ன?
கொடிநிலை,கந்தழி வள்ளியென்ற மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை

10.அட, நீரும் வள்ளுவனைப் போல அறம், பொருள் இன்பம் (தர்ம அர்த்த காம) பற்றிப் பேசிவிட்டீர் — பெண்கள் வாழ்க — என்பது உமது கொள்கையாமே?
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான

11.தமிழில் மாற்றங்களை ஏற்க வேண்டுமா?
உணரக் கூறிய புணரியல் மருங்கிற்
கண்டு செயற்குரியவை கண்ணினர் கொளலே

tolkappaima

12.சரி. நீர் மாற்றங்களை ஆதரிப்பதற்கு நன்றி. ‘’பசுப் பாதுகாப்பு இயக்கம்’’ பற்றியும் நீர் பேசினீராமே?
வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்
ஆ தந்தோம்பல் மேவற்றாகும் (1003)

13.போர் வேண்டாம் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். உமது கருத்து என்னவோ?
இரு பெரு வேந்தர் தாமும் சுற்றமும்
ஒருவரும் ஒழியாத் தொகை நிலை

14.நன்றி. நீரும் போரை எதிர்ப்பதற்கு நன்றி. வள்ளுவன் சுருங்கs சொல்லி விளங்கி வைத்தான். நீர் எதிர்பார்ப்பது என்ன?
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுதலின்றிப் பொருள் நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப்பதுவே

15.அற்புத மாகச் சொன்னீர்கள். கண்ணாடியில் பார்ப்பது போல தெளிவு வேண்டும். அடடா, அருமை, அருமை. நன்றி! தொல்காப்பியனாரே!

முந்தைய 60 வினாடி பேட்டிகள்
இவைகளையும் படிக்க வேண்டுகிறேன்

1.அப்பருடன் 60 வினாடி பேட்டி
2.அருணகிரிநாதருடன் 60 வினாடி பேட்டி
3.ஆண்டாளுடன் 60 வினாடி பேட்டி
4.இளங்கோவுடன் 60 வினாடி பேட்டி
5.கம்பனுடன் 60 வினாடி பேட்டி
6.கண்ணதாசனுடன் 60 வினாடி பேட்டி
7.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி
8.சாக்ரடஸுசுடன் 60 வினாடி பேட்டி
9.சீத்தலைச் சாத்தனாருடன் 60 வினாடி பேட்டி
10..சுந்தரருடன் 60 வினாடி பேட்டி
11.தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி
12.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி
12.திருஞானசம்பந்தருடன் 60 வினாடி பேட்டி
13.திருமூலருடன் 60 வினாடி பேட்டி
14.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி
15.பாரதியுடன் 60 வினாடி பேட்டி
16.பாரதிதாசனுடன் 60 வினாடி பேட்டி
17.மாணிக்கவாசகருடன் 60 வினாடி பேட்டி
18.வள்ளுவருடன் 60 வினாடி பேட்டி
19.ஸ்ரீ கிருஷ்ணனுடன் 60 வினாடி பேட்டி
20.சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி
21.தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி
22.திரிகூடராசப்ப கவிராயருடன் 60 வினாடி பேட்டி

English 60 second Interviews:
60 second Interview with Swami Vivekananda
60 second Interview with Socrates
60 second Interview with Adi Shankara
60 second Interview with Sri Sathya Sai Baba

contact swami_48@yahoo.com

அசுரர்கள், அரக்கர்கள் அகராதி

krishna killing kesikasuran
Krishna killing Kesikasura

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.

‘’அசுரர்’’-கள் யார், ‘சுரர்’-கள் யார் என்று குணங்களின் அடிப்படையில் மனிதர்களை இந்துக்கள் தரம் பிரித்து வைத்தார்கள். இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? பகவத் கீதையில் 16 ஆவது அத்தியாயத்தில் (தைவ அசுர சம்பத் விபாக யோகம்) இருக்கிறது. அசுர குணங்கள் எவை? தெய்வீக உணங்கள் எவை என்று கிருஷ்ண பரமாத்மா மிகத் தெளிவாகவே கூறி இரிக்கிறார். அது மட்டுமல்ல. விபூதி யோகம் என்னும் பத்தாம் அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் தான் யார் என்று பறவை, மிருகங்களைக் கூட சேர்த்திருக்கிறார். அதில் தன்னை அசுரர்களில் பிரஹலாதன் என்கிறார். இது எதைக் கட்டுகிறது? எல்லோரும் கடவுளின் படைப்பே.

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – என்று பாரதி பாடியதற்கு இந்த பத்தாவது ( விபூதி யோகம்) அத்தியாயமே காரணம்.

நம் எல்லோருக்கும் அசுர குணங்களும் தெய்வீக குணங்களும் உண்டு. சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றிலும் தூயவர்களை – த்ரிகரணசுத்தி உடையவர்களை – நாம் மகான்கள் என்று போற்றுகிறோம். நம்மைப் போன்றவர்கள் அசுரர் அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை எனினும் அவ்வப்போது அசுர குணங்கள் தலை எடுப்பதால் நாம் இன்னும் சாதரண மனிதர்களாகவே இருக்கிறோம். ராவணன் போன்றோர் கலையிலும் கல்வியிலும், செல்வத்திலும் உயர்வு பெற்றும் ஒரு அசுர குணம் உச்சத்துக்குப் போனவுடன் அதன் காரணமாகவே இறக்க நேரிடுகிறது.

krishna throwing calf
Krishna killing Vatsasura

ஆக, சுருங்கச் சொல்லின் அசுர குணங்களில் ஏதேனும் ஒன்று ஒருவருக்கு, நூறு சதவிகிதம் மேலிடும்போது அவருக்கு அழிவு ஏற்படும் இது இந்து மதத்தில் பல்லாயிரக கணக்கான ஆண்டுகளாக உள்ள கொள்கை. இந்தக் கொள்கையில் வெள்ளைக்காரர் போன்ற சில வெளிநாட்டு “அறிஞர்கள்” அவர்களுடைய மதத்தைப் பரப்புவதற்காகவும் ஆட்சியை நிலை நாட்டுவதற்காகவும் ஆரிய—திராவிட வாதம் என்னும் விஷத் தூளைத் தூவினர். இது இந்திய வரலாற்றில் புரையோடிப் போய்விட்டது. இந்தியர்களை இரண்டாகப் பிரித்து, ஆரியர்கள் எல்லாம் தேவர்கள், திராவிடர்கள் எல்லாம் அசுரர்கள் என்று முத்திரை குத்தினர்.

இதைத் தாங்கள் சொல்லவில்லை என்றும் இந்து மத நூல்கள் சொல்கின்றன என்றும் இங்கொரு செய்யுள் அங்கொரு செய்யுள் என்று எடுத்து மேற்கோள் காட்டினர். இந்துக்களில் நிறையப் பேர் சோம்பேறித் தடியர்கள், விதண்டாவாதிகள், குதர்க்க வாதிகள், புத்திசாலிப் போல பேசும் கோணங்கிகள், அரை வேக்காடுகள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஏனெனில் ராமாயணத்தையோ, மஹாபரதத்தையோ, கீதையையோ, குறளையோ, தேவார திவ்யப் பிரபந்ததையோ வாழ்நாளில் ஒரு முறையும் படிக்க முயற்சி கூட செய்யாமல் கேள்வி மட்டும் கேட்கவும், குதர்க்க வாதம் மட்டும் செய்யவும் மட்டும் கற்றுக் கொண்டு விட்டனர்.

ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால், இந்துக்களைக் குறை சொல்வதிலும் நியாயம் இல்லை. அவர்களுடைய நூல்களைப் படிக்க நூறு பிறவி எடுத்தாலும் போதாது. பைபிள், குரான், ஆதிக்கிரந்தம் போன்றவற்றை சில மணி நேரங்களில் படித்து விடலாம். ஆனால் இந்து மத வேத புராண, இதிஹாச, உபநிஷத, ஸ்மிருதிகள் இவைகளைப் படிக்க கோடி கோடி ஜன்மங்கள் வேண்டும். ஏனெனில் சம்ஸ்கிருத மொழியில் உள்ள புத்தகங்களின் பெயர்களைப் படிக்கவே ஒரு ஜன்மம் போதாது!!!

இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்பீர்கள். இப்பொழுதுதான் ஹாலந்து நாட்டுப் லெய்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து ஒவ்வொரு துறையில் உள்ள முக்கிய புத்தகங்கள் பற்றி எழுதி தனித்தனி பகுதிகளாக வெளியிட்டு வருகின்றனர்.

அதில் அகராதி என்று எடுத்தால் அதில் மட்டும் நூற்றுக் கணக்கான பெயர்களும் புத்தகங்களின் சுருக்கமும் இருக்கும். பாணினிக்கு முன் எத்தனை இலக்கண வித்தகர்கள் இருந்தனர் என்று படித்தால் வியப்பாக இருக்கும். அப்போது உலகில் யாருக்கும் இலக்கணம் என்ற வார்த்தையோ அகராதியோ என்ன என்று “ஸ்பெல்லிங்” கூடத் தெரியாது!!

Tarakasura
Tarakasura in Yakshagana, Mangalaore

மதம் என்று எடுத்துக் கொண்டால் இமய மலை அளவுக்கு நம்மிடம் புத்தகங்கள் உள. மற்றவர்களிடம் ஒரு உயர்ந்த மாடி வீட்டு அளவுக்குத்தான் புத்தகம். இதனால் அவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்து விடாதீர்கள். திருக்குறளில் உள்ள துறவறவியல் என்ற பகுதியில் மட்டும் கூட இந்துமதத்தை அடக்கிவிடலாம. அத்தனையும் அவ்வளவு அழகாக 130 குறள்களில் சொல்லிவிட்டார். 260 வரிகளில் இந்து மதத்தையே அடக்கிவிட்டார்.

கண்ண பிரான் 700 குறள்களில்– 1400 வரிகளில்– இந்து மத ‘’ஜூஸ் ‘’ பிழிந்து கொடுத்துவிட்டார் (குறள் ஈரடிச் செய்யுள். கண்ணனும் ஈரடியில் ஸ்லோக வடிவில் சொன்னான்). எதையும் படிக்காதது இந்துக்களின் குறையே.

மேலும் அசுரர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள் ஆகிய அனைவரும் ரிஷிகளுக்குப் பிறந்தவர்களே என்றும் புராண, இதிஹாசங்களில் மிக மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

ஆகவே அசுரர்கள் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதைப் புரிந்து கொண்டு கீழே உள்ள பட்டியலைப் படியுங்கள்:

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
பூதனா, சகடாசுரன், த்ரினாவர்த்தா, வத்சாசுரா, பகாசுரா, அகாசுரா, தேனுகாசுரா, காளீயன், ப்ராலம்பாசுரா, அரிஷ்டாசுர, கேசி அசுரா, சங்கசூடா, கம்ச, சாணூர, வ்யோமசுரா, மது, நரகாசுரா
அஹீ, விருத்திர

bhasmasura_mohini
Bhasmasura killing himself

இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
அஹீ, விருத்திர பிராமண அசுரன்), திரிசிரஸ் (பிராமண அசுரன்),சம்பரன், அராரு, சுஸ்ன, குயவ, இலிபிஷ, உரன, ஸ்வர்பானு, அஹிசுவ, கரஞ்ச, பர்நாய, வாங்த்ர, அற்புத, ஔர்ணவாப, வ்ருகத்வார, பிப்ரு, சுமுரி, நமுசி, ரிதிக்ர, ஸ்ரீபிந்த, அனார்சனி, துனி, வல, ம்ரிக்ய, த்ர்பிக, துக்ர, வேடசு
இவர்கள் எல்லோருடைய பெயர்களும் அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதால் இவை அனைத்தும் சம்ஸ்கிருத பெயர்களே. வெளி இனத்தாரோ, வெளி நாட்டாரோ இல்லை.

இந்திர, மித்ர, வருண, வாயு, அக்னி, அர்க, வாகீச, நாசத்ய, வாசஸ்பதி, பிருஹஸ்பதி என்ற வேதக் கடவுளர் பெயர்களும் இதே போல அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதைக் காண்க.

அசுரர்களைக் கொன்ற கடவுளர்கள்
மது கைடப – ஹயக்ரீவ (விஷ்ணு)
ஹிரண்யகசிபு – நரசிம்ம
பலி – வாமன/த்ரிவிக்ரம
ராவண ( 50% பிராமண அசுரன்) – ராமன்
இந்திரஜித், கும்பகர்ண, மாரீச – ராமன்
கர, தூஷண, கபந்த, தாடகா- ராமன்
வாதாபி – அகஸ்தியர்
ஜடாசுர, பகாசுர – பீமன்
அந்தகாசுர, முயலக- சிவன்
பஸ்மாசுர – தன் வரத்தினாலேயே மரணம்
கஜமுகாசுரா- கணபதி
தாரக, சூரபத்ம- முருகன்
மஹிசாசுர,சும்ப, நிசும்ப, சுந்த, உபசுந்த—தேவி.
ராஹு, கேது ஆகியோர் அசுரர்களாகவும், கிரகங்களாகவும் கருதப்படுவர்.
durga2

Mahisasura was killed by Devi

இறுதியாக, புராண காலத்தில் அசுரர்கள் கூடுதலாகவும், இதிஹாச காலத்தில் குறைவாகவும் இருப்பதைக் காண்க. அதிலும் ராமாய ணத்தில் கூடுதலாகவும் மஹாபாரதத்தில் குறைவாகவும் இருப்பதையும் கவனிக்க — அதாவது, தீய குணங்களை உடையோர் அசுரர்கள் — புராண காலத்தில் வாழ்ந்திருந்தால் துரியோதணனைக் கூட அசுரர் என்று சொல்லி இருப்பர்!!. ரிக் வேத துவக்க காலத்தில் அசுரர் என்னும் சொல், நல்ல பொருளில் மட்டும் பயன்படுத்த ப்பட்டது. இந்திரனையும் அசுரன் என்றே போற்றுகிறது. பின்னர் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. சங்க காலத்தில் நாற்றம் என்றால் நல்ல (வாசனை) பொருள். இப்போது அதைக் கெட்ட பொருளில் (துர் நாற்றம்) பயன்படுத்துகிறோம். அதுபோலத் தான் அசுர என்ற சொல்லும் பொருள் மாறிப்போனது.

நம் எல்லோருக்கும் ‘’அசுர’’ பலம் கிடைக்கட்டும்!!
‘’சுர’’ குணமும் கிடைக்கட்டும்!

contact swami_48@yahoo.com

Andhakasura
Shiva killing Andhakasura

நற்றிணை அதிசயங்கள்!

acrobat-

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1361; தேதி அக்டோபர் 21, 2014.

புறநானூற்றில் உள்ள அதிசயங்களை “புறநானூற்று அதிசயங்கள்” என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதினேன். இன்று நற்றிணை என்னும் நூலில் உள் அதிசயங்களைக் காண்போம். சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் (பத்துப்பாட்டு 10+ எட்டுத்தொகை 8 = 18) உள்ளன. இவற்றில் 2400 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் காணும் 18 நூல்களையும் மேல்கணக்கு நூல்கள் என்பர். அதற்குப் பின் எழுந்த திருக்குறள் முதலிய 18 நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். தமிழர்கள் எவ்வளவு புத்திசாலி பாருங்கள். 18 என்ற எண்ணின் சிறப்பை அறிந்து முக்கியமான 36 நூல்களை நமக்கு அழகாக வரிசைப்படுத்திக் கொடுத்து விட்டனர்.

எட்டுத்தொகை என்னும் தொகுப்பில் உள்ள எட்டு நூல்களில் ஒன்று நற்றிணை. இது அகம் என்னும் காதல், குடும்ப வாழ்வு பற்றிய 400 பாடல்களைக் கொண்டது. தமிழனுக்கு 400 என்ற எண்ணின் மீது ஒரு தனி காதல் உண்டு. புற நானூறு, அக நானூறு, நற்றிணை நானூறு, நாலடியார் நானூறு, பழமொழி நானூறு என்று அடுக்கித் தள்ளிவிட்டனர்!

அதிசயம் 1
பாடல் 132 அந்தக் காலத்தில் யாமக் காவலர் என்னும் போலீஸ் படை (Policing) தமிழ் நாட்டில் இருந்து பற்றிக் கூறும்:
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண்மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்

எல்லோரும் அவரவர் வீட்டு வாசல் கொல்லைப்புறம் எல்லாவற்றையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சத்தம் எழுப்பிக் கொண்டே பெரிய மணியை மாறி மாறி அடித்துச் செல்வார்களாம் சங்க கால போலீஸ் படை.!!

அதிசயம் 2
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தக் காலத்தில் அவரை மிஸ்டர் மஹாதேவன் என்று அழைக்கலாம். மஹாதேவன் என்று சிவன் பெயரை வைத்துக் கொண்டு இவர் பாடியது மஹாபாரதம்! சரி போகட்டும்! என்று விட்டுவிட முடியவில்லை. இவர் நற்றிணையில் பாடிய கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் மஹாபாரதப் பகுதியாகும்! அதில் விஷ்ணுவின் புகழைப் பாடுகையில்

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே (கடவுள் வாழ்த்து)

இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்,

க்ஷீரோதந்வத் ப்ரதேசே சுசிமணி விலஸத்ஸைகதே
என்று துவங்கும் தியான ஸ்லோகத்தில்
“பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசாச் சிரோத் த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:” — என்பதன் மொழி பெயர்ப்பாகும்.

vilakku etral

அதிசயம் 3
பரணர் பாடிய பாடல் 201 ல் பூகம்பம், நில அதிர்ச்சி (Earth quake) பற்றிக் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு, நில அதிர்ச்சி பாதையில் இல்லாவிட்டாலும் வட இந்தியாவில் நடந்த பூகம்பங்கள் பற்றி சங்க காலப் புலவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பெரு நிலம் கிளறினும் என்ற சொல் இதைக் குறிக்கும். வேறு பல புலவர்கள் நிலம்புடை பெயரினும் என்றும் பாடுவர். இதே பாடலில் கொல்லி மலைப் பாவை பற்றிய அதிசயச் செய்தியையும் சொல்கிறார். கொல்லி மலையின் மீதுள்ள பாவை, என்ன இயற்கைச் சீற்றம் வந்தாலும் அதன் அழகை இழக்க மாட்டாளாம். இப்போது அந்தக் கொல்லிப்பாவை எங்கே என்று தெரியவில்லை. ஒரு வேளை ஏதோ ஒரு கோவிலில் இருக்கலாம்.

அதிசயம் 4
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய 202 ஆம் பாடலில் கார்த்திகை நாளன்று அழகாக விளக்கு ஏற்றி வைத்திருப்பதை உவமையாகப் பாடுகிறார். தமிழ் இந்துக்கள் 2000 ஆண்டுகளாக இன்னும் கார்த்திகை விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். எத்தனை நாத்திகப் பிரசாரம் நடந்தாலும் தமிழர்கள் அற வழியினின்று பிறழமாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அதிசயம் 5
பாடல் 95-ல் கொட்டம்பலவானர் என்னும் புலவர் அந்தக் காலத்தில் கழைக்கூத்தாடிகள் (acrobats) கயிற்றில் தொங்கி சாகசச் செய்ககளைப் புரிந்ததைப் பாடுகிறார். வாத்தியங்கள் முழங்குகையில் ஒரு பெண் கயிற்றில் ஏறி சாகசம் செய்ததைப் பார்த்து குரங்குக் குட்டியும் கயிற்றில் ஏறி சர்கஸ் செய்ததாம். இதிச் சிறுவர்கள் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் பார்த்து மகிழ்கிறோம். காசு இல்லாமல் பார்க்கும் ஏழைகள் சர்கஸ் காட்சி இது.

acrobat-chennai

அதிசயம் 6
பாடல் 97-ல் பூ வியாபாரம் பற்றி மாறன் வழுதி பாடுகிறார். பூ வாங்கலியோ பூவு!! பூ வாங்கலியோ பூவு!! என்று பெண்கள் கூவி வித்ததை அழகாய்ப் பாடுகிறார். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் தமிழக வீதிகளில் பார்க்கிறோம்:
மதனின் துய்த்தலை இதழ் பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என ………………………………
பாடல் 118-ல் பாதிரிப் பூக்களை வட்டிலில் போட்டுக் கூவி விற்கும் ஒரு பெண் பற்றி பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடுகிறார்.

அதிசயம் 7
தமிழர்கள் ஜோதிடத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள்!! பன்றி கூட பல்லி சொல் கேட்டு சகுனம் பார்த்ததை உக்கிரப் பெருவழுதி பாடுகிறார் (பாடல் 98)

அதிசயம் 8
பாடல் 90-ல் அஞ்சில் அஞ்சியார் என்னும் புலவர் அந்தக் காலத்தில் உடைகளுக்கு கஞ்சி (starch) போடும் வழக்கம் இருந்ததைக் குறிப்பிடுவார். அதுமட்டுமல்ல பெண்கள் ஊஞ்சல் ஆடுவது பற்றியும் பாடுவார். இதே போல பாடல் 222-ல் கபிலரும் ஊஞ்சலைக் குறிப்பிடுகிறார். காதல் வயப்பட்ட பெண்ணை தோழி கிண்டல் செய்கிறாள்: நீ ஊஞ்சலில் ஏறிக்கொள், நான் வேகமாக ஆட்டுகிறேன். ஊஞ்சல் உயரமாகச் செல்லும் போது மலை மீதுள்ள உன் காதலனது ஊரையும் பார்க்கலாம். அதைப் பர்த்தாலேயே உனக்கு ஆனந்தம் ஏற்பட்டுவிடுமே!!
pukkari

அதிசயம் 9
தமிழர்கள் வடமொழியில் பரத முனி இயற்றிய பரத சாஸ்திரத்தை அப்படியே பின்பற்றுபவர்கள். பரதன் கூறும் முத்திரைகள், அபிநயங்கள் (gestures) எல்லாம் சிதம்பரம் முதலிய கோவில்களில் இருப்பதை நாம் அறிவோம். பாடல் 149-ல் உலோச்சனார் ஒரு அபிநயம் பற்றிப் பாடுகிறார். பெண்கள் வியப்பையும், வம்பளப்பதையும் காட்ட மூக்கில் விரலை வைத்துக் கடைக்கண்களால் பார்ப்பர். இதை உலோச்சனார்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற ——
என்பர் உலோச்சனார். அழகான காட்சி!

அதிசயம் 10
பாடல் 160-ஐப் பாடியவர் பெயர் இல்லை. அவர் ஆண்மகன் என்பவனுக்குரிய ஆறு பண்புகளை எடுத்துச் சொல்கிறார்:

நயனும் நண்பும், நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்

நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களுக்கு வேண்டிய குணங்கள் என்பார்.

dance line drawing

அதிசயம் 11
பாடல் 172 காளிதாசனின் சகுந்தலையை நினைவுபடுத்தும். இதைப் பாடியவர் பரணர். சாகுந்தலத்தில், கவிஞன் காளிதாசன் — பிராணிக ளிடத்தும், செடி கொடிகளிடத்தும் சகுந்தலைக்கு உள்ள பேரன்பை மிக அழகாக கூறுவார். அதுபோல இங்கு ஒரு காட்சி. புன்னை மர விதையை விளையாட்டாகப் புதைத்துவைத்து மறந்து போய் கொஞ்ச காலம் ஆயிற்று. அது திடீரென வளர்ந்து தலைக் காட்டியவுடம் அதற்கு பாலும் தேனும் வார்த்து வளர்க்கிறாள் ஒரு பெண் — அவளுடைய தாயாரும் இது உன் தங்கை என்று சொல்லிப் பாராட்டுகிறாள். அந்த மரத்துக்குக் கீழ் நின்று காதல் பேச்சுகளைப் பேச அவளுக்கு வெட்கமாக இருக்கிறதாம். தங்கையை (புன்னை மரம்) வைத்துக்கொண்டு யாராவது காதலனுடன் அடல்ட்ஸ் ஒன்லி வசனங்களைப் பேச முடியுமா?

அதிசயம் 12
பாடல் 293-ல் கயமனார் என்னும் புலவர், — பெண்ணைப் பெற்ற ஒரு தாய் சாபம் (curse) இடுவதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். “என் பெண்ணை சொல்லாமல் இழுத்துச் சென்ற ஆண்மகனுடைய தாயும் என்னைப் போல நடுங்கி கஷ்டப்படட்டும்” என்று சபிக்கிறாள். இதே பாட்டில் காகத்துக்கு குயவன் இடும் பலி பற்றிய குறிப்பும் வருகிறது. இப்படிக்குக் காக்கைக்குச் சோறிடும் வழக்கம் மேலும் இரண்டு பாடல்களில் உள்ளது.

400 பாடல்களில் இருந்தும் 400 சுவையான விஷயங்களை எழுதினால் இடமும் நேரமும் இரா. ஆகையால் நீங்களும் நற்றிணை பயிலவேண்டும் என்று சில பாடல்களைக் காட்டினேன். வேறு என்ன இருக்கின்றன என்பதைக் கோடி காட்டுகிறேன். நீங்களே சுவைத்து மகிழுங்கள்:

பாடல் 3: கணவன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று மாலை வேலையில் மனவி விளக்கு ஏற்றுதல்
பாடல் 32: கண்ணன்/விஷ்ணு நிறத்தில் மலை உள்ளது. அதில் விழும் அருவி அவன் அண்ணன் பலராமன் போல இருக்கிறது.

பாடல் 35: நாவல் பழத்தை தம் இனத்தைச் சேர்ந்த வண்டு என்று கருதி ஒரு வண்டு வந்தது. அதையும் பழத்தையும் நாவல் பழம் என்று கருதி நண்டு கொண்டு சென்றது. உடனே வண்டு சத்தம் போட, நாரை வந்து சமாதானம் செய்தது (தமிழ் நகைச்சுவைப் பாடல்)

பாடல் 45: மஹாபாரத சந்தனு—மத்சகந்தி வாக்குவாதம் போன்றது.

பாடல் 57: குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திக் கட்டுரையில் குரங்கு, — பால் கறந்தது பற்றி எழுதிவிட்டேன்.

பாடல் 59: பிராமணர்கள் சைவ (vegetarian food) உணவு மட்டுமே சாப்பிட்டதாக சங்க இலக்கியம் காட்டும். ஆயினும் அசைவ உணவு பற்றி அவர்கள் எழுதத் தயங்கியது இல்லை. பாடல் 59-ல் ப்ராமண கபிலர் உடும்புக் கறி, முயல் கறி எல்லாம் பற்றிப் பாடுவார். இதே போல காளிதசனும் பாடுகிறான்.
இன்னும் நூற்றுகணக்கில் சுவைமிகு காட்சிகளைக் கண்டு மகிழ்க.

நற்றிணை தமிழர்களுக்கு “நற்றுணை” (Good Companion) எனில் மிகை அல்ல!!!

contact swami_48@yahoo.com

பதி – வதி – மதி : சிந்து சமவெளியில் உண்டா?

bull-seal-4

Look at the “U” shaped letters

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1358; தேதி அக்டோபர் 20, 2014.

மிகவும் அதிசயமான ஒரு விஷயம்!! இந்துக்கள் பெயரிடும் முறையாகும்!! எனது நாற்பது ஆண்டு ஆராய்ச்சியில் கண்ட சில விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன். ஆதிகாலம் முதல் இன்றுவரை இந்துக்கள் தனது பெயர்களில் பின்னொட்டு (விகுதி) களாக ‘’பதி – வதி – மதி’’ —களைப் பயன்படுத்துகின்றனர். இந்தோநேஷியாவின் முஸ்லீம் ஜனாதி’’பதி’’யாக இருந்த பெண் பெயர் கூட மேக’’வதி’’ சுகர்ண புத்ரீ!! தூய சம்ஸ்கிருதம்.

காரைக்கால் அம்மையாரின் பெயர் புனித’’வதி’’. அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலக’’வதி’’. இவர்கள் இருவரும் பிராமணர்கள் அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைஸ்ய குல பெண்ணான காரைக்கால் அம்மையார் வீட்டிலும் அதற்கு முன் பிறந்த வையஸ்குல கோபாலன் (சிலப்பதிகார கோவலன்) பெயர்களும் சம்ஸ்கிருதமே. சங்க இலக்கியப் புலவர்களில் கபில, தாமோதர, பரண, கேசவ, கௌசிக, விஷ்ணுதாச (விண்ணந்தாயன்), கண்ணதாச (தாயங்கண்ணன்), பிரம்மதத்த, வால்மீகி என்று ஏராளமான சம்ஸ்கிருதப் பெயர்களைக் காண்கிறோம்.

ஆண்கள் பெயர்கள் எல்லாம் ‘’பதி’’ யில் முடியும்.பெண்கள் பெயர் எல்லாம் ‘’மதி’’ அல்லது ‘’வதி’’ யில் முடியும். எடுத்துக்காட்டு:–

பசு — பதி
பார்– வதி
இந்து — மதி (வளர் மதி)

முதலில் ஆண்கள் பெயர்களை எடுத்துக் கொள்வோம். இந்தப் பெயர்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே இருக்கின்றன. இந்துக்களை கடித்துக் குதறுவதைப் பொழுது போக்காகக் கொண்ட “”அறிஞர்களும்”” இப்பொழுது ரிக் வேதத்தின் காலத்தை கி.மு. 1700 என்று ஒப்புக் கொண்டுவிட்டனர். அப்படியானால் சிந்து சமவெளியிலும் இந்தப் பெயர்கள் இருக்கதானே வேண்டும்? அப்படி இருக்குமானால் அந்த எழுத்தின் வடிவம் எப்படி இருக்கும்? என்று ஆராய்வோம்.

ப்ருஹஸ் –பதி, வாசஸ் – பதி, த்ரிதஸ பதி, பசு பதி, வனஸ் பதி முதலிய பல பதி–க்கள் வேதங்களில் வருகின்றன. நம்முடைய நண்பர்கள் பெயர்களில் இப்படி நூற்றுக் கணக்கான ‘’பதி’’–க்கள் கட்டாயம் இருப்பர். சில எடுத்துக் காட்டுகள்:

லெட்சுமி பதி (தினமலர் ஆசிரியர்)
உமா பதி
பூ பதி (டென்னிஸ் வீரர்)
கண பதி
தன பதி செட்டியார்
அபாம் பதி (வருணன்)
ஜனாதி – பதி
அதி — பதி

Indus_seal_impression

பெண்கள் பெயர்களைப் பார்த்தால் அவை ‘’வதி’’ அல்லது ‘’மதி’’ யில் முடியும் — சில எடுத்துக் காட்டுகள்:

மது மதி, இந்து மதி, வசு மதி, வளர் மதி, சாரு மதி — இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஹாபரதத்தில் வரும் மீனவப் பெண்ணின் பெயர் கூட சத்ய – வதி! ((ஆரிய—திராவிட வாதம் பொய் என்பதற்கு இப்படிப் போகிற போக்கில் நான் ஆயிரம் உதாரணங்களைக் கொடுக்க முடியும். அசுரர்கள், ராக்ஷசர்கள் என்பதெலாம் சம்ஸ்கிருதம், அவர்கள் பெயர்களும் சம்ஸ்கிருதம்))
அகத்தியர் மணந்த நாக கன்னிகை பெயர் (வியட்நாம் பெண்) யசோவதி. பார் —வதியை எல்லோருக்கும் தெரியும். பிரபல கணித மேதை லீலா —வதியையும் தெரிந்திருக்கும் (பாஸ்கராச்சார்யார் மகள்).

நகரங்களுக்கும் நதிகளுக்கும் , நல்ல குணங்களுக்கும் இந்துக்கள் பெண்கள் பெயர்களையே சூட்டுவார்கள் (பெண்கள் வாழ்க முதலிய பல கட்டுரைகளில் இது பற்றி எழுதி விட்டேன்)

சபர் மதி, ஷரா வதி, வேக வதி என்பன சில ஆறுகளின் பெயர்கள்.
இந்திரனின் தலை நகர் அமரா வதி
நாகர்களின் தலை நகர் போக வதி

இப்படி நிறைய நதிகள், நகரங்கள் இந்தியாவில் இன்றும் உண்டு. ஆந்திரத்தில் உள்ள புத்தமதச் சிற்பம் உடைய அமரா வதி, குஜராத்தின் பழைய தலை நகர் கர்னா வதி (இப்பொழுதைய பெயர் ஆமதாபாத்).

உண்மையில் மொழியியல் அறிஞர்களுக்குத் தெரியும் ப = ம = வ ஆகிய எழுத்துக்கள் இடம் மாறும் என்பது.

தமிழில் வங்கம் (படகு, கப்பல்) என்றால் வங்காளத்தில் வசிப்போர் பங்கம் என்பர்.
வேதத்தில் ‘’வ்ருக’’ என்றால் பிற்கால சம்ஸ்கிருதத்தில் அது ‘’ம்ருக’’ ஆகும். இது போல நூற்றுக் கணகான சொற்கள் இருக்கின்றன. முற்காலத்தில் இதை மாறி மாறி பயன்படுத்தி இருப்பர். பிற்காலத்தில் இலக்கணம் வகுத்து முறைப்படுத்தி இருப்பர்.

indus seal2

வேதகாலம் முதல் இந்துக்கள் பயன்படுத்தும் இந்த வதி – பதி – மதி சிந்து சமவெளியில் இருந்தால்…………. இருந்திருந்தால்…………. எப்படி இருக்கும்? சிந்து சமவெளி முத்திரைகளில் “U” பல வகைகளில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பாதம் என்று கொண்டால் பத, பதி என்ற ஒலியை உருவாக்கும். அதற்குள்ளும் வெளியேயும் வெவ்வேறு குறியீடுகளைப் பொறிக்கையில் அதற்குத்தக புதிய ஒலிகளும் வரும் என்று ஊகிக்கலாம். இது ஒரு ஊகமே.

“U” இந்த வடிவத்தைச் சிலர், அளக்கும் படி (லிட்டர்) என்றும் இன்னும் சிலர் இது மரியாதைக்குரிய விகுதி/ பின்னொட்டுச் சொல் (கள், ஆர்) என்றும் கூறி இருக்கிறார்கள். (ஆங்கில எழுத்தான யு போன்றது).
ARV_INDUS_12484f

சிந்து சமவெளி எழுத்துக்களை யாரேனும் முழுக்க முழுக்க புதிய கோணத்தில் ஆராய்ந்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். மற்ற எழுத்துக்களுக்குக் கிடைத்தது போன்ற இரு மொழிக் கல்வெட்டுகள் கிடைக்காததால் கம்யூட்டரில் போட்ட பின்னரும் இதன் பொருள் தெரியவில்லை!! சிலர் ‘’எண்’’ என்பர், மற்றும் சிலர் ‘’எழுத்து’’ என்பர். இன்னும் சில அமெரிக்கர் இது எழுத்தும் அல்ல, எண்ணும் அல்ல, சுத்தக் ‘’கிறுக்கல்கள்/படங்கள்’’ என்றும் திருவாய் மலர்ந்தருளுவர்!! இதற்கெல்லாம் மூல காரணம் —- ஆரம்ப காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்தோர், ஆரிய—திராவிட விஷத்தை இதிலும் தூவிவிட்டனர். அதனால் இன்று வரை அறிவு என்னும் மரமோ, பழமோ அங்கே விளையவில்லை!!

i_tiger_seal

contact swami_48@yahoo.com

அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்!

bm_agni_goat_

Agni Statue in British Museum, London

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1354; தேதி அக்டோபர் 18, 2014.

1.உலகின் முதல் அகராதியும் முதல் திசாரஸுமான Thesarus (ஒரு பொருள் குறித்த பல சொற்கள் வழங்கும் நிகண்டு) அமரகோசம், — அக்னி பகவானுக்கு 34 பெயர்களை அடுக்குகிறது. இதற்கு உரை எழுதிய உரைகாரர்கள் ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு அரிய தகவல்களை அளிக்கின்றனர்.

2.உலகின் மிகப் பழைய நூலும் மனித குல வரலாற்றின் – குறிப்பாக இந்தப் பூ உலகின் ஆதி குடிகளான இந்துக்களின் – குறிப்புப் புத்தகம் என்று கருதப்படும் ரிக் வேதத்தில் அக்னி பகவான்தான் அதிக துதிகளில் அடிபடுகிறார். தனியான துதிகள் என்றால் இந்திரனுக்கு முதல் பரிசு— தனியாகவும் வேறு பல துதிகளிலும் சேர்ந்து புகழப்படுபவர் யார் என்றால் அக்னி பகவானுக்கு முதல் பரிசு!

3.அக்னி பகவானுக்கும் எண் ஏழுக்கும் (Number Seven) ஏனோ ரகசிய தொடர்பு இருக்கிறது. அவருக்கு நாக்குகள் ஏழு— அவருடைய ரதத்தின் சக்க்ரங்கள் ஏழு—- அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மனைவி ஸ்வாஹா தேவி என்பவர்கள் கூட்டுத் தொகை 49. அதாவது ஏழு X ஏழு.—(7X7=49) ரிக் வேதத்தில் பல துதிகளிலும் இவர் ஏழு அல்லது ஏழின் மடங்குகளில் போற்றப் படுகிறார். புது மணத் தம்பதிகள் அக்னியை வலம் வருகையில் ஏழு அடி (சப்த பதி Saptapadi) நடந்த பின் அது சட்டபூர்வ கல்யாணம் ஆகிவிடும்—- அக்னி பகவானுக்கு சப்த ஜிஹ்வா, சப்த அர்ச்சி என்ற பெயர்கள் உண்டு. இதன் பொருள்—ஏழு நாக்குடையோன், ஏழு கிரணம் உடையோன்.

agni, guimet
Agni with two heads in Guimet Museum, Paris

4.அக்னிக்கு அம்மாவும் அப்பாவும் இரண்டு குச்சிகள் அல்லது இரண்டு கட்டைகள். அதை இரண்டையும் உரசினால் அவர் பிறக்கிறார். அதாவது ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை என்று ஒன்று வைத்திருப்பார்கள். அதில் தயிர் கடைவது போல ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்துக் கடைவார்கள். தீப்பொறி எழும். இதில் ஒரு கட்டை பூமி என்றும் மற்றொன்று ஆகாயம் அல்லது சுவர்கம் என்றும் தத்துவ விளக்கம் கொடுப்பர்.

5.அக்னியை அப்பா, நண்பன், குரு, புரோகிதர் என்று பல வகைகளில் பாடும் வேதகால ரிஷி முனிவர்கள் அந்த அக்னியைக் கொண்டு நம் வீட்டிலும் விளக்கேற்றுகிறார்கள். நமது ஆன்மாவிலும் விளக்கு ஏற்றுகிறார்கள். சாதாரணக் கொள்ளிக் கட்டையைப் பாடுபவர்கள் பெரிய ஆன்ம ஞானத்தை தட்டி எழுப்பவும் பாடுகிறார்கள்.

6.வேதம் பயின்ற பிராமணர்கள் தினமும் அக்னியை வழிபடுவர். சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை அக்னியை வழிபடுவர். ((அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விஸ்வே தேவா: என்ற மந்திரத்தைச் சொல்லுவர்.))

7.அக்னியின் சொரூபமே சுப்ரமண்யர் எனப்படும் முருகப் பெருமான். ஆகவே முருகனை வழிபடுவோர் எல்லோரும் ஒரு வகையில் அக்னியை ( யாகத் தீ எழுப்பாமல் ) — வழிபடுவதாகச் சொல்லலாம்.

8.முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததாகச் சொல்லுவர். அக்னியை பத்து பெண்கள் — அதாவது பிராமணர்களின் பத்து விரல்கள் — வளர்த்ததாகப் பாடுவர் வேத கால ரிஷி முனிவர்கள்— விரல் என்பதற்கு அங்குலி என்ற பெண்பாற் சொல் பயன்படுத்தப்படும்.

வேத காலக் கவிஞர்கள் பாடும் பாடல்களைப் படித்தால் பாபிலோனிய, எபிரேயப் பாடல்கள் எல்லாம் நாகரீகமற்ற ஆதிமனிதன் பாடல்கள் என்னும் முடிவுக்கு வர அதிக நேரம் பிடிக்காது. இவ்வளவுக்கும் அவை எல்லாம் வேதத்துக்குப் பின் எழுந்தவை. இப்போது மைகேல் விட்சல் போன்ற அமெரிக்க அறிஞர்கள்கூட இதற்கு கி.மு.1700 என்று முத்திரை குத்திவிட்டார்கள். இந்திய அறிஞர்கள் வேத காலத்தை கி.மு 6000 வரை கொண்டு செல்கின்றனர்.

9.ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் மேல்தான் — அளவில், ரிக் வேதம் என்பது ஏறத்தாழ சங்க இலக்கியத்தின் 2400 பாடல்களுக்குச் சமமானது– ஆனால் முழுக்கவும் இறைவனைப் பற்றியது.

fritstal book

10.எப்படி ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் பற்றி இருக்கிறதோ அப்படியே மனிதனின் வாழ்வும் நெருப்புடன் பின்னிப் பிணைந்தது. மனிதன் பிறந்த அன்று வீட்டில் ஒரு அக்னியை ஸ்தாபிப்பர். அதவது பிராமணர் வீடுகளில் ஒரு பானையில் உமிக் கரியில் நெருப்பு வைப்பர். இந்த நெருப்புதான் அவருக்கு வாழ்நாளின் இறுதி நாளன்று சிதைத் தீக்கும் பயன்படுத்தப்படும். பானைக்குள் உமியில் இருக்கும் நெருப்பு எப்போதும் அணையாது.

11.திருமணத்தின் போதும் அக்னி சாட்சியாகவே திருமணம் செய்ய வேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் திருமணக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். புது மணத் தம்பதிகள் அக்னியை வலம் வர வேண்டும். ஏழு அடிகள் நடந்த பின்னர் திருமணம் சட்டப்படி நிறைவேறியதாக அர்த்தம்.

12. ஒவ்வொரு பெண்ணும் ஏற்கனவே அக்னி பகவானைக் கல்யாணம் செய்து கொண்டதாகவும் உண்மைத் திருமணத்தன்று அவளை புது மாப்பிள்ளைக்கு அக்னி கொடுத்துவிடுகிறான் என்றும் வேதம் பகரும். இதன் தாத்பர்யம் என்னவென்றால் எப்படி, அப்பன் முன்னிலையில் ஒரு பெண் அதிகார பூர்வமாக இன்னொரு ஆண்மகனுக்கு உரிமையாக்கப் படுகிறாளோ அப்படி அக்னியின் முன்னிலையில் அவளைக் கொடுக்கவேண்டும் என்பதாகும். முடியுடைய மூவேந்தர்கள் பலர் வேளிர் குல அழகிகளைக் கண் வைத்தபோது அவர்களுடைய அப்பன்மார்கள் முடியாது என்று சொன்னதை புற நானூறு அக நானூறு மூலம் அறிவோம். அதாவது பெண்களின் எதிர்காலம் அப்பாக்களாலும் அக்னியாலும் நிச்சயிக்கப்படும்.

agni
Agni with goat vahana

13. அக்னியின் மனைவி பெயர் ஸ்வாஹா தேவி. அதவது ஒவ்வொரு முறை யாகத்தீயில் பொருள்களைப் போடும் போதும் ‘’ஸ்வாஹா’’ என்ற மந்திரத்தைச் சொல்லிப் போடுவர். அதையே இப்படி அடையாளபூர்வமாக மனைவி என்று சொல்வர். இதே போல அவருக்கு மூன்று பிள்ளைகள்: பாவக, பவமான, சுசி. அவர்களுக்கு 45 பிள்ளைகள். அக்னியின் அப்பா, அம்மா காஸ்யபர், அதிதி ஆவர் — சில புராணங்களில் பிரம்மா இவரது தந்தை என்றும் சொல்வர்.

14.அக்னி பகவானுக்கு வாகனம் ஆடு; சில நேரங்களில் கிளியோ சிவப்பு நிறக் குதிரையோ ரதத்தை இழுத்துச் செல்வதாகவும் காட்டப் படும். இவரது சிற்பங்கள் இரண்டு தலைகளுடன் காட்டப்பட்டிருக்கும். இவருக்கு வேதத்தில் மிகவும் அடிக்கடி அடிபடும் பெயர் :–ஜாத வேதஸ் — அதாவது எல்லாம் அறிந்தவர்!!

15.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் கார்கபத்யம், தட்சினாக்கினீயம், ஆகவனீயம் என்று முத்தீ உண்டு. இதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வரும் ‘’முத்தீ அந்தணர்’’ என்ற குறிப்பால் உணரலாம். பிராமணச் சிறுவர்கள் ‘’சமிதாதானம்’’ என்று தினமும் ஓமத் தீ (ஹோம அக்னி) வளர்ப்பர். திருமணமானோர் ‘’ஔபாசனம்’’ என்று காலை மாலையில் அக்னியை வைத்து வழிபடுவர். இந்தப் பொற்காலம் பற்றி எல்லாம் இப்போது பல பிராமணர்களுக்கே தெரியாது !!

losangelese
Agni in Los Angelese Museum

16. அக்னியின் பெயர் மூலம் ‘’இக்னிஷன், இக்னைட்’’ Ignite, Ignition, Ignite rocks முதலிய பல ஆங்கிலச் சொற்கள் உருவாயின. அக்னியின் பெயரை ஒட்டி உக்னிஸ், ஒக்னிஸ், இக்னிஸ் (Ugnis, Ognis,Ignis) என்ற சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் உண்டு

17.அக்னி பற்றி நாம் இதுவரை அறிந்ததில் இரண்டு உண்மைகள் வெட்ட வெளிச்சத்துகு வந்துவிட்டன:

அ) பாரதமே இந்துக்களின் சொந்த பூமி. இவர்கள் வெளியில் இருந்து வந்திருந்தால் அங்கெல்லாம் அக்னி வழிபாட்டின் சுவடுகள் தென்பட்டிருக்கும் . ஆனால் அப்படி இல்லை. வெறும் சொற்கள் அளவே ஒற்றுமை— பாரசீகர் மட்டுமே தீயை வழிபடுபவர். அவர்களும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள். அவர்களுடைய மொழியும் ரிக்வேதத்துக்கு மிகவும் பிற்பட்டது. அவர்களைத் தவிர “தீ வழிபாடு” ஐரோப்பாவில் கிடையாது. நம்மவர்கள் அங்கு சென்று தங்கிய காலத்தில் செய்தது எல்லாம், பின்னர் குறைந்து போனது என்றே கருத வேண்டியுள்ளது.

நாமோ இன்றும் வழிபடுகிறோம். சத்ய சாய்பாபா போன்ற மாபெரும் தவ சீலர்கள் 14641 முறை நீண்ட ருத்ர மந்திரத்தைச் சொல்லி அக்னியில் ஆகுதி போடும் பிரம்மாண்டமான அதிருத்ர யக்ஞத்தை நமது காலத்திலேயே நடத்திக் காட்டினர். அமெரிக்க அறிஞர் பிரிட் ஸ்டால் கேரளத்துக்கு வந்து வேத கால யக்ஞத்தை செய்துகாட்டினார். சங்க இலக்கியத்தில் பருந்து வடிவத்தில் யாக குண்டம் கட்டிய கரிகால் சோழன் பற்றிய பாடல் வருகிறது. அதே வடிவத்தில் இந்த அமெரிக்க அறிஞர் கேரளத்தில் யாக குண்டம் அமைத்து யாகம் செய்தார்.

ஆ)இரண்டாவது உண்மை: வேதகால முனிவர்களின் அறிவுக்கு முன் பாபிலோனிய ஜில்காமேஷ் எல்லாம்—நர்சரி ரைம் Nursery Rhyme போன்றவை. வேதத்தில் காணப்படும் மிகப் பெரிய எண்களும் வார்த்தா ஜாலங்களும், சொற் சிலம்பங்களும், சங்கேத மொழிகளும், மறைகளும் அற்புதமானவை. அவர்கள் ‘’சொல் வலை வேட்டுவர்கள்’’. இதே காலத்தில் உலகில் எழுந்த மிகச் சில வேற்று மொழிக் கவிதைகள்- கற்றுக் குட்டி களின் கவிதைகள் என்றால் மிகை இல்லை.

homam chandru
Kancheepuram Chandru Kurukkal performing Havan in the United Kingdom

18. அக்னி பகவானுக்கு அக்னி, வைஸ்வானர, வன்னி, வீதிஹோத்ர, தனஞ்சய, க்ரூபீடயோனி, ஜ்வலன, தனூனபாத், ஜாதவேத, பர்ஹி, சுஷ்மா, க்ர்ஷ்ணவத்ம, சோசிகேச, உஷர்புத், ஆஸ்ரேயச (சேர்ந்தாரைக்கொல்லி), ப்ருஹத்பானு, கிருஷ்ணாகு, பாவக, அனல, ரோகிதாஸ்வ, வாயுசக, ஷிகாவன், ஆசு சுஷ்கனி, ஹிரன்யரேத, ஹுதபுக், தஹன, ஹவ்யவாஹன, சப்தார்ச்சி, தமுன, சுக்ர, சித்ரபானு, வைவாவசு, சுசி, ஆபபித்த ஆகிய பெயர்கள் அமரகோசத்தில் உள்ளன. அப்ஜஹஸ்த, தூமகேது, சாஹரத, சப்தஜிஹ்வ, தோமரதார என்ற பெயர்களும் புராணங்களில் உண்டு. இவற்றின் பொருள் வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க.

19.இதில் க்ருபீடயோனி என்னும் பெயர் விஞ்ஞான விஷயங்களை உள்ளடக்கியது.— அக்னேர் ஆப: — என்று வடமொழியில் ஒரு வாசகம் உண்டு. அதாவது தீயில் இருந்து தண்ணீர் வந்தது. இதையே மாற்றியும் சொல்வர். தண்ணீரில் இருந்து தீ வந்தது. அவர்களுக்கு ஹைட்ரஜன், ஆக்சிஜன் பற்றித் தெரியும் போலத் தோன்றுகிறது. கடலில் தோன்றும் படவாக்னி (வடவை கனல்) பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் பல விஷயங்களைச் சொல்லிவிட்டேன்.

20.தமிழில் அக்னிக்கு “தீ, நெருப்பு, கனல், கங்கு” முதலிய பல சொற்கள் இருப்பதால் அது தனிப்பட எழுந்த, வளர்ந்த ஒரு மொழி என்றும் தெரிகிறது.

yaga mylai

21.அக்னியின் ஏழு நாக்குகளுக்கும் பெயர்கள் உண்டு: காளி, கராலா, மனோஜவா, சுதூம்ரவர்ணா, ஸ்புலிங்கினி, சுலோஹிதா, விஸ்வதாரா.

22.அக்னி பகவானின் சிவப்பு குதிரைக்குப் பெயர்—ரோஹிதஸ்வ. இதே போல வேறு பல தெய்வங்களின் குதிரைகள் பற்றியும் அமரகோசம் தகவல் தருகிறது:
அக்னி – சிவப்பு குதிரை
வருணன் — வெள்ளைக் குதிரை
குபேரன் = குமுத மலர் நிறமுடைய குதிரை
வாயு – பழுப்பு நிறக் குதிரை

பாரதியும் அக்னி பகவானும்

23.வேதங்களைப் படித்து ஊற்றுணர்ச்சி பெற்ற பாரதியார், அவரது பல பாடல்களில் வேத மந்திரக் கருத்துகளை அழகிய சொற்களில் வடித்திருக்கிறார். ‘’அக்கினிக் குஞ்சு’’, ‘’வேள்வித் தீ’’, ‘’தீ வளர்த்திடுவோம்’’ முதலிய பல பாடல்களில் வேத மந்திர மொழி பெயர்ப்புகளைக் காணலாம்.
அமிழ்தம், அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்

தெய்வக் கனல் விளைந்து காக்குமே – நம்மைச்
சேரும் இருள் அழியத் தாக்குமே

என்று பல இடங்களில் பாடி, — அக்னி என்பது நாம் நினைக்கும் வெறும் நெருப்பு அல்ல, — அது ஞானாக்னி என்று நமக்கு உணர்த்துகிறார். இதனால் அன்றோ வேதத்திலும் அதிகமான பாடல்களில் அக்னி போற்றப்படுகிறான்.

24.சாயனரும் கூட, தமது வேத பாஷ்யத்தில் வயிற்றுக்குள் இருக்கும் ஜடராக்னி, சூரியன், சந்திரன் ஆகிய எல்லாவறையும் அக்னி பற்றிய வேத மந்திரங்களுக்குப் பொருளாகக் கூறுவார்.

தீ பரவட்டும் !! ஞானத் தீ பரவட்டும்!!!

contact swami_48@yahoo.com

புறநானூற்று அதிசயங்கள்

tamil puu parithal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1352; தேதி அக்டோபர் 17 2014.

சங்க இலக்கியம் எனப்படும் 18 நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற இரண்டு தொகுப்புகளாக உள்ளன. அதில் புறநானூறு என்னும் 400 பாடல்கள் கொண்ட நூல், எட்டுத்தொகையில் இடம்பெறும் ஒரு நூலாகும். தமிழ் மன்னர்கள், சிற்றரசர்கள், போர்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவற்றிலிருந்துதான் அதிகம் அறிகிறோம்.

கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் என்று இப்போது உள்ளன. ஆனால் இது தவிர இன்னொரு பாடல் இருந்திருக்க வேண்டும் என்று சான்றோர் கருதுவர்.

இப்போதுள்ள பாடல் தொகுப்பிலும் 267 மற்றும் 268 என்ற இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. பழைய உரையும் முதல் 266 பாடல்களுக்கே கிடைத்திருக்கிறது. மீதி கிடைக்கவில்லை. பின்னர் வந்தவர்கள் உரை எழுதியுள்ளனர். அதற்கும் முந்திய ஒரு உரை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் உரைகாரர் பெயர்கூடத் தெரியவில்லை.

இனி இது பற்றி சில சுவையான விஷயங்கள்:

1.இதுவும் திருக்குறள் போல அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கப்படலாம் என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் கருதுகிறார். காரணம்? ஒரு இடத்தில் முதல் தொகுப்பு “அறநிலை” என்ற தலைப்புடன் உள்ளது. அவர் கருத்து சரியாகுமானால் இந்து மத நூல்களில் காணப்படும் தர்ம, அர்த்த, காம என்பன இதிலும் இருந்திருக்கிறது எனலாம். தொல்காப்பியத்தில் தர்மார்த்தகாமம்- இருப்பது அறம்,பொருள், இன்பம் என்ற சொற்றொடரால் தெரிகிறது. ஆக இமயம் முதல் குமரி வரை வாழ்க்கை மூல்யங்கள் எனப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றே!

2.பாரதம்பாடிய பெருந்தேவனார் (திரு.மஹாதேவன் = பெருந்தேவன்) அவரது பெயருக்கேற்ப கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் பற்றிப் பாடி இருக்கிறார். இதில் வரும் ‘’பதினெண்கணம்’’ கவனிக்கப்பட வேண்டிய சொல். வெள்ளைகாரர்கள் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு முன் நாம் 18 வகையாகப் பிரித்திருந்தோம். ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றோம். வெளிநாட்டுக்காரகளோ பிரிவினைக் கரடியைப் புகுத்தினர்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளில் கூட “சுர – நர- கக — கோ- போகி- கந்தர்வ—தைத்யை”—என்று வரும். முதல் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதியோர் கூறும் 18 கணங்கள் :— அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், யக்ஷர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர். இது சில உரைகளில் சிறிது மாறுபடும்.

2.இரண்டாவது அதிசயச் செய்தி: பஞ்சபூதங்கள் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாடலாகும். ஐம்பெரும்பூதம் என்ற சொற்றொடரும் பாரதப் பண்பாட்டிற்குச் சான்று பகரும்— நாம்தான் இதை உலகம் முழுதும் பரப்பினோம். மேலும் முதல் ஐந்து வரிகளும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. இதையே முதல் அந்தாதிப் பாட்டு எனக் கொள்ளலாம். இதற்குப் பின்னர் வந்த காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதி, அபிராமி அந்தாதிகளை நாம் அறிவோம். அதற்கெல்லாம் அடிப்படை புறத்தின் இரண்டாவது பாடலே.

tamil-penkal

3.இரண்டாம் பாடலைப் பாடியவர் முடிநாகராயர் என்னும் புலவர் — மிகவும் முற்காலத்தைச் சேர்ந்தவர். அவரால் பாடப்பட்டவனும் நாம் அறிந்த சேரர்களில் மூத்தவன்:–உதியஞ் சேரலாதன். அவரே “பொதியமும் இமயமும்” ஒன்றே என்று பாடுகிறார். ஆக பாரதம் முழுதும் ஒன்றே என்பது இப்பாட்டிலும் 6, 17, 67-ஆம் பாடல்களிலும் வருவது மிகவும் அருமை. அது மட்டுமல்ல.

பொதியம் என்று ஏன் சொன்னார் என்றால் இமயத்தில் முத்தீ வளர்த்து அந்தணர்கள் வளர்க்கும் தீயில் மான்கள் தூங்கும் என்று சொல்பவர் இங்கும் அகத்தியர் அதைச் செய்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அது மட்டுமல்ல. இவர் பாடிய வரிகள் காளிதாசனின் குமார சம்பவ காவியத்தில் காணப்படும் இமயமலை வருணனையும் உள்ளது!

4.பாடல் ஒன்பதில் அந்தக் கால தர்மயுத்த முறை காணப்படுகிறது. போர் செய்வோர் ஊருக்கு ஒதுக்குப் புறமான பொட்டல் வெளியில் காலை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அவரவர்க்குச் சமமான ஆட்களுடன் மட்டுமே மோதுவர்— பசுக்கள், பெண்கள், பார்ப்பனர், நோயாளிகள், தர்ப்பணம், திதி முதலியன செய்வதற்கான ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்க்ப் போய்விடுங்கள் என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி சொல்வதை இப்பாட்டில் காணலாம். பாடியவர் நெட்டிமையார்.

5.புறநானூற்றைத் தொகுத்து நூலாக்கியவர் பெரும்பாடுபட்டு ஒவ்வொரு தலைப்பிலும் தொகுத்திருக்க வேண்டும். வெள்ளி கிரகம்—மழை தொடர்பான பாடல்கள் எல்லாம் கடைசியில் கிட்டத்தட்ட அடுத்தடுத்து உள்ளன.

6. கோபப் பாடல்கள், இரங்கற் பாடல்கள் எல்லாம் நடுவில் உள்ளன. நிலையாமை பற்றிய பாடல்கள் கடைசியில் உள்ளன. போர்க்கள வீரம் பற்றிய பாடல்கள் எல்லாம் ஒரு சேர தொகுக்கப்பட்டுள்ளன. ஆக இதைத் தொகுத்தவர் வியாச முனிவர் போல அரும்பாடு பட்டு ‘வகை’ பிரித்திருக்க வேண்டும்.

7.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய (பாடல் 346) சிறுவெண்தேரையார் இந்த பூமியை ஆண்ட மன்னர்கள் “கடல் மணலைவிட அதிகம்” என்று கூறுவது மிகவும் ஆழமாக ஆராய வேண்டிய செய்தி. அந்தக் காலத்திலேயே அவ்வளவு மன்னர்கள் பிறந்து இறந்து இருப்பர் என்றால் தமிழ் இனம் எவ்வளவு பழமையானது என்பதும் புலப்படும். பாடல் 358-ல் இந்த பூமியை ஒரே நாளில் ஏழுபேர் ஆண்ட வியப்பான செய்தி இருக்கிறது. இதைப் பாடியவரின் பெயர் வான்மீகி!! ராமாயணம் இயற்றிய முனிவர் பெயர் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருப்பது வியப்பிலும் வியப்பு.

8.மாங்குடிக் கிழார் பாடிய 335-ஆம் பாடலில்
நான்கு சிறந்த மலர்கள் (குரவு, தளவு, முல்லை, குருந்தம்)
நான்கு சிறந்த குடிகள் (துடியன், பாணன், பறையன்,கடம்பன்),
நான்கு சிறந்த உணவுகள் (வரகு, தினை, கொள்ளு, அவரை)
என்று வகைபடுத்திவிட்டு இதைப்போல நடுகல் ஆகிவிட்ட வீரனை விடச் சிறந்த கடவுள் இல்லை என்கிறார். அந்த நடுகல்லுக்கு நெல்லும் பூவும் தூவி வழிபடும் செய்தியையும் அளிக்கிறார்.

queen

9.சங்க இலக்கியத்தில் சுமார் 20 நாகர்கள் பெயர்கள் இருக்கின்றன. புறநானூற்றில் வெண்ணாகன், மருதன் இளநாகன் முதலிய பல நாகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இதேகாலத்தில் மகாவம்சம் என்ற இலங்கை வரலாறும் பல நாக மன்னர்கள் பெயரைக் குறிக்கின்றன. இதேகாலத்தில் வடக்கில் குப்தர்கால கல்வெட்டுகளும் பல நாக மன்னர்கள், தளபதிகள் பெயரைக் குறிக்கின்றன. யார் இவர்கள் என்று நீண்ட காலமாக விடை எழுப்பியும் முடிவான ஒரு ஆராய்ச்சி நடக்காதது ஒரு பெரும் குறையே!

10.அந்தக் காலத்தில் நாடு முழுதும் தூதர் (ambassador) பதவி, பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படிக் காட்டு வழியாகச் சென்ற ஒரு பார்ப்பனனை கள்ளர்கள் கொன்றுவிட்டு வருத்தப்படும் செய்தியும் மற்றொரு பார்ப்பனனின் (பாடல் 305) திறமையான சொல்லும் செயலும் புறநானூற்றில் உள்ளன. அவன் போய் மன்னனிடம் ஒரு சில சொற்களையே சொன்னான். உடனே அந்த மன்னன் பயந்துபோய் படை எடுப்பு முஸ்தீபுகளை நொடிப் பொழுதில் நீக்கிவிட்டான். இரவு என்று பாராதும் அரண்மனைக்குள் புகுந்தானாம் அந்தப் பார்ப்பனன்! மதுரை வேளாசான் பாடிய பாடல் இது.

11.புறம் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிக் கபிலர் கூறுவதில் இருந்து தமிழர்கள் அதற்கு ஆயிரம் (கி.மு1000) ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியை ஆளத் தொடங்கியது தெரிகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் பல அரிய தகவல்களைத் தருகிறார். தமிழ் இனத்தின் வயது என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கொடுத்துவிட்டேன்.

12.பாடல் 182 இந்திரர் அமிழ்தம் பற்றியும் — பாடல் 191 நரைமுடி வராமல் இருக்கும் மர்மம் பற்றியும் — பாடல் 192 உலகமே ஒரு குடும்பம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்றும் கூறுவதை தமிழ் கூறு நல்லுலகம் அறியும் என்பதால் விரித்துரைக்கும் தேவை இல்லை.

13.பாரி பற்றி கபிலர் பாடிய 109-ம் பாடலில் Point 1- பாய்ண்ட் 1, Point 2 பாய்ண்ட் 2, Point 3 பாய்ண்ட் 3 என்று இந்தக் காலத்தில் பெரும் மேடைப் பேச்சாளர்கள் பேசுவது போலப் பேசி (ஒன்றே, இரண்டே, மூன்றே) மூவேந்தர்களுக்கு சவால் விடுகிறார் அடுத்த பாடலில் பாரியிடத்தில் 300 ஊர்கள் இருந்ததும் அத்தனையையும் பரிசிலர்க்குக் கொடுத்ததையும் கூறுகிறார். ஒரு சிறிய மன்னனிடம் 300 ஊர்கள் என்றால் சேர சோழ பாண்டிய மன்னர்களிடம் எவ்வளவு ஊர்கள் இருந்திருக்கும்?

kannaki cooking

14.புறம் 55, 56, 58 ஆகிய மூன்று பாடல்களில் இந்துமதக் கடவுளரின் கொடிகள், வாகனங்கள், பெயர்கள் ஆகியன வருவது அக்காலத்திலேயே தமிழர்கள் உருவ வழிபாடு செய்ததையும் ஆன்மீகம் கொடி கட்டிப் பறந்ததையும் காட்டும்.

புறநானூற்றில் வானவியல்,சூரிய கிரகணம், விமானி இல்லாமல் பறக்கும் விமானம் முதலிய பல செய்திகள் இருப்பதைத் தனியான கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். புறநானூற்றும் பொன்மொழிகளையும் தனியே தொகுத்து அளித்து இருக்கிறேன். தமிழர்கள் பற்றி அறிய புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் படித்தால் போதும். ஒரு கலைக் களஞ்சியமே (என்சைக்ளோபீடியா) படித்த பலன் கிட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புலவர் பெருமை!!

contact swami_48@yahoo.com