தமிழ் ஒரு அதிசய மொழி!

tamil-1

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1376; தேதி அக்டோபர் 29, 2014.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் – – பாரதியார்

தமிழ் மொழிக்கும் சுமேரிய, மெசபொடோமிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் ஜப்பானிய, கொரிய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு, தமிழ் மொழிக்கும் துருக்கிய, பின்லாந்திய மொழிகளுக்கும் தொடர்பு உண்டு — என்று 40 ஆண்டுக் காலமாகப் படித்துப் படித்து அலுத்துப் போய்விட்டது. சாத்தூர் சேகரன் என்ற தமிழ் மொழி ஆர்வலர் லண்டனுக்கு வந்தபோது – 1990 ஆம் ஆண்டு என்று நினைவு — அவரை BBC பி.பி.சி. “தமிழோசை” சார்பாக பேட்டி கண்டு பி.பி.சி.யில் ஒலிபரப்பினேன். அவர் எனக்கு சில புத்தகங்களை அன்பளிப்பாக அளித்தார். அதில் ஒன்று, செர்போ–க்ரோட் –( யூகோஸ்லாவியா என்று அப்போது இருந்த இடம்; இப்போது செர்பியா, குரோவேசியா Serbia and Croatia என்பன ) — மொழிகளுடன் தமிழுக்கு இருந்த “நெருங்கிய” தொடர்புகள் பற்றிய புத்தகம்!!

பேட்டி கண்டபோது அவரை உரிய மரியாதைகளுடன் நடத்திவிட்டு, பின்னர் தனிப்பட்ட முறையில் பேசுகையில் அவரது அணுகுமுறையில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டினேன். அவர் கணக்குப்படி உலகில் உள்ள எல்லா மொழிகளும் தமிழில் இருந்து உருவானவை. அவர் அப்போதே 140 நூல்கள் எழுதி இருப்பதாகக் கூறினார். ஆங்கில—தமிழ் மொழி நெருக்கம் பற்றியும் பேசினார். உண்மை என்ன?

அப்போது லண்டனில் உள்ள சேனல் 4 Channel Four டெலிவிஷன் ஒலிபரப்பிய புதிய மொழியியல் கொள்கை பற்றி அவரிடம் கூறினேன். அதாவது மக்கள் எல்லோரும் ஒரே மொழி பேசிக்கொண்டிருந்தனர் – அவர்கள் சுவர்க்கத்தை எட்டிப் பிடிக்க கோபுரம் கட்ட முயன்றபோது— கடவுள் நீங்கள் எல்லோரும் பல மொழிகள் பேசி பிரிந்து செல்க —- என்று சபித்துவிட்டதாக பைபிளில் ஒரு கதை உண்டு. அது உண்மைதான்; உலகில் உள்ள மொழிகள் எல்லாம் ஒரே மூலத்தில் இருந்து வந்தவைதான் என்று ஒரு இஸ்ரேலிய மற்றும் ஒரு ரஷிய அறிஞர் கூறியது பற்றிய டாகுமெண்டரி (செய்திப்படம்) அது. இதை திரு. சாத்தூர் சேகரனிடம் சொல்லி அவர் இந்தக் கோணத்தில் இருந்தும் பார்க்கவேண்டும் என்றேன்.

tamil 2

அவரது பேட்டி ஒலிபரப்பைப் பாராட்டி பல நேயர்கள் எழுதியது உண்மை என்ற போதிலும் பலருக்கும் மொழி இயல் தெரியாது. மொழி வளர்ச்சிக் கும், எழுத்து வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு கூடத் தெரியாது. திருவள்ளுவர் இன்று உயிருடன் வந்தால் அவருக்குத் தமிழ் ஓரளவு புரியும்- ஆனால் தமிழ் எழுத்து அவருக்கு விளங்காது. ஏனெனில் எழுத்து உருமாறிப் போனது. நான் லண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் வகுப்பு நடத்துகையில் என்னை அறியாமல் “னை,, ணை, லை” – போன்ற எழுத்துக்களுக்கு பழைய எழுத்து முறையைப் போர்டில் (கரும் பலகை) எழுதுகையில் பயன்படுத்துவேன். உடனே சார், இது என்ன எழுத்து? என்று சிலர் என்னை இடை மறிப்பர். பெரியார் சொன்ன எழுத்து சீர்திருத்தத்துக்கு முன் நாம் (old orthography) அத்தகைய கொம்புள்ள/ துதிக்கை போடும் எழுத்துகளை — லை, னை — முதலியவற்றைப் பயபடுத்தினோம். ஆகவே மொழியும் எழுத்தும் காலப்போக்கில் மாறும் என்று அறிய வேண்டும்.

தமிழ் ஒரு அதிசய மொழி. இதில் இரண்டு எழுத்துக்கள் சேரும் போது என்ன மாற்றம் அடைகின்றன என்பனவற்றைக் கண்டு இது போல மற்ற மொழிகளில் உண்டா? என்றும் காண வேண்டும். இதை சந்தி இலக்கணம் என்பர். வடமொழியில் இது உண்டு. ஆகவே தமிழை வேற்று மொழிகளுடன் ஒப்பிட்டு — “இது அதுவே, அது இதுவே” — என்று முழங்கும் முன்னர் பல விஷயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். எந்த இரண்டு மொழிகளிலும் மேம்போக்கான சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை போதா. உண்மையில் வேற்றுமை உருபுகள், மொழிக்குள் உள்ள சந்தி இலக்கணம் ஆகியவற்றையும் ஒப்பிட வேண்டும்.

வேதங்களுக்கு காலம் நிர்ணையிக்க மாக்ஸ் முல்லர் கையாண்ட “குத்து மதிப்பான” முறை ஓரளவுக்கு உண்மை. ஆனால் இதையே தமிழ் மொழிக்கும் கையாண்டால் பல தமிழ் நூல்களின் காலம் கேள்விக் குறி ஆகிவிடும். அவர் சொன்னார்: “ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”. அப்படியானால் தொல்காப்பிய நடைக்கும் சங்க இலக்கிய நடைக்கும் பெரும் வேறுபாடு இருக்க வேண்டும் (.உண்மையில் அப்படி இல்லை. இதைப் பற்றி மூன்று தமிழ் சங்கங்கள் உண்மையா? என்ற கட்டுரையில் எழுதி விட்டேன்). அதே போல சங்க இலக்கியத்துக்கும் சிலப்பதிகாரத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். அப்படி இல்லை. அதிக அளவு வேறுபாடு இருக்கிறது. இளங்கோ காலமும் செங்குட்டுவன் காலமும் ஒன்று என்று வாதிப்போருக்கு இதை நான் சொல்கிறேன்.

சுருங்கச் சொல்லின் மாக்ஸ்முல்லர் சொன்ன முறையை உலகில் வேறு எந்த மொழிக்கும் பயன்படுத்தவில்லை. இருந்த போதிலும் ரிக்வேதத்துக்கு அவர் நிர்ணயித்த காலம் கி.மு1200 என்று அப்போது ஏற்றுக் கொண்டனர். இப்போது அது தவறு என்பதற்கு வேறு சில சான்றுகள் கிடைத்துவிட்டன.

ஒரு உண்மையை யாரும் மறுக்க முடியாது — உலகில் மாறாத பொருள் எதுவுமே இல்லை. மாற்றம் என்பது இயற்கை நியதி (Change is inevitable).— நான் வகுப்பு எடுக்கும் போது, “ஒரு மொழி 200 மைல்களுக்கு ஒரு முறை மாறும், ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும்” — என்று குத்துமதிப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று மாணவர்களிடம் சொல்லுவேன் ( நியூ கினி என்னும் தீவு இதற்கு விதி விலக்கு. அந்தத் தீவில் மட்டும் 700 மொழிகள் உள்ளன!! ) இதற்குக் கோவைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும், எங்கள் நாட்டில் வேல்ஸ் ஆங்கிலம், ஸ்காட்டிஷ் ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் முதலியவற்றை எடுத்துக் காட்டாகவும் தருவேன். உச்சரிப்பு மட்டுமின்றி சொல் வழக்குகள் முதலியனவும் வேறுபடும். எட்டாம் நூற்றாண்டில் எழுந்த ஆங்கில நூலின் எழுத்தும் , பொருளும் யாருக்கும் புரிவதில்லை!!

கீழ்கண்ட தமிழ் அமைப்பைக் காணுங்கள். இது போன்ற ஒற்றுமை தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் (சந்தி இலக்கணம்) ஓரளவு உண்டு. சம்ஸ்கிருதத்துடன் தொடர்புடைய ஐரோப்பிய மொழிகளில் உண்டு. தமிழைப் போலவே வேறு மொழிகளில் இருந்தால் அதை நன்கு ஆராய்தல் அவசியம்! அப்போதுதான் நாம் அவ்விரு மொழிகளும் “நெருக்கமானவை” என்று மேலும் ஆராய வேண்டும். இது ஒரு அம்சம் மட்டும்தான். இதுபோல வேறு பல அம்சங்களும் உண்டு. கட்டுரையின் நீளத்தைக் கருதி ஒரே வரியில் சொல்லிவிடுகிறேன்: உறவு முறை, எண்கள், நான், நீ போன்ற சொற்கள், வீடு வாசல் தொடர்பான சொற்கள் –முதலிய சுமார் 100 சொற்களில் – ஒற்றுமை இருக்க வேண்டும்.
tamil 3

விதி 1 (Rule 1 M-V-B/P)

ம – வ — ப – ஆகியன — பல மொழிகளில் இடம் மாறும். இது இயற்கையான மொழிப் பாகுபாடு. தமிழ் மொழிக்குள்ளேயே இதைக் காணலாம்
ம = வ= ப

முழுங்கு—விழுங்கு ( ம=வ )
முழி = விழி
மேளா- விழா
மாரி—வாரி
மல்லிப்புத்தூர் – வில்லிப்புத்தூர்
மண்டோதரி – வண்டோதரி
மயக்கு – வயக்கு
மானம்—வானம்
மிஞ்சு = விஞ்சு
மணிக்கிராமம் = வணிகக் கிராமம்

வ= ப
வங்கம் = பங்கம்
வங்காளம் = பெங்கால்
வந்தோபாத்யாயா = பந்தோபாத்யாயா

விதி 2 (Rule 2 R–L–D/T)

ர – ல – ட இடம் மாறும்.
இது பற்றி பாணினி சூத்திரம் கூட உண்டு. இந்த ஒலி மாற்றம் வேறு பல நாடுகளிலும் காணப்படுகின்றன என்பதை பலர் அறியார்.

( எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஐரிஷ்காரர்கள் வசித்தனர். அந்த வீட்டுச் சின்னப் பையன் என் மனைவியிடம் “க்லிஸ்ப், க்லிஸ்ப் தா” (klisp) என்று மழலை மொழியில் கேட்பான். உருளைக்கிழங்கு வறுவல் “க்ரிஸ்ப்” Crisp என்று சொல்லப்படும். நான் உடனே அட, மழலை வாயில் கூட ர என்னும் எழுத்து ல ஆக மாறுகிறதே என்று வியப்பேன்.))

ர = ல = ட
தார்வார் = தார்வாட்
சிம்மகர் – சிம்ம கட்

விதி 3 ( N- D/T)

ண் — ட் – இடம் மாறும். மேலே ல – ட – ர மாற்றத்தைக் கண்டோம். அப்படியானால் ண என்பது ட ஆக மாறி ல ஆகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.

இதை அறியாத பழைய மொழியியல் “அறிஞர்கள்” ட , ண போன்ற நாமடி ஒலிகள் இந்திய சம்ஸ்கிருதத்தில் மட்டுமே உண்டு என்றும் இதை அவர்கள் சிந்துவெளி திராவிடர்கள் இடமிருந்து கற்றதாகவும் எழுதி வைத்தனர். இதன் அடிப்படையே தவறு. அப்படியே அவர்கள் சொல்வதை நாம் ஏற்றாலும், இந்தியாவில் இருந்து போன இந்துக்கள் அங்கே போனவுடன் அந்த நாட்டு மக்கள் பேச்சுக்கேற்ப ஒலியை மாற்றிக் கொண்டனர் என்றும் வாதிட முடியும்.

இதை எழுதும்போது ஒரு சுவையான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் கொஞ்சம் காலத்துக்கு லண்டன் தமிழ் சங்கத்தின் மானேஜராகவும் பகுதி நேர வேலை செய்தேன். ஆண்டுதோறும் ஒரு நாள் தமிழ் பள்ளி ஆண்டு விழா நடத்துவோம். அப்போது திருக்குறள் போட்டி நடத்துவோம். எல்லா குழந்தைகளும் ஆங்கிலத்தில் குறளை எழுதி மனப்பாடம் செய்து கொண்டு வருவர்.

அகர முடல எலுட்டு எள்ளாம் ஆடி பகவன் முடட்ரே உலகு —

என்று பத்து குறளையும் ஒப்பித்தவுடன் விண்ணதிர கை தட்டிப் பரிசு கொடுப்போம். இது போல இலங்கையர்கள் அரங்கேற்றம் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் வாலிபர்களும் வாலிபிகளும் பாடும் பாட்டும் பேசும் பேச்சும் அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அதை ஒப்பிப்பர். தமிழ் அறிவு மிகவும் சொற்பம் (எங்கள் வீட்டிலும் இதே கதைதான்!! நான் தமிழில் சொல்லச் சொல்ல அவர்கள் ஆங்கிலத்திலேயே விடை கொடுப்பர்) ஆக மொழி என்பது வாழும் இடத்திற்கேற்ப மாறும் என்று புரிந்துகொண்டால் “நாமடி” (ண, ட) ஒலிகள் பற்றிய சித்தாந்தம் நகைப்புரியதாகிவிடும். தமிழ் மொழிக்குள்ளேயே இந்த மாற்றங்களைக் காணும் போது நான் சொல்வது இன்னும் உறுதியாகிறது.

ண் = ட்
கண்+செவி = கட் செவி
மண் =கலம் = மட்கலம்

ள் = ட்
கள்+குடி = கட் குடியன்
தாள்+ தலை= தாடலை
வாள் + போர் = வாட் போர்

ல் = ற்
பல் + பொடி = பற்பொடி
கல் கண்டு = கற்கண்டு (கண்டு = கேன் டி)

பூதன் +தேவன் =பூதன்றேவன்
இலங்கைத் தமிழ்: –(கிரிக்கெட் = கிரிக்கெற், பிரென் ட் = பிரென்ற்)

tamil 4

விதி 4 Rule 4 N — R

ன் என்பது ர் ஆக மாறும்
ன் = ர்
அவன்+கள் = அவர்கள்
அவள்+ கள் = அவர்கள்
மனிதன் +கள் = மனிதர்கள்

விதி 5 Rule 5 L — N

ழ் = ன்

வாழ் + நாள் = வானாள்
பால் + நினைந்து = பானினைந்தூட்டும்

விதி 6 Rule 6 L+D=da

ழ்+த = ட

திகடச் சக்கரம் = திகழ் + தச + சக்கரம்

விதி 7 (Y — J)

ய = ச/ஜ
பங்கஜம் = பங்கயம்
தயரதன் –தசரதன்

இந்த ஜ – ச – ய- மொழி மத்திய கிழக்கு மேலை நாட்டு மொழிகளிலும் உண்டு.
யேசு – ஜீசஸ்
யூத – ஜூடா

விதி 8 Rule 8 sion = tion (S–T)

ச =ட
விஷம் = விடம்

ஆங்கிலத்திலும் ட என்பது ஷ ஆக மாறுவதைக் காணலாம்.
எடுகேஷன் = எடுகேடியன் (ஷன் = டியன்)
ஒரு உதாரணம் மற்றும் கொடுத்தேன். இது போல நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு.

விதி 9 Rule 9 ( J=S)

ராஜேந்திர சோழன் = ராசேந்திர
ஜெயலலிதா = செய லலிதா
ஷேக்ஸ்பியர் = செகப்பிரியன் !!!
ஜூலியஸ் சீஸர் = சூலியசு சீசர்
ஸ்டாலின் = சுடாலின்

(தமிழ் மொழியில் மெய் எழுத்து, மொழிமுதல் எழுத்தாக வராது. சம்ஸ்கிருதத்தில் மட்டுமே இது உண்டு!!)

ஒரு மொழியில் சில எழுத்துக்கள் இல்லாத போது வேறு ஒன்றைப் போட்டு நிரப்புவர். பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘’எஸ்’’ என்று சொல்ல முடியாததால் சிந்து நதி தீர மக்களை ‘’ஹி’’ந்து என்று அழைத்தனர். கிரேக்க, சீன யாத்ரீகர்கள், ஆங்கிலேய, பிரெஞ்சு ஆட்சியாளர்கள் முதலியோர் இந்திய மன்னர்கள் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் கடித்துக் குதறி விட்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே யாராவது தமிழுக்கும் – இதற்கும் தொடர்பு இருக்கிறது, தமிழுக்கும் – அதற்கும் தொடர்பு இருக்கிறது கதைத்தால் கொஞ்சம் சிந்தித்து முடிவுக்கு வாருங்கள். சொல்பவருக்கு எந்த அளவுக்கு வரலாறு தெரியும், மொழியறிவு உண்டு என்பதையும் பின்னணியில் பாருங்கள்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு (குறள் 423)

வாழ்க தமிழ்! வளர்க சம்ஸ்கிருதம்!!
(இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்தவை என்பதை இன்னும் ஒரு கட்டுரையில் கூறுவேன்)
contact swami_48@yahoo.com

கடவுளை வீட்டுக்கு அழைப்பது எப்படி?

Bali-Acintya-God-Mayan-Stele-Richard Cassaro

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1367; தேதி அக்டோபர் 24, 2014.

பல் வேறு மதங்களில் பல்வேறு விதங்களில் கடவுளை அழைக்கிறார்கள். இந்துக்கள் மட்டும் ஒரு விநோதமான வழக்கத்தைக் கடைப் பிடிக்கி றார்கள். இந்த அதிசயமான வழக்கத்தை வேறு எங்கும் காண முடிவதில்லை. இதற்குப் பெயர் “ஆவாஹனம்” என்று பெயர். அது மட்டுமல்ல. பூஜை அல்லது பிரார்த்தனை முடிந்தவுடன் கடவுளுக்கு “குட் பை” சொல்லி, போய்விட்டு வாருங்கள் என்று வழியனுப்பியும் வைக்கி றார்கள்.

இதில் இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால், கடவுளை இருதயத்தில், ஹோம குண்டத்தில், நீர் நிரம்பிய கலசத்தில், களி மண் சிலைகளில், மஞ்சள் பொடியினானால் செய்யப்பட்ட விரல் அளவு பருமனுள்ள பிள்ளையாரில், தர்ப்பைப் புல்லில் என்று எல்லாவற்றிலும் கடவுளை அழைத்து, ஸ்தாபித்துவிட்டு, பூஜை முடிந்தவுடன் உங்கள் இருப்பிடத்துக்கே திரும்பிப் போவீர்களாக என்றும் கைகூப்பி வேண்டிக் கொள்கிறார்கள் (யதா ஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி)— இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

வீட்டுக்கு விருந்துக்கு யாரையாவது அழைக்கும் போது என்ன செய்கிறோம்? அந்த நாள் வரை சேர்ந்திருந்த தூசு, தும்பட்டைகளைப் பெருக்கி சுத்தம் செய்கிறோம். ஒட்டடை முதலியவற்றை சுத்தம் செய்கிறோம். வீட்டை மெழுகி கோலம் போட்டோ வர்ணம் தீட்டியோ அலங்காரம் செய்கிறோம். வழக்கத்தை விட சுத்தமாக வைத்து “டைனிங் டேபிள்” அல்லது மெழுகிய தரையில் இலை போட்டு சாப்பாடு பரிமாறுகிறோம்.

இது போல இந்துக்கள் உடலைச் சுத்தம் செய்துவிட்டு (குளித்துவிட்டு), மனதையும் சுத்தம் செய்ய சில மந்திரங்களைச் சொல்லுவர். பின்னர் கடவுள் அல்லது இஷ்ட தேவதை பெயரைச் சொல்லி “ஆவாஹயாமி” என்று அழைப்பர். பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யவேண்டிய சந்தியா வந்தனத்தில் இப்படி (சூரிய) தேவனை சக்தி வடிவில் — காயத்ரீம் ஆவாஹயாமி சாவித்ரீம் ஆவாஹயாமி, சரஸ்வதீம் ஆவாஹயாமி —- என்று மந்திரம் சொல்லி அழைப்பர். அப்படிச் செய்யும் போது இரு கரங்களின் உள்ளங்கைகளும் இருதயத்தை நோக்கி இருக்குமாறு வைத்துக் கொண்டு உள்ளே வருமாறு — இருதய கமலத்தில் வீற்றிருக்கு மாறு — அழைக்கிறார்கள். 108 அல்லது 1008 தடவை காயத்ரீ மந்திரத்தை ஜபித்துவிட்டு “அம்மா தாயே, மேரு மலை மீதுள்ள உனது இருப்பிடத்துக்கே திரும்பிப் போய்விடு” என்று அனுப்பிவைப்பர் (உத்தமே சிகரே தேவி —- கச்ச தேவி யதா சுகம்).

red carpet

Rituals are steps to reach God!

கோவிலகளிலும், வீடுகளிலும் ஹோமம், யாகம் செய்யும்போது அங்கே வரும், குருக்கள் அல்லது புரோகிதர்களும் இப்படி ஆவாஹனம் செய்து கடவுளை அந்த இடத்தில் ஸ்தாபித்துப் பின்னர் பூஜை செய்வர். முடிந்தவுடன் யதா ஸ்தானம் பிரதிஷ்டாபயாமி என்று சொல்லி அவருடைய இடத்துக்கு கடவுளை அனுப்பி விடுவர். தன் முன்னால் உள்ள பொருள்களில் கடவுளை ஆவிர்பவிக்க உரிய முத்திரைகள், சைகைகளைப் பயன்படுத்துவர்.

இதை விடச் சுவையான விஷயம் அமாவாசை, மாதப் பிறப்புகளில் இறந்து போனோருக்காக நீரும் எள்ளும் தெளித்துத் தர்ப்பணம், திதி செய்யும் போது, இறந்து போனோரையும் இப்படி அழைத்து தர்ப்பைப் புல்லில் (கூர்ச்சம்) அவர்களை அமரவைத்து, மந்திரம் சொல்லி பூஜித்து பின்னர் வழியனுப்பி வைக்கிறார்கள்!

கடவுள் எங்கும் இருக்கையில் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இது ஒரு –மேல் மாடிக்குச் செல்லும் படிக்கட்டு — போன்றது. எப்போதும் கடவுள் நம்முள்ளே இருப்பதாக நாம் எண்ணுவோமானால் —அந்தப் பக்குவம் வந்துவிட்டால் நாமும் ஆதிசங்கரர், விவேகானந்தர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போல கடவுள் “பித்துப் பிடித்து” அலைவோம். தினசரி கடைமைகளைச் செய்யமுடியாது தவிப்போம். ஆகவே அந்த பக்குவம் ஏற்பட முதலில் கடவுளைக் குறிப்பிட்ட நேரம் மட்டும் அழைக்கவும், அப்படி அழைக்கும்போது சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றும் சுத்தமாக இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தவும், வரும் இடம் இருதய தாமரையானாலும், வீட்டிலுள்ள வெறும் தரையானாலும் அதை சுத்தமாக வைக்கவும் பயிற்சி தருகின்றனர்.

இவ்வாறு பழகப் பழக, உடலையும், உள்ளத்தையும் எப்போதுமே சுத்தமாக வைக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் போன்ற முற்றும் துறந்த முனிவர்களும், அவருடைய குருமாரான ஆதி சங்கரரும் கூட இந்தச் சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப் பிடித்ததற்குக் காரணம் —- உயர் நிலைஅயை அடையும் மாடிப் படிக்கட்டு —- என்றும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதால்தான். அத்வைத தத்துவ சிகரத்தை எட்டியவர்களுக்குக் இந்தச் சடங்குகள் அவசியமே இல்லை. ஆயினும் தன்னைப் பின்பற்றுவோரும், படிப் படியாக முன்னேறி வரவேண்டும் என்று காலாகாலமாக இந்த எளிய வழிகளை, சுவையான சம்பிரதாயங்களை நமக்கு விட்டுச் சென்றனர்.

king

மனதின் அபார சக்தி

நாமும் கடவுளை வீட்டுக்கு அழைப்போம், இருதயம் என்னும் வீட்டுக்கு அழைப்போம். எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை மிகச் சுருக்கமாக நினைவு படுத்தி கட்டுரையை முடிக்கிறேன்:–

பூசலார் என்ற ஒருவர் திருவாரூரில் பிறந்தார். சிவ பெருமானுக்குக் கோவில் கட்ட ஆசை. அனால அவரோ பரம ஏழை — விரலுக்கு ஏத்த வீக்கம், ஏழைக்கேற்ற எள்ளுருண்டை — என்னும் பழமொழிகளுக்கு இணங்க, தன் சக்திக்குட்பட்ட கோவிலைக் கட்டினார். எங்கே?

மனதுக்குள் ஒரு கோவிலைக் கட்டினார். அதுவும் முறையாக— நல்ல நாள் பார்த்து மனதுக்குள்ளேயே அடிக்கல் நாட்டு விழா நடத்தி — செங்கற்களை அடுக்கினார். கோவிலைக் கட்டியும் முடித்தார். பஞ்சாங்கத்தைப் பார்த்து நல்ல முகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்து சிவனுக்கும் சொல்லிவிட்டார். என்ன அதிசயம்? சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்யங்களை நடுநடுங்கச் செய்த பல்லவ மன்னனும் காஞ்சீபுரத்தில் உலகம் வியக்கும் கைலாசநாதர் ஆலயத்தை நிர்மாணித்து— பெரியோர் சொற்படி —அதே நாளில் கும்பாபிஷேகத்துக்கு நாள் நிர்ணயித்தார். சிவ எருமான் அவர் கனவில் வந்து, மன்னர் மன்னவா, அந்த நாளில் நான் வேறு ஒரு இடத்துக்குப் போக ஒத்துக் கொண்டுவிட்டேன். திருநின்றவூரில் எனது அன்பன் பூசலார் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்துக்குப் போகிறேன். ஆகவே வெறு ஒரு நாளைத் தெரிவு செய்” – என்றார் பிறவா யாக்கைப் பெரியோன்.

மன்னனுக்கோ மஹா வியப்பு! அட! எனக்குத் தெரியாமல் ஒரு கோவிலா? என்று எண்ணி திருநின்றவூருக்குச் சென்று கோவிலைத் தேடினார். கற்கோவில் எதுவும் இல்லை. ஆனால் பூசலாரைத் தேடிக்கண்டுபிடித்து விசாரித்தபோது அது கற்கோவில் அல்ல – வெறும் சொற்கோவில் – மனக்கோவில் என்பது விளங்கிற்று.

இப்போது மன்னனை விட பூசலாருக்கு அதிக வியப்பு! என் மனதில் எழுப்பிய கோவிலை சிவபெருமானே அங்கீகரித்துவிட்டாரே என்று ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பெரிய புராணக் கதை —- பிராய்ட், யங் — போன்ற மேலை நாட்டு மனவியல் தத்துவ வித்தகர்களும் அறியாத அளவுக்கு நாம் உள்ளத்தின் ஆற்றலை அறிந்து வைத்திருந்தோம். மனிதின் அபூர்வ ஆற்றலை விளக்க இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு உலகில் இல்லை. நாம் எண்ணூம் எண்ணம் எல்லாம் ஆற்றல் மிக்க ஆயுதங்கள். அதைக் கொண்டு ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். மனதினாலேயே ஸ்ரீ ராமர் பறக்க விட்ட புஷ்பக விமானம் பற்றி இப்பொழுது விஞ்ஞானமும் ஒப்புக் கொள்வதை முன்னர் வேறொரு கட்டுரையில் கண்டோம்.

“எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்”

– சுப்பிரமணிய பாரதி.

—-சுபம்—-

அசுரர்கள், அரக்கர்கள் அகராதி

krishna killing kesikasuran
Krishna killing Kesikasura

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.

‘’அசுரர்’’-கள் யார், ‘சுரர்’-கள் யார் என்று குணங்களின் அடிப்படையில் மனிதர்களை இந்துக்கள் தரம் பிரித்து வைத்தார்கள். இதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? பகவத் கீதையில் 16 ஆவது அத்தியாயத்தில் (தைவ அசுர சம்பத் விபாக யோகம்) இருக்கிறது. அசுர குணங்கள் எவை? தெய்வீக உணங்கள் எவை என்று கிருஷ்ண பரமாத்மா மிகத் தெளிவாகவே கூறி இரிக்கிறார். அது மட்டுமல்ல. விபூதி யோகம் என்னும் பத்தாம் அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவிலும் தான் யார் என்று பறவை, மிருகங்களைக் கூட சேர்த்திருக்கிறார். அதில் தன்னை அசுரர்களில் பிரஹலாதன் என்கிறார். இது எதைக் கட்டுகிறது? எல்லோரும் கடவுளின் படைப்பே.

“காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” – என்று பாரதி பாடியதற்கு இந்த பத்தாவது ( விபூதி யோகம்) அத்தியாயமே காரணம்.

நம் எல்லோருக்கும் அசுர குணங்களும் தெய்வீக குணங்களும் உண்டு. சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றிலும் தூயவர்களை – த்ரிகரணசுத்தி உடையவர்களை – நாம் மகான்கள் என்று போற்றுகிறோம். நம்மைப் போன்றவர்கள் அசுரர் அளவுக்குத் தாழ்ந்து போகவில்லை எனினும் அவ்வப்போது அசுர குணங்கள் தலை எடுப்பதால் நாம் இன்னும் சாதரண மனிதர்களாகவே இருக்கிறோம். ராவணன் போன்றோர் கலையிலும் கல்வியிலும், செல்வத்திலும் உயர்வு பெற்றும் ஒரு அசுர குணம் உச்சத்துக்குப் போனவுடன் அதன் காரணமாகவே இறக்க நேரிடுகிறது.

krishna throwing calf
Krishna killing Vatsasura

ஆக, சுருங்கச் சொல்லின் அசுர குணங்களில் ஏதேனும் ஒன்று ஒருவருக்கு, நூறு சதவிகிதம் மேலிடும்போது அவருக்கு அழிவு ஏற்படும் இது இந்து மதத்தில் பல்லாயிரக கணக்கான ஆண்டுகளாக உள்ள கொள்கை. இந்தக் கொள்கையில் வெள்ளைக்காரர் போன்ற சில வெளிநாட்டு “அறிஞர்கள்” அவர்களுடைய மதத்தைப் பரப்புவதற்காகவும் ஆட்சியை நிலை நாட்டுவதற்காகவும் ஆரிய—திராவிட வாதம் என்னும் விஷத் தூளைத் தூவினர். இது இந்திய வரலாற்றில் புரையோடிப் போய்விட்டது. இந்தியர்களை இரண்டாகப் பிரித்து, ஆரியர்கள் எல்லாம் தேவர்கள், திராவிடர்கள் எல்லாம் அசுரர்கள் என்று முத்திரை குத்தினர்.

இதைத் தாங்கள் சொல்லவில்லை என்றும் இந்து மத நூல்கள் சொல்கின்றன என்றும் இங்கொரு செய்யுள் அங்கொரு செய்யுள் என்று எடுத்து மேற்கோள் காட்டினர். இந்துக்களில் நிறையப் பேர் சோம்பேறித் தடியர்கள், விதண்டாவாதிகள், குதர்க்க வாதிகள், புத்திசாலிப் போல பேசும் கோணங்கிகள், அரை வேக்காடுகள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஏனெனில் ராமாயணத்தையோ, மஹாபரதத்தையோ, கீதையையோ, குறளையோ, தேவார திவ்யப் பிரபந்ததையோ வாழ்நாளில் ஒரு முறையும் படிக்க முயற்சி கூட செய்யாமல் கேள்வி மட்டும் கேட்கவும், குதர்க்க வாதம் மட்டும் செய்யவும் மட்டும் கற்றுக் கொண்டு விட்டனர்.

ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால், இந்துக்களைக் குறை சொல்வதிலும் நியாயம் இல்லை. அவர்களுடைய நூல்களைப் படிக்க நூறு பிறவி எடுத்தாலும் போதாது. பைபிள், குரான், ஆதிக்கிரந்தம் போன்றவற்றை சில மணி நேரங்களில் படித்து விடலாம். ஆனால் இந்து மத வேத புராண, இதிஹாச, உபநிஷத, ஸ்மிருதிகள் இவைகளைப் படிக்க கோடி கோடி ஜன்மங்கள் வேண்டும். ஏனெனில் சம்ஸ்கிருத மொழியில் உள்ள புத்தகங்களின் பெயர்களைப் படிக்கவே ஒரு ஜன்மம் போதாது!!!

இது எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்பீர்கள். இப்பொழுதுதான் ஹாலந்து நாட்டுப் லெய்டன் பல்கலைக் கழகத்தில் இருந்து ஒவ்வொரு துறையில் உள்ள முக்கிய புத்தகங்கள் பற்றி எழுதி தனித்தனி பகுதிகளாக வெளியிட்டு வருகின்றனர்.

அதில் அகராதி என்று எடுத்தால் அதில் மட்டும் நூற்றுக் கணக்கான பெயர்களும் புத்தகங்களின் சுருக்கமும் இருக்கும். பாணினிக்கு முன் எத்தனை இலக்கண வித்தகர்கள் இருந்தனர் என்று படித்தால் வியப்பாக இருக்கும். அப்போது உலகில் யாருக்கும் இலக்கணம் என்ற வார்த்தையோ அகராதியோ என்ன என்று “ஸ்பெல்லிங்” கூடத் தெரியாது!!

Tarakasura
Tarakasura in Yakshagana, Mangalaore

மதம் என்று எடுத்துக் கொண்டால் இமய மலை அளவுக்கு நம்மிடம் புத்தகங்கள் உள. மற்றவர்களிடம் ஒரு உயர்ந்த மாடி வீட்டு அளவுக்குத்தான் புத்தகம். இதனால் அவர்களை மட்டம் தட்டுவதாக நினைத்து விடாதீர்கள். திருக்குறளில் உள்ள துறவறவியல் என்ற பகுதியில் மட்டும் கூட இந்துமதத்தை அடக்கிவிடலாம. அத்தனையும் அவ்வளவு அழகாக 130 குறள்களில் சொல்லிவிட்டார். 260 வரிகளில் இந்து மதத்தையே அடக்கிவிட்டார்.

கண்ண பிரான் 700 குறள்களில்– 1400 வரிகளில்– இந்து மத ‘’ஜூஸ் ‘’ பிழிந்து கொடுத்துவிட்டார் (குறள் ஈரடிச் செய்யுள். கண்ணனும் ஈரடியில் ஸ்லோக வடிவில் சொன்னான்). எதையும் படிக்காதது இந்துக்களின் குறையே.

மேலும் அசுரர்கள், தைத்யர்கள், தானவர்கள், ராக்ஷசர்கள் ஆகிய அனைவரும் ரிஷிகளுக்குப் பிறந்தவர்களே என்றும் புராண, இதிஹாசங்களில் மிக மிகத் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

ஆகவே அசுரர்கள் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதைப் புரிந்து கொண்டு கீழே உள்ள பட்டியலைப் படியுங்கள்:

கிருஷ்ணனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
பூதனா, சகடாசுரன், த்ரினாவர்த்தா, வத்சாசுரா, பகாசுரா, அகாசுரா, தேனுகாசுரா, காளீயன், ப்ராலம்பாசுரா, அரிஷ்டாசுர, கேசி அசுரா, சங்கசூடா, கம்ச, சாணூர, வ்யோமசுரா, மது, நரகாசுரா
அஹீ, விருத்திர

bhasmasura_mohini
Bhasmasura killing himself

இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர் பட்டியல்
அஹீ, விருத்திர பிராமண அசுரன்), திரிசிரஸ் (பிராமண அசுரன்),சம்பரன், அராரு, சுஸ்ன, குயவ, இலிபிஷ, உரன, ஸ்வர்பானு, அஹிசுவ, கரஞ்ச, பர்நாய, வாங்த்ர, அற்புத, ஔர்ணவாப, வ்ருகத்வார, பிப்ரு, சுமுரி, நமுசி, ரிதிக்ர, ஸ்ரீபிந்த, அனார்சனி, துனி, வல, ம்ரிக்ய, த்ர்பிக, துக்ர, வேடசு
இவர்கள் எல்லோருடைய பெயர்களும் அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதால் இவை அனைத்தும் சம்ஸ்கிருத பெயர்களே. வெளி இனத்தாரோ, வெளி நாட்டாரோ இல்லை.

இந்திர, மித்ர, வருண, வாயு, அக்னி, அர்க, வாகீச, நாசத்ய, வாசஸ்பதி, பிருஹஸ்பதி என்ற வேதக் கடவுளர் பெயர்களும் இதே போல அ,இ,உ என்னும் உயிர் எழுத்துக்களில் முடிவதைக் காண்க.

அசுரர்களைக் கொன்ற கடவுளர்கள்
மது கைடப – ஹயக்ரீவ (விஷ்ணு)
ஹிரண்யகசிபு – நரசிம்ம
பலி – வாமன/த்ரிவிக்ரம
ராவண ( 50% பிராமண அசுரன்) – ராமன்
இந்திரஜித், கும்பகர்ண, மாரீச – ராமன்
கர, தூஷண, கபந்த, தாடகா- ராமன்
வாதாபி – அகஸ்தியர்
ஜடாசுர, பகாசுர – பீமன்
அந்தகாசுர, முயலக- சிவன்
பஸ்மாசுர – தன் வரத்தினாலேயே மரணம்
கஜமுகாசுரா- கணபதி
தாரக, சூரபத்ம- முருகன்
மஹிசாசுர,சும்ப, நிசும்ப, சுந்த, உபசுந்த—தேவி.
ராஹு, கேது ஆகியோர் அசுரர்களாகவும், கிரகங்களாகவும் கருதப்படுவர்.
durga2

Mahisasura was killed by Devi

இறுதியாக, புராண காலத்தில் அசுரர்கள் கூடுதலாகவும், இதிஹாச காலத்தில் குறைவாகவும் இருப்பதைக் காண்க. அதிலும் ராமாய ணத்தில் கூடுதலாகவும் மஹாபாரதத்தில் குறைவாகவும் இருப்பதையும் கவனிக்க — அதாவது, தீய குணங்களை உடையோர் அசுரர்கள் — புராண காலத்தில் வாழ்ந்திருந்தால் துரியோதணனைக் கூட அசுரர் என்று சொல்லி இருப்பர்!!. ரிக் வேத துவக்க காலத்தில் அசுரர் என்னும் சொல், நல்ல பொருளில் மட்டும் பயன்படுத்த ப்பட்டது. இந்திரனையும் அசுரன் என்றே போற்றுகிறது. பின்னர் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது. சங்க காலத்தில் நாற்றம் என்றால் நல்ல (வாசனை) பொருள். இப்போது அதைக் கெட்ட பொருளில் (துர் நாற்றம்) பயன்படுத்துகிறோம். அதுபோலத் தான் அசுர என்ற சொல்லும் பொருள் மாறிப்போனது.

நம் எல்லோருக்கும் ‘’அசுர’’ பலம் கிடைக்கட்டும்!!
‘’சுர’’ குணமும் கிடைக்கட்டும்!

contact swami_48@yahoo.com

Andhakasura
Shiva killing Andhakasura

விவேகானந்தரைச் சந்தித்த விஞ்ஞானிகள்!

vivekananda

By ச.நாகராஜன்
Post No.1363; Dated 22nd October 2014

This was written by brother S Nagarajan to Tamil Magazine Bhagya:swami
Wish you all a Very Happy Deepavali

“ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் விஞ்ஞானம்.முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அது மேலே செல்லாமல் நின்று விடும். எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டு பிடித்தவுடன் மத, விஞ்ஞானம் பூரணமாகி விடும்” – ஸ்வாமி விவேகானந்தர் விஞ்ஞானம் மெய்ஞானம் பற்றிப் பேசியது

ஹிந்து மதம் மூட நம்பிக்கைகளின் மூட்டை என்றும் இந்தியாவில் வாழ்பவர்கள் தரித்திரத்திலும் அநாகரிகத்திலும் மூழ்கியவர்கள் என்றும், இந்தியருக்கு எந்தவிதமான ஒரு பெரிய கலையும் தெரியாதென்றும் திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்ட பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் அதை உடைத்துச் சுக்கு நூறாக்கி எறிந்து ஹிந்து மதத்தின் மகோன்னதத்தை உலகெங்கும் அறியச் செய்து அதை அறிவியல் பூர்வமான மதம் என்பதை நிரூபித்தவர் ஸ்வாமி விவேகானந்தர்.

இயற்கையிலேயே விஞ்ஞான மனப்பான்மையை இளமையிலிருந்தே கொண்டிருந்த ஸ்வாமிஜி எந்த ஒரு விஷயத்தையும் அறிவியல் பூர்வமாகவே அணுகி வந்தார் – வாழ்நாள் இறுதி வரைக்கும். அதனால் தான் விஞ்ஞானிகளையும் மெய்ஞானிகளையும் ஒருசேர அவரால் கவர முடிந்தது.

நியூயார்க்கில் ஸ்வாமிஜி தங்கி இருந்த போது ஒரு அபூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது.மூன்று மேதைகள் சந்தித்த நிகழ்வாக இது அமைந்தது.1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லாவும் பிரெஞ்சு நடிகையான சாரா பெர்ன்ஹர்ட்டும் ஸ்வாமிஜியும் ஒரு நாள் சந்தித்தனர்.

சாரா பெர்ன்ஹர்ட் நியூயார்க்கில் ‘இஸீல்’ என்னும் நாடகத்தை நிகழ்த்தி வந்தார்.பிரெஞ்சு பாணியில் ஆக்கப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாறு அது. இஸீல் என்ற நாட்டியப் பெண்மணி புத்தரை ஒரு மரத்தடியில் மயக்க விரும்புகிறாள். புத்தர் அவருக்கு வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை விளக்கி உபதேசிக்கிறார். அந்த நேரமெல்லாம் அவள் புத்தரின் மடி மீதே உட்கார்ந்திருக்கிறாள். இறுதியில் அஞ்ஞானம் அகன்று தன் முயற்சியில் தோற்று பெரும் தெளிவை அவள் பெறுகிறாள்.

இந்த நாடகத்தைப் பார்க்க ஸ்வாமிஜி சென்றிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட நடிகை பெர்ன்ஹர்ட் பெரிதும் மனம் மகிழ்ந்து எப்படியாவது ஸ்வாமிஜியிடம் பேச விரும்பினார். விஞ்ஞானியான டெஸ்லாவும் பேச்சின் போது உடனிருந்தார்.

பெர்ன்ஹர்ட் மத விஷயங்களை ஆழ்ந்து கற்றவர். டெஸ்லாவும் அதே போல பல விஷயங்களை நுட்பமாக ஆராய்ந்தவர்.

ஸ்வாமிஜி அவர்களுக்கு வேதாந்தம் கூறும் ஆகாசம், பிராணன், கல்பங்கள் போன்றவற்றை விளக்கினார். நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகளாக இவற்றை ஸ்வாமிஜி விளக்க ஆரம்பித்த போது எல்லையற்ற வியப்புடன் அதை அனைவரும் கேட்டு பிரமித்தனர்.

ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் மஹத், பிரபஞ்ச மனம் பிரம்மா அல்லது ஈஸ்வரனிடமிருந்தே வெளிப்படுகின்றன என்றார் ஸ்வாமிஜி. சக்தி, ஜடம் ஆகிய இரண்டையும் இயங்கா ஆற்றலாக மாற்றி விட முடியும் என்பதைக் கணித முறையில் காட்ட இயலும் என்றார் டெஸ்லா.
vivek

ஸ்வாமிஜியுடனான சந்திப்பும் அவரது உபதேச உரையும் டெஸ்லாவை வெகுவாகக் கவர்ந்தது. ஸ்வாமிஜியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்ட டெஸ்லா தனது இறுதி ஆண்டுகளில் அதை அப்படியே கட்டுரைகளில் எழுதினார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லூயி என்பவர் ஸ்வாமிஜியின் சிஷ்யை. அவர் இந்த மூன்று மேதைகளின் அபூர்வ சந்திப்பைப் பற்றி குறிப்பிடுகையில்,” நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் அபூர்வமாகச் சில கிரகங்களின் சேர்க்கை நிகழும். அது போல இந்த மூன்று மேதைகளின் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது!” என்று கூறி, “இதனால் அவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம் ஏற்பட்டது என்பதை ஊகிக்க மட்டுமே முடியும்” என்கிறார்.

இது தவிர மின் சாதனத்தைக் கண்டுபிடித்தவரான பேராசிரியர் எலிஷா க்ரேயும் அவரது மனைவியும் ஸ்வாமிஜியைத் தங்கள் வீட்டில் விருந்துண்ண அழைத்தனர். சிகாகோவில் நிகழ்ந்த மின்சாரம் பற்றிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்த விஞ்ஞானிகள் ஸ்வாமிஜியைச் சந்தித்தனர். மின்சாரம் பற்றிய அவரது அபாரமான அறிவைக் கண்டு அவர்கள் பிரமித்தனர்.

விஞ்ஞானத்திற்கு பெரும் ஏற்றத்தைத் தந்ததன் மூலம் அவர்களை மெய்ஞானத்திற்குத் திருப்பிய மாபெரும் துறவியாகத் திகழ்ந்தார் ஸ்வாமி விவேகானந்தர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .
ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டை போட்டதில் ஏராளமான ரகசிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ஜனாதிபதி ட்ரூமனைப் பற்றியது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியன்று திடீரென மரணம் அடைந்தார். அதே தினத்தில் ட்ரூமன் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். ரூஸ்வெல்ட்டுக்கு ட்ரூமனைக் கண்டாலே பிடிக்காது. அவரிடம் எந்த விதமான அந்தரங்க விஷயத்தையும் அவர் பகிர்ந்து கொண்டதில்லை; ரூஸ்வெல்ல்டைப் பற்றி ட்ரூமன் கூறுகையில்,, “ நான் அறிந்ததிலேயே மிகவும் இறுக்கமான மனிதர் அவர்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.அணுகுண்டைத் தயாரிக்கும் மன்ஹாட்டன் ப்ராஜெக்டைப் பற்றி ட்ரூமனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஏராளமான பணம் ஒரு ரகசிய திட்டத்திற்காகச் செலவழிக்கப்படுகிற்து என்பதை மட்டும் அவர் அறிவார்.

அணு விஞ்ஞானியான லியோ ஜிலார்டை (Leo Szilard) 1945ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி ரூஸ்வெல்ட் சந்திக்கவிருந்தார். ஜப்ப்பானியருக்கு ஒரு அதி பயங்கர ஆயுதம் பற்றிய நேரடி அனுபவத்தைத் தர வேண்டுமென ஜிலார்ட் விரும்பினார். பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் மார்ச் 25ஆம் தேதியிட்டு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அணு விஞ்ஞானிகளுக்கும் காபினட் உறுப்பினர்களுக்கும் போதுமான அளவு தொடர்பு இல்லை என்பதைக் குறிப்பிட்டு விட்டு ஜனாதிபதி, டாக்டர் ஜிலார்ட் சொல்வதைக் கேட்பார் என நம்புவதாக்க் குறிப்பிட்டிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரூஸ்வெல்ட் ஏப்ரல் 12ஆம் தேதி மறைந்து விடவே விஞ்ஞானிகளுக்கும் ரூஸ்வெல்ட்டுக்கும் இடையே நடக்க இருந்த சந்திப்பு நின்று போயிற்று.

இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்த தருணத்தில் ஜனாதிபதி ட்ரூமன் உல்லாச கடல் பயணம் ஒன்றை மேற்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.அதன் பின்னர் உல்லாச பயணத்தின் தொடர்ச்சியாக பெர்லின், ஜெர்மனிக்கு விஜயம் செய்தார்.

vivekananda2

விஞ்ஞானிகளை அவர் சந்திக்க விடாமல் செய்வதற்காகவே அவர் கடல் பயணம் மேற்கொள்ளச் செய்யப்பட்டார் என்ற ரகசியம் பின்னர் வெளியானது! ஜூலை 6ஆம் தேதி கிளம்பிய அவர் ஆகஸ்ட் 7ஆம் தேதி தான் அமெரிக்கா திரும்பினார். அதாவது அதற்கு முதல் நாள் தான் அமெரிக்கா ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசி இருந்தது!

67 விஞ்ஞானிகள் அணுகுண்டைப் பயன்படுத்த வேண்டாம்; அது பேரழிவை ஏற்படுத்தும் என்று எழுதி இருந்த கடிதம் ட்ரூமனுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை அவர் பார்க்க விடாமல் செய்தனர் லீஹி மற்றும் க்ரோவ்ஸ் (Admiral Leahy, Groves) ஆகியோர். 1945, ஜூலை 8ஆம் தேதி அட்மிரல் லீஹி, செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட்டாக இருந்த ஜிம்மி பைர்ன்ஸ் ஆகியோர் ட்ரூமனுடன் ஜெர்மனிக்குச் செல்ல அகஸ்டா என்ற கப்பலில் ஏறினர். விந்தை என்னவெனில் இது மிகவும் மெதுவாகச் செல்லும் கப்பல்.

1945ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நியூ மெக்ஸிகோவில் அலமொகோர்டோ (Alamogordo) என்னும் இடத்தில் அணுகுண்டு இரண்டாம் முறையாகச் சோதனை செய்து பார்க்கப்பட்டது.

ஆக, லீஹி, பைர்ன்ஸ், க்ரோவ்ஸ் ஆகிய மூவர் எண்ணப்படியே ஜனாதிபதி ட்ரூமனால் விஞ்ஞானிகளைச் சந்திக்க முடியவில்லை; அணுகுண்டும் போடப்பட்டது.

Contact swami_48@yahoo.com
***************

நற்றிணை அதிசயங்கள்!

acrobat-

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1361; தேதி அக்டோபர் 21, 2014.

புறநானூற்றில் உள்ள அதிசயங்களை “புறநானூற்று அதிசயங்கள்” என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதினேன். இன்று நற்றிணை என்னும் நூலில் உள் அதிசயங்களைக் காண்போம். சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் (பத்துப்பாட்டு 10+ எட்டுத்தொகை 8 = 18) உள்ளன. இவற்றில் 2400 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் காணும் 18 நூல்களையும் மேல்கணக்கு நூல்கள் என்பர். அதற்குப் பின் எழுந்த திருக்குறள் முதலிய 18 நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். தமிழர்கள் எவ்வளவு புத்திசாலி பாருங்கள். 18 என்ற எண்ணின் சிறப்பை அறிந்து முக்கியமான 36 நூல்களை நமக்கு அழகாக வரிசைப்படுத்திக் கொடுத்து விட்டனர்.

எட்டுத்தொகை என்னும் தொகுப்பில் உள்ள எட்டு நூல்களில் ஒன்று நற்றிணை. இது அகம் என்னும் காதல், குடும்ப வாழ்வு பற்றிய 400 பாடல்களைக் கொண்டது. தமிழனுக்கு 400 என்ற எண்ணின் மீது ஒரு தனி காதல் உண்டு. புற நானூறு, அக நானூறு, நற்றிணை நானூறு, நாலடியார் நானூறு, பழமொழி நானூறு என்று அடுக்கித் தள்ளிவிட்டனர்!

அதிசயம் 1
பாடல் 132 அந்தக் காலத்தில் யாமக் காவலர் என்னும் போலீஸ் படை (Policing) தமிழ் நாட்டில் இருந்து பற்றிக் கூறும்:
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண்மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்

எல்லோரும் அவரவர் வீட்டு வாசல் கொல்லைப்புறம் எல்லாவற்றையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சத்தம் எழுப்பிக் கொண்டே பெரிய மணியை மாறி மாறி அடித்துச் செல்வார்களாம் சங்க கால போலீஸ் படை.!!

அதிசயம் 2
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தக் காலத்தில் அவரை மிஸ்டர் மஹாதேவன் என்று அழைக்கலாம். மஹாதேவன் என்று சிவன் பெயரை வைத்துக் கொண்டு இவர் பாடியது மஹாபாரதம்! சரி போகட்டும்! என்று விட்டுவிட முடியவில்லை. இவர் நற்றிணையில் பாடிய கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் மஹாபாரதப் பகுதியாகும்! அதில் விஷ்ணுவின் புகழைப் பாடுகையில்

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே (கடவுள் வாழ்த்து)

இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்,

க்ஷீரோதந்வத் ப்ரதேசே சுசிமணி விலஸத்ஸைகதே
என்று துவங்கும் தியான ஸ்லோகத்தில்
“பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசாச் சிரோத் த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:” — என்பதன் மொழி பெயர்ப்பாகும்.

vilakku etral

அதிசயம் 3
பரணர் பாடிய பாடல் 201 ல் பூகம்பம், நில அதிர்ச்சி (Earth quake) பற்றிக் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு, நில அதிர்ச்சி பாதையில் இல்லாவிட்டாலும் வட இந்தியாவில் நடந்த பூகம்பங்கள் பற்றி சங்க காலப் புலவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பெரு நிலம் கிளறினும் என்ற சொல் இதைக் குறிக்கும். வேறு பல புலவர்கள் நிலம்புடை பெயரினும் என்றும் பாடுவர். இதே பாடலில் கொல்லி மலைப் பாவை பற்றிய அதிசயச் செய்தியையும் சொல்கிறார். கொல்லி மலையின் மீதுள்ள பாவை, என்ன இயற்கைச் சீற்றம் வந்தாலும் அதன் அழகை இழக்க மாட்டாளாம். இப்போது அந்தக் கொல்லிப்பாவை எங்கே என்று தெரியவில்லை. ஒரு வேளை ஏதோ ஒரு கோவிலில் இருக்கலாம்.

அதிசயம் 4
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய 202 ஆம் பாடலில் கார்த்திகை நாளன்று அழகாக விளக்கு ஏற்றி வைத்திருப்பதை உவமையாகப் பாடுகிறார். தமிழ் இந்துக்கள் 2000 ஆண்டுகளாக இன்னும் கார்த்திகை விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். எத்தனை நாத்திகப் பிரசாரம் நடந்தாலும் தமிழர்கள் அற வழியினின்று பிறழமாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அதிசயம் 5
பாடல் 95-ல் கொட்டம்பலவானர் என்னும் புலவர் அந்தக் காலத்தில் கழைக்கூத்தாடிகள் (acrobats) கயிற்றில் தொங்கி சாகசச் செய்ககளைப் புரிந்ததைப் பாடுகிறார். வாத்தியங்கள் முழங்குகையில் ஒரு பெண் கயிற்றில் ஏறி சாகசம் செய்ததைப் பார்த்து குரங்குக் குட்டியும் கயிற்றில் ஏறி சர்கஸ் செய்ததாம். இதிச் சிறுவர்கள் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் பார்த்து மகிழ்கிறோம். காசு இல்லாமல் பார்க்கும் ஏழைகள் சர்கஸ் காட்சி இது.

acrobat-chennai

அதிசயம் 6
பாடல் 97-ல் பூ வியாபாரம் பற்றி மாறன் வழுதி பாடுகிறார். பூ வாங்கலியோ பூவு!! பூ வாங்கலியோ பூவு!! என்று பெண்கள் கூவி வித்ததை அழகாய்ப் பாடுகிறார். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் தமிழக வீதிகளில் பார்க்கிறோம்:
மதனின் துய்த்தலை இதழ் பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என ………………………………
பாடல் 118-ல் பாதிரிப் பூக்களை வட்டிலில் போட்டுக் கூவி விற்கும் ஒரு பெண் பற்றி பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடுகிறார்.

அதிசயம் 7
தமிழர்கள் ஜோதிடத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள்!! பன்றி கூட பல்லி சொல் கேட்டு சகுனம் பார்த்ததை உக்கிரப் பெருவழுதி பாடுகிறார் (பாடல் 98)

அதிசயம் 8
பாடல் 90-ல் அஞ்சில் அஞ்சியார் என்னும் புலவர் அந்தக் காலத்தில் உடைகளுக்கு கஞ்சி (starch) போடும் வழக்கம் இருந்ததைக் குறிப்பிடுவார். அதுமட்டுமல்ல பெண்கள் ஊஞ்சல் ஆடுவது பற்றியும் பாடுவார். இதே போல பாடல் 222-ல் கபிலரும் ஊஞ்சலைக் குறிப்பிடுகிறார். காதல் வயப்பட்ட பெண்ணை தோழி கிண்டல் செய்கிறாள்: நீ ஊஞ்சலில் ஏறிக்கொள், நான் வேகமாக ஆட்டுகிறேன். ஊஞ்சல் உயரமாகச் செல்லும் போது மலை மீதுள்ள உன் காதலனது ஊரையும் பார்க்கலாம். அதைப் பர்த்தாலேயே உனக்கு ஆனந்தம் ஏற்பட்டுவிடுமே!!
pukkari

அதிசயம் 9
தமிழர்கள் வடமொழியில் பரத முனி இயற்றிய பரத சாஸ்திரத்தை அப்படியே பின்பற்றுபவர்கள். பரதன் கூறும் முத்திரைகள், அபிநயங்கள் (gestures) எல்லாம் சிதம்பரம் முதலிய கோவில்களில் இருப்பதை நாம் அறிவோம். பாடல் 149-ல் உலோச்சனார் ஒரு அபிநயம் பற்றிப் பாடுகிறார். பெண்கள் வியப்பையும், வம்பளப்பதையும் காட்ட மூக்கில் விரலை வைத்துக் கடைக்கண்களால் பார்ப்பர். இதை உலோச்சனார்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற ——
என்பர் உலோச்சனார். அழகான காட்சி!

அதிசயம் 10
பாடல் 160-ஐப் பாடியவர் பெயர் இல்லை. அவர் ஆண்மகன் என்பவனுக்குரிய ஆறு பண்புகளை எடுத்துச் சொல்கிறார்:

நயனும் நண்பும், நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்

நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களுக்கு வேண்டிய குணங்கள் என்பார்.

dance line drawing

அதிசயம் 11
பாடல் 172 காளிதாசனின் சகுந்தலையை நினைவுபடுத்தும். இதைப் பாடியவர் பரணர். சாகுந்தலத்தில், கவிஞன் காளிதாசன் — பிராணிக ளிடத்தும், செடி கொடிகளிடத்தும் சகுந்தலைக்கு உள்ள பேரன்பை மிக அழகாக கூறுவார். அதுபோல இங்கு ஒரு காட்சி. புன்னை மர விதையை விளையாட்டாகப் புதைத்துவைத்து மறந்து போய் கொஞ்ச காலம் ஆயிற்று. அது திடீரென வளர்ந்து தலைக் காட்டியவுடம் அதற்கு பாலும் தேனும் வார்த்து வளர்க்கிறாள் ஒரு பெண் — அவளுடைய தாயாரும் இது உன் தங்கை என்று சொல்லிப் பாராட்டுகிறாள். அந்த மரத்துக்குக் கீழ் நின்று காதல் பேச்சுகளைப் பேச அவளுக்கு வெட்கமாக இருக்கிறதாம். தங்கையை (புன்னை மரம்) வைத்துக்கொண்டு யாராவது காதலனுடன் அடல்ட்ஸ் ஒன்லி வசனங்களைப் பேச முடியுமா?

அதிசயம் 12
பாடல் 293-ல் கயமனார் என்னும் புலவர், — பெண்ணைப் பெற்ற ஒரு தாய் சாபம் (curse) இடுவதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். “என் பெண்ணை சொல்லாமல் இழுத்துச் சென்ற ஆண்மகனுடைய தாயும் என்னைப் போல நடுங்கி கஷ்டப்படட்டும்” என்று சபிக்கிறாள். இதே பாட்டில் காகத்துக்கு குயவன் இடும் பலி பற்றிய குறிப்பும் வருகிறது. இப்படிக்குக் காக்கைக்குச் சோறிடும் வழக்கம் மேலும் இரண்டு பாடல்களில் உள்ளது.

400 பாடல்களில் இருந்தும் 400 சுவையான விஷயங்களை எழுதினால் இடமும் நேரமும் இரா. ஆகையால் நீங்களும் நற்றிணை பயிலவேண்டும் என்று சில பாடல்களைக் காட்டினேன். வேறு என்ன இருக்கின்றன என்பதைக் கோடி காட்டுகிறேன். நீங்களே சுவைத்து மகிழுங்கள்:

பாடல் 3: கணவன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று மாலை வேலையில் மனவி விளக்கு ஏற்றுதல்
பாடல் 32: கண்ணன்/விஷ்ணு நிறத்தில் மலை உள்ளது. அதில் விழும் அருவி அவன் அண்ணன் பலராமன் போல இருக்கிறது.

பாடல் 35: நாவல் பழத்தை தம் இனத்தைச் சேர்ந்த வண்டு என்று கருதி ஒரு வண்டு வந்தது. அதையும் பழத்தையும் நாவல் பழம் என்று கருதி நண்டு கொண்டு சென்றது. உடனே வண்டு சத்தம் போட, நாரை வந்து சமாதானம் செய்தது (தமிழ் நகைச்சுவைப் பாடல்)

பாடல் 45: மஹாபாரத சந்தனு—மத்சகந்தி வாக்குவாதம் போன்றது.

பாடல் 57: குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திக் கட்டுரையில் குரங்கு, — பால் கறந்தது பற்றி எழுதிவிட்டேன்.

பாடல் 59: பிராமணர்கள் சைவ (vegetarian food) உணவு மட்டுமே சாப்பிட்டதாக சங்க இலக்கியம் காட்டும். ஆயினும் அசைவ உணவு பற்றி அவர்கள் எழுதத் தயங்கியது இல்லை. பாடல் 59-ல் ப்ராமண கபிலர் உடும்புக் கறி, முயல் கறி எல்லாம் பற்றிப் பாடுவார். இதே போல காளிதசனும் பாடுகிறான்.
இன்னும் நூற்றுகணக்கில் சுவைமிகு காட்சிகளைக் கண்டு மகிழ்க.

நற்றிணை தமிழர்களுக்கு “நற்றுணை” (Good Companion) எனில் மிகை அல்ல!!!

contact swami_48@yahoo.com

தினமணியில் ‘’லவ் லெட்டெர்’’ நோட்டுப் புத்தகம்

old dinamani1

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1359; தேதி அக்டோபர் 20, 2014.

எல்லோருக்கும் காதல் கடித நோட்டுப் புத்தகம் என்றால் ஏதோ சுவையான, ருசியான செய்தியாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் தினமணிப் பத்திரிக்கையில் ஏ.என்.சிவராமன் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ‘’காதல் கடித நோட்டுப் புத்தகம்’’ — அதாவது லவ் லெட்டர் LOVE LETTER NOTE BOOK நோட்டுப் புத்தகம் என்றால், என் உள்பட எல்லா சப் எடிட்டர்களுக்கும் (SUB EDITORS) குலை பதறும்.

தமிழில் தினமணிப் (DINAMANI) பத்திரிக்கையை அறியாதோர் யாரும் இருக்க முடியாது. அதில் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன் (ஏ.என்.எஸ் A.N.S) என்ற பெயரும் பலருக்கும் நினைவிருக்கும். அரைகுறைப் பாமரன், கணக்கன் என்ற பல புனைப் பெயர்களில் பல கட்டுரைகளை எழுதி அவை நூலாக வெளிவந்து நன்றாக விற்பனையும் ஆனது.

நான் மதுரை தினமணியில் சீனியர் சப் எடிட்டராக (Senior Sub Editor) வேலை பார்த்தபோது, அவர் அடிக்கடி மதுரைக்கு வருவார். வேட்டி கட்டிக் கொண்டு, ஒரு கதர் ஜிப்பா அல்லது அதுவும் இல்லாமல் வெறும் மேல் துண்டுடன் காரில் அலுவலகத்துக்கு வந்து விடுவார்.— அன்று வெளியான தினமணிப் பத்திரிக்கையை ஒரு நோட்டம் விடுவார்.–உடனே “டேய் ராமா அல்லது ராமச்சந்திரா” (வேலைக்காரர்கள்) என்று கூவி, அந்த “லவ் லெட்டர்” நோட்டை இப்படி கொண்டுவா’’ என்பார்.

நாங்கள் ஆறு அல்லது ஏழு சப் எடிட்டர்கள் ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துக் கொள்வோம். உடனே எங்களுக்கு எல்லாம் ‘’டென்ஷன்’’ (Tension) ஏறி விடும். நாங்கள் மொழி பெயர்த்த செய்தியில் ஏதாவது தவறு இருக்கும் அல்லது அதை எழுதிய விஷயம் தெளிவில்லாமல் இரு பொருள்பட எழுதப்பட்டிருக்கும். இனி மேல் அப்படி செய்யக் கூடாது என்பதற்காக அந்த தவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு குறிப்பு எழுதுவார். அதோடு நிற்காமல் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து “டேய், இதை யாரடா எழுதினீர்கள்?” — என்று ஏக வசனத்தில் கேட்பார். அந்த ‘’சிப்டில்’’ (SHIFT) உள்ள சப் எடிட்டர் என்றால் அவர் சப்தம் போடத் துவங்குவார். சொல்லியதையே பலவித கோணங்களில் சொல்லத் துவங்குவார்.

old dinamani 3

எங்கள் சப் எடீட்டர்களைத் தாண்டி ‘’ப்ரூப் ரீடர்’’ (PROOF READERS) ஒரு பத்துப் பேர் எதிரும் புதிருமாக உடகார்ந்திருப்பர். அதற்கு நேராக இந்தப் பக்கம் டெலிப்ரிண்டர் (TELE PRINTER) அறை இருக்கும். இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு நடந்து போய்விட்டு மீண்டும் வந்து திட்டுவார். பிறகு இந்தப் பக்கம் போய்விட்டு வந்து திட்டுவார். இப்படி ஒரு மணி நேரம் நடக்கும்.

குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட சப் எடிட்டர் தவிர மற்ற எல்லோரும் குனிந்த தலை நிமிராமல் — கல்யாணப் பெண் போல அமர்ந்து — வேலை செய்வோம். இதற்குள் உள்ளே ‘’கம்பாசிட்டர் ரூம்’’ (COMPOSITORS ROOM) முதலிய அறைளுக்கும் செய்தி பரவிவிடும். அவர்கள் எல்லோரும் —நாங்கள் எழுதியதில் சந்தேகம் கேட்க வருவது போல— வந்து எங்களை வேடிக்கை பார்த்துவிட்டுப் போவர்.

மாலை ஐந்து மணிக்கு எல்லா சப்பெடிட்டர்களும், வழக்கமாக தனலெட்சுமி பவன் வரை நடந்து சென்று இட்லி தோசை காப்பி சாப்பிட்டு வருவோம். அப்போதுதான் எல்லோருக்கும் உயிர் வரும். சிரிப்பும் வந்துவிடும். குற்றவாளிக் கூண்டில் அன்று நின்ற சப் எடிட்டர் — ‘’இன்று நான் யார் முகத்தில் விழித்தேனோ?” —என்று அங்கலாய்ப்பார். நாங்கள் எல்லோரும் “கவலைப் படாதே இன்று உன் முறை, நாளை எங்கள் முறை” என்போம். அதே போல மறு நாள் வேறு ஒரு சப் எடிட்டர் சிக்கிவிடுவார்.

049-dinamani-sivaraman

இதற்கு ஏன் ‘’லவ் லெட்டர் நோட்டுப் புத்தகம்’’ என்று பெயர் வைத்ததையும் ஏ.என்.எஸ்.ஸே எங்களிடம் கூறியிருக்கிறார். அவர் போத்தன் ஜோசப் என்ற பிரபல பத்திரிக்கையாளரிடம் வேலை பார்த்தவர். அவர் இப்படித்தான் லவ் லெட்டர்— அதாவது தவறுகளைச் சுட்டிக் காட்டும் நோட்டு— எழுதுவாராம். இப்படிச் சில மாதங்கள் ஓடும். பின்னர் அவர் தலைமையகத்துக்கு (சென்னைக்கு) சென்றுவிடுவார். எங்கள் எல்லோருக்கும் உற்சாகம் கரை புரண்டோடும். “அட, பள்ளிக்கூட நாளில்தான் ஆசிரியருக்குப் பயந்தோம் என்றால் — எருமை மாடு வயதாகிக் கல்யாணமும் ஆகி குழந்தையையும் பெற்ற பின்னர் இவரிடம் திட்டு வேறா?” என்று சிரித்து மகிழ்வோம்.

ஆனால் அவர் பத்திரிகைத் துறையில் ‘’பழமும் தின்னு கொட்டையும் போட்டவர்’’. செய்தியின் ஆங்கில வடிவைப் பார்க்காமலேயே, ஆங்கிலத்தில் என்ன வந்திருக்கும்? அதை சப் எடிட்டர் எப்படி தவறுதலாகப் புரிந்து கொண்டார் என்பதை துல்லியமாக ஊகித்தறிவார்.

ஒரு சப் எடிட்டர் டேராடூன் (Dehradun) என்பதை டெஹ்ராடன் என்று எழுதிவிட்டார். ஏனெனில் ஆங்கிலத்தில் அப்படித்தான் ஸ்பெல்லிங் (Spelling) இருக்கும். இன்னொருவர், திமிங்கிலம் என்பதற்குப் பதிலாக வேல் மீன் என்று எழுதிவிட்டார். திமிங்கிலத்துக்கு ஆங்கிலத்தில் ‘’வேல்’’ (WHALE) என்று பெயர். ஆனால் அது மீன் வகைப் பிராணி அல்ல. இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் மாட்டிக் கொள்வோம்.

old dinamani1.jpg2

எங்கள் காலத்தில் எல்லா செய்திகளும் ஆங்கிலத்தில் வரும். தமிழில் மொழி பெயர்ப்பது, எடிட் (editing) செய்வது, பேஜ் போடுவது (Page Makeup) முதலியன எங்கள் பணிகள். இந்திராகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று நான்தான் சீனியர். –உடனே அன்றைய தலைப்புச் செய்தி — ((ஆங்கிலத்தில் பேனர் Banner Item ஐட்டம் என்றும் நாங்கள் எட்டுக் காலம் Eight Column என்றும் சொல்லுவோம்)) – எழுதும் பணி என் தலையில் விழுந்தது. உலகையே உலுக்கும் செய்தி என் கையில் வந்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆகையால் வளைத்து வளைத்து எழுதினேன். மறு நாளைக்கு ஒரே பாராட்டு!!

என்னுடைய சீனியரில் ஒருவர் என் காதருகே வந்து, “சாமிநாதா, மிகவும் அழகாக எழுதினாய், நேரடியாகப் பார்ப்பது போல நல்ல வருணனை — ஆனால்……………” என்று இழுத்தார். வயிற்றின் அடியில் இருந்ததெல்லாம் வாய்க்கு வந்துவிடுவது போல வயிற்றை ஒரு கலக்கு கலக்கியது. “ராஜீவ் காந்தி வலம் வந்து — பின்னர் இந்திரா காந்திஜி அமர் ரஹோ என்று விண்ணைப் பிளக்கும் கோஷத்துக்கிடையே சிதைக்கு ………………………………. என்று எழுதி இருக்கிறாய். சுடுகாட்டில் மட்டும் வலம் வர மாட்டார்கள் – இடம் வருவார்கள் என்றார். எனக்குத் தூக்கிவாரி போட்டது. ஏனெனில் ஆங்கிலத்தில் இடம் வலம் என்று வித்தியாசம் இல்லாமல் சொல் இருக்கும். இதற்கெல்லாம் அனுபவம் தேவை.

‘’முன்னப் பின்ன செத்தால்தானே சுடுகாடு தெரியும்’’ – என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்போதுதான் அந்தப் பழமொழியின் முழுத் தாக்கமும் எனக்குத் தெரிந்தது!!! நல்ல வேளையாக பெரிய ஆசிரியர் (ஏ.என்.எஸ்) சென்னையில் இருந்தார். நான் பிழைத்தேன்.

இதே வரிசையில் நான் எழுதிய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.என் அப்பாவிடம் கற்றது
2.என் அம்மாவிடம் கற்றது
3.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள்

Contact swami_48@yahoo.com

பதி – வதி – மதி : சிந்து சமவெளியில் உண்டா?

bull-seal-4

Look at the “U” shaped letters

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1358; தேதி அக்டோபர் 20, 2014.

மிகவும் அதிசயமான ஒரு விஷயம்!! இந்துக்கள் பெயரிடும் முறையாகும்!! எனது நாற்பது ஆண்டு ஆராய்ச்சியில் கண்ட சில விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன். ஆதிகாலம் முதல் இன்றுவரை இந்துக்கள் தனது பெயர்களில் பின்னொட்டு (விகுதி) களாக ‘’பதி – வதி – மதி’’ —களைப் பயன்படுத்துகின்றனர். இந்தோநேஷியாவின் முஸ்லீம் ஜனாதி’’பதி’’யாக இருந்த பெண் பெயர் கூட மேக’’வதி’’ சுகர்ண புத்ரீ!! தூய சம்ஸ்கிருதம்.

காரைக்கால் அம்மையாரின் பெயர் புனித’’வதி’’. அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலக’’வதி’’. இவர்கள் இருவரும் பிராமணர்கள் அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைஸ்ய குல பெண்ணான காரைக்கால் அம்மையார் வீட்டிலும் அதற்கு முன் பிறந்த வையஸ்குல கோபாலன் (சிலப்பதிகார கோவலன்) பெயர்களும் சம்ஸ்கிருதமே. சங்க இலக்கியப் புலவர்களில் கபில, தாமோதர, பரண, கேசவ, கௌசிக, விஷ்ணுதாச (விண்ணந்தாயன்), கண்ணதாச (தாயங்கண்ணன்), பிரம்மதத்த, வால்மீகி என்று ஏராளமான சம்ஸ்கிருதப் பெயர்களைக் காண்கிறோம்.

ஆண்கள் பெயர்கள் எல்லாம் ‘’பதி’’ யில் முடியும்.பெண்கள் பெயர் எல்லாம் ‘’மதி’’ அல்லது ‘’வதி’’ யில் முடியும். எடுத்துக்காட்டு:–

பசு — பதி
பார்– வதி
இந்து — மதி (வளர் மதி)

முதலில் ஆண்கள் பெயர்களை எடுத்துக் கொள்வோம். இந்தப் பெயர்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே இருக்கின்றன. இந்துக்களை கடித்துக் குதறுவதைப் பொழுது போக்காகக் கொண்ட “”அறிஞர்களும்”” இப்பொழுது ரிக் வேதத்தின் காலத்தை கி.மு. 1700 என்று ஒப்புக் கொண்டுவிட்டனர். அப்படியானால் சிந்து சமவெளியிலும் இந்தப் பெயர்கள் இருக்கதானே வேண்டும்? அப்படி இருக்குமானால் அந்த எழுத்தின் வடிவம் எப்படி இருக்கும்? என்று ஆராய்வோம்.

ப்ருஹஸ் –பதி, வாசஸ் – பதி, த்ரிதஸ பதி, பசு பதி, வனஸ் பதி முதலிய பல பதி–க்கள் வேதங்களில் வருகின்றன. நம்முடைய நண்பர்கள் பெயர்களில் இப்படி நூற்றுக் கணக்கான ‘’பதி’’–க்கள் கட்டாயம் இருப்பர். சில எடுத்துக் காட்டுகள்:

லெட்சுமி பதி (தினமலர் ஆசிரியர்)
உமா பதி
பூ பதி (டென்னிஸ் வீரர்)
கண பதி
தன பதி செட்டியார்
அபாம் பதி (வருணன்)
ஜனாதி – பதி
அதி — பதி

Indus_seal_impression

பெண்கள் பெயர்களைப் பார்த்தால் அவை ‘’வதி’’ அல்லது ‘’மதி’’ யில் முடியும் — சில எடுத்துக் காட்டுகள்:

மது மதி, இந்து மதி, வசு மதி, வளர் மதி, சாரு மதி — இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஹாபரதத்தில் வரும் மீனவப் பெண்ணின் பெயர் கூட சத்ய – வதி! ((ஆரிய—திராவிட வாதம் பொய் என்பதற்கு இப்படிப் போகிற போக்கில் நான் ஆயிரம் உதாரணங்களைக் கொடுக்க முடியும். அசுரர்கள், ராக்ஷசர்கள் என்பதெலாம் சம்ஸ்கிருதம், அவர்கள் பெயர்களும் சம்ஸ்கிருதம்))
அகத்தியர் மணந்த நாக கன்னிகை பெயர் (வியட்நாம் பெண்) யசோவதி. பார் —வதியை எல்லோருக்கும் தெரியும். பிரபல கணித மேதை லீலா —வதியையும் தெரிந்திருக்கும் (பாஸ்கராச்சார்யார் மகள்).

நகரங்களுக்கும் நதிகளுக்கும் , நல்ல குணங்களுக்கும் இந்துக்கள் பெண்கள் பெயர்களையே சூட்டுவார்கள் (பெண்கள் வாழ்க முதலிய பல கட்டுரைகளில் இது பற்றி எழுதி விட்டேன்)

சபர் மதி, ஷரா வதி, வேக வதி என்பன சில ஆறுகளின் பெயர்கள்.
இந்திரனின் தலை நகர் அமரா வதி
நாகர்களின் தலை நகர் போக வதி

இப்படி நிறைய நதிகள், நகரங்கள் இந்தியாவில் இன்றும் உண்டு. ஆந்திரத்தில் உள்ள புத்தமதச் சிற்பம் உடைய அமரா வதி, குஜராத்தின் பழைய தலை நகர் கர்னா வதி (இப்பொழுதைய பெயர் ஆமதாபாத்).

உண்மையில் மொழியியல் அறிஞர்களுக்குத் தெரியும் ப = ம = வ ஆகிய எழுத்துக்கள் இடம் மாறும் என்பது.

தமிழில் வங்கம் (படகு, கப்பல்) என்றால் வங்காளத்தில் வசிப்போர் பங்கம் என்பர்.
வேதத்தில் ‘’வ்ருக’’ என்றால் பிற்கால சம்ஸ்கிருதத்தில் அது ‘’ம்ருக’’ ஆகும். இது போல நூற்றுக் கணகான சொற்கள் இருக்கின்றன. முற்காலத்தில் இதை மாறி மாறி பயன்படுத்தி இருப்பர். பிற்காலத்தில் இலக்கணம் வகுத்து முறைப்படுத்தி இருப்பர்.

indus seal2

வேதகாலம் முதல் இந்துக்கள் பயன்படுத்தும் இந்த வதி – பதி – மதி சிந்து சமவெளியில் இருந்தால்…………. இருந்திருந்தால்…………. எப்படி இருக்கும்? சிந்து சமவெளி முத்திரைகளில் “U” பல வகைகளில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பாதம் என்று கொண்டால் பத, பதி என்ற ஒலியை உருவாக்கும். அதற்குள்ளும் வெளியேயும் வெவ்வேறு குறியீடுகளைப் பொறிக்கையில் அதற்குத்தக புதிய ஒலிகளும் வரும் என்று ஊகிக்கலாம். இது ஒரு ஊகமே.

“U” இந்த வடிவத்தைச் சிலர், அளக்கும் படி (லிட்டர்) என்றும் இன்னும் சிலர் இது மரியாதைக்குரிய விகுதி/ பின்னொட்டுச் சொல் (கள், ஆர்) என்றும் கூறி இருக்கிறார்கள். (ஆங்கில எழுத்தான யு போன்றது).
ARV_INDUS_12484f

சிந்து சமவெளி எழுத்துக்களை யாரேனும் முழுக்க முழுக்க புதிய கோணத்தில் ஆராய்ந்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். மற்ற எழுத்துக்களுக்குக் கிடைத்தது போன்ற இரு மொழிக் கல்வெட்டுகள் கிடைக்காததால் கம்யூட்டரில் போட்ட பின்னரும் இதன் பொருள் தெரியவில்லை!! சிலர் ‘’எண்’’ என்பர், மற்றும் சிலர் ‘’எழுத்து’’ என்பர். இன்னும் சில அமெரிக்கர் இது எழுத்தும் அல்ல, எண்ணும் அல்ல, சுத்தக் ‘’கிறுக்கல்கள்/படங்கள்’’ என்றும் திருவாய் மலர்ந்தருளுவர்!! இதற்கெல்லாம் மூல காரணம் —- ஆரம்ப காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்தோர், ஆரிய—திராவிட விஷத்தை இதிலும் தூவிவிட்டனர். அதனால் இன்று வரை அறிவு என்னும் மரமோ, பழமோ அங்கே விளையவில்லை!!

i_tiger_seal

contact swami_48@yahoo.com

அந்தரத்தில் நிற்பதை அனைவருமே கற்கலாம்!

d meade2

By ச.நாகராஜன்
Post no. 1356; dated 19th October 2014
This article was written by my brother S Nagarajan for Tamil Magazine Bhagya:swami

‘மனம் ஒரு ட்ரங்க் பெட்டி போல! அது நன்கு பேக் செய்யப்பட்டிருந்தால் (well packed) அதனுள் எல்லாமே அடங்கி விடும். அது தவறாக பேக் செய்யப்பட்டிருந்தால் ( ill packed) அது ஒன்றுமில்லாததற்குச் சமம். – அகஸ்டஸ் வில்லியம் ஹேர்

வட அயர்லாந்தின் பிரதானமான நகரம் (Belfast) பெல்ஃபாஸ்ட்.. அதில் இருக்கும் விக்டோரியா ஸ்குயரில் 2013ஆம் ஆண்டில் டேவிட் மீட் (David Meade) என்பவர் நிகழ்த்திய சாகஸம் உலகையே வியப்பில் ஆழ்த்தி விட்டது. 29 வயதே ஆன மீட் விக்டோரியா ஸ்குயரில் உள்ள கட்டிடத்தின் இரண்டாம் மாடியின் சுவரிலிருந்து 30 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இதைப் பார்த்துத் திகைத்து வியப்பில் ஆழ்ந்தனர்.
இப்படி செய்யப்படும் நிகழ்ச்சி இதுவே உலகில் முதல் தடவை எனச் சொல்கிறார் மீட். காலை எட்டு மணிக்கு அந்தரத்தில் தொங்குவதை ஆரம்பித்த மீட் பல மணி நேரம் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தார்.

இப்படி அந்தரத்தில் நிற்பது எகிப்தில் உள்ள பழைய கால பிரமிடுகளில் நிகழ்த்தப்பட்ட ஒன்று. ஆனால் அங்கே பூமிக்கு மேலே 3 அடி உயரத்தில் மட்டுமே நின்று காண்பிப்பர். இந்திய யோகிகளும் தரைக்குச் சிறிது மேலே அந்தரத்தில் மிதப்பது சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. மீடோ 30 அடி உயரத்தில் இருந்தார்.

david meade1

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்குப் பின்னர் மீட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானார். பிபிசி இவரது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. மேக் பிலீவ் (Make Believe)என்ற இவரது தொடர் மிகவும் பிரசித்தமான ஒன்று.

நிஜமாகவே இதைச் செய்கிறேனா அல்லது செய்வது போல நம்ப வைக்கிறேனா என்று மக்கள் மனதில் கேட்கும் கேள்வியின் அடிப்படையிலேயே எனது தொடரின் தலைப்பு அமைக்கப்பட்டது என்கிறார் அவர்.

உலகெங்கிலிருமிருந்து எனது நிகழ்ச்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பு என்னை பிரமிக்க வைக்கிறது என்கிறார் அவர்.

அயர்லாந்தில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றி சொற்பொழிவுகளை ஆற்றி வரும் மீட் ஒரு ஆராய்ச்சியாலரும் கூட. வாடிக்கையாளர் எப்படிப் பொருள்களை வாங்குகின்றனர், அதில் என்ன சைக்காலஜி அடங்கி இருக்கிறது என்பதைப் பற்றி நிறைய ஆய்வு நடத்தி உள்ள அவர் கூட்டமாகச் சேர்ந்து விட்டால் அந்தக் கூட்டத்தில் ஏற்படும் மக்களின் மனப்பான்மை பற்றியும் ஆராய்ச்சிகளை நடத்தி உள்ளார்.

இதில் அவரது மெண்டலிஸம் (mentalism) வேறு சேர்ந்து விட்டது.அவர் பேசுகின்ற இடங்களில் கூட்டத்திற்குக் கேட்கவா வேண்டும். மெண்டலிஸம் என்பது மாஜிக்கை விட வேறுபட்ட ஒன்று. சாதாரணமாக மாஜிக் நிகழ்த்துவோர் செய்யும் ஸ்டேஜ் வித்தைகளை மெண்டலிஸ்ட் செய்வதில்லை. மனத்தை மயங்க வைக்கும் வித்தைகளையே அவர்கள் காண்பிப்பர்.

உங்கள் கார்டில் உள்ள பின் கோட் நம்பரை நீங்கள் படித்தால் உங்கள் மாமியாரின் பெயரை அவர் கூறி விடுவார்! அல்லது அவரது பிறந்த தேதியைச் சரியாகக் கூறி விடுவார்! இது சாத்தியமா, என்ன! அன்றாடம் செய்து காண்பிப்பதால் இதை நம்பித் தான் ஆக வேண்டும்!

புவி ஈர்ப்பு விசையை எதிர்த்துச் செய்யப்படும் அந்தரத்தில் மிதக்கும் சாகஸ செயலுக்கு விஞ்ஞானம் என்ன பதில் சொல்கிறது என்பதே அனைவரது கேள்வியும். இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்கும் போதெல்லாம், புன்முறுவலுடன், “ அது என்னுடனேயே ரகசியமாக இருக்கட்டும்” என்கிறார் மீட்.

d meade3

யூரி கெல்லர், ஹெய்ம் கோல்டன்பெர்க், டெர்ரன் ப்ரவுன், ஜேம்ஸ் ராண்டி, அல் கொரான், ரிச்சர்ட் ஆஸ்டர்லிண்ட், மார்க் பால் உள்ளிட்ட ஏராளமானோர் மனத்தின் மூலம் மற்றவரைக் கட்டுப்படுத்தி மனோசக்தி மூலம் செய்யும் ஏராளமான சாகஸ செயல்களைச் செய்து காட்டி உலகையே வியப்பில் ஆழ்த்தினர், மீட் செய்யும் மனோ வித்தைகளைப் பார்ப்பவர்கள் அவர் ஜனங்களின் மனதைக் கட்டுப்படுத்தி விடுகிறார் என ஒரு மனதாகச் சொல்கின்றனர். இதனால் வட அயர்லாந்து ஒளிபரப்பு நிகழ்ச்சி ஒன்றிற்காக பிபிசிக்காக ஜனத்திரளைக் கட்டுப்படுத்தும் ஒரு டாகுமெண்டரி எடுக்கவும் அவர் ஒப்புக் கொண்டார். இதற்காக ஒரு பேஸ்கட்பால் குழுவை அவர் தேர்ந்தெடுத்து விளையாட்டு வீர்ர்களின் மனதைக் கட்டுப்படுத்தி விளையாட வைத்தார், பேஸ்கட்பால் விளையாடும் இரண்டு குழுவினருள் ஒரு குழுவினரை அவர்கள் விசேஷமானவர்கள், நிச்சயம் ஜெயிக்க வல்லவர்கள் என்ற நம்பிக்கையை விதைக்க அவர்கள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர்.

பாஸிடிவ் எண்ணங்கள் எப்போதுமே நல்ல பலன்களைத் தரும் என்கிறார் மீட். பெரிய நிறுவனங்களை அணுகி அவர்களிடம் வேலை பார்ப்போரிடம் அதிகத் திறமையை எப்படி வளர்ப்பது என்பதையும் அவர் சொல்லித் தருகிறார். பொருள்களை எப்படி அடுக்கி வைப்பது என்பதில் கூட வாடிக்கையாளரைக் கவரும் ஒரு பெரும் ஆற்றல் உள்ளது என்பதை அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.

தனது ஆற்றல்கள் எல்லாம் தொடர்ந்த பயிற்சியின் மூலம் வந்தவை தான் என்று கூறும் அவர், இது அனைவரும் பெறக் கூடிய ஒன்று தான் என்றும் விஞ்ஞானத்தை விஞ்சிய விஷயம் எதுவும் இல்லை என்றும் உறுதிபடக் கூறுகிறார்.

எது எப்படி ஆனாலும் ஆகாயத்தில் அந்தரத்தில் தொங்குவதை எத்தனை பேரால் செய்ய முடியும்! யோசித்துப் பார்த்தால் மீட் ஒருவரால் தான் முடிகிறது. அதனால் தான் அவரை உலகம் வியப்புடன் பாராட்டுகிறது!

d meade4
Images of David Meade

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .

விஞ்ஞானிகளுள் ஏராளமானோருக்கு தீவிரமான கடவுள் நம்பிக்கை உண்டு.இவர்களுள் ஒருவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான சார்லஸ் டவுன்ஸ் (Charles Townes). டி.டிமிட்ரோவ் என்பவர் அவரிடம்,”உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?கடவுள் இருக்கிறாரா” என்று கேட்டார். அவருக்கு டவுன்ஸ் கொடுத்த பதில் இது:” நான் கடவுள் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறேன்.உள்ளுணர்வு, என்னுடைய பார்வைகள், தர்க்கம் மற்றும் அறிவியல் ரீதியிலான அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் கடவுள் இருப்பதை நம்புகிறேன்.” (“I strongly believe in the existence of God, based on intuition, observations, logic, and also scientific knowledge.”) .
டவுன்ஸை ஆன்மீகவாதிகளும் அறிவியல் அறிஞர்களும் பாராட்டுகின்றனர்!

contact swami_48@yahoo.com

****************

அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்!

bm_agni_goat_

Agni Statue in British Museum, London

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1354; தேதி அக்டோபர் 18, 2014.

1.உலகின் முதல் அகராதியும் முதல் திசாரஸுமான Thesarus (ஒரு பொருள் குறித்த பல சொற்கள் வழங்கும் நிகண்டு) அமரகோசம், — அக்னி பகவானுக்கு 34 பெயர்களை அடுக்குகிறது. இதற்கு உரை எழுதிய உரைகாரர்கள் ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு அரிய தகவல்களை அளிக்கின்றனர்.

2.உலகின் மிகப் பழைய நூலும் மனித குல வரலாற்றின் – குறிப்பாக இந்தப் பூ உலகின் ஆதி குடிகளான இந்துக்களின் – குறிப்புப் புத்தகம் என்று கருதப்படும் ரிக் வேதத்தில் அக்னி பகவான்தான் அதிக துதிகளில் அடிபடுகிறார். தனியான துதிகள் என்றால் இந்திரனுக்கு முதல் பரிசு— தனியாகவும் வேறு பல துதிகளிலும் சேர்ந்து புகழப்படுபவர் யார் என்றால் அக்னி பகவானுக்கு முதல் பரிசு!

3.அக்னி பகவானுக்கும் எண் ஏழுக்கும் (Number Seven) ஏனோ ரகசிய தொடர்பு இருக்கிறது. அவருக்கு நாக்குகள் ஏழு— அவருடைய ரதத்தின் சக்க்ரங்கள் ஏழு—- அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மனைவி ஸ்வாஹா தேவி என்பவர்கள் கூட்டுத் தொகை 49. அதாவது ஏழு X ஏழு.—(7X7=49) ரிக் வேதத்தில் பல துதிகளிலும் இவர் ஏழு அல்லது ஏழின் மடங்குகளில் போற்றப் படுகிறார். புது மணத் தம்பதிகள் அக்னியை வலம் வருகையில் ஏழு அடி (சப்த பதி Saptapadi) நடந்த பின் அது சட்டபூர்வ கல்யாணம் ஆகிவிடும்—- அக்னி பகவானுக்கு சப்த ஜிஹ்வா, சப்த அர்ச்சி என்ற பெயர்கள் உண்டு. இதன் பொருள்—ஏழு நாக்குடையோன், ஏழு கிரணம் உடையோன்.

agni, guimet
Agni with two heads in Guimet Museum, Paris

4.அக்னிக்கு அம்மாவும் அப்பாவும் இரண்டு குச்சிகள் அல்லது இரண்டு கட்டைகள். அதை இரண்டையும் உரசினால் அவர் பிறக்கிறார். அதாவது ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை என்று ஒன்று வைத்திருப்பார்கள். அதில் தயிர் கடைவது போல ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்துக் கடைவார்கள். தீப்பொறி எழும். இதில் ஒரு கட்டை பூமி என்றும் மற்றொன்று ஆகாயம் அல்லது சுவர்கம் என்றும் தத்துவ விளக்கம் கொடுப்பர்.

5.அக்னியை அப்பா, நண்பன், குரு, புரோகிதர் என்று பல வகைகளில் பாடும் வேதகால ரிஷி முனிவர்கள் அந்த அக்னியைக் கொண்டு நம் வீட்டிலும் விளக்கேற்றுகிறார்கள். நமது ஆன்மாவிலும் விளக்கு ஏற்றுகிறார்கள். சாதாரணக் கொள்ளிக் கட்டையைப் பாடுபவர்கள் பெரிய ஆன்ம ஞானத்தை தட்டி எழுப்பவும் பாடுகிறார்கள்.

6.வேதம் பயின்ற பிராமணர்கள் தினமும் அக்னியை வழிபடுவர். சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை அக்னியை வழிபடுவர். ((அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விஸ்வே தேவா: என்ற மந்திரத்தைச் சொல்லுவர்.))

7.அக்னியின் சொரூபமே சுப்ரமண்யர் எனப்படும் முருகப் பெருமான். ஆகவே முருகனை வழிபடுவோர் எல்லோரும் ஒரு வகையில் அக்னியை ( யாகத் தீ எழுப்பாமல் ) — வழிபடுவதாகச் சொல்லலாம்.

8.முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததாகச் சொல்லுவர். அக்னியை பத்து பெண்கள் — அதாவது பிராமணர்களின் பத்து விரல்கள் — வளர்த்ததாகப் பாடுவர் வேத கால ரிஷி முனிவர்கள்— விரல் என்பதற்கு அங்குலி என்ற பெண்பாற் சொல் பயன்படுத்தப்படும்.

வேத காலக் கவிஞர்கள் பாடும் பாடல்களைப் படித்தால் பாபிலோனிய, எபிரேயப் பாடல்கள் எல்லாம் நாகரீகமற்ற ஆதிமனிதன் பாடல்கள் என்னும் முடிவுக்கு வர அதிக நேரம் பிடிக்காது. இவ்வளவுக்கும் அவை எல்லாம் வேதத்துக்குப் பின் எழுந்தவை. இப்போது மைகேல் விட்சல் போன்ற அமெரிக்க அறிஞர்கள்கூட இதற்கு கி.மு.1700 என்று முத்திரை குத்திவிட்டார்கள். இந்திய அறிஞர்கள் வேத காலத்தை கி.மு 6000 வரை கொண்டு செல்கின்றனர்.

9.ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் மேல்தான் — அளவில், ரிக் வேதம் என்பது ஏறத்தாழ சங்க இலக்கியத்தின் 2400 பாடல்களுக்குச் சமமானது– ஆனால் முழுக்கவும் இறைவனைப் பற்றியது.

fritstal book

10.எப்படி ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் பற்றி இருக்கிறதோ அப்படியே மனிதனின் வாழ்வும் நெருப்புடன் பின்னிப் பிணைந்தது. மனிதன் பிறந்த அன்று வீட்டில் ஒரு அக்னியை ஸ்தாபிப்பர். அதவது பிராமணர் வீடுகளில் ஒரு பானையில் உமிக் கரியில் நெருப்பு வைப்பர். இந்த நெருப்புதான் அவருக்கு வாழ்நாளின் இறுதி நாளன்று சிதைத் தீக்கும் பயன்படுத்தப்படும். பானைக்குள் உமியில் இருக்கும் நெருப்பு எப்போதும் அணையாது.

11.திருமணத்தின் போதும் அக்னி சாட்சியாகவே திருமணம் செய்ய வேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் திருமணக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். புது மணத் தம்பதிகள் அக்னியை வலம் வர வேண்டும். ஏழு அடிகள் நடந்த பின்னர் திருமணம் சட்டப்படி நிறைவேறியதாக அர்த்தம்.

12. ஒவ்வொரு பெண்ணும் ஏற்கனவே அக்னி பகவானைக் கல்யாணம் செய்து கொண்டதாகவும் உண்மைத் திருமணத்தன்று அவளை புது மாப்பிள்ளைக்கு அக்னி கொடுத்துவிடுகிறான் என்றும் வேதம் பகரும். இதன் தாத்பர்யம் என்னவென்றால் எப்படி, அப்பன் முன்னிலையில் ஒரு பெண் அதிகார பூர்வமாக இன்னொரு ஆண்மகனுக்கு உரிமையாக்கப் படுகிறாளோ அப்படி அக்னியின் முன்னிலையில் அவளைக் கொடுக்கவேண்டும் என்பதாகும். முடியுடைய மூவேந்தர்கள் பலர் வேளிர் குல அழகிகளைக் கண் வைத்தபோது அவர்களுடைய அப்பன்மார்கள் முடியாது என்று சொன்னதை புற நானூறு அக நானூறு மூலம் அறிவோம். அதாவது பெண்களின் எதிர்காலம் அப்பாக்களாலும் அக்னியாலும் நிச்சயிக்கப்படும்.

agni
Agni with goat vahana

13. அக்னியின் மனைவி பெயர் ஸ்வாஹா தேவி. அதவது ஒவ்வொரு முறை யாகத்தீயில் பொருள்களைப் போடும் போதும் ‘’ஸ்வாஹா’’ என்ற மந்திரத்தைச் சொல்லிப் போடுவர். அதையே இப்படி அடையாளபூர்வமாக மனைவி என்று சொல்வர். இதே போல அவருக்கு மூன்று பிள்ளைகள்: பாவக, பவமான, சுசி. அவர்களுக்கு 45 பிள்ளைகள். அக்னியின் அப்பா, அம்மா காஸ்யபர், அதிதி ஆவர் — சில புராணங்களில் பிரம்மா இவரது தந்தை என்றும் சொல்வர்.

14.அக்னி பகவானுக்கு வாகனம் ஆடு; சில நேரங்களில் கிளியோ சிவப்பு நிறக் குதிரையோ ரதத்தை இழுத்துச் செல்வதாகவும் காட்டப் படும். இவரது சிற்பங்கள் இரண்டு தலைகளுடன் காட்டப்பட்டிருக்கும். இவருக்கு வேதத்தில் மிகவும் அடிக்கடி அடிபடும் பெயர் :–ஜாத வேதஸ் — அதாவது எல்லாம் அறிந்தவர்!!

15.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் கார்கபத்யம், தட்சினாக்கினீயம், ஆகவனீயம் என்று முத்தீ உண்டு. இதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வரும் ‘’முத்தீ அந்தணர்’’ என்ற குறிப்பால் உணரலாம். பிராமணச் சிறுவர்கள் ‘’சமிதாதானம்’’ என்று தினமும் ஓமத் தீ (ஹோம அக்னி) வளர்ப்பர். திருமணமானோர் ‘’ஔபாசனம்’’ என்று காலை மாலையில் அக்னியை வைத்து வழிபடுவர். இந்தப் பொற்காலம் பற்றி எல்லாம் இப்போது பல பிராமணர்களுக்கே தெரியாது !!

losangelese
Agni in Los Angelese Museum

16. அக்னியின் பெயர் மூலம் ‘’இக்னிஷன், இக்னைட்’’ Ignite, Ignition, Ignite rocks முதலிய பல ஆங்கிலச் சொற்கள் உருவாயின. அக்னியின் பெயரை ஒட்டி உக்னிஸ், ஒக்னிஸ், இக்னிஸ் (Ugnis, Ognis,Ignis) என்ற சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் உண்டு

17.அக்னி பற்றி நாம் இதுவரை அறிந்ததில் இரண்டு உண்மைகள் வெட்ட வெளிச்சத்துகு வந்துவிட்டன:

அ) பாரதமே இந்துக்களின் சொந்த பூமி. இவர்கள் வெளியில் இருந்து வந்திருந்தால் அங்கெல்லாம் அக்னி வழிபாட்டின் சுவடுகள் தென்பட்டிருக்கும் . ஆனால் அப்படி இல்லை. வெறும் சொற்கள் அளவே ஒற்றுமை— பாரசீகர் மட்டுமே தீயை வழிபடுபவர். அவர்களும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள். அவர்களுடைய மொழியும் ரிக்வேதத்துக்கு மிகவும் பிற்பட்டது. அவர்களைத் தவிர “தீ வழிபாடு” ஐரோப்பாவில் கிடையாது. நம்மவர்கள் அங்கு சென்று தங்கிய காலத்தில் செய்தது எல்லாம், பின்னர் குறைந்து போனது என்றே கருத வேண்டியுள்ளது.

நாமோ இன்றும் வழிபடுகிறோம். சத்ய சாய்பாபா போன்ற மாபெரும் தவ சீலர்கள் 14641 முறை நீண்ட ருத்ர மந்திரத்தைச் சொல்லி அக்னியில் ஆகுதி போடும் பிரம்மாண்டமான அதிருத்ர யக்ஞத்தை நமது காலத்திலேயே நடத்திக் காட்டினர். அமெரிக்க அறிஞர் பிரிட் ஸ்டால் கேரளத்துக்கு வந்து வேத கால யக்ஞத்தை செய்துகாட்டினார். சங்க இலக்கியத்தில் பருந்து வடிவத்தில் யாக குண்டம் கட்டிய கரிகால் சோழன் பற்றிய பாடல் வருகிறது. அதே வடிவத்தில் இந்த அமெரிக்க அறிஞர் கேரளத்தில் யாக குண்டம் அமைத்து யாகம் செய்தார்.

ஆ)இரண்டாவது உண்மை: வேதகால முனிவர்களின் அறிவுக்கு முன் பாபிலோனிய ஜில்காமேஷ் எல்லாம்—நர்சரி ரைம் Nursery Rhyme போன்றவை. வேதத்தில் காணப்படும் மிகப் பெரிய எண்களும் வார்த்தா ஜாலங்களும், சொற் சிலம்பங்களும், சங்கேத மொழிகளும், மறைகளும் அற்புதமானவை. அவர்கள் ‘’சொல் வலை வேட்டுவர்கள்’’. இதே காலத்தில் உலகில் எழுந்த மிகச் சில வேற்று மொழிக் கவிதைகள்- கற்றுக் குட்டி களின் கவிதைகள் என்றால் மிகை இல்லை.

homam chandru
Kancheepuram Chandru Kurukkal performing Havan in the United Kingdom

18. அக்னி பகவானுக்கு அக்னி, வைஸ்வானர, வன்னி, வீதிஹோத்ர, தனஞ்சய, க்ரூபீடயோனி, ஜ்வலன, தனூனபாத், ஜாதவேத, பர்ஹி, சுஷ்மா, க்ர்ஷ்ணவத்ம, சோசிகேச, உஷர்புத், ஆஸ்ரேயச (சேர்ந்தாரைக்கொல்லி), ப்ருஹத்பானு, கிருஷ்ணாகு, பாவக, அனல, ரோகிதாஸ்வ, வாயுசக, ஷிகாவன், ஆசு சுஷ்கனி, ஹிரன்யரேத, ஹுதபுக், தஹன, ஹவ்யவாஹன, சப்தார்ச்சி, தமுன, சுக்ர, சித்ரபானு, வைவாவசு, சுசி, ஆபபித்த ஆகிய பெயர்கள் அமரகோசத்தில் உள்ளன. அப்ஜஹஸ்த, தூமகேது, சாஹரத, சப்தஜிஹ்வ, தோமரதார என்ற பெயர்களும் புராணங்களில் உண்டு. இவற்றின் பொருள் வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க.

19.இதில் க்ருபீடயோனி என்னும் பெயர் விஞ்ஞான விஷயங்களை உள்ளடக்கியது.— அக்னேர் ஆப: — என்று வடமொழியில் ஒரு வாசகம் உண்டு. அதாவது தீயில் இருந்து தண்ணீர் வந்தது. இதையே மாற்றியும் சொல்வர். தண்ணீரில் இருந்து தீ வந்தது. அவர்களுக்கு ஹைட்ரஜன், ஆக்சிஜன் பற்றித் தெரியும் போலத் தோன்றுகிறது. கடலில் தோன்றும் படவாக்னி (வடவை கனல்) பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் பல விஷயங்களைச் சொல்லிவிட்டேன்.

20.தமிழில் அக்னிக்கு “தீ, நெருப்பு, கனல், கங்கு” முதலிய பல சொற்கள் இருப்பதால் அது தனிப்பட எழுந்த, வளர்ந்த ஒரு மொழி என்றும் தெரிகிறது.

yaga mylai

21.அக்னியின் ஏழு நாக்குகளுக்கும் பெயர்கள் உண்டு: காளி, கராலா, மனோஜவா, சுதூம்ரவர்ணா, ஸ்புலிங்கினி, சுலோஹிதா, விஸ்வதாரா.

22.அக்னி பகவானின் சிவப்பு குதிரைக்குப் பெயர்—ரோஹிதஸ்வ. இதே போல வேறு பல தெய்வங்களின் குதிரைகள் பற்றியும் அமரகோசம் தகவல் தருகிறது:
அக்னி – சிவப்பு குதிரை
வருணன் — வெள்ளைக் குதிரை
குபேரன் = குமுத மலர் நிறமுடைய குதிரை
வாயு – பழுப்பு நிறக் குதிரை

பாரதியும் அக்னி பகவானும்

23.வேதங்களைப் படித்து ஊற்றுணர்ச்சி பெற்ற பாரதியார், அவரது பல பாடல்களில் வேத மந்திரக் கருத்துகளை அழகிய சொற்களில் வடித்திருக்கிறார். ‘’அக்கினிக் குஞ்சு’’, ‘’வேள்வித் தீ’’, ‘’தீ வளர்த்திடுவோம்’’ முதலிய பல பாடல்களில் வேத மந்திர மொழி பெயர்ப்புகளைக் காணலாம்.
அமிழ்தம், அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்

தெய்வக் கனல் விளைந்து காக்குமே – நம்மைச்
சேரும் இருள் அழியத் தாக்குமே

என்று பல இடங்களில் பாடி, — அக்னி என்பது நாம் நினைக்கும் வெறும் நெருப்பு அல்ல, — அது ஞானாக்னி என்று நமக்கு உணர்த்துகிறார். இதனால் அன்றோ வேதத்திலும் அதிகமான பாடல்களில் அக்னி போற்றப்படுகிறான்.

24.சாயனரும் கூட, தமது வேத பாஷ்யத்தில் வயிற்றுக்குள் இருக்கும் ஜடராக்னி, சூரியன், சந்திரன் ஆகிய எல்லாவறையும் அக்னி பற்றிய வேத மந்திரங்களுக்குப் பொருளாகக் கூறுவார்.

தீ பரவட்டும் !! ஞானத் தீ பரவட்டும்!!!

contact swami_48@yahoo.com

புறநானூற்று அதிசயங்கள்

tamil puu parithal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1352; தேதி அக்டோபர் 17 2014.

சங்க இலக்கியம் எனப்படும் 18 நூல்கள் பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்ற இரண்டு தொகுப்புகளாக உள்ளன. அதில் புறநானூறு என்னும் 400 பாடல்கள் கொண்ட நூல், எட்டுத்தொகையில் இடம்பெறும் ஒரு நூலாகும். தமிழ் மன்னர்கள், சிற்றரசர்கள், போர்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை இவற்றிலிருந்துதான் அதிகம் அறிகிறோம்.

கடவுள் வாழ்த்து உள்பட 400 பாடல்கள் என்று இப்போது உள்ளன. ஆனால் இது தவிர இன்னொரு பாடல் இருந்திருக்க வேண்டும் என்று சான்றோர் கருதுவர்.

இப்போதுள்ள பாடல் தொகுப்பிலும் 267 மற்றும் 268 என்ற இரண்டு பாடல்கள் கிடைக்கவில்லை. பழைய உரையும் முதல் 266 பாடல்களுக்கே கிடைத்திருக்கிறது. மீதி கிடைக்கவில்லை. பின்னர் வந்தவர்கள் உரை எழுதியுள்ளனர். அதற்கும் முந்திய ஒரு உரை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் உரைகாரர் பெயர்கூடத் தெரியவில்லை.

இனி இது பற்றி சில சுவையான விஷயங்கள்:

1.இதுவும் திருக்குறள் போல அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கப்படலாம் என்று தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் கருதுகிறார். காரணம்? ஒரு இடத்தில் முதல் தொகுப்பு “அறநிலை” என்ற தலைப்புடன் உள்ளது. அவர் கருத்து சரியாகுமானால் இந்து மத நூல்களில் காணப்படும் தர்ம, அர்த்த, காம என்பன இதிலும் இருந்திருக்கிறது எனலாம். தொல்காப்பியத்தில் தர்மார்த்தகாமம்- இருப்பது அறம்,பொருள், இன்பம் என்ற சொற்றொடரால் தெரிகிறது. ஆக இமயம் முதல் குமரி வரை வாழ்க்கை மூல்யங்கள் எனப்படும் பண்பாட்டுக் கூறுகள் ஒன்றே!

2.பாரதம்பாடிய பெருந்தேவனார் (திரு.மஹாதேவன் = பெருந்தேவன்) அவரது பெயருக்கேற்ப கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் பற்றிப் பாடி இருக்கிறார். இதில் வரும் ‘’பதினெண்கணம்’’ கவனிக்கப்பட வேண்டிய சொல். வெள்ளைகாரர்கள் வந்து இந்தியர்களை ஆரியர், திராவிடர், முண்டா இன மக்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிப்பதற்கு முன் நாம் 18 வகையாகப் பிரித்திருந்தோம். ஆனால் அவர்களுக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம். நாம் எல்லோரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள், இந்த மண்ணின் மைந்தர்கள் என்றோம். வெளிநாட்டுக்காரகளோ பிரிவினைக் கரடியைப் புகுத்தினர்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளில் கூட “சுர – நர- கக — கோ- போகி- கந்தர்வ—தைத்யை”—என்று வரும். முதல் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு உரை எழுதியோர் கூறும் 18 கணங்கள் :— அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தர்வர், யக்ஷர், விஞ்ஞையர், பூதர், பைசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாசவாசிகள், போகபூமியர். இது சில உரைகளில் சிறிது மாறுபடும்.

2.இரண்டாவது அதிசயச் செய்தி: பஞ்சபூதங்கள் பற்றிச் சொல்லும் இரண்டாம் பாடலாகும். ஐம்பெரும்பூதம் என்ற சொற்றொடரும் பாரதப் பண்பாட்டிற்குச் சான்று பகரும்— நாம்தான் இதை உலகம் முழுதும் பரப்பினோம். மேலும் முதல் ஐந்து வரிகளும் அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. இதையே முதல் அந்தாதிப் பாட்டு எனக் கொள்ளலாம். இதற்குப் பின்னர் வந்த காரைக்கால் அம்மையார் பாடிய அந்தாதி, அபிராமி அந்தாதிகளை நாம் அறிவோம். அதற்கெல்லாம் அடிப்படை புறத்தின் இரண்டாவது பாடலே.

tamil-penkal

3.இரண்டாம் பாடலைப் பாடியவர் முடிநாகராயர் என்னும் புலவர் — மிகவும் முற்காலத்தைச் சேர்ந்தவர். அவரால் பாடப்பட்டவனும் நாம் அறிந்த சேரர்களில் மூத்தவன்:–உதியஞ் சேரலாதன். அவரே “பொதியமும் இமயமும்” ஒன்றே என்று பாடுகிறார். ஆக பாரதம் முழுதும் ஒன்றே என்பது இப்பாட்டிலும் 6, 17, 67-ஆம் பாடல்களிலும் வருவது மிகவும் அருமை. அது மட்டுமல்ல.

பொதியம் என்று ஏன் சொன்னார் என்றால் இமயத்தில் முத்தீ வளர்த்து அந்தணர்கள் வளர்க்கும் தீயில் மான்கள் தூங்கும் என்று சொல்பவர் இங்கும் அகத்தியர் அதைச் செய்கிறார் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். அது மட்டுமல்ல. இவர் பாடிய வரிகள் காளிதாசனின் குமார சம்பவ காவியத்தில் காணப்படும் இமயமலை வருணனையும் உள்ளது!

4.பாடல் ஒன்பதில் அந்தக் கால தர்மயுத்த முறை காணப்படுகிறது. போர் செய்வோர் ஊருக்கு ஒதுக்குப் புறமான பொட்டல் வெளியில் காலை சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை அவரவர்க்குச் சமமான ஆட்களுடன் மட்டுமே மோதுவர்— பசுக்கள், பெண்கள், பார்ப்பனர், நோயாளிகள், தர்ப்பணம், திதி முதலியன செய்வதற்கான ஆண் பிள்ளைகளைப் பெறாதோர் எல்லாம் பாதுகாப்பான இடங்களுக்க்ப் போய்விடுங்கள் என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி சொல்வதை இப்பாட்டில் காணலாம். பாடியவர் நெட்டிமையார்.

5.புறநானூற்றைத் தொகுத்து நூலாக்கியவர் பெரும்பாடுபட்டு ஒவ்வொரு தலைப்பிலும் தொகுத்திருக்க வேண்டும். வெள்ளி கிரகம்—மழை தொடர்பான பாடல்கள் எல்லாம் கடைசியில் கிட்டத்தட்ட அடுத்தடுத்து உள்ளன.

6. கோபப் பாடல்கள், இரங்கற் பாடல்கள் எல்லாம் நடுவில் உள்ளன. நிலையாமை பற்றிய பாடல்கள் கடைசியில் உள்ளன. போர்க்கள வீரம் பற்றிய பாடல்கள் எல்லாம் ஒரு சேர தொகுக்கப்பட்டுள்ளன. ஆக இதைத் தொகுத்தவர் வியாச முனிவர் போல அரும்பாடு பட்டு ‘வகை’ பிரித்திருக்க வேண்டும்.

7.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய (பாடல் 346) சிறுவெண்தேரையார் இந்த பூமியை ஆண்ட மன்னர்கள் “கடல் மணலைவிட அதிகம்” என்று கூறுவது மிகவும் ஆழமாக ஆராய வேண்டிய செய்தி. அந்தக் காலத்திலேயே அவ்வளவு மன்னர்கள் பிறந்து இறந்து இருப்பர் என்றால் தமிழ் இனம் எவ்வளவு பழமையானது என்பதும் புலப்படும். பாடல் 358-ல் இந்த பூமியை ஒரே நாளில் ஏழுபேர் ஆண்ட வியப்பான செய்தி இருக்கிறது. இதைப் பாடியவரின் பெயர் வான்மீகி!! ராமாயணம் இயற்றிய முனிவர் பெயர் தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முன் இருப்பது வியப்பிலும் வியப்பு.

8.மாங்குடிக் கிழார் பாடிய 335-ஆம் பாடலில்
நான்கு சிறந்த மலர்கள் (குரவு, தளவு, முல்லை, குருந்தம்)
நான்கு சிறந்த குடிகள் (துடியன், பாணன், பறையன்,கடம்பன்),
நான்கு சிறந்த உணவுகள் (வரகு, தினை, கொள்ளு, அவரை)
என்று வகைபடுத்திவிட்டு இதைப்போல நடுகல் ஆகிவிட்ட வீரனை விடச் சிறந்த கடவுள் இல்லை என்கிறார். அந்த நடுகல்லுக்கு நெல்லும் பூவும் தூவி வழிபடும் செய்தியையும் அளிக்கிறார்.

queen

9.சங்க இலக்கியத்தில் சுமார் 20 நாகர்கள் பெயர்கள் இருக்கின்றன. புறநானூற்றில் வெண்ணாகன், மருதன் இளநாகன் முதலிய பல நாகர்கள் பாடல்களைப் பாடியுள்ளனர். இதேகாலத்தில் மகாவம்சம் என்ற இலங்கை வரலாறும் பல நாக மன்னர்கள் பெயரைக் குறிக்கின்றன. இதேகாலத்தில் வடக்கில் குப்தர்கால கல்வெட்டுகளும் பல நாக மன்னர்கள், தளபதிகள் பெயரைக் குறிக்கின்றன. யார் இவர்கள் என்று நீண்ட காலமாக விடை எழுப்பியும் முடிவான ஒரு ஆராய்ச்சி நடக்காதது ஒரு பெரும் குறையே!

10.அந்தக் காலத்தில் நாடு முழுதும் தூதர் (ambassador) பதவி, பார்ப்பனர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்படிக் காட்டு வழியாகச் சென்ற ஒரு பார்ப்பனனை கள்ளர்கள் கொன்றுவிட்டு வருத்தப்படும் செய்தியும் மற்றொரு பார்ப்பனனின் (பாடல் 305) திறமையான சொல்லும் செயலும் புறநானூற்றில் உள்ளன. அவன் போய் மன்னனிடம் ஒரு சில சொற்களையே சொன்னான். உடனே அந்த மன்னன் பயந்துபோய் படை எடுப்பு முஸ்தீபுகளை நொடிப் பொழுதில் நீக்கிவிட்டான். இரவு என்று பாராதும் அரண்மனைக்குள் புகுந்தானாம் அந்தப் பார்ப்பனன்! மதுரை வேளாசான் பாடிய பாடல் இது.

11.புறம் 201-ல் இருங்கோவேளின் 49 தலைமுறை பற்றிக் கபிலர் கூறுவதில் இருந்து தமிழர்கள் அதற்கு ஆயிரம் (கி.மு1000) ஆண்டுகளுக்கு முன்னரே அப்பகுதியை ஆளத் தொடங்கியது தெரிகிறது. இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் பல அரிய தகவல்களைத் தருகிறார். தமிழ் இனத்தின் வயது என்ன? என்ற கட்டுரையில் முன்னரே கொடுத்துவிட்டேன்.

12.பாடல் 182 இந்திரர் அமிழ்தம் பற்றியும் — பாடல் 191 நரைமுடி வராமல் இருக்கும் மர்மம் பற்றியும் — பாடல் 192 உலகமே ஒரு குடும்பம் – யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்றும் கூறுவதை தமிழ் கூறு நல்லுலகம் அறியும் என்பதால் விரித்துரைக்கும் தேவை இல்லை.

13.பாரி பற்றி கபிலர் பாடிய 109-ம் பாடலில் Point 1- பாய்ண்ட் 1, Point 2 பாய்ண்ட் 2, Point 3 பாய்ண்ட் 3 என்று இந்தக் காலத்தில் பெரும் மேடைப் பேச்சாளர்கள் பேசுவது போலப் பேசி (ஒன்றே, இரண்டே, மூன்றே) மூவேந்தர்களுக்கு சவால் விடுகிறார் அடுத்த பாடலில் பாரியிடத்தில் 300 ஊர்கள் இருந்ததும் அத்தனையையும் பரிசிலர்க்குக் கொடுத்ததையும் கூறுகிறார். ஒரு சிறிய மன்னனிடம் 300 ஊர்கள் என்றால் சேர சோழ பாண்டிய மன்னர்களிடம் எவ்வளவு ஊர்கள் இருந்திருக்கும்?

kannaki cooking

14.புறம் 55, 56, 58 ஆகிய மூன்று பாடல்களில் இந்துமதக் கடவுளரின் கொடிகள், வாகனங்கள், பெயர்கள் ஆகியன வருவது அக்காலத்திலேயே தமிழர்கள் உருவ வழிபாடு செய்ததையும் ஆன்மீகம் கொடி கட்டிப் பறந்ததையும் காட்டும்.

புறநானூற்றில் வானவியல்,சூரிய கிரகணம், விமானி இல்லாமல் பறக்கும் விமானம் முதலிய பல செய்திகள் இருப்பதைத் தனியான கட்டுரைகளில் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். புறநானூற்றும் பொன்மொழிகளையும் தனியே தொகுத்து அளித்து இருக்கிறேன். தமிழர்கள் பற்றி அறிய புறநானூற்றையும், சிலப்பதிகாரத்தையும் படித்தால் போதும். ஒரு கலைக் களஞ்சியமே (என்சைக்ளோபீடியா) படித்த பலன் கிட்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புலவர் பெருமை!!

contact swami_48@yahoo.com