Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (10 -8-2025) உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமைஆகஸ்ட் பத்தாம் தேதி 2025-ம் ஆண்டு .
****
முதலில் தேசீயச் செய்திகள்
துர்கா பூஜை பந்தல்களுக்கு மான்யம்!
நாடு முழுதும் நேற்று ரக்ஷா பந்தன் விழாவை இந்துக்கள் கொண்டாடினர் . மீண்டும் வேதங்களை படிக்கத் துவங்கும் ருக் வேத- யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சியையும் நேற்று பிராமணர்கள் கொண்டாடினர் .
அடுத்து வரும் ஜன்மாஷ்டமி என்னும் கிருஷ்ணன் பிறந்த நாள் விழா மற்றும் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடவும் இந்துக்கள் பெரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர் . இதற்கிடையில் அக் டோபரில் நடைபெறப்போகும் தசரா பண்டிகைக்கு யானைகள் ஊர்வலத்தை கர்நாடகம் ஏற்பாடு செய்துள்ளது அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் துர்காஷ்டமி விழாவுக்கு நிறைய நன்கொடைகள் அறிவிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது
மேற்கு வங்க முதலமைச்சர் திருமதி மமதா பானர்ஜீ கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன
துர்கா பூஜை குழுக்களுக்கு அரசு மானியம் அறிவித்து மத அரசியல் செய்கிறார் என்று அவைகள் சாடியுள்ளன . மம்தா பானர்ஜி த்ருணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி ஆவார்.
கொல்கத்தா: பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 40,000 துர்கா பூஜை குழுக்களுக்கு தலா ரூ.1.10 லட்சம் மானியம் அரசு வழங்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
.இது குறித்து பாரதீய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. மேற்கு வங்க பாஜ எம்எல்ஏ அக்னிமித்ரா பால் கூறுகையில்,‘‘கோயில்களைக் கட்டுவதும், பூஜைக்கு மானியங்கள் வழங்குவதும் ஒரு அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க முடியாது. சாலைகள் அமைப்பதற்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பதிலாக, மம்தா பானர்ஜி மத அரசியலில் மும்முரமாக இருக்கிறார். என்றார்.
***
இந்துமத சன்யாசினி சாத்வி விடுதலை
மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உட்பட 7 பேரையும் என்ஐஏ N I A கோர்ட் விடுவித்தது.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008 செப்., 29ல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
. 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த வழக்கினை சிறப்பு நீதிபதி ஏ.கே.லஹோட்டி ஜூலை 31) தீர்ப்பை அறிவித்தார்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ”மாலேகானில் மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு வைக்கப்பட்டதை அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை” என நீதிபதி தெரிவித்துள்ளார்.
****
மைசூர் அரண்மனை நோக்கி புறப்பட்ட கஜப்படை
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது .தசரா விழாவில் முக்கிய அம்சமான யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், அரண்மனை நோக்கி வழி அனுப்பி வைக்கப்பட்டது.
414-வது மைசூர் தசரா விழா முன்னிட்டு யானைகள் படையை மைசூர் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா ,நாகர்ஹோளே பூங்காவின் நுழைவாயிலான வீரனஹோசஹள்ளி அருகே வழி அனுப்பி வைத்தார்.
பாரம்பரியத்தின் படி, மைசூர் அரண்மனை பூசாரிகள் குழு வீரன ஹோச ஹள்ளி கேட் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, துலாம் ராசியின் புனிதமான நாளில் யானைகளுக்கு விடைகொடுத்தனர். இந்த ஆண்டு வனத்துறை சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. பத்து கலைக்குழுக்கள் வெவ்வேறு நடன நிகழ்ச்சிகளுடன் கூட்டத்தை மகிழ்வித்தன. தசரா கஜ படையின் முதல் குழுவில் அம்பாரியை சுமக்கும் கேப்டன் அபிமன்யு மற்றும் இரண்டு பெண் யானைகள் அடங்கும். அவை, ஏனைய யானைகளுடன் மைசூர் நகரை நோக்கிப் புறப்பட்டன
****
சிவலிங்கம் கண்டுபிடிப்பு
1500 ஆண்டு பழைமையான சிவலிங்கம் காஷ்மீர் அனந்தநாக். கார்கோட்நாக் அருகில் கண்டெடுக்கப்பட்டது .
தொழிலாளர்கள் குழி தோண்டிய போது இந்த சிவ லிங்கம் கிடைத்தது. இந்த சிவலிங்கத்துடன் மேலும் பழைய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சில பொருட் களும் கிடைத்தன.
கார்கோட் நாக்கில் புனித நீரூற்று உள்ளது. காஷ்மீர் பண்டிட் ராஜாவான துர்லப வர்த்தனன் அங்கு அமர்ந்துதான் தியானம் செய்துள்ளார் அவர் நினைவாக கார் கோடக சாம்ராஜ்யம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இந்த வம்சத்தில் தான் மாமன்னன் சாம்ராட் லலிதாதித்வ முக்திபிடா தோன்றினார்.
****
ஆர் எஸ் எஸ் R S S நூற்றாண்டு விழா
டில்லியில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் நடக்கும் மூன்று நாள் கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசவிருக்கிறார். அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நடிகர்கள் முதலியோர் இதில் கலந்துகொள்கிறார்கள் .
ஆா்.எஸ்.எஸ். எனும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நன்னாளில் மராட்டிய மாநிலம், நாகபுரியில் டாக்டா் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவா்களால் தொடங்கப்பட்டது. தற்பொழுது இந்த ஆண்டு சங்கத்தின் நூற்றாண்டு விழா தொடங்கி உள்ளது.
அரசியலில் இருந்து விலகி தேசத்திற்காக தானாக முன்வந்து சேவை செய்யும் தொண்டா்கள் அமைப்பை உருவாக்க வேண்டும். தனிநபா் ஒழுக்கம், நேரம் தவறாமை, தேச பக்தி, சேவை மனப்பான்மை, ஒவ்வொரு தனி மனிதனிடத்திலும் உருவாக வேண்டும். என்று சிந்தித்தார். அதற்காக தினமும் சந்திக்கும் ஷாகா (கிளை) நடைமுறையை உருவாக்கினார்.
ஹிந்து சமுதாயத்தில் ஜாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதிலும், தீண்டாமை இழிவுகளை இல்லாமல் செய்வதிலும் ஆா்.எஸ்.எஸ். வெற்றி பெற்றுள்ளது.
1963-இல் புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது பண்டித ஜவஹா்லால் நேரு அரசு அழைப்பின் பேரில், முழு சீருடை அணிந்த 3,000 ஸ்வயம்சேவகா்கள் பங்கேற்று சிறப்பித்தனா்
ஆா்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சிகள், பயிற்சி முகாம்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் அந்தந்த மாநில மக்களின் தாய்மொழியிலேயே நடத்தப்படுகின்றன.
****
இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வகுருவாக ஏற்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், நமது நாடு 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறினாலும், உலகிற்கு அதுவொன்றும் புதிதல்ல எனவும், ஏற்கனவே இதுபோல பல நாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவில் உள்ள ஆன்மிகமும், மத நம்பிக்கையும் உலகின் மற்ற நாடுகளில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கையில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் என்றும் மோகம் பாகவத் தெரிவித்தார்.
நாம் துணிச்சலான மற்றும் அனைவரையும் சமமாகப் பார்க்கும் சிவபெருமானைப் போல மாற வேண்டும். என்றும், அவர் உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் அவர் கூறினார்.
***‘
அடுத்ததாக தமிழ்நாட்டுச் செய்திகள்
திருவிழாவிற்கு அனுமதி கொடுப்பது பற்றி ஐகோர்ட் உத்தரவு
‘கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது, உரிய காலத்துக்குள் முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்களை நீதிமன்றத்தை நாடச் செய்தால், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க வேண்டியது வரும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ஆடி பெருந்திருவிழா நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கோரியும், பாதுகாப்பு வழங்கக் கோரியும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், சூலுார் காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்திருந்தார்.
கடந்த ஜூலை 7ம் தேதி அளித்த விண்ணப்பம், இதுவரை பரிசீலிக்கப் படவில்லை’ எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை, நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:—-
“ அனுமதி கோரி, ஜூலை 7-ல் விண்ணப்பம் செய்துள்ளார். அதன் மீது, இதுவரை உரிய உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே, திருவிழாவுக்கு தகுந்த நிபந்தனைகளுடன், சூலுார் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். எதிர்காலத்தில் கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பங்களை பெற்றால், அவற்றை ஏழு நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடச் செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக, மாவட்ட எஸ்.பி.,க்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது போன்ற கோவில்கள், சொற்ப நிதியை வசூலித்து, பூஜைகள், திருவிழாக்களை நடத்துகின்றன. விழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், வசூலித்த தொகையை வழக்குக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், கோவில் திருவிழா செலவை, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் ஏற்க வேண்டி வரும். விழா நடக்கும் நாட்களில், உரிய பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும். இம்மனு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
***
தென்காசி கோபுர கலசம் இடிந்து விழுந்தது
தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலின் கோபுரத்திலிருந்த சிமெண்ட் கலசம் பெயர்ந்து விழுந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் கும்பாபிஷேக விழா அண்மையில் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில் கோயிலின் ராஜகோபுரத்தில் உள்ள ஒரு சிறிய சிமெண்ட் கலசமானது தனியாகப் பெயர்ந்து விழுந்தது.
நல்ல வேளையாக கோபுரத்தின் கீழ் பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
****
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்:
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வழி நடத்திய, ‘குருவின் மடியில்’ என்ற தியான நிகழ்ச்சி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின், தேவார பண்ணிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால், அதனைச் சுற்றியுள்ள கலாசார அம்சங்களை, உயிர்த் துடிப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாசாரத்தில் ஆன்மிக தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள், நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்.
யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் தற்போது நேரமில்லை என, மக்கள் கூறுகிறார்கள். ஆனால், நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சி செய்கிறார். நாம் வெறும் ஏழு நிமிடங்களில் செய்யக்கூடிய, ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச செயலியை பயன்படுத்தி, மனநலத்திற்காக தியானத்தை செய்ய வேண்டும். என்று, சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.
இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில், 112 இடங்களிலும், வெளிநாடுகளிலும் என, மொத்தம் 128 இடங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
***
சென்னையில் நூல் வெளியீட்டுவிழா
சென்னை சம்ஸ்க்ருதக்கல்லூரி வளாகத்தில் ஆதிசங்கரர் திக்விஜயம் தமிழாக்கம் நூல் வெளியீட்டுவிழா மதுரை நீதிமன்ற மாண்புமிகு நீதியரசர் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோமசேகர சிவாசாரியார், முனைவர் சுரேஷ் விஸ்வநாத சிவாசாரியார், உடையாளூர் கல்யாணராமபாகவதர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
வேதாகம அகாடமி நிறுவனர் சிவஸ்ரீ கல்யாண்ஜி வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் லண்டன் ராஜகோபால் நன்றி கூறினார்.
அகச்சமயம் உள்ளிட்ட சமயபேதங்கள் ஏற்பட்ட காலசூழல்கள் பற்றியும், தற்காலத்தில் ஸநாதனதர்மம் என்ற விருக்ஷமாக அனைவரும் ஒன்றுபட்டு பணியாற்றவேண்டும் என்பது பற்றியும் குருநாதர் அவர்கள் ஆசியுரை வழங்கினார்கள்
***
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags- World Hindu, News bulletin, in Tamil, Gnanamayam, 10-8-2025, Broadcast
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
10-8-25 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
வழங்கியவர் பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
ஆலயம் அறிவோம்
திருப்பனந்தாள்
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்துமின் பாய்புனலும்
போழ் இளவெண்மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த
தாழ் சடையான் பனந்தாள் திருத்தாடகை ஈச்சரமே
திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் திருத்தலமாகும்.
மண்ணியாற்றுக்கு சமீபத்தில் உள்ள இந்த பிரசித்தி பெற்ற தலம் கும்பகோணத்திற்கு வடகிழக்கே 10 மைல் தூரத்திலும் ஆடுதுறை ரயில் நிலையத்திற்கு வடக்கே 6 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. தேவாரத் தலங்களில் காவிரி தென்கரை தலங்களில் 39வது தலமாக இது அமைகிறது
இறைவனின் திருநாமங்கள் : அருண ஜடேஸ்வரர், தாலவனேசுவரர்,
அம்மன் : பிருஹன்நாயகி,, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி
சுவாமியின் வலப்பக்கம் முதலில் உள்ள அம்பிகைக்கு பாலாம்பிகை என்று பெயர். உபதேசத்தின் பின்னர் இவருக்கு விருத்தாம்பிகை என்று பெயர் ஆகும்.
தல விருட்சம் : பனை மரம்
இது ஆதியில் ஐந்து கிளையைக் கொண்டதாக இருந்தது. உள் பிரகாரத்தின் பின்னுள்ளது,
இரண்டு பனை மரங்கள் கிழக்கு பிரகாரத்தில் உள்ளது. பனைமரம் தல விருட்சமாக அமைவதால் இந்தத் தலத்தின் பெயர் திருப்பனந்தாள் என்று ஆயிற்று. தாலம் என்றால் பனை. ஆகவே இங்குள்ள இறைவனின் பெயர் தாலவனேசுவரர் என்று ஆயிற்று.
தீர்த்தம் : பிரஹ்ம தீர்த்தம் – கோவிலுக்குப் பின்னே உள்ளது.
சூரிய தீர்த்தம் – புழுதிகுடி மடத்திற்குப் பின்னே உள்ளது. இங்கு பைரவர் காவலாக இருக்கிறார்.
தர்ம தீர்த்தம், – இது ஒரு குளம். நத்தம் என்னும் குளத்தைச் சார்ந்தது.
சேஷ தீர்த்தம் – குளம். அக்கினி மூலை, பாலூரில் உள்ளது
காக தீர்த்தம் – இதுவும் குளம். நைருதி மாரியம்மன் கோவில் பக்கத்தில் உள்ளது.
ஸத்திய நதி – மேற்கே உள்ளது.
கஜகாதம் – குளம். வீராக்கண்குளம் எனப்படும்.
நாக தீர்த்தம் – வாயு மூலையில் கோவிலின் உள்ளே குளமாக உள்ளது.
தாடகா தீர்த்தம் – வீரியம்மன் குளம் எனப்படும் இது வடமேற்கே உள்ளது.
சந்திர தீர்த்தம் – வடக்கே கிணறாக உள்ளது.
நாரை வாய்க்கால் – இது மேற்கே உள்ளது.
இத்தலம் பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.
இத்தலத்தில் தாடகை என்ற ஒரு யக்ஷ ஸ்திரீ மூன்று வருடம் பூஜித்து மாலை சார்த்தி பதினாறு கைகளைப் பெற்றாள். பூஜைக்காக பெற்ற இந்த பதினாறு கைகளும் பூஜை முடிந்த பின்னர் மறையுமாம். இந்த தாடகை ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல. புத்திரனை வேண்டி இவள் இங்கு பூஜித்தாள். இவள் மாலை சாத்தும் போது ஆடை நெகிழவே இறைவன் இவளுக்காகத் தனது திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றுக் கொண்டார்.
இங்குள்ள தாடகா தீர்த்தத்திற்கு காவலாக வீரசண்டிகை இருக்கிறாள்.
இவரை ராவணனின் பாட்டி என்றும் சிலர் கூறுகின்றனர்.
இறைவன் வளைந்த நிலையிலேயே இருப்பதைப் பார்த்த மணிமுடிச்சோழன் என்னும் மன்னன் யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்து வளைந்த தலையை நிமிர்த்த முயன்றான். ஆனால் முடியவில்லை.
திருக்கடையூரில் பிறந்த குங்கிலிய நாயனார் வளைந்திருக்கும் தலையைப் பார்த்து, ஈசனின் தலையை அரசனின் சேனையாலும் நிமிர்த்த முடியாமல் இருப்பதை எண்ணி, வருந்தினார்.
ஒரு கயிற்றைத் தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசனின் கழுத்தில் கட்டி, ‘ஒன்று உன் தலை நிமிர வேண்டும். அல்லது நான் உயிரை இங்கேயே விட வேண்டும்’ என்று கூறி கயிறை இழுத்தார். உடனே அக்கணமே ஈசனின் தலை நிமிர்ந்தது. இதனால் அரசன் மிகவும் மகிழ்ந்து நாயனாரைப் போற்றினான்.
இந்த வரலாறு இங்குள்ள பதினாறு கால் மண்டபத்தில் சிற்ப வடிவில் உள்ளது.
இது சூரியன் பூஜித்த தலமும் ஆகும்.
இங்கு பிரம்மா, ஐராவதம், சூரியன், சந்திரன், நாக கன்னிகை,, ஒரு வேடராஜனான சங்குகன்னன், தர்மசேன மஹாராஜா, கு ங்குலியக் கலய நாயனார், வணிகனான யக்ஞகுப்தன், ஒரு காகம் உள்ளிட்டோர் ஈசனை வழிபட்டுள்ளனர்..
கோவில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள கோவில் ஏழு அடுக்குகளுடன் விளங்குகிறது. ராஜகோபுரத்தை அடுத்து பதினாறு கால் மண்டபமும், வடக்கில் வாகன மண்டபமும், இரண்டாவது கோபுரத்தை அடுத்து வௌவால் நெற்றி மண்டபமும் சிற்ப வேலைபாடுகளுடன அழகுறத் திகழ்கின்றன.
இத்தலத்திற்கு வழமொழியில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக இரு தல புராணங்கள் உள்ளன.
இங்கு ஶ்ரீ குமரகுருபர ஸ்வாமிகளால் ஏற்படுத்தப்பட்ட காசி மடம் என்னும் சைவ மடம் மிகவும் பிரபலமாக உள்ளது. சைவ சமயத் தொண்டை இது தொடர்ந்து செய்து வருகிறது.
இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், பாடல் இயற்றி வழிபட்டுள்ளார்.
திருமணத் தடை நீங்கவும், புத்திரப் பேறு பெறவும் வழிபட இந்தத் தலம் சிறந்த தலம் என்பது ஐதீகம்.
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ப்ரஹன் நாயகி அம்மையும் அருண ஜடேஸ்வரரும்\ அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புதிய தொடர்!அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! – 5
ச. நாகராஜன்
6
ஸ்வாமிஜி: மறைவு
ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அவர் என்னைப் பார்த்து, “நீ லட்சம் பேருக்குப் பேசுவடா! என்றார். நான் திகைத்துப் போனேன். மதுரை கோவிலில் தெற்கு ஆடி வீதியில் உள்ள தெய்வ நெறிக்கழகத்தில் ஞாயிறு தோறும் நடக்கும் ஸத் ஸங்கத்தில் ஸ்வாமி விவேகானந்தரைப் பற்றி ஒரு பத்து நிமிடம் பேசுவது எனது வழக்கம்.
அங்கு நூறு பேர்கள் வருவர். பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பங்கேற்ற போது அங்கும் சுமார் நூறு பேர் இருப்பார்கள், பேசுவது வழக்கம். பின்னாளில் ஶ்ரீ சத்ய சாயி சேவா தளத்தில் மதுரை நகர அமைப்பாளராக இருந்த போது ஸத்ஸங்க கூட்டங்களில் பேசுவேன்.
விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் ஆயிரம் பேர் குழுமி இருக்க அங்கு பேசினேன். இந்த இடங்களில் எல்லாம் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டோரின் எண்ணிக்கையை உத்தேசமாகக் குறித்துப் பார்ப்பது என் வழக்கமானது. ஆனால் ஆயிரம் எங்கே, லட்சம் எங்கே?
ஒரு நாள் ஜெயா டிவியில் அழைப்பு வர அங்கு சென்றேன். பேட்டி மற்றும் உரைகள் என அடிக்கடி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்..
ஒரு நாள் ஜெயா டிவி நிர்வாகம் என்னையே பேட்டி எடுக்கத் தீர்மானித்தது! ஸ்டுடியோவில் பல காமராக்கள் மேலிருந்து என் முன்னே தொங்க பேட்டியாளர்கள் இருவருடன் மேடையில் நான் இருந்த போது, டைரக்ட் செய்தவர் என்னைப் பார்த்து, “சார்,நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகிறது! நீங்கள் 96 லட்சம் பேருக்குப் பேசப் போகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பிக்கலாமா?” என்றார்.
நான் உடனே சிரித்தேன். ஸ்வாமிஜி சொன்னது பலித்து விட்டதே! 96 லட்சம் பேர்!
“நீ லட்சம் பேருக்குப் பேசுவடா” – ஸ்வாமிஜியின் குரல் மனக்கண்ணில் தோன்றியது. “என்ன சார், சிரிக்கிறீங்க” என்று அவர் கேட்க, “சார்! ஒன்றுமில்லை, நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாம்” என்றேன்.
ஸ்வாமிஜியின் வாக்கு ஒரு நாளும் பொய்க்காது.
இப்படி என் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அனுபவம் உண்டு. எனது அண்ணன் சீனிவாசனுக்கு மதுரை கோட்ஸில் வேலை. எனது தம்பி ஸ்வாமிநாதனுக்கு உபநயனம்!
திடீரென்று ஒரு நாள் அவர் உபநயனம் போட வேண்டுமென்று சொன்னார். அதன்படி அவரே அதை நடத்தியும் வைத்தார். எனது தம்பிகள் சூரியநராயணன், மீனாட்சி சுந்தர், தங்கை லலிதா ஆகியோருக்கும் அவரது அனுக்ரஹம் கிடைத்தது.
அவரது மேன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்த்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம். சபரிமலையிம் பிரதம தந்திரியான சங்கரரூ கண்டரூ ஸ்வாமிஜியின் மேல் அபார அன்பும் மதிப்பும் கொண்டவர்.
முக்கியமான சபரிமலை சம்பந்தமான சாஸ்த்ரோக்தமான விஷயங்களில் அவர் ஸ்வாமிஜியை கலந்தாலோசிப்பது வழக்கம்!
ஏற்கனவே ஸ்வாமிஜி பற்றிய எனது கட்டுரைகளில் ஒன்றில் குறிப்பிட்ட ஒரு சின்ன சம்பவத்தை இங்கே குறிப்பிடலாம்.
ஆயக்குடி சென்ற எங்கள் குழு அருகிலிருந்த குற்றாலம் சென்று குளிக்கலாம் என்று விரும்பியது. ஸ்வாமிஜியிடம் பெர்மிஷன் கேட்டோம். பதிலே இல்லை. கடைசியில் எனது தம்பி ஸ்வாமிநாதனை அவரிடம் அனுப்பி கடைசி முயற்சியைச் செய்தோம்.
ஸ்வாமிநாதன் அனுமதி கேட்க ஒரு நிமிடம் மௌனமாக இருந்த அவர், ராமாராவை அழைத்தார்.
“பத்திரமாக இவர்களைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள், மதுரையில் கொண்டு போய் விடுங்கள்” என்றார்.
அங்கிருந்து சந்தோஷத்துடன் செல்ல ஆரம்பித்தோம். நல்ல அடை மழை ஆரம்பித்தது. எதிரே ஒரு அடி தூரத்தில் கூட சாலை தெரியவில்லை. அப்படி ஒரு மழை. அலறி நொந்து போனோம். நடந்தோம், நடந்தோம் தென்காசியை நோக்கி அந்த மாலை வேளையில் அடைமழையில் நடந்தோம். தென்காசி வந்தவுடன் ஒரு தெருவின் மூலையில் நின்ற ராமாராவ் அவர்கள், “ஓய்! ராமகிருஷ்ண ஐயர்” என்று கூவினார். எதிரே இருந்த வீட்டிலிருந்து ஒருவர் ஓடி வந்து எங்களைப் பார்த்துத் திகைத்தார். “அட, மழையில் நனையலாமா?” என்ற அவரிடம் அருகிலிருந்த பிள்ளையார் கோவிலைக் காட்டி இதைத் திறந்து விடுங்கள். இரவு இங்கு தங்கி விட்டு அதிகாலை பஸ்ஸில் மதுரைக்குப் போய் விடுவோம்: என்றார்.
கோவிலில் மிகுந்த களைப்புடன் தங்கினோம். திடீரென்று ஒரு அலறல் _ நக்ஷத்திரம் ஒழுகறது டோய்” என்ற சத்தமான குரலைக் கேட்டு பயந்தே போனோம். மனநிலை சரியில்லாத ஒருவர் வானத்தைப் பார்த்துக் கத்திய ஆவேசக் குரல் தான் அது. இரவு முழுவதும் நடுக்கம் தான்!
அதிகாலையில் பஸ் வந்தது. எங்கள் குழுவில் இருந்த எண்ணிக்கையைச் சரியாகச் சொன்ன கண்டக்டர், “இவ்வளவு பேருக்குத் தான் சார் இடம்!” என்றார். தப்பித்தோம், பிழைத்தோம் என்று மதுரை வந்து சேர்ந்தோம்.
ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் இந்த மட்டில் பிழைத்தோம் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
ஸ்வாமிஜியின் பூஜை சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் ஆயக்குடியில் இருந்த சீதாராமையர் குடும்பமே கவனித்துக் கொண்டது.
ஸ்வாமிஜியின் இல்லத்திற்கு மிக அருகிலிருந்த அவரது வீட்டில் அவரது மகன்களான அன்ந்தகிருஷ்ணன், சுப்பாமணி, சுந்தரம் மற்றும் அவர்களின் தங்கை விஜயலக்ஷ்மி ஆகியோர் வருகின்ற பக்தர்களையும் விருந்தினர்களையும் நன்கு கவனித்துக் கொள்வது வழக்கம். இவர்கள் அனைவரும் ஸ்வாமிஜியின் அனுக்ரஹத்தால் மிக நல்ல பதவிகளில் அமர்ந்து வளமாக வாழ்க்கை நடத்தியது குறிப்பிடத்தகுந்த விஷயம்!
ஸ்வாமிஜி தனது பணியை முடித்து விட்டதாக நினைத்து விட்டார் போலும்.
வீட்டில் இருந்த சந்தனைக் கட்டைகள் அடங்கிய மூட்டையை ஒரு நாள் சுட்டிக் காட்டி, “இதில் பாதி எனக்குப் போதும்” என்றார்.
ஸ்வாமிஜி தனது தாயாரிடம் அபாரமான பக்தி கொண்டவர்.
எங்களில் யார் உள்ளே சென்றாலும் முதலில் அவரது தாயாரை நமஸ்காரம் செய்யச் சொல்வார். பின்னர் தான் அவரை நமஸ்கரிக்க முடியும்!
அப்படிப்பட்ட வயதான தாயாரையும் அவர் பிரியத் துணிந்தது இறைவனின் சங்கல்பம் போலும்!
சந்தனக்கட்டையில் பாதி அவரைச் சேரும் தருணம் வந்தது. செய்தியை இன்னாருக்கு மட்டும் சொல்ல வேண்டும் என்பதைக் கூட அவர் சொல்லி விட்டார்.
எனது தந்தையார், எம்.எஸ், வெங்க்டராமன் ஆகியோர் பதறியவாறே ஆயக்குடி சென்று அவரது அந்திமக் கிரியையில் கலந்து கொண்டனர்.
அவர் இல்லை என்று எப்போதும் எங்களால் சொல்ல முடியாது.
ஒவ்வொரு கணத்திலும் அவர் கூடவே இருப்பது போன்ற உணர்வை எங்களுக்கு அனுக்ரஹித்து இருக்கிறாரே, அது தான் பரம அனுக்ரஹம்!
அடுத்து காஞ்சி பெரியவருடனான எனது தந்தையாரின் அனுபவத்தைப் பார்ப்போமா?
ரிக்வேதத்தில் இந்திரனுக்குத்தான் அதிகத் துதிப்பாடல்கள் உள்ளன . தமிழின் பழைய நூலான தொல்காப்பியமும் இந்திரனையும் வருணனையும் தமிழ் மக்களின் வழிபடு தெய்வங்களாகச் சொல்கிறது; இது மாக்ஸ்முல்லர் கால்டுவெல் கும்பலுக்கு செமை அடி கொடுக்கிறது ; ஆரிய –திராவிட வாதம் பேசி இரண்டு இனத்தவரும் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கால்டுவெல் மாக்ஸ்முல்லரும் பரப்பியதோடு ஆரியர் வேறு திராவிடர் வேறு என்று சாகும் வரை பிரசாரம் செய்தனர்; அந்த இரண்டு கும்பல்களைத் தொல்காப்பியர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்! ஆனால் செத்த பாம்பை அடிக்கும் சில “வீரர்கள்” இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்!!
தமிழ் நாட்டில் இந்திர விழா கொண்டாடப்பட்டது சங்க இலக்கிய நூல்களில் உள்ளது. ஒருவன் அடியோடு சாய்ந்தான் அல்லது விழுந்தான் என்பதற்கு வால்மீகி ராமாயணம் அடிக்கடி பயன்படுத்தும் உவமை இந்திர விழா தூண் சாய்க்கப்பட்டது போல என்பதாகும் ஏனெனில் அக்காலத்தில் நீண்ட நாள் நடந்த இந்திர விழா முடிந்த பின்னர் அந்த தூணை மக்கள் எல்லோரும் சேர்ந்து சாய்ப்பார்கள் . பிற்கால தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியங்களில் இந்த விழா பற்றியோ, தூண் பற்றியோ எதையும் காணமுடியாது .
இதிலிருந்து என்ன தெரிகிறது?
இந்திரன் மற்றும் இந்திர விழா பற்றிய நூல்கள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னர் எழுதப்பட்டவை என்பது தெளிவாகிறது .
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்; ராஜ+ இந்திர! இன்றய இந்தியாவின் பிரதமரும் இந்திரனே! நர+ இந்திர மோடி= நரேந்திர மோடி ! இந்தியாவின் எந்த மாநில டெலிபோன் டைரக்டரி மட்டுமல்ல, ஆசிய நாடுகள் அத்தனையிலும் இந்திரன் பெயர் இருக்கும்! ஆங்கிலத்தில் இதை ஆண்ட்ரூ ANDREW என்பார்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் உள்ள ஆய்+ அண்டிரன் என்ற பெயரிலிருந்து ஆண்ட்ரூ வந்தது. ஆய் அண்டிரனின் உண்மைப் பெயர் அஜேந்திரன் !
ஆயிரம் கண்கள் உடையவன் – முருகு.155; , கலி.105-15; பரி.9-9
வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன் -புறம்241; கலி.105-15; பரி.18-30;
நெடியோன் -புறம்.241;
இந்திரர் அமிழ்தம் – புறம்.182
இந்திரன் வில் – பரி.18-39; புறம்.20; அகம்.84;192; பெரும்பா.292;
இந்திரன், பூசை; இவள் அகலிகை …. பரி.19-50/3
(திருப்பரங்குன்ற ஓவியத்தைக் கண்ட பட்டிகாட்டுப் பெண்ணுக்கு வான் கணவன் இந்திரன்-அகலிகை கதையைச் சொன்ன காட்சி; பூசை=பூனை
இந்திரவிழாவின் பூவன்ன –
புன்தலைப்பேடை வரிநிழல் அகலவும் – ஐங்குறு.62-1/2
பதிற்று .30-14;
அமிழ்தம் என்ற சொல்லும் மூன்று வித ஸ்பெல்லிங்க்குகளுடன் தமிழ்ச் சங்க நூல்களில் பயிலப்படுகின்ற்ன .
Indra in South East Asian Countries
திருமுருகாற்றுப்படை 155….
நூற்றுப்பத்தடுக்கியநாட்டத்துநூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
எருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
160நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் முவருந் தலைவ ராக
பொருள்
(155-159) (நூறைப் பத்தால் பெருக்கினால் வரும்) ஆயிரம் கண்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட பல வேள்விகளே இயற்றி முடித்த—பகைவரை முன்னேறி அழித்த வெற்றிச் சிறப்புடனும் (விளங்கி ), நான்காக அமைந்த மருப்புகளையும் (தந்தங்களையும்) அழகிய நடையினையும் உடைய—தாழ்ந்து தொங்கும் பெரிய நீண்ட துதிக்கையைத் தூக்கி மேலே உயர்த்திய வெள்ளையானையின் பிடரியின் மேல் அமர்ந்து வரும் — திருமகளின் விளக்கம் பெற்ற செல்வனாகிய இந்திரனும்,
(Throughout South Asia, Indra’s Elephant is shown with many trunks and many tusks)
Indra in Laos stamps (Phra= Sri)
மூவர் வருகையின் காரணம்
(160-165) இந்திரன், நான்முகன். திருமால், உருத்திரன் என்னும் நான்கு பெரிய தெய்வங்களுள் (முருகனால் சிறைப்பட்டுக் கிடக்கும் நான்முகன் நீங்கலாக ). நல்ல திருப்பதிகள் நிலைபெற்றுள்ள உலகினைக் காக்கும் ஒப்பற்ற செயல் புரியும் கொள்கை கொண்ட —பலரும் புகழும் திருமால், உருத்கிரன், இந்திரன் ஆகிய மூவரும் தாம் தத்தம் தலைமையினைப் பெற வேண்டியும்………………
*****
இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.
மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.
இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.
நேபாளத்தில் இந்திர விழா
இன்றுவரை இந்திர விழாவை பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.
தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.
பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.
****
வேதத்தில் எண்கள் முப்பது, நூறு, ஆயிரம் என்ற எண்களின் ஸம்ஸ்க்ருதச் சொற்களை இந்திரனைக் குறிக்கப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் அவன் 33 தேவர்களுக்குத் தலைவன்; நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்தவன்; ஆயிரம் கண்களை உடையவன். இதைத் தமிழிலும் காளிதாஸனிலும் காண்கிறோம்.
To be continued…………………….
Tags- காளிதாசன், காவியங்கள் இந்திரன், சங்கத் தமிழ் நூல்கள், ஒப்பீடு! – 1
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –4
ச. நாகராஜன்
5
ஸ்வாமிஜி: எங்கும் சஞ்சரித்து எதையும் பார்க்க வல்லவர்!
இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் பார்க்கவல்ல ஆற்றல் படைத்தவர் ஸ்வாமிஜி. ஆயக்குடியில் அவருடன் இருக்கும் போது எங்கள் வீட்டில் நடப்பதைச் சுட்டிக் காட்டி எதற்காக தங்கையுடன் வம்புச் சண்டை போடுகிறீர்கள்” என்று ஒருமுறை அவர் கேட்டார்.
“இல்லையே, அப்படி போடவில்லையே” என்று மறுத்தவுடன் விவரங்களைத் தெளிவாகக் கூறலானார். உடனே அவர் கூறுவது அனைத்தும் சரிதான் என்று ஒப்புக் கொண்ட நாங்கள், “இதெல்லாம் எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டோம்.
பெரிய ரகசியங்கள் சிறிய விஷயங்களிலிருந்தே வெளிப்படுகின்றன.
“என் கண்ணை மூடிக் கொண்டால் பிலிம் போல எல்லாம் ஓடும்டா” என்றார் அவர்.
பழனியில் நடந்த ஒரு சங்கீதக் கச்சேரியை (ஆயக்குடியில் இருந்த இடத்திலிருந்தே) தான் கேட்டு ரசித்தது பற்றியும் ஒரு முறை கூறினார்.
இதனால் அவர் எங்கும் எப்போதும் சஞ்சரிக்க வல்லவர் என்பது புரிந்தது. ரமண மஹரிஷி வாழ்விலும் இது போன்ற ஏராளமான சம்பவங்களைக் காணலாம்.
வருங்காலத்தைத் தெளிவாகப் பார்க்கும் ஆற்றல் உள்ளவர் அவர்.
ஒரு முறை அனைவரும் ஆயக்குடியில் அவரது வீட்டின் கூடத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது எதிர்காலம் பற்றிய பேச்சு வந்தது. உடனே அவர் என் தந்தையாரை நோக்கி, “சந்தானம், சமுத்திரம் இங்கே வந்துடும்” என்றார். அவர் கை அருகில் ஒரு அடி தூரத்தைக் காண்பித்தது.
அனைவரும் அரண்டு போனோம்.
திகைப்பில் ஆழ்ந்த எங்களைப் பார்த்து அவர், “பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒன்றுமில்லை” என்றார்.
“சமுத்திரம் இங்கே வந்துடும்” என்பதை தினமும் விவாதித்து விவாதித்து நாங்கள் குழம்பிப் போனோம்.
சில தினங்களில் ராமேஸ்வரம அருகே கடல் பொங்கி உள்ளே நுழைந்தது. தனுஷ்கோடியே மூழ்கிப் போனது. அப்போது தான் அவர் கூறியதன் அர்த்தம் விளங்கியது!
“கடைசியில் நீயும் நானும் தான் சந்தானம்” என்றார் அவர் ஒரு முறை எனது தந்தையைப் பார்த்து!. சாமான்ய அறிவு கொண்ட எனக்கு அவர் அப்படி கூறியதன் அர்த்தம் இன்று வரை புரியவில்லை.
அவ்வளவு நெருக்கமாக என் தந்தையை அவர் நேசித்தார்.
யாரையும் எளிதில் நம்பாத ஒருவர் மாதவன் நாயர். அவர் கேரள அரசில் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி.
அச்சன்கோவிலுக்கு சரியான சாலை அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிக்க அவர் நேரடி இன்ஸ்பெக்ஷனுக்காக அச்சன்கோவிலுக்கு வந்தார். கரடுமுரடான மண்பாதையில் ஜீப் போய்க்கொண்டிருந்தது.
“ஸ்வாமிஜியை நோக்கிய அவர், இதையெல்லாம் என்னால் நம்ப முடியாது. எல்லாம் ஐயப்பன் செய்வார் என்றால் ஒரு புலியை இங்கே வரச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்றார்.
ஸ்வாமிஜி மௌனமாக இருந்தார்.
அடுத்த சாலை வளைவில் சாலையை முழுதுமாக அடைத்துக் கொண்டு ஒரு பெரிய புலி நின்று கொண்டிருந்தது. அலறிய மாதவன் நாயர், “நம்புகிறேன். நம்புகிறேன். புலியைப் போகச் சொல்லுங்கள்” என்று கூச்சலிட்டார். புலி அகன்றது.
சற்று தூரம் சென்றவுடம். “இது ஒரு கோ இன்சிடென்ஸ். இன்னொரு தரம் புலி வருமா, என்ன?” என்றார்.
அடுத்த வளைவில் இன்னொரு புலி நின்றது. சிரித்தது.
அலறிய மாதவன் நாயர் அந்தக் கணம் முதல் ஸ்வாமிஜியின் அத்யந்த பக்தராக ஆனார்.
இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?
தென்காசி கோவிலில் கோபுரம் இடிந்திருந்தது. அதையெல்லாம் செப்பனிட்டு பிடிராஜன் தலைமையில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்வாமிஜியின் முன்னணியில் இது நடைபெற்றது.
அதில் கலந்து கொள்ள சந்தானம் குடும்பமும் சென்றது,
அனைவரும் தென்காசி டிராவலர்ஸ் பங்களாவில் தங்கி இருந்த போது அங்கு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாதவன் நாயருடன் நான் பேச்சுக் கொடுத்தேன்.
அவர் மனம் திறந்து கூறிய வார்த்தைகள் தாம் இவை.
எங்களை அவர் பார்த்து, “நீங்கள் எல்லாம் பாக்கியம் செய்தவர்கள்” என்று கூற அவரை நாங்கள், “நீங்கள் ஒரு அதிசய மனிதர். ஸ்வாமிஜியையே டெஸ்ட் செய்தவராயிற்றே” என்றோம்.
அனைவரும் சிரித்தோம்.
ஸ்வாமிஜிக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர் மதுரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாக நேர்ந்தது.
அவருக்கென ஒரு ஸ்பெஷல் வார்டு. அங்கு ஆஸ்பத்திரி டீன், மதுரை டி.எஸ்.பி.யாக இருந்த அச்சுதன் நாயர் ஆகியோர் தினமும் வருவர்.
எங்களது வீட்டிலிருந்தும் இன்னொரு எளிய பக்தர் வீட்டிலிருந்தும் மட்டுமே சாப்பாடு கொண்டு போகப்படும். என் தாயார் திருமதி ராஜலெக்ஷ்மி அம்மாள் பக்தி சிரத்தையுடனும் “மடி”யாகவும் சமைத்த உணவை மட்டுமே அவர் சாப்பிடுவார்.
ஏழை பணக்காரன் என்பதெல்லாம் அவருக்குக் கிடையாது. மன சுத்தமும், நேர்மையும் பக்தியுமே அவருக்கு முக்கியம்.
இதை அந்த அவரது ஆஸ்பத்திரி வாசம் உணர்த்தியது. எனது தந்தையார் உள்ளிட்டோர் அங்கு வார்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.