துவாரகா திருத்தலம்; ஆலயம் அறிவோம் (Post No.10,285)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,285

Date uploaded in London – –   1 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 31-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

த்வாரகா!

அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதிபதேரகிலம் மதுரம்

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.  

   ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றாக அமைவதும்  108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான த்வாரகா திருத்தலம் ஆகும். “அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரித்வாரகாவதீ சைவ சப்தைதே மோக்ஷதாயிகா” என்பது அனைவரும் அறிந்த ஏழு மோக்ஷபுரிகளைப் பற்றிய ஸ்லோகமாகும்.

குஜராத் மாநிலத்தில் உள்ள இத்தலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடன் தொடர்பு கொண்ட தலமாகும்.

மூலவர் திரு நாமம் : த்வாரகாதீசன், கல்யாண நாராயணன்.

கருப்பு நிறத்தில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இவர் காட்சி அளிக்கிறார்.

தாயார் திரு நாமம் : கல்யாண நாச்சியார், ருக்மிணி                                        தீர்த்தம் :கோமதி நதி அல்லது சமுத்ர சங்கமம் அல்லது பிரபாச தீர்த்தம்                           விமானம் : ஹேமகூட விமானம்          

இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண மற்றும் இலக்கிய வரலாறுகள் உண்டு. ஒரு சமயம் ஜராசந்தன் மக்களைப் பெரிதளவும் கொடுமைப் படுத்த, உடனே ஸ்ரீ கிருஷ்ணர் சமுத்திர ராஜனிடம் இந்த இடத்தைக் கேட்டுப் பெற்றார்; விஸ்வகர்மாவை வைத்து இந்த நகரை நிர்மாணித்தார். உலகமே வியக்கும் வண்ணம் ஸ்வர்க்கத்திற்கு நிகராக அகன்ற சாலைகளுடனும் பல தீர்த்தங்களுடனும் இந்த நகர் நிர்மாணிக்கப்பட்டது.  அவரது கொள்ளுப் பேரனான வஜ்ரநாபன் ஐந்து அடுக்கு நிலைகொண்ட த்வாரகாதீசர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

இப்போதுள்ள த்வாரகா பொதுவாக இரு பகுதிகளாக அழைக்கப்படுகிறது. த்வாரகா புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதி கோமுகி த்வாரகா ஆகும். இன்னொரு பகுதி பேட் த்வாரகா ஆகும்.

ஸ்வர்க்கத்திற்கு செல்லும் வாயிலாக இது அமைவதால் இது த்வாரகா என்ற பெயரைப் பெற்றது. இங்கிருந்து தான் யாதவர்கள் அனைவரும் மோக்ஷம் அடைந்தனர்.

இங்குள்ள கோவிலில் அனைத்து பக்தர்களும்  ஸ்வர்க வாயிலின் வழியே உள்ளே சென்று மோக்ஷ வாயில் வழியே வெளியே வருவது வழக்கம்.

கோவிலிலிருந்து அருகே உள்ள கோமதி நதி கடலில் கலக்கும் சங்கமத்தை அடையலாம். இந்த சங்கமத்தில் நீராடி விட்டுப் பின்னர் கோவில் தரிசனத்தை மேற்கொள்வது ஐதீகம். கோவிலிலிருந்து படகு  மூலம் சென்றால் பேட் துவாரகையை அடையலாம். இங்கு கிருஷ்ணரின் அஷ்ட பட்டமகிஷிகளுக்கான கோவில்கள் உள்ளன. பேட் த்வாரகா என்ற சிறு தீவில் தான் கிருஷ்ணர் வாழ்ந்து வந்தார். இங்கு தான் அவரது அரண்மனை, அந்தப்புரம் ஆகியவை அமைந்திருந்தன. பால்ய கால நண்பரான குசேலர் இங்கு தான் வாழ்ந்து வந்தார். இங்கு தான் கிருஷ்ணர் சங்காசுரனை வதம் செய்தார்.

த்வாரகா ஆலயத்தில் லக்ஷ்மிநாராயணர், ருக்மிணி, திரிவிக்ரமன், தேவகி, ஜாம்பவதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

இங்குள்ள சங்கமத்தில் ரங்கன் காட், நாராயண் காட், காவூகாட், வசுதேவ காட், பாண்டவன் காட், பிரம்ம காட், பார்வதி காட், கங்கா காட், சுரதன் காட், கர்க்காரி காட், அனுமன் காட், நாராயண பலி காட் என பன்னிரெண்டு துறைகள் உள்ளன. இங்குள்ள ரிஷபா குண்டத்திலும் பக்தர்கள் நீராடுவது மரபாகும். இத்தலம் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இங்கு ஏராளமான மகான்களும் அருளாளர்களும் காலம் காலமாக வந்து கிருஷ்ணரை தரிசித்து பல பாடல்களைப் புனைந்துள்ளனர். ஆதி சங்கரர், ராமானுஜர், மத்வர், ஞானேஸ்வரர், பக்த மீரா, கிருஷ்ண சைதன்யர், வல்லபாசாரியர் என்று இங்கு வந்த அருளாளர்களின் பட்டியல் மீக நீண்ட ஒன்றாகும். கிருஷ்ணரைப் பற்றிப் பாரத தேச மொழிகள் அனைத்திலும் அற்புதமான இலக்கியங்கள் ஆயிரக்கணக்கில் புனையப்பட்டுள்ளன. கிருஷ்ணரைப் பற்றிய பாடல்களோ பல்லாயிரம் ஆகும்.

பெரியாழ்வார் ஐந்து பாசுரங்கள், ஆண்டாள் நான்கு பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்கள், நம்மாழ்வார் ஒரு பாசுரம் ஆக மொத்தம் 13 பாசுரங்களை ஆழ்வார்கள் இத்தலம் பற்றி மங்களாசாஸனம் செய்து அருளியுள்ளனர்.

இங்கு 1963ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல வருடங்கள் நடந்துள்ள பல அகழ்வாராய்ச்சிகளில் இந்தத் தலம்  பண்டைய காலத்தில் புகழோங்கி இருந்ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து உலகையே மகிழ வைத்துள்ளன.          வசுதேவருக்கும் தேவகிக்கும் மதுராபுரியில் மகனாக அவதரித்த கிருஷ்ணர் ஆயர்பாடியில் யசோதா பாலனாக வளர்ந்தார். ஏராளமான அருள் லீலைகளைப் புரிந்தார். த்வாரகாவை நிர்மாணித்து, ஆண்டு, மறத்தை அழித்து அறத்தை நிலைநாட்டிய பின்னர் தனது அவதார காரியம் நிறைவேறியவுடன் அவர் இங்கிருந்து தான் தனது விஷ்ணு லோகத்திற்குச் சென்றார்.   

   காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ருக்மிணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ண பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.                  

       

                             

 பெரியாழ்வாரின் அருள் வாக்கு இது:      

                                                              தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் 
சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் ஜோதி நம்பி! 
வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும் 
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே   

அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

நன்றி, வணக்கம்!    

tags– துவாரகா , ஆலயம்,  அறிவோம்

கூத்தனூர் ஸ்ரீ  சரஸ்வதி தேவி! (Post No.10,256)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,256

Date uploaded in London – – 25 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 17-10-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி தேவி!

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய
உருப்பளிங்கு போல்வாள், என் உள்ளத்தின் உள்ளே
இருப்பள், இங்கு வாராது இடர்!

கவிச் சக்கரவர்த்தி கம்பர் வாழி!


ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது தமிழகத்தில் சரஸ்வதி தேவிக்கென உள்ள ஒரே ஆலயம் அமைந்துள்ள கூத்தனூர் ஆகும். இந்தத் தலம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்னும் ஊரின் அருகில் அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு ஹரிநாதேஸ்வரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. கங்கை, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளும் அரிசிலாற்றில் பாய்வதாக ஐதீகம்.


இங்கு அருள் பாலித்து வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி வெண்ணிற ஆடையுடன் நான்கு கைகளுடனும் வெண்தாமரை மலரின் மேல் பத்மாஸனத்தில் அமர்ந்து காட்சி அளிக்கிறார். அவர் கையில் வீணை இல்லை. வலது கீழ்க்கையில் சின் முத்திரையும் இடது கீழ் கையில் புஸ்தகமும், வலது மேல் கையில் அக்ஷரமாலையும் இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி கிழக்கு நோக்கி அமர்ந்து ஞான சரஸ்வதி அருள் பாலிக்கிறார்.


இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வந்துள்ளது என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இடைக்காலச் சோழர்கள் அரசாண்ட காலத்தில் விக்கிரம சோழனுக்கும் அவன் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கும் ஒட்டக்கூத்தர் என்னும் மாபெரும் புலவர் ஆசிரியராக விளங்கினார். இவர் கலைமகளை வழிபட, அவள் தன் தாம்பூலத்தை இவருக்குத் தர பெரும் கவிஞராகிப் பெயர் பெற்றார் இவர். இவர் மூன்று உலாக்கள், இரண்டு பரணிகள், ஒரு பிள்ளைத் தமிழ், இராமாயணத்தில் உத்தரகாண்டம் உள்ளிட்ட ஏராளமான அரும் நூல்களை இயற்றியுள்ளார். இவர் மூன்று தலைமுறைகள் வாழ்ந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர் என வரலாறு கூறுகிறது. இவர் கவிச்சக்கரவர்த்தி கம்பன் காலத்தவரும் கூட!

சைவ சமயத்தவரான இவருக்கு நடராஜப் பெருமானாகிய சிதம்பரக் கூத்தரின் பெயரையொட்டி, கூத்தர் என்ற பெயர் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது. இன்னொரு செய்தியின் படி ஒரு சமயம் விக்கிரம சோழனின் விருப்பப்படி நயம் பொருந்திய கண்ணியை ஒட்டி, ஒரு வெண்பா பாட, அதனால் மகிழ்ந்த விக்கிரமன் இவரை ஒட்டக்கூத்தர் என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் ஒரு செய்தியின் படி இவர் ‘ஈட்டி எழுபது’ என்ற பாடல்களின் மூலம் வெட்டுண்ட தலைகளை முண்டங்களுடன் ஒட்டச் செய்ததால் இவருக்கு அப்பெயர் எற்பட்டது எனத் தெரிய வருகிறது.


இப்படி கவித்வம் பெற்றதற்கான காரணம் இவர் இங்கு வழிபட்ட ஞான சரஸ்வதியின் அருளே ஆகும். தீயவர்களிடம் அகப்பட்ட ஒட்டக்கூத்தரை பரணி பாட வைத்து தன்னைத் தப்பிக்க வைத்த தேவியை ஒட்டக்கூத்தர் ‘ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியவே’ என்று போற்றிப் புகழ்ந்து துதித்தார். சோழ மன்னன் தானமாக அளித்த இடத்தில், இவரே, தன் வழிபடு தெய்வமாகிய கலைமகளுக்கு இந்தக் கோவிலை அமைத்தார்.இந்த ஊரிலேயே பல ஆண்டுகள் அவர் வாழ்ந்தார். ஆகவே இந்த ஊர் கூத்தனூர் என்ற பெயரைப் பெற்றது.

இந்தக் கோவிலில் ஒட்டக்கூத்தருக்கு ஒரு சிலையும் இருக்கிறது. இந்த சரஸ்வதி தேவியே கம்பனுக்காக கிழங்கு விற்றதாகவும் மோர் விற்றதாகவும் வரலாறு உண்டு. இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. கும்பகோணத்தைச் சேர்ந்த சாரங்கபாணி தீக்ஷிதர் என்பவரின் புதல்வரான புருஷோத்தமனுக்குப் பேசும் திறன் வரவில்லை. அவன் இங்கு வந்து சரஸ்வதியை வழிபட தேவியானவள் தாம்பூலத்தைத் தன் வாயில் தரித்து அவனுக்குத் தந்தாள். சரஸ்வதி அருளால் விஜயதசமி முதல் பேசத் தொடங்கிய அவர் புருஷோத்தம பாரதி என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.

முன்புறத்தில் மூன்று நிலை ராஜகோபுரத்தினைக் கொண்டுள்ளது இந்தக் கோயில். கோபுரத்தில் ஐந்து கலசங்கள் உண்டு. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் உள்ளது. நவராத்திரி நாட்களில் சிறப்பான விழா நடைபெற, இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமுகின்றனர். கல்வி அறிவைப் பெற இதுவே சிறந்த இடம் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வித்யாரம்பத்திற்கும் மற்ற நாட்களிலும் அழைத்து வந்து புத்தகம் பேனா உள்ளிட்டவற்றை கர்பக்ருஹத்தில் வைத்து சரஸ்வதியின் அருளைப் பெறுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது. அத்துடன் இத்தலத்தில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோமீட்டர் நீளமுள்ள அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் முதலான பித்ரு கர்மங்கள் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அவரவர் பாபங்களிலிருந்து விடுபட திரிவேணி சங்கம நீராடலுக்கும், கணவன் மனைவி பிரிவிலிருந்து மீள்வதற்குமான பிராத்தனைத் தலமாகவும் இது ஆகிறது. காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஞான் சரஸ்வதி தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அருள் வாக்கு இது :

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடி கமழ் பூந்தாமரை போல் கையும் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி?!
நன்றி வணக்கம்!


tags — கூத்தனூர் ,ஸசரஸ்வதி தேவி, ஆலயம் ,அறிவோம்

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் ஆலயம்! (10,144)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 10,144

Date uploaded in London – –   27 September   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 26-9-2021 அன்று ஒளிபரப்பான உரை!

திருவானைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம்!

வானைக் காவில் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்

தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான்

ஆனைக் காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர்                      ஏனைக்  காவல் வேண்டுவார் ஏதும் இல்லையே!

திருஞானசம்பந்தர் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பஞ்ச பூத ஸ்தலங்களில் அப்புலிங்க ஸ்தலமாக விளங்கும் திருவானைக்கா ஆகும். இது திருச்சி நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தலமாகும்.

மூலவர் திரு நாமம் : ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

அம்பிகையின் திரு நாமம் : அகிலாண்டேஸ்வரி, வடிவுடைய மங்கை    

ஸ்தல விருக்ஷம் : வெண் நாவல் விருக்ஷம் 

தீர்த்தம் :பிரம புட்கரிணி, இந்திர தீர்த்தம்

தலப் பெயர்கள் : ஞானபூமி, அமுதீச்சரம்

பெயருக்கேற்ப இத்தலத்தில் கோவிலின் மூல ஸ்தானத்தில் எப்போதும் ஜலம் இருக்கும். சுவாமி சந்நிதி சிறியது. திருச்சாலகம் என்ற பெயரை உடையது. காவிரியின் மட்டமும் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்ட மட்டமும் ஒரே அளவு என்பதால் காவிரியில் நீர் பெருகும் போது லிங்கம் நீரில் அமிழ்ந்து விடும்.         

மிகப் பழம் பெரும் தலமான இதைப் பற்றிய பழம் பெரும் வரலாறு ஒன்று உண்டு. இந்தத் தலத்தில் ஒரு யானையும் ஒரு சிலந்தியும் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை பூஜை செய்து கொண்டு வந்தன. வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேலாக  கூடு கட்டும். யானை தினமும் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு  தனது துதிக்கையில் காவேரி தீர்த்தத்தை ஏந்தி வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும். இதனால் சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். சிலந்தி ஒரு நாள் இதைக் கவனித்துக் கடும் கோபம் கொண்டது. யானையின் துதிக்கையில் அது நுழைந்து கடிக்க ஆரம்பித்தது. யானை வலி பொறுக்காமல் புரண்டு மரணம் அடைந்தது. சிலந்தியும் மாய்ந்தது. இச்சிலந்தியே மறு ஜன்மத்தில் கோட்செங்கச் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை உள்ளே வர முடியாதபடி 54 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.

இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. இங்கு தவம் புரிந்து வந்த ஜம்பு மஹரிஷியின் தலையில் நாகமரம் ஒன்று உருவாயிற்று. அவர் தவம் செய்து வந்த இடத்தில் லிங்கம் இருந்ததால், இதற்கு ஜம்புகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. இந்தத் தலமும் ஜம்புகேஸ்வரம் என்ற பெயரைப் பெற்றது.

இந்தக் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உண்டு. அம்பாள் கோவில் இரு பிரகாரங்களுடன் விளங்குகிறது. அம்பாள் இன்றும் கன்னிப் பெண்ணாகவே தவம் செய்வதாக ஐதீகம். இப்படி தேவியானவள் ஈஸ்வரனைப் பூஜிப்பதைக் குறிக்கும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒரு சிவாச்சார்யர் மதிய பூஜையின் போது புடவை அணிந்து ஈஸ்வரனைப் பூஜிப்பது இன்றளவும் நடந்து வருகிறது.

முதல் பிரகாரத்தில் சந்திரன், சூரியன்,ஸரஸ்வதி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோ இருக்கின்றனர்.

இங்கு அம்பாள் உக்கிரத்துடன் இருந்து வந்தாள். இந்தத் தலத்திற்கு வந்த ஆதி சங்கரர் அம்பாளின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டி அம்பாளுக்கு ஸ்ரீசக்ர தாடங்கத்தைச் சாற்றினார். சந்நிதிக்கு எதிரில் பிள்ளையான விநாயகரை அம்பிகையின் உக்கிரம் தணிகிறபடி பிரதிஷ்டை செய்ததோடு பின்பக்கத்தில் வள்ளி, தேவஸேனா சமேத சுப்ரமண்யரையும் பிரதிஷ்டை செய்தார். அம்பாளைக் கருணை நிரம்பியவளாகச் செய்தார். 3 அங்குல குறுக்களவுள்ள தாடங்கத்தின் பிரகாசத்தை 25 அடி தூரத்திலிருந்தும் பார்த்து மகிழ முடிகிறது.

இங்கு பிரம்மாவுக்குக் காட்சி தந்த தர்மபுரி நாயகி ஸமேத சங்கரேஸ்வரர் ஆலயம் ஸ்வாமி கோவிலின்  முதல் பிரகாரத்தில் இருக்கிறது.இங்கு வில்வ மரத்தையும் காணலாம். இரண்டாம் பிரகாரத்தில் ஸ்ரீராமரால் கட்டப்பட்ட பெரிய மண்டபமும் வல்லப கணபதி கோவிலும் உள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் சனீஸ்வரர், தண்டாயுதபாணி, இந்திரனால் பூஜிக்கப்பட்ட விசாலாக்ஷி ஸமேத விஸ்வேஸ்வரர் உள்ளிட்ட பல மூர்த்திகள் உள்ள சிறு கோவில்களும் உள்ளன. நான்காம் பிரகாரத்தின் எட்டுத் திக்குகளிலும்  எட்டு பிள்ளையார் கோவில்களும் நான்கு பக்கங்களில் அக்ரகாரங்களும் உள்ளன.

ஈஸ்வரனான சம்புநாதர் சித்தர் வடிவம் கொண்டு வேலைக்குத் தக்கபடி பொன்னாகும் வண்ணம் வேலையாட்களுக்குக் கூலியாக விபூதி கொடுக்கப்பட்டு பெரிய கோபுரமும் பிரகாரமும் நிர்மாணிக்கப்பட்டதாம். ஆகவே இந்த பிரகாரத்தை விபூதி பிரகாரம் என்பார்கள். மதில் திருநீறிட்டான் மதில் என்று அழைக்கப்படுகிறது. எவர் ஒருவர் இரு தினம் இங்கு பிரதக்ஷிணம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்கிறாரோ அவருக்கு அனைத்து காரியங்களும் ஜயமாகும், அவருக்கு மறு ஜென்மம் கிடையாது, இது சத்யம் என்று புராணம் கூறுகிறது. கோவிலுக்கு மேற்கில் வீரகண்டேஸ்வரர் ஆலயமும் ராம தீர்த்தமும் உள்ளன.

இந்தத் தலத்திற்கு 1923ஆம் ஆண்டு, ருத்ரோத்காரி வருடம் சித்திரை மாதத்தில்  விஜயம் செய்த காஞ்சி மஹா பெரியவாள் தாடங்கங்களை விதிப்படி ஜீரணோத்தாரணம் செய்து அம்பாளுக்கு அணிவித்தார். இதே கோவிலின் வடபுறத்தில் வெகு காலமாக புதர்களினால் மூடப்பட்டு மறைந்திருந்த பஞ்சமுகேஸ்வரர் ஆலயத்தையும் அவரே ஜீரணோத்தாரணம் செய்தார். கோவிலில் 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது.

இத்தலத்தில் திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர். அருணகிரிநாதர் 14 திருப்புகழ் பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அகிலாண்டேஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும்  அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.        

                 திருநாவுக்கரசரின் அருள் வாக்கு இது:                                                           

துன்பம் இன்றித் துயர் இன்றி என்றும் நீர்                               

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்                                      

என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு                              

அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே  

male priest in woman’s silk sari

                                நன்றி வணக்கம்!            

   ***

tags- திருவானைக்கா, அகிலாண்டேஸ்வரி,   ஜம்புகேஸ்வரர்,  ஆலயம், 


கன்யாகுமரி – ஆலயம் அறிவோம்(Part 9669)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9669

Date uploaded in London – – 31 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 30-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

பூலோக குமாரி, ஹே, அம்ருத நாரி!

பாலே – ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே

நீல ரத்நமய நேத்ர விசாலே, நித்ய யுவதி பத நீரஜ மாலே

லீலா ஜ்வாலா நிர்மித வாணி நிரந்தரே நிகில லோ கேஸாநி

நிருபம ஸுந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மா குரு ஹே மன்மத ராணி!

மஹாகவி பாரதியார் வாழி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது

பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை என்று மஹாகவியால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் கன்யாகுமரி திருத்தலம் ஆகும். பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.

முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார். சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர். ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவ பிரான் ஏற்றார். மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார். சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார்.

தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள். திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள். இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள். தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு. தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972இல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.

 இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கன்யாகுமரி பகவதி அம்மன் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்! ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!! நன்றி, வணக்கம்!

tags- கன்யாகுமரி ,ஆலயம் , அறிவோம்

ஆலயம் அறிவோம் : காமாக்யா தேவி ஆலயம் (Post No.9557)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9557

Date uploaded in London – – 2 May   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 2-5-2021 அன்று ஒளிபரப்பான உரை!

வாத்ஸல்ய ஸஹிதா தேனு: யதா வத்ஸ மனுவ்ரஜேத் |

ததானுகச்சேத் ஸா தேவி ஸ்வபக்தம் சரணாகதம் ||

தன்னைச் சரணாகதி அடைந்தவனை, கன்றை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து போகும் பசு போல வாத்ஸல்யத்துடன் அனுசரித்து தேவி ரக்ஷிக்கிறாள்

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 51 சக்தி பீடங்களில் யோனி பீடமாகத் திகழும் காமாக்யா ஆகும். அஸ்ஸாம் என்று இன்று அழைக்கப்படும் காமரூபத்தில் அமைந்துள்ள இது அஸ்ஸாம் தலைநகரான கௌஹாத்தியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீலாச்சல் மலையில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில், இந்த மலை மீது அமைந்துள்ள காமாக்யா தேவி ஆலயம் பழம் பெரும் சரித்திரத்தைக் கொண்டது. இதை காளிகா புராணமும் யோகினி தந்த்ரமும் விரிவாக விளக்குகிறது. வேத வியாஸரின் தேவி பாகவதமும் இந்தத் தலத்தைப் பற்றிக் கூறுகிறது. நான்கு ஆதி சக்தி பீடங்களில் இது ஒன்றாகும். பழைய காலத்தில் காமரூபம் என்று மிக பிரசித்தமாக இருந்த இது, பூமியின் மிகப் புனிதமான ஸ்தலம் என்று தந்திர சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் விக்ரஹம் ஏதும் இல்லை. மாறாக  யோனி வடிவத்தில் உள்ள ஒரு பாறை மட்டுமே இங்கு வணங்கப்படுகிறது. அங்கிருந்து ஒரு நீரூற்றிலிருந்து தொடர்ந்து நீர் சுரக்கிறது. அதைத் தீர்த்தமாக பக்தர்கள் போற்றுகின்றனர்.

ஒரு மலையின் மீது அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு பூர்த்தியாகாத படிக்கட்டுகள் உள்ளன. இதைப் பற்றிய புராண வரலாறும் ஒன்று உண்டு. நரகாசுரன் என்னும் அசுரன் தேவியை மணக்க எண்ணினான். அதற்கு தேவி ஒரு நிபந்தனையை விதித்தாள். ஒரே இரவில் தன் கோவிலுக்கு நீலாச்சல் மலையில் படிகள் அமைக்க வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. அசுரன் படிக்கட்டுகளை அமைக்கும் போது தேவி காக்கையின் குரலை எழுப்பவே அசுரன் விடிந்து விட்டது என்று எண்ணி படிக்கட்டுகளைப் பூர்த்தியாக்காமல் விட்டுச் சென்றான். ஆகவே பூர்த்தியாகாத படிக்கட்டுகளே இன்றும் உள்ளன.

     பக்தர்களின் இஷ்டங்களை நிறைவேற்றுபவள் என்பதால் காமாக்கியா தேவி என்ற பெயரை அம்பாள் பெறுகிறாள்.

தச மஹா வித்யா என்று சொல்லப்படும் கமலாத்மிகா, தூமாவதி, தாரா, காளி, திரிபுரசுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, மாதங்கி, பகளாமுகி ஆகிய பத்து தேவியரில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய மூவரின் விக்ரஹங்கள் பிரதான கோவிலில் இருக்க, மீதி ஏழு தேவியருக்கும் தனித் தனி கோவில்கள் அமைந்துள்ளன. தேவி உபாசகர்களுக்கு மிக முக்கிய ஸ்தலமாகத் திகழும் இந்த ஆலயம் தாந்திரீகர்களுக்கு பிரதானமான கேந்திரமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் அம்புபச்சி மேளா என்ற திருவிழாவில் பல்லாயிரக்கணக்கில் தாந்திரீகர்களும் பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.

காமாக்யா தேவியை பாண்டவர்கள் வழிபட்டதை மஹாபாரதம் கூறுகிறது. பீஷ்மபர்வத்தில் அர்ஜுனனும் யுதிஷ்டிரரும் காமாக்யா தேவியைப் பிரார்த்தித்ததைப் பற்றிய குறிப்பைக் காணலாம். 

பல்வேறு காலங்களில் படையெடுப்புகளால் கோவில் தகர்க்கப்பட்டாலும் கூட, அவ்வப்பொழுது ஆண்ட அனைத்து மன்னர்களும் ஆலயத்தைப் புதுப்பித்து வந்ததை வரலாறு விவரித்துக் கூறுகிறது.

காமாக்யா ஆலயத்தின் கீழே முன்னூறு அடி தூரத்தில் பைரவிக்கு ஒரு ஆலயம் உள்ளது. 1971இல் ஸ்ரீ ராமகாந்த தேவ் சர்மா என்பவர் பைரவருக்கு ஒரு கோவிலை எழுப்பினார். அதற்கு அருகே அவர் கூர்மப்ரிஷ்த சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இது ஒரு அபூர்வமான வகை ஸ்ரீ சக்ரமாகும். தேவிக்கே உரித்தான ஸ்ரீ   சக்ரம் அனைத்து நலன்களையும் அளிக்க வல்லது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வரும் ஸ்ரீ காமாக்யா தேவி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

கங்கா பவானி காயத்ரீ ஸ காளீ  லக்ஷ்மீ ஸரஸ்வதி                     ராஜராஜேஸ்வரி பாலா ச்யாமளா லலிதா தச: ||                              தஸ்மாத் ஸங்கீர்த்தயேன் நித்யம் கலி தோஷ நிவ்ருத்தயே

நன்றி, வணக்கம்!    

tags- காமாக்யா தேவி,  ஆலயம்

காஞ்சீபுரம் காமாக்ஷி ஆலயம் (Post No.9479)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9479

Date uploaded in London – – 11 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!

கஷ்ட நிவாரிணி இஷ்ட விதாயினி துஷ்ட விநாஷினி காமாக்ஷி |

ஹிமகிரி தனயே மம ஹ்ருதி நிலயே சமஜன ஸதயே காமாக்ஷி ||

 ஸ்ரீ மஹா பெரியவாள் சரணம்!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது சப்மோக்ஷபுரிகளில் நடு நாயகமாகத் திகழ்வதும், பஞ்ச பூத தலங்களில் பிருதிவி தலமாகத் திகழ்வதும், சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்வதும், 108 வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்வதுமான காஞ்சீபுரம் ஆகும். ஏகாம்பரேஸ்வரர் கோவில், வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்களைக் கொண்டுள்ள இந்த நகரம், சைவ வைஷ்ணவ ஒற்றுமை காட்டும் சிறந்த தலமும் ஆகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள இது சென்னையிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி என்ற சம்ஸ்கிருத ஸ்லோகம், நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம் என்று கூறுகிறது. காஞ்சீபுரம் என்றவுடனேயே நம் கண் முன் தோன்றுவது காமாக்ஷி அம்மன் திருவுருவமே! 51 சக்தி பீடங்களில் பிரதானமான காமராஜ பீடம் என்றும் ஸ்ரீ  காமகோடி பீடம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

காமங்களை அதாவது விருப்பங்களை பூர்த்தி செய்யும் அக்ஷி – கண்களை உடையவள் என்ற பொருள் பட காமாக்ஷி என்று துதிக்கப் பெறும் இந்த அன்னையைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உள்ளன.

ஸ்ரீ  காமாக்ஷி தேவி தன் வலது கண்ணால் பிரம்மாவையும் இடது கண்ணால் மஹா விஷ்ணுவையும் கடாக்ஷித்து அருளி ப்ரம்மாவிற்கு ‘கா என்று கூறப்படும் சரஸ்வதியையும் விஷ்ணுவிற்கு ‘மா என்று கூறப்படும் லக்ஷ்மியையும் தன் கண்களிலிருந்து கிடைக்கும்படி அருளிச் செய்ததால் காமாக்ஷி என்ற பெயரைப் பெற்றாள் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. காமாக்ஷி தேவி காஞ்சியில் பிலாகாச ரூபத்திலும், ஸ்ரீ சக்ர வடிவத்திலும் சதுர்புஜங்களோடு  காயத்ரி மண்டபத்தில் கொலுவீற்றிருக்கிறாள். இங்கு அன்னை பராசக்தி, காமாக்ஷியாக தோன்றிய வரலாற்றை புராணம் நன்கு விவரிக்கிறது.

முன்னொரு காலத்தில் பந்தகாசுரன் என்னும் அசுரன் கடும் தவம் செய்து பிரம்மாவிடமிருந்து வரங்கள் பல பெற்று தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் துன்பங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். எல்லையற்ற துன்பம் அனுபவித்த அனைவரும் சிவனிடம் தஞ்சம் புகுந்து தம்மைக் காத்தருளுமாறு வேண்ட, பிரம்மாவிடமிருந்து பல வரங்கள் பெற்ற இவனிடமிருந்து அனைவரையும் காக்கும் வல்லமை கொண்டவள் பராசக்தியே, என்பதை நன்கு உணர்ந்த சிவபிரான், தேவர்களை வடக்கே கோமுகம் என்ற இடத்தில் உள்ள பிலத்தினுள் நுழைந்து தெற்கே காஞ்சிபுரத்தில் உள்ள பிலத்தின் வழியே வெளி வந்து, அன்னையை வழிபடுவதே அவர்கள் துன்பத்தைப் போக்கும் என்று கூறி அருள் பாலித்தார். அதன்படியே தேவர்கள் வடக்கே உள்ள பிலத்தினுள் நுழைந்து, தெற்கே காஞ்சியில், பில துவாரம் வழியே வெளி வந்தனர். அங்கே காமகோடி பீடத்தின் அருகே உள்ள ஒரு செண்பக மரத்தில், கிளி வடிவம் கொண்டு அன்னையை வழிபட ஆரம்பித்தனர்.

தேவர்களின் துன்பத்தை அறிந்த தேவி அவர்களுக்கு அருள் புரிய மனம் கொண்டு மிகுந்த கோபத்துடன் பிலத்திலிருந்து வெளிப்பட்டாள். கைலாயத்தில் பந்தகாசுரன் நித்திரை செய்வதை அறிந்த தேவி, அவனது கண்டத்தில் ஒரு பாதத்தையும் மார்பில் மற்றொரு பாதத்தையும்  வைத்து, 18 புஜங்களுடன் 18 ஆயுதங்களைத் தரித்து, பைரவ ரூபிணியாகத் தோன்றி, அவனது தலையை அறுத்து, சிகையைப் பிடித்து, ஐந்து வயது கன்னிகையாகத் தோன்றி, காமகோடி பீடமாகிய பிலத் துவாரத்தை வந்து அடைந்தாள். கன்னிகை கையில் இருந்த அசுரனின் தலையைக் கண்ட தேவர்கள் பயந்து மயங்கி வீழ்ந்தனர். உடனே அவர்கள் பயத்தைப் போக்கும் வண்ணம் அதி சுந்தர திருமேனியுடன், சர்வாலங்கார பூஷிதையாக, பட்டாடை உடுத்திய சிறு பெண் போல, தேவி தேவர்களுக்குக் காட்சி அளித்தாள். தேவர்கள் மகிழ்ந்து தேவியை வணங்கிக் கொண்டாடினர். தேவி அவர்களிடம் ஒரு பெரும் பள்ளம் தோண்டி பந்தகனைப் புதைத்து ஜெயஸ்தம்பத்தை நாட்டுமாறு பணித்தாள். இன்னும் இதன் விரிவான வரலாற்றைப் புராணம் தொடர்கிறது.

காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லும் இன்னொன்றில் புஷ்பங்களால ஆன அம்புகளும் உண்டு. மீதி இரு கரங்களில் பாசமும் அங்குசமும் உண்டு. காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பிகைக்குத் தனி சந்நிதி கிடையாது. ஏனெனில் அங்கு இருக்கத் தக்க சக்திகள் அனைத்தும் காமாக்ஷியிடம் கலந்திருப்பதே காரணம் ஆகும். ஸ்ரீ சங்கர பகவத்பாதர் இங்கு ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து ஸ்ரீசக்ர வடிவத்தில் ஆலயத்தை புதுப்பித்தார். அங்கு சர்வக்ஞ பீடத்தை ஸ்தாபித்து, பீடாரோஹணம் செய்தார். தன் பணியை முடித்த அவர் காமாக்ஷியின் சந்நிதியில் விதேஹ கைவல்யம் அடைந்தார். ஆதி சங்கரரின் மறு அவதாரமாகத் தோன்றி 68வது பீடாதிபதியாக இருந்து அருள் பாலித்த மஹா பெரியவாளும் காஞ்சிபுரத்தையே தன் அருளாட்சியின் தலை நகரமாகக் கொண்டிருந்தது குறிப்பிடத் தகுந்தது. மஹா பெரியவாளின் அதிஷ்டானமும் காஞ்சியில் உள்ளது.

இங்கு ராஜகோபுரத்தின் வழியே நுழைந்து மதிலைக் கடந்து சென்றதும் உயர்ந்த த்வஜ ஸ்தம்பமும் பலிபீடமும் உள்ளன. உள்ளே சுக்ரவார மண்டபம் உள்ளது. அதை அடுத்து விக்ன நிவாரண கணபதியையும் துர்வாச முனிவரையும் தரிசிக்கலாம். 24 காயத்ரி அக்ஷரங்களை அனுசரித்து இங்கு 24 தூண்களைக் கொண்டுள்ள காயத்ரி மண்டபத்தில், கொலு வீற்றிருக்கும் ஸ்ரீ காமாக்ஷி அம்மனை தரிசித்தோர், இந்தப் பிறவி எடுத்த பெரும் பயனை அடைந்தவர் ஆவர். மூல காமாக்ஷிக்கு வலப்புறம் தவக் கோலத்தில், தபஸ் காமாக்ஷி காட்சி தருகிறாள்.

கச்சி என்று இலக்கியம் புகழும் இந்தத் தலத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மொத்தம் 17 பதிகங்களையும் அருணகிரிநாதர் 44 பாடல்களையும் பாடி அருளியுள்ளனர். ஆழ்வார்கள்   மங்களாசாஸனம் செய்து அருளியுள்ள தலமும் இதுவே தான்! காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபட்டு வரும் அன்னை காமாக்ஷி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.  காமாக்ஷி தேவி சரணம், ஆதி சங்கர பகவத்பாதர் சரணம்.மஹா பெரியவாள் சரணம் குரு ப்ரஹ்மா குரு விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம: திருஞானசம்பந்தர் அருள் வாக்கு:            

மதி ஆர் கச்சி, நதி ஏகம்பம், விதியால் ஏத்தப் பதி ஆவாரே!       நன்றி, வணக்கம்!

tags- காஞ்சீபுரம் ,காமாக்ஷி ,ஆலயம்,

புரி (PURI) ஜகந்நாதர் ஆலயம் (Post .9405)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9405

Date uploaded in London – –21 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 21-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!

हर त्वं संसारं द्रुततरम् असारं सुरपते            हर त्वं पापानां विततिम् अपरां यादवपते
अहो दीनेऽनाथे निहित चरणो निश्चितमिदं      जगन्नाथः स्वामी नयन पथ गामी भवतु मे

ஜெய் ஜெகந்நாத்! ஜெய் ஜெகந்நாத்! ஜெய் ஜெகந்நாத்!

ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் .

தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது புரி ஜகந்நாதர் ஆலயம் ஆகும். ஒடிஸா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் தலம்.

புவனேஸ்வரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஜரா என்ற வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் உடல் கடலில் ஒரு மரம் போல் மிதக்க, கிருஷ்ணர் கனவில் கூறியவாறு அதை, புரியை ஆண்டு வந்த இந்திரதுய்மன் என்னும் மன்னன் எடுத்து, ஒரு சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தான். பெருமாளே ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றி 21 நாட்கள் யாரும் தான் வேலை செய்யும் அறையைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிற்ப வேலையை ஆரம்பித்தார்.  15 நாட்கள் அறையிலிருந்து சத்தம் கேட்டது. அதன் பின்னர் கேட்கவில்லை. மூன்று நாட்கள் பொறுத்த மன்னன் பின்னர் அவசரப்பட்டு அறைக் கதவைத் திறந்தான். தச்சர், “21 நாட்கள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையை  நீ  ஏன் மீறினாய். ஆகவே அரைகுறையாக உள்ள சிலையை அப்படியே பிரதிஷ்டை செய். இதை தரிசிக்க வருவோர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர் என்று கூறினார். அங்கிருந்த பலராமர், சுபத்ரா, ஜெகந்நாதர் ஆகிய சிலைகளை முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் நிலையில் அரசன் பிரதிஷ்டை செய்தான்.

கால கிரமத்தில் இந்தக் கோவிலை 1135ஆம் ஆண்டு ஆனந்தவர்மன் என்ற அரசன் புதுப்பித்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள மரத்தினாலான திருமேனிகள் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரி ஜகந்நாதரின் ரத யாத்திரை பல லட்சம் மக்களை ஈர்க்கும் உலகப் பெரும் தேர்த்திருவிழா ஆகும். பத்து லட்சம் மக்கள் இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஜெகந்நாதரின் அருளுக்குப் பாத்திரமாகின்றனர்.

16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் நிறத் தேரில் புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறமுடைய தேரில் பலபத்ரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் தேர்வலம் வருவர். ஒவ்வொரு தேர்ச்சக்கரமும் 7 அடி குறுக்களவு கொண்டது. ஜகந்நாதரின் தேரின் உயரம் 45 அடி ஆறு அங்குலம்; அகலம் 34 அடி ஆறு அங்குலமாகும். இந்தத் தேர்கள் வருடா வருடம் புதிதாக செய்யப்படுகின்றன. தேர் கட்டுவதில் வல்லவர்களான தச்சர்களால் குறிப்பிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மஹாநதியில் மிதக்கவிடப்படுகின்றன. அவற்றை புரி அருகே எடுத்து குறிப்பிட்ட முறைப்படி இந்த விசேஷமான தேர்கள் அமைக்கப்படுகின்றன.

தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வதுப் பாரம்பரியமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.

முதலில் பலபத்ரர் தேர், அடுத்து சுபத்ரா தேவி தேர், பின்னர் இறுதியில்  நந்திகோஷ ரதம் எனப்படும் புரி ஜெகந்நாதர் தேர் முறையாகப் புறப்படும். ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். குண்டிச்சா கோவில் நோக்கிப் புறப்படும் இந்த ரத யாத்திரை மவுசிமா கோவில் வழியே செல்லும். அங்கு ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகந்நாதர் கோவிலை அடையும்.

புரி கோவிலில் முதலில் சிங்க த்வார் வழியே நுழைந்து 22 படிகள் ஏறி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் தீபத்தை வழிபடுதல் மரபு. ஜகந்நாதர் சந்நிதிக்கு இடது பக்கம் சுபத்ராவும் பலபத்ரரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். கோவில் கூரையில் கிருஷ்ண லீலை ஓவியங்கள் அழகுறத் திகழ்கின்றன.

இறைவனுக்கு 56 வகையிலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்ட பின் இந்த மஹா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது. புரியில் கோவர்த்தன பீடத்தை ஆதி சங்கரர் அமைத்தார். ஜெயதேவரும் கிருஷ்ண சைதன்யரும் இங்கு வழிபாடு நடத்தி வாழ்ந்தனர்.

குருநானக்கைப் பற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு. குருநானக் 1508ஆம் ஆண்டு இங்கு யாத்திரையாக தன் சீடருடன் வந்தார். அவரை கோவில் உள்ளே அர்ச்சகர் அனுமதிக்கவில்லை. கடற்கரைத் தலமான புரியில் உள்ள, கடற்கரைக்குச் சென்றார் குரு நானக். அவரது சிஷ்யர் பசியால் வாடினார். அப்போது பெருமாளே ஒரு வயோதிகர் வேடம் பூண்டு தங்கத் தாம்பாளத்தில் உணவைக் கொண்டு வந்து தந்தார். அன்று இரவு அரசர் கனவில், பெருமாள் தான் செய்ததை அரசனுக்குத் தெரிவித்தார். மறு நாள் கோவிலில் தங்கத் தாம்பாளத்தைக் காணாத அர்ச்சகர் அதை மன்னனிடம் தெரிவிக்க மன்னர் புன்சிரிப்புடன் அனைவரையும் அழைத்து கடற்கரை நோக்கி விரைந்தார். அங்கிருந்த மஹான் குருநானக் அவர்களை வணங்கி அவரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். நடந்ததை அனைவரும் அறிந்து குருநானக்கைப் போற்றினர். குரு நானக், புரி ஜகந்நாதர் உலகம் முழுமைக்கும் உடையவர் என்பதை மெய்ப்பித்ததோடு  ‘ககன் மெய்ன்’ (Gagan Mein) என்னும் ஒரு அரிய ஆரத்தியையும் பாடி அருளினார். 

காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் பலபத்ரரும் சுபத்ரா தேவியும், புரி ஜெகந்நாதரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

जगन्नाथाष्टकं पुन्यं यः पठेत् प्रयतः शुचिः                 सर्वपाप विशुद्धात्मा विष्णुलोकं गच्छति ||

 நன்றி, வணக்கம்!

tags–புரி,  ஜகந்நாதர், ஆலயம்,

ஆலயம் அறிவோம்! இராமேஸ்வரம் (Post No.9263)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9263

Date uploaded in London – –14 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறு தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பப்படும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 14-2-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன்,

பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய

இணை இலி, என்றும் இருந்த கோயில், இராமேச்சுரம்

துணைஇலி தூ மலர்ப்பாதம் ஏத்த துயர் நீங்குமே”

வாழி திருஞானசம்பந்தர் திருநாமம்!  ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இராமெஸ்வரம் ஆகும். இது சென்னையிலிருந்து 555 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலம் சரித்திர பூர்வமான ஒன்று என்பதோடு, நாஸாவினால் சேது பாலம் இருப்பது சாடலைட் மூலமாக நிரூபிக்கப்பட்டிருப்பதனால், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மிகப் பழமை  வாய்ந்த, உலகின் ஒரே திருத்தலம் இது தான் என்ற பெருமையைப் பெறுகிறது. உலகின் வேறு எந்தத் தலமும் விஞ்ஞான பூர்வமாக இப்படி நிரூபிக்கப்படவில்லை என்பது இதன் தனிச் சிறப்பாகும்.

பாரதத்தின் பழம் பெரும் இதிஹாஸமான ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலம் இது என்பதால் இலக்கிய முத்திரையையும் பெற்றுள்ளது இது. வானர வீரர்களுடன் இராமேஸ்வரத்தில் தங்கி இருந்து, அவர்களின் துணை கொண்டு, சேது பாலம் அமைத்து, ராமர் இலக்குவனுடன் இலங்கை மீது போர் தொடுத்து, ராவணனை வதம் செய்து, சீதையை மீட்டார். பிராமணனான ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்த இராமேஸ்வர தீவில் ஜோதிர்லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட, பெரியோர்களின் உபதேசப்படி, எண்ணினார். அநுமனை கைலாயத்திலிருந்து ஒரு லிங்கம் கொண்டு வருமாறு அவர் பணித்தார். ஆனால் அனுமன் வரச் சற்று தாமதமானது. அப்போது சீதா தேவி மணலினால் பிடித்து ஒரு லிங்கத்தைக் கொடுத்தார். அதை இராமர் வழிபடத் தொடங்கினார். அனுமன் சிவனை வணங்கி கைலாயத்திலிருந்து பெற்ற லிங்கம் வரவே அதையும் பிரதிஷ்டை செய்தார். இராமநாத லிங்கத்தை வழிபடும் முன்னர் அனுமன் கொண்டு வந்த விஸ்வலிங்கத்தையும் முன்னதாக வழிபட வேண்டும் என்ற நியமத்தை ஏற்படுத்தினார். ஆதி சங்கரர் இங்கு ஸ்படிக லிங்கத்தை ஸ்தாபித்துள்ளார். அதற்கு முதலில் பூஜை நடைபெறுகிறது. சைவ-வைணவ ஒற்றுமைக்கு ஒரு உதாரணமாகத் திகழும் இந்தத் தலத்தில் சிவன் சந்நிதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கோவிலுக்கு அருகே உள்ள சமுத்திரம் அக்னி தீர்த்தமாகும். சீதை தனது கற்பை நிரூபிப்பதற்காக அக்னி ப்ரவேசம் செய்யவே, அவளது கற்பின் சூடு தாங்க முடியாமல், அக்னி இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தைத் தணித்துக் கொண்டதோடு, அக்னியிலிருந்து சீதையை வெளிப்படுத்தி, உலகிற்கு சீதா தேவியின் தூய்மையையும் நிரூபித்தார். இந்த அக்னி தீர்த்தத்தில் பித்ரு கடன்களைச் செய்வது காலம் காலமாக இருந்து வரும் மரபாக விளங்குகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து நீராடி வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது அனுபவபூர்வமான உண்மையாகும்.  ‘ஆ ஸேது ஹிமாசலம்’ என்ற பழம் பெரும் மொழியால் சேது முதல் இமயம் வரை பாரத நாடு ஒரே நாடு என்ற உண்மை வலுப்பட்டு, ஒற்றுமை ஓங்குகிறது. இங்கிருந்து மணலை எடுத்துக்கொண்டு காசி சென்று கங்கையில் கரைத்து விட்டு அங்கிருந்து கங்கை நீரைக் கொண்டு வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து வருவது தொன்று தொட்டு நடந்து வரும் பாரம்பரியப் பழக்கமாகும். சிறிய தீவான இராமேஸ்வரம் சங்கு வடிவத்தில் அமைந்துள்ள ஒரு தீவு.

மூலவர் – இராமநாதர்; அம்மன்: பர்வதவர்த்தனி. சேது சக்தி பீடம் என்று அழைக்கப்படும் இது, சக்தி பீடங்களில் ஒன்று. பர்வதவர்த்தனி அம்பிகை பீடத்திற்குக் கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் உள்ளது. நான்கு மதில்களைக் கொண்டு பிரம்மாண்டமான பிரகாரத்தைக் கொண்டு தனக்கு நிகர் இல்லாத கோவிலாக விளங்குகிறது இராமநாதர் ஆலயம். மொத்த பிரகாரங்களின் நீளம் 3850 அடி. மூன்றாவது பிரகாரத்தில் மட்டும் 1212 தூண்கள் உள்ளன. 690 அடி நீளமும் 435 அடி அகலமும் கொண்டு உலகின் பெரிய பிரகாரம் என்ற முதலிடத்தை இது பெறுகிறது.  

                                                    இராமேஸ்வரத்தில் உள்ள உயரமான இடம் கந்தமாதன பர்வதமாகும். இங்கிருந்து தான் ராமர் இலங்கையை நோக்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இங்குள்ள முக்கியமான 22 தீர்த்தங்களின் மஹிமை எல்லையற்ற ஒன்றாகும். மஹாலக்ஷ்மி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம்,காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சுர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், குவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாறைக் கொண்டு  ஒவ்வொரு வளத்தை அருள்பவை. இவற்றில் 14 தீர்த்தங்கள் கோவிலுக்கு உள்ளேயே உள்ளன. அன்பர்கள் தாங்களே கயிறு, வாளி கொண்டு சென்று அனைத்து தீர்த்தங்களிலும் நீராடி அனைத்து வளங்களையும் பெறலாம்; சகல தோஷங்களையும் போக்கிக் கொள்ளலாம். ராமர் தனது ஜடையைக் கழுவிக் கொண்ட தீர்த்தம் ஜடா தீர்த்தமாகும்.

இது தவிர கந்தமாதன பர்வதம் அருகே 8 தீர்த்தங்களும் திருப்புல்லாணி, தங்கச்சிமடம், தேவிபட்டினம், தனுஷ்கோடி ஆகிய இடங்களிலும் பல தீர்த்தங்கள் உள்ளன. தனுஷ்கோடி, ராமேஸ்வரத்திற்கு தென்புறம் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு முதலில் நீராடுவது மரபாகும். திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும் இந்தத் தலத்தில் பாடி அருளியுள்ளனர். அருணகிரிநாதர் இரு திருப்புகழ் பாடல்களை இத்தலத்தில் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் இராமநாதரும் பர்வதவர்த்தனி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். அப்பர் அருள்வாக்கு :                                                                                     “ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற, அவ் அரக்கர் கூடிப்                                       போர் வலம் செய்து மிக்குப் பொருதவர் தம்மை, வீட்டித்,                                     தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தைச்                                       சேர் மட நெஞ்சமே, நீ செஞ்சடை எந்தை பாலே”  

         நன்றி, வணக்கம்.

tags- ஆலயம் , அறிவோம்,  இராமேஸ்வரம், 

திருப்பதி-திருமலை ஆலயம் அறிவோம்! (Post No.9239)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9239

Date uploaded in London – –7 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 7-2-2021 அன்று ஒளிபரப்பாகிய உரை.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

“பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும் சொலி நின்று, பின்னரும்

பேசுவார் தமை உய்ய வாங்கி, பிறப்பு அறுக்கும் பிரான் இடம்-

வாச மா மலர் நாறு வார் பொழில் சூழ் தரும், உலகுக்கு எலாம்

தேசமாய்த் திகழும் மலைத் திருவேங்கடம் அடை, நெஞ்சமே”

வாழி திருமங்கை ஆழ்வார் திருநாமம்!  ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் பிரசித்தமானதும், பக்தர்களால் பூலோக வைகுந்தம் என்று கொண்டாடப்படுவதுமான, திவ்ய க்ஷேத்திரமான திருப்பதி-திருமலை ஆகும்.

 ஆந்திரபிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள இது சென்னையிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்திலும் ரேணிகுண்டாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இத்தலம் கிருத யுகத்தில் கருடாத்ரி என்றும் திரேதா யுகத்தில் விருஷபாத்ரி என்றும் துவாபர யுகத்தில் அஞ்சனாத்ரி என்றும் கலியுகத்தில் வேங்கடாத்ரி என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் யுகம் கடந்த பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இது என்பதை அறியலாம். வேங்கடம் என்றால் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்று பொருள். ஆகவே இங்குள்ள திருவேங்கடத்தானை தரிசித்த கணத்திலேயே பாவங்கள் சுட்டெரிக்கப்படும். திருமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள மூலவர் திருவேங்கடமுடையான் என்று பக்தர்கள் போற்றி வணங்கும்  ஸ்ரீநிவாசன் ஆவார். நின்ற திருக்கோலத்தில் இவர் பக்தர்களுக்குக் காட்சி தந்து அருள் பாலிக்கிறார். தாயார் பெயர் அலர்மேல் மங்கை, பத்மாவதித் தாயார்.

இங்குள்ள விமானம் ஆனந்த நிலய விமானம் ஆகும். இந்தத் தலத்தைப் பற்றி ஸ்கந்த புராணம், பத்ம புராணம் உள்ளிட்ட ஏராளமான புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் பல குறிப்புகளையும் வரலாறுகளையும் காண்கிறோம்.  ராமாவதாரத்தின் போது வேதவதியாகப் பிறந்த பெண் அவரை மணக்க விரும்பி தவம் செய்த போது, ராமர் ஏகபத்னி விரதம் கொண்ட காரணத்தினால், அடுத்த பிறவியில் உன்னை மணக்கிறேன் என்று அருள் பாலித்தார். அந்த வேதவதி கலியுகத்தில், சந்திர வம்சத்தைச் சேர்ந்த ஆகாச ராஜன் என்னும் மன்னன், புத்திரப் பேறு வேண்டி செய்த யாகத்தில், ஒரு பெண் மகவாகத் தோன்றி வளர்ந்து வந்தாள் என்றும் ஸ்ரீநிவாசன் அவரை மணந்தார் என்றும் புராண வரலாற்றில் காண்கிறோம். வராஹப் பெருமாள் ஹிரண்யாக்ஷணை வதம் செய்த பின்னர், இங்கு வந்து ஓய்வெடுத்தபடியால், இது ஆதிவராஹக்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்திருமலையில் ஸ்ரீநிவாசன் தானே விரும்பி இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து குடியிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் என்பது புராணச் செய்தி. கீழ்த்திருப்பதியில் பத்மாவதி தாயாரின் திருக்கோவில் அமைந்துள்ளது.  இவரை தரிசித்து விட்டு, இங்கிருந்து திருமலைக் கோவிலுக்குச் செல்ல வேண்டுமானால் ஏழுமலைகளைத் தாண்டியாக வேண்டும். அதனால் தான் பெருமானுக்கு ஏழுமலையான் என்று பெயர் ஏற்பட்டது. ரிஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி,கருடாத்ரி, நாராயணாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி என்று பெயரிடப்பட்டு அழைக்கப்படும் ஏழு மலைகளும் ஏழுதலை கொண்ட ஆதிசேஷன் வடிவத்தில் அமைந்திருப்பது ஒரு தனிச் சிறப்பு. மலைப் பாதையில் ஏறிச் சென்று வழிபடுவதை தொன்று தொட்டு பக்தர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்போது வாகன வசதிகள் உண்டு.  

கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. வெளியில் உள்ள முதல் பிரகார பிரதட்சிணத்தை சம்பங்கி பிரதட்சிணம் என்றும் இரண்டாவது பிரகாரத்தைச் சுற்றி வருவது விமான பிரதட்சிணம் என்றும், மூன்றாவது பிரகாரத்தின் பிரதட்சிணம் வைகுண்ட பிரதட்சிணம் என்றும் பெயர் கொண்டுள்ளன. தங்கத் தட்டால் வேயப்பட்ட த்வஜ ஸ்தம்பம் முதல் பிரகாரத்தில் உள்ளது. கர்பக்ரஹ நுழைவாயில் தங்கத்தால் வேயப்பட்டுள்ளதால் இது பங்காரு வாஹினி என அழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தங்களின் மஹிமை எல்லையற்ற ஒன்றாகும். பாபவிநாசன தீர்த்தம், ஆகாச கங்கை தீர்த்தம்,பாண்டவ தீர்த்தம், சக்ர தீர்த்தம், ஜாபாலி தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், குமாரதார தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம் ஆகியவை இயற்கை வனப்புடன் கூடிய பகுதிகளில் அமைந்துள்ளன; பக்தர்கள் இங்கு நீராடி பெரும் புண்ணியம் அடைகின்றனர். ஒவ்வொன்றும் தனித் தனி சிறப்பான வரலாற்றைக் கொண்டவை.

 இங்குள்ள கர்பக்ருஹத்தில் எரிகின்ற விளக்குகள் அணையா விளக்குகளாகக் காலம் கடந்து பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சுடர் விட்டு எரிவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். எத்தனை முறை தரிசனம் செய்தாலும் இன்னும் ஒரு முறை, இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்துடனேயே சர்வாலங்கார பூஷிதரான ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள், அங்கிருந்து நகர்வது, இன்றும் யாவரும் காணும் ஒரு காட்சியே. தரிசனம் முடிந்தவுடன் திருப்பதிக்கே உரிய, காப்புரிமை பெற்ற, விசேஷமான முறையில் தயாரிக்கப்பட்ட, லட்டு பிரசாதத்தைப் பெற்று பக்தர்கள் மனம் மகிழ்வது இந்தத் தலத்தின் இன்னொரு தனிச் சிறப்பாகும்.

திருப்பதியில் தின உற்சவம், மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம் என ஏராளமான உற்சவங்கள் உண்டு. சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம், தோமால சேவை, ஸர்வ தரிசனம், ஏகாந்த சேவை, வஸந்தோத்ஸவம், ப்ரஹ்மோத்ஸவம், கல்யாண உத்சவம் உள்ளிட்ட ஏராளமான சேவை மற்றும் உற்சவங்களைப் பற்றிய விவரங்களை அவ்வப்பொழுது அறிந்து கொண்டு அதற்கேற்ப நமது யாத்திரையை மேற்கொள்ளல் வேண்டும்.

பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் என பதினோரு ஆழ்வார்கள் 203 பாசுரங்களை அருளியுள்ள தலம் இது.   காலம் காலமாக கோடானு கோடி பக்தர்கள் வழிபடும் பத்மாவதி தாயாரும் திருவேங்கடத்தானும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திகிறோம். ச்ரிய காந்தாய கல்யாணநிதயே நிதயேதினாம் |

ஸ்ரீவேங்கடநிவாஸாய ஸ்ரீநிவாசாய மங்களம் ||               நன்றி வணக்கம்.

tags -திருப்பதி,திருமலை, ஆலயம், 

ஸ்ரீரங்கம் – ஆலயம் அறிவோம்! (Post.9057)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9057

Date uploaded in London – –20 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 20-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!    

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

மாவினை, வாய் பிளந்துகந்த, மாலை வேலை வண்ணனை, என் கண்ணனை,

வன் குன்றமேந்தி, ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர் ஏற்றை,

அமரர்கள் தம் தலைவனை,  அந் தமிழின் இன்பப் பாவினை, அவ் வடமொழியைப் பற்றார்கள் பயில, அரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை, நாவுற அழுத்தி, எந்தன் கைகள், கொய்ம் மலர் தூய்,

என்று கொலோ கூப்பும் நாளே?     

—குலசேகர ஆழ்வார் திருவடிகள் வாழியே!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் நூற்றியெட்டில் முதலாவதாகத் திகழும்

ஸ்ரீரங்க க்ஷேத்திரம் ஆகும். ஸ்வயமாக உருவாகிய ஏழு விஷ்ணு ஸ்தலங்களுள் இது மிக முக்கியமானதாக விளங்குகிறது. திருவரங்க திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்ற பல சிறப்புப் பெயர்கள் கொண்ட க்ஷேத்திரமும் இதுவே. கோயில் என்றாலே வைஷ்ணவ சம்பிரதாயத்தில் அது ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கத்தையே குறிக்கும்.

சிலப்பதிகாரம், அகநானூறு போன்ற சங்க இலக்கியத்தில் போற்றி புகழப்படும் தலமாக இருப்பதால் இதன் பழம் பெருமை நன்கு விளங்கும்.

ஸ்ரீரங்கம் கோவில் பிரம்மாண்டமானது. 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. அனைத்துப் பிரகாரங்களிலும் உள்ள கோபுரங்கள் மொத்தம் 21. திருச்சியில் உள்ள இந்தத் தலம் சென்னையிலிருந்து 324 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

புனிதமான காவிரி நதியின் வடகரையில் 3 மைல் தொலைவில் உள்ளது இது. காவேரி, கொள்ளிடத்திற்கு மத்தியில் இது அமைந்துள்ளது. காவேரியும் கொள்ளிடமும். ஸ்ரீரங்கத்தை மாலையிட்டது போல் சுற்றி வருகின்றன.

ஆதியில் ராமபிரானால் விபீஷணருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்ரீ ரங்கநாதர் அங்கேயே நிலைத்து நின்று அருள் பாலிக்கும் தலம் இது.

இந்த ஆலயம் விஜயரங்க சொக்கநாதரால் கட்டப்பட்டது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான  விபீஷணர் இப்பொழுதும் இலங்கையிலிருந்து இங்கு இரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

கோயிலின் வடபுறத்தில் தாயார் சந்நிதியும் ராமர் கோவிலும் உள்ளன.

இந்தக் கோயிலில் உள் விமானம் பிரணவ ரூபமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். அந்த விமானத்தில் பர வாஸுதேவருடைய சிலா விக்ரஹம் இடுப்பு வரையிலும் காணப்படுகிறது. இந்த விக்ரஹம் முழுவதும் வளர்ந்து முழுமையாக நிற்கும் நாளில் கலி யுகம் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.   சக்கரத்தாழ்வார், கோயிலுக்கு நிருதி மூலையில், அமைந்துள்ளார்.

தாயாரின் திரு நாமம் அரங்க நாயகி. தாயார் சந்நிதியின் மூல ஸ்தானத்தில்

இரண்டு தாயார்களின் விக்ரஹங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

துலுக்க நாச்சியார் அரங்கனின் மீது ப்ரேமை கொண்டு முக்தியடைந்ததாக வரலாறு ஒன்றும் உண்டு.

இங்கு தான், தாயார் கோவிலின் முன் புறம், அழகிய சிங்கர் முன்னிலையில் உள்ள ஓர் மண்டபத்தில், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றினார். கம்பர் மண்டபம் என்ற பெயருடன் இது விளங்குகிறது.

வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஸ்ரீரங்கநாதருக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். ஸ்ரீரங்கத்திற்கு வடபால் கொள்ளிடக்கரை ஓரமாக தசாவதாரப் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்குக் கிழக்குத் திக்கில் சிங்கப் பெருமாள் கோவிலும் வாயு மூலையில் தேசிகன் கோவிலும் உள்ளன.

பத்து ஆழ்வார்களும் ஆண்டாளும் அரங்கநாதரைப் போற்றிப் பாடிய பாசுரங்கள் மொத்தம் 247.

    உடையவர் என்றும் எம்பெருமானார் என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர், யதீந்திரர் என்றும் பல்வேறு நாமங்களால் சிறப்புற அழைக்கப்பெறும் ஸ்ரீ ராமானுஜர் ஆதி சேஷனின் அபராவதாரமாகக் கருதப்படுபவர்.

பூமன்னு மாது பொருந்திய மார்பன் – புகழ் மலிந்த

பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் – பல்கலையோர்

தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்

நாம் மன்னி வாழ நெஞ்சே, சொல்லுவோம் அவன் நாமங்களே

என்று பக்தர்கள் பரவசமாய் போற்றித் துதிக்கும் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கம் கோவிலுக்குத் தென்பால் உள்ள, மொட்டை கோபுரத்தின் மீது நின்று தான், ஜனங்களுக்கு உபதேசம் செய்ததாகக் கூறப்படுகிறது. அரங்கநாதரின் ஆணைப்படி ஐந்தாவது பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராமானுஜரின் சந்நிதி உள்ளது. ஆனால் 120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் தன் மெய்யுடலுடன் இன்றும் அங்கு இருந்து அருள் பாலிக்கிறார். அவரது உடல் ம்ருத சஞ்சீவினி மந்திரம் மூலம் நிலைத்திருக்கும் தன்மையுடன் இன்றும் உயிருடன் அந்த இடத்தில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். சந்தனமும் குங்குமமும் மட்டுமே இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

சுக்ர தோஷம் உடையவர்கள் அரங்கநாதரை தரிசித்தால் அந்த தோஷம் நீங்கி விடும் என ஜோதிட சாஸ்திரம் உறுதி கூறுகிறது. அரங்கநாதர் ஏற்கும் சந்தனமே சுக்ரனுக்கு உகந்த ஒன்று. அரங்கநாதர் பள்ளி கொள்வது வெண்மையான திருப் பாற்கடலில். வெண்மையான அனைத்தும் சுக்ரனுக்குப் பிடித்தவை. சுக்ரனுக்கு உகந்த பறவை கருடன். ஸ்ரீரங்கத்தில் பிரம்மாண்டமான கருட வாகனம் உள்ளது. ஸ்ரீரங்கத்தின் இன்னொரு பெயர் போக மண்டபம். போக காரகன் சுக்ரனே. இப்படி இன்னும் ஏராளமான அபூர்வமான உண்மைகள் சுக்ரனுக்கும் இந்த ஸ்தலத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன! ஆகவே சுக்ர தோஷத்தை நீக்க அரங்கநாதர் வழிபாடே சிறந்த வழிபாடாகும்!

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் அரங்கநாதர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்நாராயணா என்னும் நாமம்!      

நன்றி. வணக்கம்

tags- ஸ்ரீரங்கம் , ஆலயம்,