கேட்பதைக் கொடுக்கும் காமதேனு! (Post No.6981)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

 Date: 18 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –14-44

Post No. 6981

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

மாலைமலர் 7-9-19 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அனைத்து தெய்வங்களும் ஐக்கியம் : கேட்பதைக் கொடுக்கும் காமதேனு!

ச.நாகராஜன்

மனித வாழ்வில், மனிதர்கள், யாரானாலும் சரி, தமக்கு வேண்டிய பலவற்றை அடைய விரும்புகின்றனர்.

செல்வம் சேர வேண்டும், நல்ல உத்யோகம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், புத்திர பாக்கியம் வேண்டும், சொந்த வீடு ஒன்று வேண்டும், நல்லறிவு மேலோங்க வேண்டும், நல்லோர் இணக்கம் வேண்டும், சுற்றம் சூழ சிறப்பாக இருக்க வேண்டும், என்று இப்படிப் பல விதமான மானுடத் தேவைகள் உண்டு.

அதை அடைய உள்ள பல வழிகளில் ஈடுபாட்டுடனும் சிரத்தையுடனும் செய்யும் காமதேனு வழிபாடு சிறந்த ஒன்று. எளிதில் செய்யக் கூடியதும் கூட!

காமதேனு தெய்வீகப் பசு. வேண்டியதைத் தரும் அற்புதமான தேவதை!

அதைப் பற்றிய ஏராளமான வரலாறுகளை வேதங்கள், ராமாயண மஹாபாரத இதிஹாசங்கள், புராணங்கள், பல மொழிகளில் உள்ள இலக்கியங்கள் ஆகியவற்றின் வாயிலாகக் காண்கிறோம்.

காமதேனுவில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய பெரும் பேறை அடைகிறோம்.

காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.

முன்னொரு காலத்தில் கைலாஸத்திற்குச் சென்ற சுரபி, நெடுங்காலம் பிரம்மாவை நோக்கித் தவம் புரிய, மனம் மகிழ்ந்த பிரம்மா சுரபிக்கு வேண்டுவதைக் கொடுத்தருளும் சக்தியைக் கொடுத்து மூவுலகுக்கும் மேலான கோலோகத்தில் தேவதையாக இருப்பாய் என்று கூறி அருளினார்.

    பல காமதேனுக்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் புராண இலக்கியத்தில் இருப்பதால் காமதேனு மூலம் உருவாகிய இன்னும் பல காமதேனுக்கள் இருப்பதை அறிய முடிகிறது.

சுரபி கிழக்கு திசையிலும் ஹம்ஸிகா தெற்கு திசையிலும் சுபத்ரா மேற்கு திசையிலும் தேனு வட திசையிலும் இருந்து அருள் பாலித்து வருகின்றன.

         வசிஷ்டர் ஆசிரமத்திற்கு ஒரு முறை தன் பெரும்படையுடன் வந்த விசுவாமித்திர மஹராஜா அங்கிருந்த காமதேனு எது கேட்டாலும் அனைவரும் திருப்தியுறும் வகையில் தருவதைக் கண்டு ஆச்சரியமுற்றார். அதை வசிஷ்டரிடம் கேட்ட போது அவர் தர மறுத்தார்.

     உடனே விசுவாமித்திரர் அதைக் கவர்ந்து செல்ல முயன்று தன் படையை ஏவினார். பிரம்மாண்டமான சேனையை எதிர் கொண்ட வசிஷ்டர் காமதேனுவைக் குறிப்பால் நோக்க, அதுவே ஒரு பெரும்படையை உருவாக்கி விசுவாமித்திரரையும் அவர் சேனையையும் துரத்தி அடித்தது. அரும் தவசக்தியின் பலனை உணர்ந்து அதைப் பெற விரும்பிய விசுவாமித்திரர் தன் ராஜ்யத்தைத் துறந்து தவம் மேற் கொண்டு ரிஷியானார்.

    அப்படிக் காமதேனுவை கவர முயல்கையில் அவருக்கு உதவி செய்தவரே மறு ஜன்மத்தில் தேவ விரதனாகப் பிறந்து தன் அரிய சபதத்தால் பீஷ்மர் என்ற பெயரைப் பெற்றார். தன் சாபத்தை நிவர்த்தி செய்தார்.

     காமதேனுவின் அம்சமாகவே பசுக்கள் விளங்குவதால் அவற்றிற்கும் இயல்பான தெய்வீகத் தன்மை அமைந்து விடுவதால் அவற்றை பிரத்யட்சமாக நேரில் கண்டு வணங்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கிறது.

    பசுவைப் பற்றி வாயு புராணம் இப்படி விவரிக்கிறது :

பசுவின் பற்களில் (புயல், மின்னல் ஆகியவற்றிற்கான தேவதையான) மருத்தும்,  நாக்கில் சரஸ்வதியும்,குளம்பில் கந்தர்வர்களும், குல சர்ப்பங்கள் குளம்பின்  முன்புறமும், சத்வ ரிஷிகள் மூட்டுகளிலும், சூரிய சந்திரர் இரு கண்களிலும் உள்ளனர்.

    நட்சத்திரங்கள் திமிலிலும், யமன் வாலிலும், தீர்த்தங்கள் அது நடக்கும் போது உராய்ந்து செல்லும் காற்றிலும், கங்கையும் சப்த தீவுகளுடன் கூடிய நான்கு சமுத்திரங்களும் அதன் கோமியத்திலும், ரிஷிகள் அதன் உடல் முழுவதுமும்,  லட்சுமி அதன் சாணத்திலும் உள்ளனர்.

   எல்லா வித்தைகளும் அதன் மயிர்க்கால்களிலும், உத்தராயணமும் தட்சிணாயனமும் அதன் உடலின் தோல் மற்றும் மயிர்க்கால்களிலும் உள்ளன.

     அது நடக்கும் போது அதைச் சூழ்ந்து தைரியம், பொறுமை, மன்னித்தல், புஷ்டி,புத்தி, நினைவாற்றல், மேதை, பரம சந்ததி ஆகியவற்றிற்கு உரிய தேவதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அனைத்து தேவர்களும் அதற்கு முன்னால் சென்று கொண்டே இருக்கின்றனர். அது மாங்கல்ய தேவதை.”

பசுவின் நான்கு கால்களும் நான்கு வேதங்கள் எனக் கூறப்படுகிறது.

பசுவைத் துன்புறுத்தவே கூடாது என்று வேதங்கள் சுமார் நூறு இடங்களில் கட்டளை இடுகின்றன.

    குமரேச சதகம் “காலியின் கூட்டத்திலும்” (பசு மந்தை) என்றும், அறப்பளீசுர சதகம், “பால் குடத்திடையிலே” என்றும் கூறி, லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் ஒன்றாக பசுவைச் சுட்டிக்காட்டிச் சிறப்பித்துக் கூறுகின்றன.

காமதேனுவின் ஆலயங்கள் பல.

நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் ஆலயம் பற்றிய சுவையான வரலாறை லிங்க புராணம் கூறுகிறது.

ஒரு முறை இமயமலையில் மான் போல வலம் வந்து கொண்டிருந்த சிவபிரான் தன் இயல்பான உருவத்தைக் கொள்ள, ஒரு ஒளிப்பிழம்பு பிரபஞ்சத்தை மேலும் கீழுமாக ஊடுருவிப் பரந்தது.

பிரம்மா அதன் உச்சியைப் பார்க்க மேலே சென்றார். அதன் அடியைப் பார்க்க விஷ்ணு கீழே சென்றார். மேலே சென்ற பிரம்மா தான் ஒளியின் உச்சியை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று விட்டதாகக் கூறினார்.

இதைக் கேட்ட விஷ்ணு தெய்வீகப் பசுவான காமதேனுவிடம் இது உண்மை தானா என்று கேட்டார்.

காமதேனுவோ அது உண்மை இல்லை என்பதை தன் வாலை மறுக்கும் விதமாக ஆட்டிக் கூறியது. ஆகவே காமதேனு புனிதமானதாகக் கருதப்படுவதோடு அனைத்துக் கோவில்களிலும் வழிப்பாட்டுக்குரிய இடத்தைப் பெறுகிறது.

அதன் வாலும் புனிதமானதே என்பதால் பசுவின் வாலைத் தொட்டுத் பக்தர்கள் தம் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.

பசுபதி தலங்கள் மொத்தம் ஐந்து. ஆவூர், நேபாளம், திருக்கொண்டீசுரம், பந்தணைநல்லூர் மற்றும் கருவூர் ஆகியவையே அந்தத் தலங்களாகும்.

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீச்சுரம் பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட சக்திவனத்தில் அமைந்துள்ள ஒரு தலமாகும்.. அம்பிகையின் பெருந்தவத்தின் போது அவருக்குப் பணிவிடை செய்ய காமதேனு தன் மூத்த பெண்ணான பட்டியை அங்கு அனுப்பியது.

   பட்டி தானும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அங்கு ஒரு தீர்த்தத்தையும் உருவாக்கி பூஜை செய்து வந்தாள். இதனால் அந்த இடத்திற்கு பட்டீச்சுரம் என்ற பெயரும் அந்த லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் ஏற்பட்டன.

   எல்லையற்ற மகிமை கொண்ட இந்தத் தலத்தைப் பற்றி பட்டீச்சுர மகாத்மியம் விளக்குவதைப் படிப்போர் பிரமிப்பை அடைவர்.

விசுவாமித்திரர் இங்கு தான் பிரம்ம ரிஷியாகத் தவம் புரிந்தார்.

ராவணனைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் (பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம்) ராமேஸ்வரத்திலும்,வீரஹத்தி தோஷம் வேதாரண்யத்திலும் சாயாஹத்தி தோஷம் பட்டீச்சுரத்திலும் அவரது வழிபாட்டால் போயின.

கொங்கு நாட்டு சிவஸ்தலமான கருவூர் எனப்படும் கரூரில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் கோவில் பிரம்மாவும் காமதேனுவும் வழிபட்ட தலமாகும்.

   இங்குள்ள சிவலிங்கத்தைக் காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில் காமதேனு வழிபட்ட தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது.

    காமதேனு வழிபட்ட இன்னொரு தலம் தூங்கானை மாடம் என்று பழைய காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய பெண்ணாகடம் ஆகும். விருத்தாசலம் அருகே உள்ள  இது தேவ கன்னியரும், காமதேனுவும் இந்திரனின் யானையான ஐராவதமும் (பெண்+ஆ+கடம்) வழிபட்ட தலமாகும்.

   இப்படி காமதேனு வழிபட்ட தலங்கள் என திருவீழிமலை உள்ளிட்ட இன்னும் பல தலங்கள் உள்ளன.

   இந்தத் திருத்தலங்களின் வரலாறுகள் மிக்க சுவையானவை. இவற்றை விரிப்பின் பெருகும்.

    இந்தத் தலங்களில் சென்று வழிபடுவோர் அடையும் அற்புதமான ஆன்மீக சக்தி உள்ளிட்ட நலன்களை எளிதில் உணரலாம்.

   வாஸ்து சாஸ்திரம் உள்ளிட்ட பல்வேறு சாஸ்திரங்களும் காமதேனுவை இல்லத்தில் வைப்பதே அனைத்து நலங்களையும் அருளும் என எடுத்துரைக்கின்றன.

    அழகிய தெய்வீகப் பெண் முகத்துடனும் உடல் முழுவதும் தேவதைகள் இருக்கவும் உள்ள காமதேனுவின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் அனைத்துத் தடைகளும் நீங்கும்; செல்வம் பெருகும்.

   கன்றுடன் கூடிய காமதேனுவின் விக்ரஹம் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களிலும் கிடைக்கிறது. வசதிக்கும் இஷ்டத்திற்கும் தக அதையும் பூஜை அறையில் வைக்கலாம்.

   அனைத்துப் பேறுகளையும் இவை அருள்கின்றன; ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களும் காமதேனுவின் அருளினால் நீங்கும்.

    இந்திய இயலில் நிபுணரான மாடெலெய்ன் பயார்டெ (Madeleine Biardeau) காமதேனு என்பது புனிதப் பசுவின் அடையாளப் பெயராகும் என்று கூறுகிறார்.

    காமதேனுவின் ஓவியத்தைப் பார்த்து வியந்த ஃப்ரெடெரிக் எம்.ஸ்மித் (Frederick M. Smith),  காமதேனு, “பிரசித்தமான என்றுமுள்ள இந்தியக் கலையின் சித்திரம்” என்று புகழ்கிறார்.

    இன்றைய அறிவியல் உலகில் பொருளாதாரம் செழிக்க பசுச் செல்வம் இன்றியமையாத ஒன்று என்பதை பொருளாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். நிலத்தின் இயற்கைத் தன்மையைக் காக்க வல்லது பசுவே.

    பஞ்சகவ்வியம் எனப்படும் பசும்பால், கோமியம், சாணம். நெய், தயிர் ஆகியவை கலந்த கலவை கோவிலில் அபிஷேகப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

    பஞ்சகவ்யத்தைப் பயிர்களுக்குச் சோதனையாகக் கொடுத்து பயன்பெறலாம் என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதை இயற்கை விவசாயத்தில் ஒரு இடு பொருளாக ஆக்கியதையும் நாம் அறிவோம்.

     பசுவின் சாணம் ரேடியேஷன் எனப்படும் கதிரியக்கத் தீமைகளைத் தடுக்கும் ஒன்று. அலஹாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் கே.என். உத்தம் பசுஞ்சாணமானது காமா, பீட்டா, ஆல்பா ஆகிய மூன்று கதிர் வீச்சையும் தடுக்க வல்லது என்று குறிப்பிடுகிறார். இவற்றில் காமா கதிர்கள் தாம் ரேடியேஷன் எனப்படும் தீங்கு பயக்கும் கதிரியக்கத்தை உண்டாக்குபவை.

    ரஷியாவில் செர்னோபிலில் ஏற்பட்ட தீங்கு பயக்கும் கதிரியக்க விபத்தைப் பற்றி உலகினர் அனைவரும் நன்கு அறிவர்.

    ஆக அறிவியல் ரீதியாகவும் பசு உலகினரைக் காக்கும் தெய்வ மாதாவாக இலங்குவதைப் புரிந்து கொள்ளலாம்.

    பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது (யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை – திருமூலர்) எல்லாவற்றிலும் சிறந்த புண்ணியம் என அறநூல்கள் கூறுகின்றன.

    காமதேனுவை உளமார வழிபட்டால் செல்வம் செழிக்கும், தடைகள் நீங்கும், வளம் ஓங்கும், புது வீடு அமையும், திருமணம் வெற்றி பெறும், புத்திரப் பேறு உண்டாகும், எல்லா நலன்களும் அமையும் என்று உணர்ந்து அதை வழிபடுவோமாக!

***

கரூவூர் ஆநிலை- சுவையான வரலாறு! (Post No.5197)

Written by S NAGARAJAN

 

Date: 9 JULY 2018

 

Time uploaded in London –   7-34 AM (British Summer Time)

 

Post No. 5197

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கொங்குமண்ட  சதகம்

பிரமனின் படைப்புத் தொழிலை காமதேனு செய்த தலம் கருவூர் திரு ஆநிலை

.நாகராஜன்

கருவூர் என்பது கொங்கு நாட்டுத் தலங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

கரூவூர் ஆநிலை என்று வழங்கப்படும் இதன் வரலாறு சுவையான ஒன்று. இது பாடல் பெற்ற கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழினுள் ஒன்று. திருஞானசம்பந்தரின் பதிகம் பெற்ற தலம் இது.

கொங்கு தேசத்தில் இருபத்துநான்கு நாடுகள் உள்ளன.

அவையாவன: பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொன்கலூர் நாடு, ஆறை நாடு, வாரக்கனாடு, திருவாவினன்குடி நாடு, மண நாடு, தலையனாடு, தட்டய நாடு, பூவாணியனாடு, ஆரையனாடு, ஒடுவங்க நாடு, வடகரை நாடு, கிழங்கு நாடு, நல்லுருக்கனாடு, வாழவந்தி நாடு, அண்ட நாடு, வெங்கால நாடு, காவடிக்கனாடு, ஆனைமலை நாடு, ராசிபுர நாடு, காஞ்சிக்கோயில் நாடு, குறும்பு நாடு ஆகியவையாகும்.

இவற்றில் கருவூர் ஆநிலை வெங்கால நாட்டில் உள்ளது.

திருஆநிலை என்று புகழப்படும் இது சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொள்ளும் ஐந்து பதிகளுள் ஒன்றாகும். கருவூர்த் தேவர் பிறந்த இடம். இறைவனின் திருநாமம் பசுபதிநாதர். இறைவி : சுந்தரவல்லி.

காமதேனு வழிபட்டதால் கோவிலுக்கு திருஆநிலை என்று பெயர் ஏற்பட்டது

இதைப் பற்றி கொங்கு மண்டல சதகம் 11ஆம் பாட்டில் புகழ்ந்துரைக்கிறது இப்படி:-                                                            

 

வீழுஞ் சடையார் பசுபதி யீச்சுரர் வெண்ணெய்மலை                 

சூழும் புகழொடு தோற்றிய நாடொழு தர்ச்சிக்கநீ

ராழுங் கடல்புவி யண்டமெ லாமுற வண்டர்தொழ

வாழும் பசுவுற் பவமான துங்கொங்கு மண்டலமே

 

 

இதன் பொருள் : பசுபதி ஈஸ்வரரைப் பூஜித்து கடல் சூழ்ந்த பூமியையும் மற்றுமுள்ள அண்டங்களையும் பிரம்மாவைப் போல படைத்தல் தொழிலைச் செய்த காமதேனு பிறந்தது வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர். அது உள்ளது கொங்கு மண்டலமே.

 

கருவூரின் வரலாறு : ஒரு காலத்தில் காமதேனு கருவூர்ச் சிவபெருமானைப் பூசித்து வணங்கி வந்தது. பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்வதால் கர்வம் மிகப் பெற்றார். அதை அடக்க,  பிரமதேவனைப் போல படைக்கும் ஆற்றலைப் பெறுவாய் என சிவபிரான் காமதேனுவிடம் திருவாய்மலர்ந்தருள, அவ்வாறே காமதேனு அந்த ஆற்றலைப் பெற்று சராசரங்களை முன்போலப் படைத்தது. அக்கருவூருக்கு வடதிசையில் புசிப்பு நிமித்தம் வெண்ணெய் மலையென ஒன்று வகுத்துப் பூசித்துக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த தலத்திற்கு திரு ஆநிலை என்று பெயர் வழங்கி வரலாயிற்று.

 

இந்தத் தலத்தைப் பற்றி கரூர்ப் புராணத்தில் வரும் பாடல் வருமாறு:-

வருதிநீ சுரபி தொல்லை மறையவன் போல வேலை        

பொருதிரை யாடை ஞாலத் தெமையருச் சனைபு ரிந்து                   

 தருகுதி சராச ரங்க ளனைத்தையு மென்முன் றாழா              

விரைமலர் தூவித் தேநு விடையோடும் போயிற் றன்றே               

  • கரூர்ப் புராணம்

கொங்கு மண்டலச் சதகம் போற்றும் திரு ஆநிலை இன்று கரூர் என்று புகழ் பெற்று விளங்குகிறது.

***

 

 

மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்

_Akshayapatra, sun god

Picture of Sun God giving Akshaya Patra to Yudhistra.

மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்

By Santanam Swaminathan

Post Number 746 dated 15th December 2013

சாது சந்யாசிகளுக்கும் ,ஏழை எளியவர்களுக்கும் தெய்வீக சக்தியால் விருந்து கொடுத்த சம்பவங்கள் எல்லா மத நூல்களிலும் இருக்கின்றன. இதோ எட்டு சுவையான சம்பவங்கள்:

தெய்வீக விருந்து 1
பஞ்ச பாண்டவர்களும் திரவுபதியும் 12 ஆண்டுகளுக்கு காட்டில் வசிக்க நேரிட்டது. அப்போது பல முனிவர்கள், யாத்ரீகர்கள் முதலியோர் அவர்களைக் காண வந்தனர். வீட்டுக்கு வந்தோரை ‘சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்று சொல்லுவது பாரதப் பண்பாடு அல்லவா? காட்டில் ஏது உணவு? யுதிஷ்டிரருக்கு தர்ம சங்கடமாகப் போனது. தௌம்யர் என்பவர் சூரிய பகவானைப் பிரார்த்திக்கும்படி சொன்னார். அவ்வாறே தர்மரும் (யுதிஷ்டிரர்) செய்தார். சூரிய பகவான் வந்து அக்ஷய பாத்திரத்தை அளித்தார். திரவுபதி அதைக் கொண்டு குறைவில்லாத விருந்து படைத்தார். அக்ஷய என்றால் ‘அழிவில்லாத’, குறைவில்லாத’ என்று பொருள்.(ஆதாரம்: மஹாபாரதம்)

தெய்வீக விருந்து 2
ஏசு பிரான் கலீலி கடலைத் தாண்டி வறண்ட பகுதிக்குச் சென்றார். அவர் செய்த அற்புதச் செயல்களால் ஈர்க்கப்பட்ட 5000 மக்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர் சென்ற இடமோ வறண்ட பிரதேசம். அவருக்கு நெருக்கமான சீடர்கள் அவரிடம் வந்து 5000 பேரையும் அவரவர் ஊருக்குப் போகும்படி சொல்லுங்கள், நம்மிடம் உணவு இல்லை என்றனர். ஏசுவோ, எவ்வளவு உணவு இருக்கிறது ? என்று கேட்டார். இரண்டு மீன்களும் ஐந்து ரொட்டிகளும் தான் உள்ளன என்றனர். அதைக் கொண்டுவர கட்டளையிட்ட ஏசு, எல்லோருக்கும் உணவு பரிமாறத் தொடங்கினார். எல்லோருக்கும் வயிறு நிறைந்தது. சீடர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தபோது 12 கூடை மீன்களும் ரொட்டியும் மீதம் இருந்தன!!(ஆதாரம்: பைபிள் புதிய ஏற்பாடு)
feeding5000coloring

Jesus feeding 5000.

தெய்வீக விருந்து 3
மகரிஷி வசிஷ்டருக்கும், மாமன்னன் விஸ்வாமித்ரருக்கும் எப்போதும் மோதல்தான். ஒருமுறை காட்டில் இருந்த வசிட்டரைக் காண விஸ்வாமித்ரர் வந்தார். மாமன்னன் வந்தால் உபசரிக்க வேண்டுவது கடமை அல்லவா? வசிட்டரும் அன்போடு உபசரித்து, மன்னனின் படை முழுதுக்கும் அறுசுவை உணவு படைத்தார். விசுவாமித்திரருக்கு வியப்பு தாங்கவில்லை. நினைத்ததை எல்லாம் வழங்கும் காமதேனு என்ற தெய்வீகப் பசுதான் வசிட்டருக்கு உதவியது என்பதைக் கேட்டு, அதைத் தனக்குக் கொடுக்குமாறு கேட்டார்.

வசிட்டர் அதற்கு மறுக்கவே, பலவந்தமாக காமதேனுவைக் கைப்பற்றினார். வசிட்டர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காமதேனுவின் உடலில் இருந்து நூற்றுக கணக்கான வீரர்கள் வெளியே வந்து விசுவாமித்திரரின் படைகளைத் துவம்சம் செய்துவிட்டனர்(ஆதாரம்: ராமாயணம்)

தெய்வீக விருந்து 4
இஸ்ரேலியர்களை மோசஸ் அழைத்துச் சென்ற பாலைவனப் பகுதியில், ‘மன்னா’ என்ற உணவு வானத்தில் இருந்து கிடைத்ததாக பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகிறது. நாற்பது ஆண்டுக் காலத்துக்கு இந்த உணவின் மூலம் அவர்கள் உயிர் வாழ்ந்தனர். ‘மன்னா’ என்பது எகிப்திய ‘மென்னு’ ( உணவு) என்ற சொல்லுடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆனால் ‘அன்னம்; என்பதே ‘மன்ன’ என்று திரிபடைந்ததாக நான் ஏற்கனவே “பைபிளில் சம்ஸ்கிருதம்” என்ற எனது ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். !!(ஆதாரம்: பைபிள் பழைய ஏற்பாடு)

moses

தெய்வீக விருந்து 5
ராமனைக் காண காட்டிற்கு வந்த பரதன், பரத்வாஜர் என்னும் முனிவரைத் தரிசிக்க அவரது ஆஸ்ரமத்துக்கு வந்தான். எல்லோரும் எங்கே? என்று முனிவர் கேட்டார். நான் பெரும் படையுடன் வந்து இருக்கிறேன். படைகளை அழைத்துவந்தால் செடி, கொடிகளூக்குச் சேதம் வருமே என்று கருதி தொலைவில் நிறுத்தினேன் என்றார். அவருக்கு முனிவர் அறுசுவை விருந்து படடைத்தார். புறச்சசூழல் பாதுகாப்பின் முன்னோடி பரதன்! ராமன் இலங்கையில் இருந்து திரும்பிப் போகையில், பரத்வாஜ முனிவரை சந்தித்தான். அவர் தனது மந்திர சக்தியால் அங்கிந்திருந்த அனைவருக்கும் உணவு கொடுத்தார்.!(ஆதாரம் வால்மீகி ராமாயணம்)

தெய்வீக விருந்து 6
மணிமேகலை என்பவர் மாதவியின் மகள். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அந்தப் பெண்ணிடம் அமுத சுரபி என்னும் மந்திரக் கலயம் கிடைத்தது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பதை அறிந்த மணிமேகலை, அமுத சுரபி மூலம் சிறைச் சாலை கைதிகளுக்கு உணவு படைத்தார். (ஆதாரம்:மணிமேகலை)

தெய்வீக விருந்து 7
திருவிளையாடல் புராணத்தில் வரும் நிகழ்ச்சி இது. வேளாளக் குடியில் பிறந்த தரும சீலை என்பவர் மதுரையில் இருந்து எல்லோருக்கும் உணவு வழங்கி வந்தார். அவருடைய பெருமையை பாண்டிய நாடு முழுதும் அறியவேண்டி சிவபெருமான் ஒரு லீலை செய்தார். அவர்கள் நிலத்தில் விளைச்சலைக் குறைத்தார். அப்படியும் அந்த தம்பதிகள், கடன் வாங்கி தருமச் சாப்பாடு போட்டனர். கடன்காரர்கள் வந்து மொய்க்கவே சிவன் கோவிலுக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அங்கே அவர் முன் தோன்றிய ஆலவாய் அண்ணல் சிவபெருமான், ‘வீட்டுக்குப் போய் பரண் முழுதும் இருக்கும் நெல்லை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்யுங்கள்’ என்றார். அது எடுக்க எடுக்க வளரும் ‘உலவாக் கோட்டை’ என்றும் சிவன் அருளினார்.( ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

kamadhenu

Picture of Divine Cow Kamadhenu

தெய்வீக விருந்து 8
மதுரையின் மஹாராணி மீனாட்சிக்கும் சிவனின் அவதாரமான சுந்தரபாண்டியனுக்கும் திருமணம் தடபுடலாக நடந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டனர். ஆனால் இன்னும் ஆயிரக கணக்கான மக்களுக்கான உணவு அப்படியே மிஞ்சி இருந்தது. சமையல்காரகளுக்கு மனக் கஷ்டம். அன்னை மீனாட்சியிடம் முறை இட்டனர். அவளோ அன்புக் கணவர் சுந்தரேஸ்வரிடம் முறையிட்டாள். ஒரு புன்சிரிப்பு முகத்தில் தவழ்ந்தது. பக்கத்தில் இருக்கும் குண்டோதரனை அழைத்து ‘போய், சாப்பீட்டு வா’ என்றார். அவன் சமையல் அறையில் நுழைந்த அடுத்த நிமிடம் அறையே காலி!!
‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்று பாடிய வண்ணம், அவன் மேலும் உணவு கேட்டான்! மலைத்துப் போய்விட்டனர் அரண்மனை சமையல்காரர்கள். மீண்டும் மீனாட்சியிடம் உதவியை நாடி ஓட, அவர் மீண்டும் சிவனிடம் ஓடினார். அவர் அன்னபூரணியை மனதில் நினைத்த அடுத்த நிமிடம் பூமியில் இருந்து சாப்பாடு வந்தது. இப்போது அவனுக்கு தாகம் வரட்டியது. ‘தண்ணீர் தண்ணீர்’ என்று அலறவே அங்கிருந்த நீர் எல்லாம் போதவில்லை. குண்டோதரனை அழைத்த சிவ பெருமான், ‘வை’ ‘கை’ என்று சொல்லி அவன் கைகளைக் கீழே வைக்கச் சொன்னார். அதில் இருந்து ‘வைகை’ நதி பீறிட்டெழுந்தது. அவனும் தாக சாந்தி செய்துகொண்டான். அவன் சாப்பிட்ட அன்னக் குழி மண்டபம் இன்றுவரை மதுரை கோவில் அருகே உள்ளது.(ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

Contact swami_48@yahoo.com