மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்

_Akshayapatra, sun god

Picture of Sun God giving Akshaya Patra to Yudhistra.

மோசஸ், ஜீஸஸ், திரவுபதி, வசிஷ்டர்—தெய்வீக விருந்துகள்

By Santanam Swaminathan

Post Number 746 dated 15th December 2013

சாது சந்யாசிகளுக்கும் ,ஏழை எளியவர்களுக்கும் தெய்வீக சக்தியால் விருந்து கொடுத்த சம்பவங்கள் எல்லா மத நூல்களிலும் இருக்கின்றன. இதோ எட்டு சுவையான சம்பவங்கள்:

தெய்வீக விருந்து 1
பஞ்ச பாண்டவர்களும் திரவுபதியும் 12 ஆண்டுகளுக்கு காட்டில் வசிக்க நேரிட்டது. அப்போது பல முனிவர்கள், யாத்ரீகர்கள் முதலியோர் அவர்களைக் காண வந்தனர். வீட்டுக்கு வந்தோரை ‘சாப்பிட்டுவிட்டுப் போங்கள்’ என்று சொல்லுவது பாரதப் பண்பாடு அல்லவா? காட்டில் ஏது உணவு? யுதிஷ்டிரருக்கு தர்ம சங்கடமாகப் போனது. தௌம்யர் என்பவர் சூரிய பகவானைப் பிரார்த்திக்கும்படி சொன்னார். அவ்வாறே தர்மரும் (யுதிஷ்டிரர்) செய்தார். சூரிய பகவான் வந்து அக்ஷய பாத்திரத்தை அளித்தார். திரவுபதி அதைக் கொண்டு குறைவில்லாத விருந்து படைத்தார். அக்ஷய என்றால் ‘அழிவில்லாத’, குறைவில்லாத’ என்று பொருள்.(ஆதாரம்: மஹாபாரதம்)

தெய்வீக விருந்து 2
ஏசு பிரான் கலீலி கடலைத் தாண்டி வறண்ட பகுதிக்குச் சென்றார். அவர் செய்த அற்புதச் செயல்களால் ஈர்க்கப்பட்ட 5000 மக்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். அவர் சென்ற இடமோ வறண்ட பிரதேசம். அவருக்கு நெருக்கமான சீடர்கள் அவரிடம் வந்து 5000 பேரையும் அவரவர் ஊருக்குப் போகும்படி சொல்லுங்கள், நம்மிடம் உணவு இல்லை என்றனர். ஏசுவோ, எவ்வளவு உணவு இருக்கிறது ? என்று கேட்டார். இரண்டு மீன்களும் ஐந்து ரொட்டிகளும் தான் உள்ளன என்றனர். அதைக் கொண்டுவர கட்டளையிட்ட ஏசு, எல்லோருக்கும் உணவு பரிமாறத் தொடங்கினார். எல்லோருக்கும் வயிறு நிறைந்தது. சீடர்கள் அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தபோது 12 கூடை மீன்களும் ரொட்டியும் மீதம் இருந்தன!!(ஆதாரம்: பைபிள் புதிய ஏற்பாடு)
feeding5000coloring

Jesus feeding 5000.

தெய்வீக விருந்து 3
மகரிஷி வசிஷ்டருக்கும், மாமன்னன் விஸ்வாமித்ரருக்கும் எப்போதும் மோதல்தான். ஒருமுறை காட்டில் இருந்த வசிட்டரைக் காண விஸ்வாமித்ரர் வந்தார். மாமன்னன் வந்தால் உபசரிக்க வேண்டுவது கடமை அல்லவா? வசிட்டரும் அன்போடு உபசரித்து, மன்னனின் படை முழுதுக்கும் அறுசுவை உணவு படைத்தார். விசுவாமித்திரருக்கு வியப்பு தாங்கவில்லை. நினைத்ததை எல்லாம் வழங்கும் காமதேனு என்ற தெய்வீகப் பசுதான் வசிட்டருக்கு உதவியது என்பதைக் கேட்டு, அதைத் தனக்குக் கொடுக்குமாறு கேட்டார்.

வசிட்டர் அதற்கு மறுக்கவே, பலவந்தமாக காமதேனுவைக் கைப்பற்றினார். வசிட்டர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. காமதேனுவின் உடலில் இருந்து நூற்றுக கணக்கான வீரர்கள் வெளியே வந்து விசுவாமித்திரரின் படைகளைத் துவம்சம் செய்துவிட்டனர்(ஆதாரம்: ராமாயணம்)

தெய்வீக விருந்து 4
இஸ்ரேலியர்களை மோசஸ் அழைத்துச் சென்ற பாலைவனப் பகுதியில், ‘மன்னா’ என்ற உணவு வானத்தில் இருந்து கிடைத்ததாக பைபிளின் பழைய ஏற்பாடு கூறுகிறது. நாற்பது ஆண்டுக் காலத்துக்கு இந்த உணவின் மூலம் அவர்கள் உயிர் வாழ்ந்தனர். ‘மன்னா’ என்பது எகிப்திய ‘மென்னு’ ( உணவு) என்ற சொல்லுடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆனால் ‘அன்னம்; என்பதே ‘மன்ன’ என்று திரிபடைந்ததாக நான் ஏற்கனவே “பைபிளில் சம்ஸ்கிருதம்” என்ற எனது ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன். !!(ஆதாரம்: பைபிள் பழைய ஏற்பாடு)

moses

தெய்வீக விருந்து 5
ராமனைக் காண காட்டிற்கு வந்த பரதன், பரத்வாஜர் என்னும் முனிவரைத் தரிசிக்க அவரது ஆஸ்ரமத்துக்கு வந்தான். எல்லோரும் எங்கே? என்று முனிவர் கேட்டார். நான் பெரும் படையுடன் வந்து இருக்கிறேன். படைகளை அழைத்துவந்தால் செடி, கொடிகளூக்குச் சேதம் வருமே என்று கருதி தொலைவில் நிறுத்தினேன் என்றார். அவருக்கு முனிவர் அறுசுவை விருந்து படடைத்தார். புறச்சசூழல் பாதுகாப்பின் முன்னோடி பரதன்! ராமன் இலங்கையில் இருந்து திரும்பிப் போகையில், பரத்வாஜ முனிவரை சந்தித்தான். அவர் தனது மந்திர சக்தியால் அங்கிந்திருந்த அனைவருக்கும் உணவு கொடுத்தார்.!(ஆதாரம் வால்மீகி ராமாயணம்)

தெய்வீக விருந்து 6
மணிமேகலை என்பவர் மாதவியின் மகள். ஐம்பெரும் தமிழ் காப்பியங்களில் ஒன்று மணிமேகலை. அந்தப் பெண்ணிடம் அமுத சுரபி என்னும் மந்திரக் கலயம் கிடைத்தது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்பதை அறிந்த மணிமேகலை, அமுத சுரபி மூலம் சிறைச் சாலை கைதிகளுக்கு உணவு படைத்தார். (ஆதாரம்:மணிமேகலை)

தெய்வீக விருந்து 7
திருவிளையாடல் புராணத்தில் வரும் நிகழ்ச்சி இது. வேளாளக் குடியில் பிறந்த தரும சீலை என்பவர் மதுரையில் இருந்து எல்லோருக்கும் உணவு வழங்கி வந்தார். அவருடைய பெருமையை பாண்டிய நாடு முழுதும் அறியவேண்டி சிவபெருமான் ஒரு லீலை செய்தார். அவர்கள் நிலத்தில் விளைச்சலைக் குறைத்தார். அப்படியும் அந்த தம்பதிகள், கடன் வாங்கி தருமச் சாப்பாடு போட்டனர். கடன்காரர்கள் வந்து மொய்க்கவே சிவன் கோவிலுக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அங்கே அவர் முன் தோன்றிய ஆலவாய் அண்ணல் சிவபெருமான், ‘வீட்டுக்குப் போய் பரண் முழுதும் இருக்கும் நெல்லை ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்யுங்கள்’ என்றார். அது எடுக்க எடுக்க வளரும் ‘உலவாக் கோட்டை’ என்றும் சிவன் அருளினார்.( ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

kamadhenu

Picture of Divine Cow Kamadhenu

தெய்வீக விருந்து 8
மதுரையின் மஹாராணி மீனாட்சிக்கும் சிவனின் அவதாரமான சுந்தரபாண்டியனுக்கும் திருமணம் தடபுடலாக நடந்தது. எல்லோரும் சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டனர். ஆனால் இன்னும் ஆயிரக கணக்கான மக்களுக்கான உணவு அப்படியே மிஞ்சி இருந்தது. சமையல்காரகளுக்கு மனக் கஷ்டம். அன்னை மீனாட்சியிடம் முறை இட்டனர். அவளோ அன்புக் கணவர் சுந்தரேஸ்வரிடம் முறையிட்டாள். ஒரு புன்சிரிப்பு முகத்தில் தவழ்ந்தது. பக்கத்தில் இருக்கும் குண்டோதரனை அழைத்து ‘போய், சாப்பீட்டு வா’ என்றார். அவன் சமையல் அறையில் நுழைந்த அடுத்த நிமிடம் அறையே காலி!!
‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்று பாடிய வண்ணம், அவன் மேலும் உணவு கேட்டான்! மலைத்துப் போய்விட்டனர் அரண்மனை சமையல்காரர்கள். மீண்டும் மீனாட்சியிடம் உதவியை நாடி ஓட, அவர் மீண்டும் சிவனிடம் ஓடினார். அவர் அன்னபூரணியை மனதில் நினைத்த அடுத்த நிமிடம் பூமியில் இருந்து சாப்பாடு வந்தது. இப்போது அவனுக்கு தாகம் வரட்டியது. ‘தண்ணீர் தண்ணீர்’ என்று அலறவே அங்கிருந்த நீர் எல்லாம் போதவில்லை. குண்டோதரனை அழைத்த சிவ பெருமான், ‘வை’ ‘கை’ என்று சொல்லி அவன் கைகளைக் கீழே வைக்கச் சொன்னார். அதில் இருந்து ‘வைகை’ நதி பீறிட்டெழுந்தது. அவனும் தாக சாந்தி செய்துகொண்டான். அவன் சாப்பிட்ட அன்னக் குழி மண்டபம் இன்றுவரை மதுரை கோவில் அருகே உள்ளது.(ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

Contact swami_48@yahoo.com

அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?

( This is translation of “India needs an Indiana Jones” already posted here)

இந்தியாவின் அரிய பெரிய பொக்கிஷங்கள், புதையல்கள், செல்வங்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டன. ஆனால் பல புதையல், பொக்கிஷங்களை, நல்ல வேளையாக, நமது நாட்டின் பெயர் போட்டே வெளிநாட்டு மியூசியங்களில் வைத்திருக்கிறார்கள்.

இந்திய வைரத்தை வைத்து ஹாலிவுட்காரகள் இந்தியானா ஜோன்ஸ் பாணி (Indiana Jones and Temple of Doom)  படங்களைக் கூட எடுத்து, அதிலும் மில்லியன் கணக்கில் காசு பண்ணிவிட்டார்கள். கிரேக்க நாட்டு மற்றும் பைபிளில் வரும் “ஹோலி க்ரெயில்” (Holy Grail) போன்றவை குறித்து ஏராளமான நாவல்கள், சினிமாக்கள் வந்துவிட்டன. ஆனால் நாமோ நமது செல்வம் பற்றியே ஒன்றும் அறியாத அப்பாவிகளாக இருக்கிறோம்.

 

வாரம் தவறாமல் லண்டன், நியூயார்க் நகரங்களில் நம் நாட்டு தொல் பொருட் செல்வங்கள் பகிரங்கமாகவே ஏலத்துக்கு விடப் படுகின்றன. ஆக நமது நாட்டிலும் ஒரு இந்தியானா ஜோன்ஸ் (Indiana Jones) போல ஒருவர் புதைபொருள் வேட்டை நடத்த புறப்படவேண்டும். நமது செல்வங்கள் குறித்து கதைகளும் சினிமாக்களும் வெளிவரவேண்டும்.

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவிலில் உலகிலேயே மிகப் பெரிய புதையல் கிடைத்துள்ளது. அதை எல்லாம் அழகாக பாதுகாப்பாக மியூசியத்தில் வைக்க வேண்டும். இந்த விஷயங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சி வரவேண்டும். ஏன் வெளிநாட்டுக்காரர்கள் இதில் அக்கறை செலுத்துகிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

 

நம்முடைய உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரம் இன்று லண்டன் டவர் மியூசியத்தில் (Tower Museum, London)  உள்ளது. பிரிட்டிஷ் மஹாராணியின் முடியை (Crown Jewels)  அலங்கரிக்கும் வைரங்களில் அதுவும் ஒன்று.

திப்பு சுல்தானின் இயந்திரப் புலி (Tippu’s Tiger)  பொம்மை லண்டன் விக்டோரியா ஆல்பெர்ட் மியூசியத்தில் உள்ளது. இந்தோநேஷியாவின் இந்துக் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட அகத்தியர் சிலையும் அங்கேதான் உள்ளது.

நாமோ மீனாட்சி கோவில், திருப்பதி கோவில், ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ரத்தினங்கள், தங்க நகைகளின் மகிமை பற்றி அறியாதவராக உள்ளோம். அரசியல்வாதிகள், பல அற்புதமான ரத்தினக் கற்களை மாற்றிவிட்டு, போலி கற்களை வைத்துவிட்டதாகவும் வதந்திகள் உலவுகின்றன.

 

ராஜராஜ சோழன் போன்ற மாமன்னர்கள் கொடுத்த பெரிய பெரிய தங்க நகைகள், ரத்தினக் கற்கள், பாத்திரங்கள் பற்றி கல்வெட்டுகள் பேசுகின்றன. அவைகள் எங்கே என்று யாருக்கும் தெரியாது.

மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பயன்படுத்திய மாபெரும் தங்க சிம்மாசனம் மைசூர் அரணமனையில் இருக்கிறது. நளன் போன்றோர் கொடுத்த அற்புதமான ரத்தினக் கற்கள் மீனாட்சி கோவிலில் உள்ளன.

தி ஒண்டர் தட் இஸ் மீனாட்சி டெம்பிள் (The Wonder That is Madurai Meenakshi Temple) மற்றும் கொலவெறி வைரம் (Is Krishna’s Diamond in USA?) (கிருஷ்ணரின் சியமந்தகம் அமெரிக்காவில் உள்ளது ) என்ற எனது கட்டுரையில் பல புதிய தகவல்களைப் படிக்கலாம்.

ஆயிரக் கணக்காணோருக்கு உணவு வழங்க திரவுபதி பயன்படுத்திய அக்ஷய பாத்திரம் எங்கே?

பசிப்பிணி என்னும் பாவியை ஒழித்து உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று பிரசாரம் செய்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுகொடுக்க மணிமேகலை பயன்படுத்திய அமுத சுரபி எங்கே?

 

திருவள்ளுவரை மற்றும் ஏற அனுமதித்து போலிப் புலவர்களைக் கீழே தள்ளிய சங்கப் பலகை எங்கே?

பாண்டிய நாட்டு மக்களின் பசிப்பிணி தீர்க்க சிவபெருமான் அனுப்பிய உலவாக் கிழியும் உலவாக் கோட்டையும் எங்கே?

வசிட்ட மாமுனிவர் வளர்த்த காமதேனு எங்கே? இது உயிருள்ள பசு என்று நினைக்கக் கூடாது. இந்தக் காலத்தில் ஆயிரம் சப்பாத்தி ஆயிரம் (Instant Chapathi/Idli Oven) இட்லி தயாரிக்கப் பயன்படும் இயந்திரம் இருப்பது போல ஒரு எந்திரத்தின் பெயர் காமதேனு என்று கருதலாம் அல்லவா?

நினைத்ததை எல்லாம் வழங்கும் கற்பக விருட்சம் எங்கே? இவைகளை கற்பனை என்று நினைத்தால் கதை எழுதவும் சினிமா எடுக்கவும் இந்த விஷயங்களைப் பயன்படுதலாமே !!

 

உலகப் புகழ்பெற்ற மயில் ஆசனம்(Peacock Throne) மொகலாயப் பேரரசன் ஷாஜஹானிடம் இருந்தது. அதை பாரசீக மன்னன் நாதிர்ஷா கொள்ளை அடித்துச் சென்று ஈரானுக்குத் திரும்புகையில் அவன் இறக்கவே அதை ராணுவ தளபதிகள் பங்குபோட்டதாக ஒரு பேச்சு. இல்லை அது ஈரானில்தான் இருக்கிறது என்று இன்னொரு பேச்சு. இப்போது டெஹ்ரான (ஈரான்)(National Museum, Tehran, Iran) மியூசியத்தில் இந்தியாவின் அற்புதமான ரத்தினநகைகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அதிலும் ஒரு சிறிய மயில் ஆசனம் உண்டு. (இது அற்றி எனது தனி கட்டுரை உள்ளது)

முட்டாள்களையும் புத்திசாலியாகும் 32 பதுமைகள் பதித்த விக்ரமாதித்தன் சிம்மாசனம் எங்கே?

மதுரை மீனாட்சி கோவிலில் ஒரு கடம்ப மரத்தை வேலி போட்டு பாதுகாத்து வைத்துள்ளார்கள். இதை “கார்பன் டேட்டிங்” முறையில் ஆராய்ந்து இதன் காலத்தைக் கண்டு பிடிக்கலாம். இது போன்ற ஆய்வுகள் இந்து மதத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும். எந்த வகையிலும் குறைவு உண்டாக்காது. ஏசு கிறிஸ்து மீது போர்த்திய சால்வை என்று டூரினில் வைத்துள்ள துணியை ஆராய்ந்தார்கள். இது போல எவ்வளவோ ஆய்வுகளை நடத்தினால் பல புதிய செய்திகள் கிடைக்கலாம்.

 

இந்திய மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, நம்முடைய செல்வங்களை பட்டியலிட்டு, அவை எங்கே இருக்கிறது என்றாவது சொல்ல வேண்டும். கோவிலின் அற்புத செல்வங்களை கண்ணிரண்டையும் இமைகள் காப்பது போலக் காக்கவேண்டும். இந்திய செல்வங்களை வெளிநாடுகளில் ஏலம் போகாமல் காக்கவேண்டும்.

********************