
Date: 9 DECEMBER 2017
Time uploaded in London- 5-17 am
WRITTEN BY S NAGARAJAN
Post No. 4472
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 4
முதல் மூன்று கட்டுரைகள்: எண் 4388- வெளியான தேதி: 12-11-17
இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17
மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேது : 30-11-17
ஞானத்தின் வகைகள்!
ச.நாகராஜன்
அத்வைத விளக்கத்தில் ஞான வகைகளைப் பற்றிப் பார்ப்போம். இதைப் படிப்பவர்கள் வேதாந்த விசாரத்தில் ஆர்வம் உள்ளவர்களாகவும், விஷயத்தை பல முறை படித்து நுணுகி ஆராய்வதற்கான பொறுமையைக் கொண்டுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியம். (சிரத்தா + பொறுமை)
*

சரீரத்தினால் சம்சார துக்கம் வருகிறது என்கிறீர்கள். இந்த சம்சார துக்கம் எப்போது போகும்?
சரீரம் போனால் துக்கம் போகும்.
கர்மம் நசித்தால் சரீரம் போகும்.
இராக த்வேஷங்கள் முதலியவை நசித்தால் கருமம் போகும்.
அபிமானம் நசித்தால் இராக த்வேஷாதிகள் போகும்.
அவிவேகம் நசித்தால் அபிமானம் போம்.
அஞ்ஞானம் நசித்தால் அவிவேகம் போகும்.
அஞ்ஞானமோ எனில், அத்வைத ப்ரம்மஸ்வரூபமாகிய ஆத்மாவாகிய தன்னை,’பிரம்மமே நான்’, ‘நானே பிரம்மம்’என்ற ஞானத்தினால் போகும்.
அதாவது இருளும் வெளிச்சமும் போல இவைகளில் ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்க முடியாது. அதுபோல ஞானம் உண்டானவிடத்து அஞ்ஞானம் இருக்காது.
கர்மமானது மூன்று வித கரணங்களினால் உண்டாகிறது என்று சொன்னீர்கள். ஞானமும் அந்தக்கரணத்தினால் உண்டாகி விருத்தியாகி இருக்கின்றபடியால் அதுவம் கூட கர்மமே என்று ஆகிறதல்லவா? ஆகவே, அது எப்படி அஞ்ஞானத்தை நசிக்கச் செய்யும்?
விருத்தி என்பது மனத்திலிருந்து உண்டான கர்மமேயாகும். அந்த விருத்தியானது ரூபத்தை அறிகின்ற விஷயத்தில், கண்களைப் போல, ஞானத்திற்கு ஒரு சாதனமாக இருந்து அஞ்ஞானத்தை நிவர்த்திக்கிறது. ஞானமோ நித்தியமானது.
இந்த ஞானம் எத்தனை வகைப்படும்?
ஸ்வரூப ஞானம், விருத்தி ஞானம் என இப்படி ஞானம் இருவகைப் படும்.
ஸ்வரூப ஞானம் என்றால் சுஷூப்தியில் அஞ்ஞானத்தைப் பிரகாசிப்பதாம்.
ஜாக்கிர ஸ்வப்னங்களில் விஷயங்களைப் பிரகாசிப்பது விருத்தி ஞானம்.
ஞானம் ஆத்ம ஸ்வரூபம்.
அந்த ஸ்வரூபமாக இருக்கின்ற ஞானமானது, விருத்திகளில் பிரவேசித்து அஞ்ஞானத்தை நசிக்கச் செய்கிறது.
அதெப்படி?புரியவில்லை! உதாரணங்களுடன் விளக்குங்களேன்.
தேத்தாங்கொட்டை நியாயம் தெரியுமா? அதன்படி , அதாவது தேத்தாங்கொட்டையானது, தண்ணீரிலுள்ள அழுக்கைப் போக்கி விட்டு, அந்த அழுக்குடன் அதுவும் அடியில் தங்கி விடுவது போல, விருத்தி ஞானமும் அஞ்ஞானத்தையும், அதன் காரியத்தையும் நசிக்கச் செய்து தானும் தானாகவே நசித்துப் போகும். இப்படி விருத்தி நாசமானால், அதில் பிரதிபலித்த ஞானமும் தனக்கு பிம்பமான ஸ்வரூப ஞானத்தை அடையும்.பிறகு அத்வைதமாகிய ஆத்ம ஸ்வரூபம் மட்டும் மிஞ்சும். இப்படிப்பட்ட ஞானம் ஆத்மனாத்மா (ஆத்மா, அனாத்மா) விசாரத்தினாலே உண்டாகிறது.

ஆத்மா யார்?
மூன்று சரீரங்களுக்கு விலக்ஷணன் ஆகியும், மூன்று அவஸ்தைகளுக்கும் சாக்ஷி ஆகியும், பஞ்ச கோசங்களுக்கு அன்னியன் ஆகியும் உள்ள சச்சிதானந்த லக்ஷணனே!
அனாத்மா யார்?
மூன்று சரீரங்களும் உடையவன்.
விளக்கமாகச் சொல்லுங்கள்.
ஸமஷ்டி ஸ்தூல சரீரம்
ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரம்
ஸமஷ்டி காரண சரீரம்
என்றும்,
வியஷ்டி ஸ்தூல சரீரம்
வியஷ்டி சூக்ஷ்ம சரீரம்
வியஷ்டி காரண சரீரம்
என்று மூன்று சரீரங்களும்,
ஆக ஸமஷ்டி ,வியஷ்டியினால் இப்படி ஆறு விதமாக இருக்கிறான்.
ஆத்மாவுக்கு ஈஸ்வரத்துவமும், ஜீவாத்வமும் வாஸ்தவமாக உள்ளதா?
வாஸ்தவம் அல்ல.
ஸமஷ்டி உபாதியினால் ஈஸ்வரத்துவமும்
வியஷ்டி உபாதியினால் ஜீவாத்வமும்
மயோபாதியினால் (மய, உபாதி; மய =மாயை) ஈஸ்வரத்துவமும்
அவித்யோபாதியினால் (அவித்யா, உபாதி) ஜீவாத்வமுமே அன்றி வாஸ்தவமல்ல.
ஆத்மாவானவன் மாயையாகவும், அவித்தையாகவும் தானாகவே ஆகி,
ஜீவீஸ்வரர்களாகச் செய்து கொள்ளுகிறான்.
ஈஸ்வரனுக்கு சமஷ்டி காரண சரீரத்தில் அபிமானம் (விருப்பம்) இல்லை.
ஏன் இல்லை?
அகங்காரமானது மஹாசுஷூப்தியில் நசித்துப் போவதால்.
இந்த ஸமஷ்டி காரணோபதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?
அவ்வியாக்ருதன் என்றும் அந்தர்யாமி என்றும் பெயர்.
ஸமஷ்டி சூக்ஷ்ம சரீரோபாதியான ஈஸ்வரனுக்கு என்ன பெயர்?
ஹிரண்யகர்ப்பன், சூத்திராத்மா, மஹாபிராணன் என்ற பெயர்கள் உண்டு.
ஸமஷ்டி ஸ்தூலோபாதிகனானை ஈஸ்வரனின் பெயர்கள் யாவை?
விராட்டு, வைராஜன், வைஸ்வானரணன் என்ற பெயர்கள் உண்டு.
நன்றி. இன்னும் சில கேள்விகள் உள்ளன, கேட்கலாமா!
கேளுங்கள், கொடுக்கப்படும் (விடை தரப்படும்)!
****