Article Written by London swaminathan
Date: 5 November 2015
Post No:2302
Time uploaded in London :– 9-20 AM
(Thanks for the pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
லண்டனுக்கு வருவோர் அதிர்ஷ்ட சாலிகள்! லட்சுமி கடாக்ஷம் நிறைந்தவர்கள்!. தங்கக் கட்டி கிடைக்கும்! அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல! 13 கிலோ தங்கம், அதாவது 13,000 கிராம் தங்கம்! தொடலாம், எடுக்கலாம், தூக்கலாம். ஆனால் வீட்டுக்கு மட்டும் கொண்டு செல்ல முடியாது! ஏன்?
லண்டனில் த்ரெட்நீடில் தெருவில் இங்கிலாந்து வங்கியின் காட்சியகம் (Bank of England Museum in Thread needle Street, London) உள்ளது. அங்கு ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் 13 கிலோ தங்கக் கட்டியை வைத்துள்ளனர் அதன் கீழே ஒரு கை நுழையும் அளவுக்கு ஓட்டையும் போட்டு வைத்துள்ளனர். எல்லோரும் அதைத் தூக்கிப் பார்க்கலாம். நானும் முயன்றேன். ஒரு கையால் தூக்குவது கடினம்தாம். இவ்வளவுக்கும் அந்தக் கட்டி முக்கால் அடி நீளம் கூட இல்லை.
இதன் விலை என்ன?
இந்திய மார்க்கெட்டில் ஒரு கிராம் சொக்கத் தங்கத்தின் விலை
ரூபாய் 2600. அப்படியானால் 13,000 கிராம் x ரூ 2600 = ???
நீங்களே பெருக்கிக் கொள்ளுங்கள்!! இது உங்களுக்கு இன்றைய வீட்டுப் பாடம் (ஹோம் ஒர்க்).
மத்திய லண்டனில் பாங்க் ஸ்டேஷன் அருகில் இந்த மியூசியம் இருக்கிறது. அதனுள்ளே இருக்கும் காப்பகத்தில் டன் கணக்கில் தங்கக் கட்டிகள் இருக்கின்றன. நமக்கு மாதிரிக்காக ஒரு சிறிய கட்டியை மேலே வைத்தூள்ளனர்.
இந்த மியூசியத்துக்கு வருவோருக்கு, குறிப்பாக வணிகவியல், வங்கிகள் பற்றிப் படிப்போருக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும். பள்ளி மாணவர்கள், விளையாட்டு மூலம் தெரிந்துகொள்ள பணவீக்கக் கருவி ஒன்று வைத்திருக்கிறார்கள். அதை நெம்புகோல் போல அழுத்தினால் பணவீக்கம் மேலே செல்லும். அருகிலேயே, பணவீக்கம் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது? இங்கிலாந்து வங்கி அதை இரண்டு சதவிகிதத்துக்குள் கட்டுப்படுத்துவது எப்படி? என்று பல பெரிய போஸ்டர்கள் வைத்துள்ளனர்.
இங்கிலாந்து வங்கி, இந்தியாவின் ரிசர்வ் பாங்கு போன்றது. 400 ஆண்டுகளுக்கு முன் வங்கி தோன்றியதிலிருந்து இன்று வரை அதன் வளர்ச்சி, மாற்றங்கள், கரன்ஸி, நாணயம் அச்சிடுவது எப்படி? என்பனவற்றை விளக்கி வீடியோ ஆடியோ காட்சிகள் அமைத்துள்ளனர்.
சிறுவர்கள் விளையாடுவதற்காக பல கரன்ஸி துண்டுகளை வெட்டி இணைக்கும் புதிர் வைத்து இருக்கிறார்கள். நான் திங்கட் கிழமை அங்கே போன போது எடுத்த புகைப்படங்களைப் பாருங்கள்.
பாலிமர் (Polymer Currency) கரன்ஸி வருகிறது!!
காகிதத்தில் அச்சடிக்கும் நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து சேதம் அடைவதால் உலகில் முப்பதுக்கும் மேலான நாடுகள் பாலிமர் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துப் பயன்படுத்துகின்றனர். இனி பிரிட்டனிலும் பாலிமர் நோட்டுகள் அச்சடிக்கப் போகிறார்கள். கொஞ்ச காலத்தில் காகித கரன்ஸி நோட்டுகள் அரிய பொருள் ஆகி விடும்.
இந்த மியூசியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் வந்த தினசரி உபயோக நாணயங்கள், ஆண்டு தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளின் நினைவாக வெளியிடப்படும் நாணயங்கள் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்களை விலைக்கும் விற்கிறார்கள். காசுள்ளவர்கள் வாங்கலாம்.
ஆனால் மியூசியத்தைப் பார்க்க கட்டணம் இல்லை. 13 கிலோ தங்கக் கட்டியைத் தொடவும் தூக்கவும் கட்டணம் இல்லை. அந்த ‘த்ரில்’ ஒன்றே போதுமே. லண்டனுக்கு வந்தால் கட்டாயம் பாருங்கள்.
இந்தியாவில் உள்ள வங்கி மியூசியங்களிலும் இப்படிப் பல உத்திகளைக் கையாண்டால் மக்களின் பொது அறிவு மிகும்!
இங்கிலாந்து வங்கியில் லெட்சுமி!
பிரிட்டனின் செல்வச் செழிப்புக்கு என்ன காரணம்?
நம்முடைய கோஹினூர் வைரம் போன்ற பல அபூர்வ, அதிர்ஷ்டகரமான வைரங்களையும், செல்வம் கொடுக்கும் பல மர்ம சிலைகளையும் பிரிட்டிஷ்காரகள் வைத்திருக்கின்றனர். பார்ப்பவர்களுக்கு இவையெல்லாம் பொம்மை போலத் தோன்றும். ஆனால் அதன் ரஹசியங்களைத் தக்கோரிடம் அறிந்து இதை வைத்துள்ளனர். இங்கிலாந்து வங்கி மியூசியத்தில் லெட்சுமியின் சிலை கிரேக்க பாணியில் இருக்கிறது. தான்ய லெட்சுமியை, கிரேக்கர்கள் செரிஸ் (Ceres= Sri) என்பர். ஸ்ரீ = திரு என்னும் லெட்சுமியின் பெயரே இப்படி செரி என்று மறுவியுள்ளது. நமது அருகிலுள்ள ஸ்ரீலங்காவில் கூட ஸ்ரீ என்பதை ‘சிரி’ என்பர். சிரிமாவோ பண்டாரநாயகெ (நாயக) என்பர்.
இந்த மியூசியத்தில் ஆடியோ, வீடியோ காட்சிகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுத் தருகின்றனர். நான் போன போது பிரான்ஸ், ஜெர்மனியிருந்து வந்த பள்ளி மாணவ, மாணவியர் — பல கருவிகளை இயக்கி பல விஷயங்களைக் கற்பதைப் பார்த்தேன். 400 ஆண்டுகளுக்கு முன் லண்டன் எப்படி இருந்தது, வங்கி எப்படி துவங்கியது போன்றவை பொம்மை உருவில் காட்டப்பட்டுள்ளன. ஹெண்டல் என்ற இசை மேதை ஒரு வங்கிக் கணக்கர் என்ற வியப்பான செய்தியும் படம் மூலம் அறிந்தேன்.
மாதத்துக்கு ஒரு வியாழக்கிழமையன்று வங்கியின் கவர்னர்கள் கூட்டம் நடைபெறும். அதை மக்கள் ஆவலுடனும் கவலையுடனும் எதிர்பார்த்து நிற்பர். காரணம் என்னவெனில் வங்கியின் வட்டி விகிதம் உயருமா, குறையுமா, அதேயளவு நீடிக்குமா என்று அக்கூட்டம் முடிவு செய்யும். வட்டி விகிதம் கூடினால், ஒவ்வொரு குடும்பமும் மாதம்தோறும் கட்டும் வீட்டுக் கடன் வட்டி விகிதமும் உயரும். இந்த முடிவு எல்லாம் எப்படி எடுக்கப்படுகிறது என்ற விவரங்களையும் மியூசியத்தில் அறியலாம். சின்ன மியூசியம்தான். ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டால் பக்கத்திலுள்ள கில்ட் ஹால் ஆர்ட் காலரி (இலவசம்), சாமுவேல் ஜான்சன் மியூசியம் (கட்டணம் உண்டு) ஆகியவற்றையும் பார்க்கலாம். அருகில் லண்டன் மியூசியமும் உளது.
மாணவர்கள் விளையாடுவதற்காக பண வீக்கக் கருவி, வெட்டி ஒட்டும் புதிரகள் முதலியன வைத்துள்ளனர்.
–சுபம்–















You must be logged in to post a comment.