
Written by S NAGARAJAN
Date: 9 April 2016
Post No. 2707
Time uploaded in London :– 9-19 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
வள்ளுவர் வழி
எமனைக் கை தட்டி அழைக்காதே!
ச.நாகராஜன்
எமனைக் கை தட்டி அழைக்காதே!

வள்ளுவரின் சொல் வீச்சு அபாரமானது. அதைச் சொல்லும் விதமோ அதை விட அபாரமானது.
எமன் என்றாலே எல்லோரும் ஓடிப் போவர். யாருக்கும் பிடிக்காத ஒரே வார்த்தை எமன் தான்.
அப்படிப்பட்ட எமனைக் கை தட்டி அழைக்காதே என்று வேடிக்கையாக ஆனால் மிகத் தீவிரமான ஆலோசனை ஒன்றைத் தருகிறார்ர் வள்ளுவர்.
“கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்” என்று அவர் ஆரம்பிக்கிறார்.
எமனைக் கைதட்டி அழைப்பது போல இருக்கும் என்ற அவரது ஆரம்பமே நம்மை திடுக்கிட வைக்கிறது.
“ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்” (குறள் 894) என்று அவர் முடிக்கும் போது பெரிய அறிவுரையைப் பெறுகிறோம்.
ஆற்றலுடன் கூடியவருக்கு ஆற்றலே இல்லாதார் துன்பம் செய்தால் அது எமனைக் கை தட்டி அழைப்பதை ஒக்கும் என்கிறார் அவர்.. ஆற்றல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; ஆற்றல் உள்ள வலியோரிடம் வாலை ஆட்டாமலாவது இருக்கக் கற்றுக் கொள் என்பது அன்புரை தானே!
எமன் என்று சொல்லும் போதே அவர் ஹிந்து என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். இந்திரன், மூதேவி போன்ற ஹிந்து தொன்மம் அல்லது நம்பிக்கை அல்லது கடவுளரை அவர் குறிப்பிடுவதையும் இங்கே நோக்கலாம்.
நீண்ட நாள் வாழ வழி!
அடுத்து நீண்ட நாள் வாழ வழியையும் அவர் கூறுகிறார். அதாவது எமனின் வருகையைத் தள்ளிப் போடச் செய்யும் வழி!
இதில் இரண்டு வகையை அவர் உபதேசிக்கிறார்.
ஒன்று உள்ளத்திற்கு; இன்னொன்று உடலுக்கு.
உடல் ரீதியாகவும் சாவைத் தள்ளிப் போட வழி; உள்ள ரீதியாகவும் மரணத்தைத் தள்ளிப் போட்டு நீடு வாழ வழி –இரண்டையும் அவர் விளக்குகிறார்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3)
இறைவனின் அடியை ஏகினால் போதும்; அவன் நம்மை நிலமிசை நீடு வாழச் செய்வான் என்கிறார்.
உள்ள ரீதியாக இறைவனுக்கு நம்மை அர்ப்பணம் செய்தால் மீதியை அவன் பார்த்துக் கொள்வான்.
அடுத்து உடல் ரீதியாக நீடு வாழ எளிய வழியையும் அவர் கூறுகிறார்:
அற்றால் அளவறிந்து உண்க; அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு (குறள் 943)
உடம்பைப் பெற்றவர்களே, நீண்ட நாள் வாழ ஆசையா. அப்படியானால் அளவறிந்து உண்க என்கிறார்.
அளவறிந்து என்பது பொருள் பொதிந்த ஆழமான வார்த்தை.
இந்த வார்த்தையை அவர் உபயோகிக்கும் இடங்கள் மிகவும் சுவாரசியமானவை.
எது தேவையோ எவ்வளவு தேவையோ எப்போது தேவையோ அவ்வளவு மட்டுமே உண்ணுக என்பது அவர் அறிவுரை.
ஒரு குறளை மட்டும் படித்தால் முழுப் பொருளும் விளங்காது.
பின்னிப் பிணைக்கப்பட்டுள்ள குறள் அனைத்தையும் இணைத்துப் பார்த்தாலேயே பொருள் விளங்கும்.
அப்படி ஒரு அற்புத நூல் குறள். இது போலொரு நூல் உலகில் இல்லை என்பதை அடித்துச் சொல்லலாம்.
*******
You must be logged in to post a comment.