
Written by S NAGARAJAN
Date: 26 September 2016
Time uploaded in London:5-40
Post No.3190
Pictures are taken from various sources; thanks.
பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! என்ற கட்டுரையை முதலில் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
பருப்பை நான்காம் தமிழுக்கு ரிஸர்வ் செய்த தீர்க்கதரிசி ஔவையார்!
ச.நாகராஜன்
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
ஔவையாரின் இந்த பாடலைப் பல முறை படித்தால் பல விஷயங்கள் தெரிய வரும்.
நான்கு தந்து மூன்று கேட்ட ஔவையாரைப் பற்றிச் சற்று யோசித்த போது ஔவையார் ஒரு தீர்க்கதரிசி என்பது புலனாகிறது.
இயல், இசை, நாடகத் தமிழ் என முத்தமிழை பால், தெளி தேன், பாகு, பருப்பு ஆகிய நான்கைத் தந்து கேட்ட ஔவையாரின் வணிக பேர நேர்த்தியைக் கண்டு மனம் மகிழும் போதே எதற்கு அவர் பருப்பையும் சேர்த்து விநாயகருக்குப் படைத்தார் என்பது முதலில் புலனாகாது தான்!
ஆனால் ஔவையாரின் காலத்திற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கடந்து வந்த பின்னர் இன்று தமிழில் புதிய சேர்க்கையாக அறிவியல் தமிழ் இணைந்து விட்டது.
இயல், இசை, நாடகம் ஆகியவற்றோடு அறிவியல் தமிழும் சேர்ந்து விட்டதால் இப்போது முத்தமிழ், நாற்றமிழ் – அதாவது – நான்கு தமிழாகி விட்டது!
தமிழர்கள் விநாயகரை நான்கு தமிழைக் கேட்க வழி வகை செய்யும் வகையில் பருப்பையும் சேர்த்துப் படைத்து விட்டார் போலும் ஔவையார். அறிவியல் தமிழுக்காக அவர் பருப்பை ரிஸர்வ் செய்த அதிசயத்தை நினைத்து வியக்க வேண்டியதாக இருக்கிறது.
இனி என்ன கவலை?
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
என்பதைச் சற்றே மாற்றி
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
தங்கத் தமிழ் நான்கையும் தா
என்று இனிமேல் பாடி வேண்டலாம்!
இயல் – பால்
இசை – தெளி தேன்
நாடகம் – பாகு
அறிவியல் – பருப்பு
ஆக அறிவியல் தமிழ் உருவாவதைக் கண்ட தீர்க்கதரிசி ஔவையாருக்கு நன்றி சொல்லி அதை விக்னமின்றி நமக்கு அருளும் விநாயகருக்கும் நம் பயபக்தியுடன் கூடிய வணங்குதலைச் செய்து வேண்டுவோம்.
வாழ்க ஔவையார்! வளர்க அறிவியல் தமிழ்!!
**********
You must be logged in to post a comment.