
Written by S NAGARAJAN
Date: 13 September 2016
Time uploaded in London: 8-48 AM
Post No.3150
Pictures are taken from various sources; thanks.
ச.நாகராஜன்

வாட் இஸ் யுவர் புரஃபஷன்? (What is your profession?)
எது வினை?
நோ ப்ராப்ளம்? (No Problem?)
இடர் இலை?
யுவர் வைஃப் அண்ட் இன்டெலிஜெண்ட் சில்ட்ரன் ஆர் ஆல் வித் மைட்டி ஸ்ட்ரெந்த்? (Your wife and intelligent children are all with mighty strength?)
இனிதின் நும் மனையும் மதி தரும் குமரரும் வலியர் கொல்?
இன்று நம் நாட்டில் எந்தத் தலைவரேனும் நினைத்த இடத்திற்குத் தனியாகச் சென்று தமது குடி மக்களைப் பார்த்து இப்படி கேள்விகளைக் கேட்க முடியுமா?
குறைந்த பட்சம் கற்பனையிலாவது?
ஊஹூம், முடியாது! தொண்டர்களுடனும் குண்டர்களுடனும் அல்லவா அவர்கள் ‘நெடும் பயணம்’ மேற்கொள்கின்றனர்!
ஆயிரக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் உளவுத்துறை ரிபோர்ட் ஓ கே சொன்ன பிறகு தனது கட்சித் தொண்டர்கள் பாதுகாப்பாகச் சுற்றி வர புல்லட் ஃப்ரூப் மேடையில் மக்கள் தலைவர், ‘அனைவரும் எப்படித் தம் மீது அன்பைப் பொழிகிறார்கள்’ என்று மீடியாக்காரர்கள் இருக்கிறார்களா என்று பார்த்து ‘வீர உரை’ ஆற்றுவார்.
ஆனால் கம்பன் காட்டும் ராம தத்துவம் வேறு!
ராமன் நிஜமான தலைவன் என்பதைக் காட்ட விரும்புகிறான் கம்பன்.
அயோத்தி நகரத்து மாந்தர் இராமனும் இலட்சுமணனனும் எப்போது வரப் போகிறார்கள் என்று காத்திருப்பார்களாம்!
‘எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்
முதிர் தரு கருணையின் முக மலர் ஒளிரா
எது வினை இடர் இலை இனிதின் நும் மனையும்
மதி தரு குமரரும் வலியர் கொல் – எனவே’
- (பாடல் 134, திரு அவதாரப் படலம், பால காண்டம்)
நகர மாந்தருடனான இராமனின் முதல் பேச்சு இங்கு இப்படிப் பதிவாகிறது!
என்ன ஒரு அற்புதமான சுருக்கமான பேச்சு!
கருணை சாதாரண கருணை அல்ல, முதிர் தரு கருணை!!
உமது மக்கள் வலியர் கொல் என்று கேட்கவில்லை!
மதி தரு குமரர் என்கிறான்.
ஜீனியஸ் – இன்டெலிஜெண்ட் புத்திரர்கள் நலமா என்கிறான்.
ஆக அயோத்தி வாழ் மக்களின் அறிவுத் திறனும் இராமனின் அருள் திறனும் ஒரு பாடலில் நான்கே வரிகளில் டிராமாடிக்காக – நாடக பாணியில் சொல்லப் படுகிறது.
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்ற தலைவனின் தத்துவம் விளக்கப்படுகிறது.
அது ஒரு புறம் இருக்கட்டும் – செக்யூரிட்டி தேவையில்லாத மக்கள் தலைவன் இராமன் என்பதையும் கண்டு மனம் மகிழ்கிறோம்!
இராமனைப் போற்றிப் புகழ்வதா அல்லது அவனை நமக்கு இப்படி இனம் காட்டும் கம்பனைப் புகழ்வதா?!
என் ஓட்டு கம்பனுக்கே!
உங்கள் ஓட்டு?!
******
You must be logged in to post a comment.