
WRITTEN BY S NAGARAJAN
Date: 14 March 2016
Post No. 2629
Time uploaded in London :– 7-57 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

வேத வழி
இதற்கு முந்தைய இரு கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் மூன்றாவது கட்டுரை இது!
பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -3
காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்காராசாரியார் (ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி – 68வது பீடாதிபதி)
ச.நாகராஜன்
பரமாசார்யாள் என்றும் பெரியவா என்றும் உள்ளார்ந்த பக்தியுடனும் அன்புடனும் அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி அவர்களை இனி வரும் வரலாறு அதிசயத்துடனேயே நோக்கும்.
உலகில் கடவுளை நேரில் பார்த்தல் சுலபமான ஒன்று இல்லை. ஆனால் கடவுள் நிகழ்த்தும் அதிசயங்களைப் பார்க்கிறோம்; அற்புதங்களைப் பார்த்து பிரமிக்கிறோம்.
இப்படி கடவுளின் அதிசய அற்புதமாக அவதரித்தவர் பெரியவா என்றால் அது மிகையாது.
ஒரு கஷ்டமான கால கட்டத்தில் அவதரித்து ஹிந்து மதத்தை ஏற்றம் பெறச் செய்த அவரை இறையருளே உருக்கொண்ட ஒரு அற்புத ஆசார்யர் என்றே சொல்லலாம்.
1894ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தோன்றி 1994ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி நீக்கமற நிறைந்த பரம்பொருளுடன் ஐக்கியமான அவரை வர்ணித்தல் இயலாது.
பிள்ளையாரை உடை; கொளுத்து புராணங்களை; அர்ச்சகர்களை அடி என்று தீய சக்திகள் தலை தூக்கி விரித்த காலகட்டத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டோரைக் காப்பாற்றி வீதிக்கு வீதி கோவிலுக்குக் கோவில் வழிபாட்டை மேம்படச் செய்தார் அவர்.

கோவில் கோபுரம்தோறும் மார்கழி மாதம் திருப்பாவை திருவெம்பாவை பாட்லகளை ஒலிக்கச் செய்து தமிழகத்தையே தெய்வீக மணம் கமழச் செய்தார்.
அவரை தரிசித்த மேதைகள், ராஜாக்கள், ராணிகள் ஏராளம் எனில் சாமானியர் லட்சக்கணக்கில் இருந்தனர்; அவரின் அருளைப் பெற்றனர் என்றே கூறலாம்.
ஆகம சில்ப மகாநாடு ஒரு புறம், வேத பாடசாலைகள் ஒரு புறம், நலிவடைந்து இருந்த கரகாட்டம் உள்ளிட்ட புராதன கலைகளை மேம்படுத்தல் ஒரு புறம் என்று அவர் தொடாத ஹிந்து மதம் சார்ந்த துறைகளே இல்லை.
இந்திய அரசியல் சட்டத்தில் ஹிந்துக்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றியவர் அவரே என்பதைப் பெரும்பாலானோர் அறியார். உரிய சட்ட வல்லுநர்களை அழைத்து அறிவுரைகளை அருளியவர் அவர்.
கிரீஸ் தேசத்து ராணி அவரை பரம குருவாகப் போற்றி வணங்கினார்.
மஹாத்மா காந்திஜியோ அவரைச் சந்தித்த மாலை வேளையில் நன்கு அளவளாவி மகிழந்தார். உரிய நேரத்தில் அவர் சாப்பிட வேண்டிய தருணத்தை ராஜாஜி நினைவு படுத்துகையில், “இன்று உணவு தேவை இல்லை; இப்போது இந்த சந்திப்பில் பெற்றதே உணவு” என்று தான் அவரிடமிருந்து பெற்ற ஆன்ம உணவை எண்ணிக் களித்தார்.
கண்ணதாசனை வழிப்படுத்தினார்; எம்.ஜி.ஆரை தமிழ் மாநாடு நடத்த ஊக்குவித்து அவருக்கு நேரிட்ட சங்கடங்களிலிருந்து அவரைக் காப்பாற்றினார்.
இந்திரா காந்திக்கு அருளினார். அவரது கை சின்னம் உதிக்க அவரது ஆசிக் கரமே உதவியது.
காவிரித் தலங்களைப் பற்றி எழுத ஒருவரைப் பணித்தார்.காசியையும் கங்கையையும் எழுத ஒருவரை ஊக்கினார். சுமார் எண்பது ஆண்டு கால வரலாற்றை வேடிக்கைக்காக எடுத்துப் பார்த்தாலும் எந்த ஒரு நல்ல ஆன்மீக காரியத்தின் ஆரம்பமும் அவரையே சுட்டிக் காட்டும்.
எல்லா நல்ல புத்தகங்களும் தவறாமல் முன்னுரையில் அவரது அருளாசியாலும் ஊக்கத்தாலும் அந்தப் புத்தகம் மலர்ந்தது என்று குறிக்கப்படும்.
கலைமகள் நிறுவனத்தார் ஆசாரிய ஸ்வாமிகளின் உபதேசங்கள் என்று அவரது உரைகளைப் பதிப்பித்தது.
கல்கி பத்திரிகை வாரம் தோறும் அவரது அற்புதமான அருளுரைகளை விடாமல் பிரசுரித்தது.
தெய்வத்தின் குரல் என்று அவரது உபதேச உரைகளை பல பாகங்களாக அன்பர் ரா. கணபதி தொகுத்து வெளியிட்டார்.
ஆயிரக்கணக்கான நூல்களில் தெவிட்டாத அவரது உபதேச உரைகள், அவர் ஆற்றிய அற்புதங்கள் உள்ளிட்டவற்றைப் படிக்க முடிகிறது.
நூறாண்டு வாழ்ந்த இந்த மகானின் பெருமையைச் சொல்லும் போது வார்த்தைகள் தோற்கின்றன.

“எங்கு வார்த்தைகள் தோற்கின்றனவோ எதை வார்த்தைகளால் அடக்க முடியாதோ அதுவே அது” என்று சொல்ல முடியா பிரம்மத்தை உபநிடதங்கள் விளக்கும்.
அதையே பரமாசார்யருக்கும் பொருந்தக் கூறலாம்.
எங்கே வார்த்தைகள் விவரிக்க முடியாமல் திணறுகின்றனவோ அங்கே பரமாசார்யாரின் திவ்ய சரிதம் அடங்குகிறது.
அவரின் நூறாண்டு பணியை நினைத்து அவர் காட்டிய வழியில் ஹிந்து மத தத்துவத்தை உலகெங்கும் பரப்புவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக அமையும்!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
******
You must be logged in to post a comment.