கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன? (Post No.8470)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8470

Date uploaded in London – – –8 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹாபாரதம்

மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?

ச.நாகராஜன்

மஹாபாரதம் படிக்கப் படிக்கத் தெவிட்டாத அறநூல்! பேராசையும், அதிகார ஆணவமும், சூழ்ச்சியும் கொண்டோர் மிகுந்த உலகில் நல்லோர் படும் பாடு நாம் அறிந்ததே!

அப்படிப்பட்ட உலகில் மஹாபாரத காலத்தில் வியப்பூட்டும் ஒரு பாத்திரம் கர்ணன். அவனுக்கென்றே ஒரு பர்வத்தை வியாஸர் ஒதுக்குகிறார்.

கர்ணனைப் பற்றி யுதிஷ்டிரரின் புகழ் மொழிகள் இவை:

பதினாயிரம் யானை பலம் கொண்டவன்.

யுத்தம் செய்வதில் ஒப்பற்றவன்.

சிம்மம் போன்ற சௌரியமுள்ள நடை உள்ளவன்.

ஜயசீலன்.

மாறாத நியமம் உள்ளவன்.

திருதராஷ்டிரனுடைய மகன்களுக்கு ஆதாரமானவன்.

மானி.

கொடுமையான பராக்கிரமம் உடையவன்.

பகைவரைப் பொறுக்காதவன்.

எப்பொழுதும் சுறுசுறுப்புள்ளவன்.

ஒவ்வொரு யுத்தத்திலும் பாண்டவர்களை எறிந்தவன்.

அதிவேகமான அஸ்திரம் உள்ளவன்.

ஆச்சரியமான யுத்தம் செய்கிறவன்.

ஸமர்த்தன்.

ஆச்சரியமான பராக்ரமம் உள்ளவன்.

குந்திக்கு ரகசியத்தில் உண்டான புத்திரன்.

இப்படிப்பட்டவன் எனக்குத் தமையன் அல்லவா என்று கூறி வருந்துகிறார் தர்மர்.

யாரிடம் வருந்துகிறார்?

மஹாபாரதப் போர் முடிந்தவுடன் வியாஸர், நாரதர், தேவலர், தேவஸ்தானர், கண்வர் ஆகிய  மஹரிஷிகளும், ரிஷிகளுடைய சிறந்த சீடர்களும் தர்மபுத்திரரிடம் வந்தனர்.அப்போது நாரதரிடம் கர்ணனைப் புகழ்ந்து தர்மபுத்திரர் கூறிய வார்த்தைகளே இவை.

கர்ணனின் வரலாறு முழுவதையும் தர்மபுத்திரருக்கு நாரதர் கூறி விளக்குகிறார். கர்ணனின் வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்கள் நமக்குத் தெரிய வருகிறது.

பிரம்மாஸ்திரத்தை எப்படியேனும் பெற வேண்டும் என்று நினைத்த கர்ணன் துரோணரிடம் சென்று அதைக் கேட்கிறான்.

ஆனால் அவர் மறுத்து விடுகிறார்.

அர்ஜுனனின் மீது கொண்ட பிரியத்தினாலும், கர்ணன் இதை எதற்காகக் கேட்கிறான் என்ற அவனது தீய எண்ணத்தை அறிந்ததாலும் துரோணர் அவனை நோக்கி, ”விதிப்படி விரதத்தை அனுஷ்டித்த பிராம்மணன் பிரம்மாஸ்திரத்தை அறிந்து கொள்ளத் தகுதியானவன். அல்லது மிகுந்த தவத்தை உடைய க்ஷத்திரியனும் தெரிந்து கொள்ளத் தக்கவன். வேறு எவனும் எவ்விதமும் இதைத் தெரிந்து கொள்ளத் தக்கவன் அல்லன்” என்று கூறுகிறார்.

ஏமாற்றம் அடைந்த கர்ணன் நேராகப் பரசுராமரிடம் சென்று தன்னை பிராம்மணன் என்று சொல்லி அஸ்திர வித்தைகளைக் கற்க ஆரம்பித்தான். பிரம்மாஸ்திரத்தையும் கற்றான்.

ஆனால் ஒரு நாள் அவன் தொடையில் தலை வைத்து பரசுராமர் உறங்கிய போது தொடையை ஒரு புழு வந்து துளைக்கத் தொடங்கியது.

தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பரசுராமர் எழுந்து விடக் கூடாதே என்று வலியைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். ரத்தம் பொங்கியது. அந்த ரத்தம் பரசுராமரை நனைக்கவே அவர் எழுந்து கொண்டார். நடந்ததைப் பார்த்தார். இப்படி ஒரு வலியை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாதே, உண்மையைச் சொல் நீ யார் என்றார்.

கர்ணன் உண்மையைச் சொல்ல வேண்டியதாயிற்று. க்ஷத்திரியர்களுக்கு எதிரியான பரசுராமர் வெகுண்டு, “உனக்குச் சமமானவனுடன் யுத்தம் செய்யும் போது உனது வத (அழிவு) காலத்தில் மட்டுமே இந்த பிரம்மாஸ்திரம் உனக்குத் தோன்றக் கடவது” என்று சபித்து அவனை உடனே அங்கிருந்து போக உத்தரவிட்டார்.

இதே கால கட்டத்தில் ஒரு பிராம்மணனுடைய பசுவை அவன் தற்செயலாகக் கொன்று விடுகிறான். கோபம் கொண்ட பிராம்மணன் கர்ணனை நோக்கி, “ அட, பாவி! எப்பொழுதும் எவனுடன் நீ பகை கொண்டிருக்கிறாயோ, எவனை வெல்ல எப்போதும் நீ முயற்சிக்கிறாயோ அப்படிப்பட்டவனுடன் நீ யுத்தம் செய்யும் போது உன்னுடைய தேர் உருளையை பூமி விழுங்கப் போகிறது. சக்கரமானது பூமியால் விழுங்கப்பட்டவுடன் தடுமாறிக் கொண்டிருக்கும் உன் தலையை உன் எதிரியானவன் அறுத்துத் தள்ளப் போகிறான்” என்று சாபம் கொடுத்தார்.

ஆக இப்படிப்பட்ட பல சம்பவங்களை தர்மபுத்திரர் தெரிந்து கொள்கிறார்.

பின்னர் நாரதர் கர்ணனின் மரணத்திற்கான காரணங்களை வரிசையாக அடுக்குகிறார்.

தேவேந்திரனால் யாசிக்கப்பட்டவுடன் தேவர்களின் மாயையினால் குண்டலங்களையும் உடன் பிறந்த கவசத்தையும் கர்ணன் தானமாகக் கொடுத்து விட்டான்.

இப்படி கவசத்தையும் குண்டலங்களையும் இழந்த கர்ணன், பிராமணருடைய சாபத்தாலும், பரசுராமருடைய சாபத்தாலும், குந்திக்கு வரம் கொடுத்ததாலும், இந்திரனுடைய மாயையினாலும், ரதிகர்களைக் கணக்கிட்ட காலத்தில் அர்த்த ரதன் என்று அவனை பீஷ்மர் சொல்லி செய்த அவமானத்தாலும், சல்லியன் செய்த தேஜோபங்கத்தாலும், கிருஷ்ணரின் நீதியாலும் அந்த கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருக்கையில் அர்ஜுனனால் யுத்தத்தில் கொல்லப்பட்டான்

இப்படிப் பல காரணங்களும் யுத்த களத்தில் ஒன்று சேர மாவீரனான மானி கர்ணன் கொல்லப்பட்டான்.

அவனை பீஷ்மர் ஒரு நாளும் அதிரதன் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தேராளியின் சக்தியில் பாதியைக் கொண்ட அர்த்த ரதன் என்றே அவன் பீஷ்மரால் கணிக்கப்பட்டான். துரியோதனனிடம் ரதாதிரதர்களின் கணக்கைச் சொல்கையில் அவர் கர்ணனை அர்த்த ரதன் என்றே மதிப்பிட்டுச் சொல்லி விட்டார். இந்த அவமானம் அவனைப் பெரிதும் வருத்தியது; மனதைப் பாதித்தது.

குந்தியிடம் அர்ஜுனனைத் தவிர இதர பாண்டவரைக் கொல்ல மாட்டேன் என அவன் வரமும் தந்தான்.

ஆக இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவனை அழித்தது.

 போரில் அஞ்சலிகம் என்னும் ஒரு சிறந்த பாணத்தை விடுத்து அவன் தலையை அறுத்தான் அர்ஜுனன்.

அது எப்படிப்பட்டது என்பதை வியாஸர் கூறுகிறார் இப்படி:

“அஞ்சலிகம் என்னும் பாணம் மகேந்திரனுடைய வஜ்ராயுதத்துக்கும் அக்னியுடைய தண்டத்துக்கும் ஒப்பானது. சூரியனுடைய உத்தமான கிரணத்துக்கு நிகரானது. மர்மங்களைப் பிளக்க வல்லது. ரத்தத்தினாலும் மாமிசத்தினாலும் பூசப்பட்டது. அக்னிக்கும் சூரியனுக்கும் ஒப்பானது.  பூஜிக்கத் தக்கது. மனிதர்கள், குதிரைகள், யானைகளின் உயிரை வாங்க வல்லது. மூன்று அரத்னி அளவுள்ளது. ஆறு சிறகுகள் உள்ளது. வெகு விரைவாகச் செல்வது. உக்கிரமான வேகம் கொண்டது. இந்திரனுடைய வஜ்ராயுதம் போன்ற வீரியம் உள்ளது. அதி கோரமாகப் பரவுகின்ற காலாக்னி போன்றது. (சிவனுடைய) பிநாகத்துக்கும் (விஷ்ணுவினுடைய) சக்கரத்துக்கும் நிகரானது. பிராணிகளுக்கு பயத்தை உண்டு பண்ணி அழிப்பது.”

அடேயப்பா, இப்படி ஒரு வர்ணனையை வியாச பாரதத்தில் வியாஸர் நம் முன் வைக்கிறார். (கர்ண பர்வம் அத்தியாயம் 98வது அத்தியாயம்)

அந்த அஞ்சலிகம் பாய்ந்து சென்று கர்ணனுடைய தலையை அறுத்தது.

கீழே விழுந்தான் கர்ணன். அவனுடைய தேகத்தினின்று ஒரு தேஜஸானது ஆகாயத்தை வியாபித்துக் கொண்டு சூரியனைச் சென்று சேர்ந்தது.

உள்ளத்தில் நல்ல உள்ளம் கர்ணனின் உள்ளம் என்றாலும் சகவாச தோஷம் அவனை மரணத்திற்கு அழைத்துச் சென்றது!

tags – கர்ணன்,  மரணம் , காரணங்கள் 

***

ஜீரண மண்டல அமைப்பு பருமனாக ஆக்குகிறதா? – 2 (Post No.6529)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 11 June 2019


British Summer Time uploaded in London –  7-14 am

Post No. 6529

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

சென்ற இதழின் தொடர்ச்சி…

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 2

கட்டுரை ஆக்கம் : Mark Hyman MD

மொழியாக்கம் ச.நாகராஜன்

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உங்கள் குடல் நாளம் சீராக இல்லை என்பதை எப்படி உணர்வது?

உங்கள் ஜீரண அமைப்பைச் சரியாக இருக்குமாறு செய்ய முதலில் உங்கள் உடலின் குடல்நாளத்தை சீரற்றதாகச் செய்யும் எந்தப் பொருள்கள் குடலுக்கு அனுப்பப் படுகின்றன என்பதை அறிய வேண்டும். பட்டியல் இதோ:

  • பைபர் சத்து குறைவாக உள்ளவை, அதிக இனிப்புள்ளவை , பதப்படுத்தப்பட்டவை, சத்துக் குறைவானவை, அதிக கலோரி உணவுத் திட்டம் ஆகியவை தப்பான பாக்டீரியாக்களையும், நுரைமங்களையும் (wrong Bacteria abd yeast) குடல் நாளத்திற்கு அனுப்புவதால் குடலானது பாதிப்புக்குள்ளாகிற்து.
  • அதிக மருந்துகளை உட்கொள்வதால், அமிலத் தடைகளைப் போல (acid blockers – Prilosec, Nexium etc.), அவை குடல்நாளத்தின் ஜீரண வேலையைத் தடுக்கிறது – வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளான ஆஸ்பிரின், அட்வில். ஆலிவ் (Aspirin, Advil and Aleve) மற்றும் அதிக அளவில் ஆன்டி – பயாடிக்ஸ், ஸ்டிராய்ட்கள், ஹார்மோன்கள் ஆகிய மருந்துகளையும் குறிப்பாகச் சொல்லலாம்.

* கண்டுபிடிக்கப்படாத குளூட்டன் சகியாமை (Gluten intolerance), குளூட்டன் ஒவ்வாமை, (Celiac disease) அல்லது பால் பொருள்கள், முட்டைகள் அல்லது சோளம் போன்ற குறைந்த கிரேடு உணவு ஒவ்வாமைகள்

* தொடர்ந்து இருக்கும் குறைந்த கிரேடு தொற்று வியாதிகள் அல்லது சிறுகுடலில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க அதனால் ஏற்படும் குடல் நாளத்தின் சீரற்ற தன்மை, ஈஸ்டின் அதிக வளர்ச்சி (Overgrowth of Yeast), பாராசைட்டுகள் (Parasites) அல்லது இன்னும் மோசமான குடல்நாளத் தொற்றுக்கள்

* குடல் நாளத்தைச் சேதப்படுத்தும் மெர்க்குரி (Mercury – பாதரஸம்) மற்றும் பாசி (mold toxins) போன்ற விஷங்கள்

* அமிலத்தைத்தடை செய்யும் மருந்துகளின் உபயோகத்தால் ஏற்படும் ஜீரணத்திற்கான போதுமான என்ஜைம் இயக்கம் இல்லாமை அல்லது துத்தநாகம் போதுமான அளவு இல்லாமல் இருப்பது (Zinc deficienty)

* குடல்நாள நரம்பு மண்டலத்தை மாற்றக் கூடிய மன அழுத்தம், ஒழுகக்கூடிய குடல் நாளத்தை உருவாக்குகிறது. சாதாரணமான பாக்டீரியாக்களை குடல்நாளத்தில் மாற்றுகிறது.

பிறகு என்ன நடக்கிறது என்று சொல்ல வேண்டியதே இல்லை; நீங்கள் நோய்வாய்ப்படுகிறீர்கள்.

குடல் நாளத்திற்குக் கொஞ்சம் கூடச் சம்பந்தமில்லாதது போலத் தோன்றும் எக்ஸிமா, சொரியாஸிஸ் அல்லது ஆர்த்ரிடிஸ் (eczema, psoriasis, or arthritis) ஆகியவை உண்மையில் குடல்நாளப் பிரச்சினைகளாலேயே ஏற்படுகின்றன என்பதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும். குடல்நாளத்தை நன்கு கவனித்தால் நீங்கள் நலமுடையவராக ஆகி விடுவீர்கள். இதோ ஒரு சின்ன எடுத்துக்காட்டு:

எக்ஸிமா குடல்நாளத்தில் ஆரம்பிக்குமா?

அலிஸன் எனது நோயாளிகளில் ஒருவர். அவர் எக்ஸிமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். செம்மையான, ஒழுகும், கறை படிந்த, அரிப்புக் கொண்ட தடிப்புகள் அவளது உடல் முழுதும் பரவி இருந்தது. உங்கள் குடல்நாளம் சீரற்றிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு இது தான். உங்கள் ஜீரணத்தை சரியாக ஆக்கி விட்டால் எப்படிப்பட்ட அசாதாரணமான பரிபூரண குணத்தை நீங்கள் அடைய முடியும் என்பதற்கான உதாரணமும் இவர் தான்.

ஒரு டாக்டர், இன்னொரு டாக்டர் என்று ஒவ்வொருவரையாக இந்தப் பெண்  பார்த்துக் கொண்டே இருந்தார். பூச்சுத் தைலங்கள், லோஷன்கள், திரவ மருந்துகள் (slves, lotions and potions) ஆகியவற்றைத் தன் தோலின் மீது தடவிக் கொண்டிருந்தார். அத்துடன் ஸ்டிராய்டுகள் , ஆன்டி பயாடிக் மருந்துகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்த்த டாக்டர்களில் ஒருவராவது அவரது நோயின் அடிப்படையான காரணத்தை அறிந்து கொண்டு சிகிச்சை செய்யவில்லை.

அலிஸனுக்கு வயது 57. தொடர்ந்து எட்டு வருட காலம் கடுமையான, கொஞ்சம் கூட குணமடையாத, எக்ஸிமாவினால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார். அவர் அதிக இனிப்புக் கொண்ட உணவுத் திட்டத்தை மேற்கொண்டிருந்தார். அடிக்கடி ஜனன உறுப்பில் ஈஸ்ட் தொற்றுக்களைக் கொண்டவராகவும் இருந்தார் (frequent vaginal yeast infections).

நான் அவரைப் பார்த்த போது அவரது குடல்நாளத்தைச் சோதனை செய்தேன்; ஒழுகும் குடல்நாளத்தை அவர் கொண்டிருப்பதையும் கண்டேன். அவரது குடல்நாளத்தில், ஒரு செல் கனத்தைக் கொண்ட பூச்சு உடைபட்டு சரியாக இயங்காமல் இருந்தது. அவர் 24 lg G என்ற உணவு ஒவ்வாமையைக் கொண்டிருந்தார்; அவரது மலமோ ஆரோக்கியமான பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கவில்லை, பல வருடங்களாக ஆன்டி பயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தமையால் ஈஸ்டின் அதிக வளர்ச்சியையும் கொண்டிருந்தார். ஈஸ்டிற்கு எதிராக அதிக அளவில் ‘ஆன்டி பாடிஸ் (Antibodies) அளவுகளையும் இரத்தத்தில் கொண்டிருந்தார்.

ஆகவே அவரது குடல்நாளம் சரியாக ஆவதற்கு நான் உதவி செய்தேன். அவருக்கு எதிர்வினை செய்த அனைத்து உணவுகளையும் அவரை நிறுத்தச் சொன்னேன். இனிப்பைத் தவிர்த்து அவரது கேஸ்ட்ரோ இண்டெஸ்டினல் பாதையில் ஈஸ்டையும்  பதப்படுத்தப்பட்ட கார்போஹடிரேட்டுகளையும் அளிப்பதை நிறுத்தச் சொன்னேன் (to stop feeding the yeast in her gastrointestinal tract by cutting sugar and refined carbohydrates).  அவரது குடல் நாளத்தில் இருந்த ஈஸ்டைக் கொல்ல, பூசண எதிர்ப்பு மருந்துகளையும் (antifungal medications) மூலிகைகளையும் அளித்தேன். பின்னர் ப்ரோபயாடிக்ஸ்களை அளித்து (probiotics) அவர் உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன். அத்துடன் குடல்நாளத்தை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்களை அளித்து அவரது குடல்நாள பூச்சைச் சரி செய்து இயல்பான உடல் இயக்கம் அவருக்கு வருமாறு செய்தேன்.

விளைவு?அவரது எக்ஸிமா எட்டு வருடங்களில் முதல் தடவையாக மறைந்தே போனது. அது மீண்டும் வரவே வராமல் ஒழிந்தது!

அலிஸனுக்கு ஏற்பட்ட அனுபவத்தை நீங்களும் அனுபவிக்கலாம். உங்களது ஜீரணத்தைச் சரியாக ஆக்குவதன் மூலம் உங்கள் தொடர் வியாதி அடையாளங்களை நீக்கிக் குணமாகலாம்.

நல்ல ஜீரண ஆரோக்கியத்திற்கான ஏழு படிகள் இதோ:

உங்களது உள் குழாயைச் சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:

  1. பதப்படுத்தப்படாத முழுமையான உணவுகளை உண்ணுங்கள். அதிகமான பைபர் இருக்கும்படியான கறிகாய்கள், பீன்ஸ், பருப்புகள், விதைகள் முழுமையான தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  2. உணவு ஒவ்வாமையை நீக்குங்கள். சில உணவுகள் சேராவில்லை என்ற நிலை இருந்தால் அதைத் தவிர்த்து வேறு உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுங்கள். க்ளூடன், பால் பொருள்கள், ஈஸ்ட், சோளம், சோயா, முட்டைகள் ஆகியவற்றை ஒரு வாரம் நிறுத்துங்கள். (cut out gluten, dairy, yeast, corn, soy and eggs). உங்கள் குடல்நாளம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். மற்ற நோய்க்குறிகளின் அடையாளங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள்.
  3. பூச்சிகள் அதிகமாக இருக்கிறதா என்பதையோ அல்லது தொற்றுக்கள் இருக்கிறதா என்பதையோ பார்த்து அதற்குத் தக்க சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். பாராசைட்டுகள், சின்ன குடல்பகுதி பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவை சரியாக குடல்நாளம் இயங்குவதைத் தடைப்படுத்தும். நீங்கள் குணமடைய விரும்பினால், இந்தத் தொற்றுக்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும்.
  4. உங்கள் ஜீரண என்ஜைம்களை மீண்டும் நிறைவு செய்யுங்கள். போதுமான அளவு ஜீரண என்ஜைம்கள் உங்கள் குடல்நாளத்தில் இல்லையென்றால் உங்கள் உடல் மற்றும் மூளை சரியாக இயங்குவதற்கான மூலப்பொருள்களை உங்கள் உணவுகள் சரியாக மாற்றித்தரச் செய்ய முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சரியான ஜீரண என்ஜைம்களை உங்கள் உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் (take a broad – spectrum digestive enzymes with your food).
  5.  நட்பான பாக்டீரியாக்களைக் கொண்டு உங்கள் உடல் மண்டலத்தை அருமையாக ஆக்கி மீண்டும் நிர்மாணியுங்கள். ப்ரோபயாடிக் துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் (Take probiotic supplements). அவைகள் நல்ல குடல்நாளத்திற்கான ஆரோக்கியமான் பாக்டீரியாக்களை மீண்டும் அடைய உதவும்.
  6.  நல்ல கொழுப்பைக் கொள்ளுங்கள். ஒமேகா -3 துணை உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது குடல்நாளத்தில் இருக்கும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
  7. உங்கள் பூச்சை (lining) குணப்படுத்துங்கள். குடல்நாளத்தைக் குணப்படுத்தும் க்ளூடாமைன் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களை உங்களின் குடல்நாள பூச்சைச் (gut lining) சரி செய்வதற்காக உண்ணுங்கள். அது தனது இயல்பான இயக்கத்தை அடையும்.

இப்படி ஜீரணத்தைச் சரி செய்ய சில காலம் பிடிக்கும், ஆனால் அதில் நிச்சயம் வெற்றி உறுதி. நீங்கள் துடிப்பான ஆரோக்கியத்தை விரும்பினால் அது மிக மிக அவசியமானது. ஆகவே உங்கள் உள் குழாயை சரி செய்ய மேற்கொண்ட சிகிச்சை வழிமுறைகளைக் கடைப்பிடித்து உங்கள் நோய் அறிகுறிகள் மறைவதைக் கண்டு  மகிழுங்கள்!

 இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புவது : –

உங்களின் குடல்நாளம் உங்களின் முழு ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

உங்கள் ஜீரணத்தைச் சரியாக்க என்னென்ன வழிமுறைகளை நீங்கள் எடுக்கிறீர்கள்? எப்படி அவை வேலை செய்கின்றன?

ஏன் மருத்துவக் கம்பெனிகள்  குடல்நாளத்தின் சரியான இயக்கத்தைத் தடை செய்யும் மருந்துகளைத் தயார் செய்து அவற்றை தீவிரமாக விளம்பரப்படுத்துகின்றன? உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன?

உங்கள் எண்ணங்களைத் தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாமே!

உங்கள் ஆரோக்கியத்தை விரும்பும் நலம் விரும்பி

  • மார்க் ஹைமேன் MD

****

நன்றி : மார்க் ஹைமேன் MD – க்ளீவ்லாண்ட் க்ளினிக் சென்டர் ஃபார்      ஃபங்ஷனல் மெடிசின் – இன் டைரக்டர். அல்ட்ரா வெல்னெஸ் சென்டரின் நிறுவனர்.

வாழ்க வளமுடன்!

***