
Post No. 9934
Date uploaded in London – 4 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆர்.கே. நாராயணன், உலகப் புகழ் பெற முதலில் உதவியவர் பிரிட்டனைச் சேர்ந்த சிறுகதை , நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE ஆவார் . பிரிட்டனில் உள்ள ஆங்கிலப் பத்திரிகைகள் இந்தியர் எழுதிய கதைகளில் பாராமுகமாக இருந்த போது கிரஹாம் க்ரீன் ஒருவெளியீட்டாளரைக் கொண்டு ஆர்.கே. நாராயணனின் கதைகளை ஆங்கில உலகில் வெளியிட்டார். பின்னர் அவர் சுயம்பிரகாசமாக ஒளி உமிழ்ந்தார். அப்படி இருந்த போதும் இருவரும் வாழ்நாள் முழுதும் நட்புறவோடு வாழ்ந்தனர்.

கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர், பத்திரிகையாளர் ஆவார். அவருடடைய நாவல்களிலும் சிறுகதைகளிலும் அறநெறி தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். மேலும் உலகின் பல இடங்களில் நடந்ததாக இருக்கும். அவர் உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று வந்தவர் என்பதால் இப்படி கதையின் இடத்தை மாற்ற முடிந்தது.
க்ரீன் 21 வயதில் லண்டனில் பத்திரிகையில் சேர்ந்து பணிபுரிந்தார். 25 வயதில் அவருடைய முதல் நாவல் அச்சாகியது த மேன் வித்தின் THE MAN WITHIN என்ற அந்த நாவலுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்தவுடன் அவர் பத்திரிகைத் தொழிலை உதறி எறிந்தார்.
இரண்டாவது உலகப் போர் காலத்தில் அவருடைய சேவையை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. பின்னர் அவர் பிரிட்டனின் உளவுத் துறையில் பணியாற்றினார். இதனால் கிடைத்த அனுபவத்தைக் கதைகளில் புகுத்தினார். அரசியல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் நாவல்களை எழுதினார்.28 வயதில் இவர் எழுதிய உளவாளி கதை STAMBOUL TRAIN சுவைமிக்கது அதற்குப் பின்னர் இவர் எழுதிய திகில் கதைகள் திரைப்படங்களாக உருவெடுத்தன.
1926ல் காதல் மனைவி காரணமாக, க்ரீன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் சேர்ந்தார். இதனால் கிறிஸ்தவ மதம் போற்றும் உத்தம குணங்களையும் கதைகளில் பயன்படுத்தினார் .ஆங்கில கடற்கரையில் வாழ்ந்த இளம் வயது குற்றவாளி, மெக்சிகோவில் வாழ்ந்த குடிகார பாதிரியார், மத்திய ஆப்ரிக்க நாட்டில் பணியாற்றிய ரோமன் கத்தோலிக்க கட்டிடக் கலைஞர் என்று பன்னாட்டு கதாபாத்திரங்களைப் படைத்தார்.
கிரஹாம் க்ரீன் லண்டனுக்கு அருகில் ஐந்து சகோதர, சகோதரிகளுடன் பிறந்தார் . ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வரலாறு படித்தார்.அவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். 86 வயதில் இரத்தப் புற்றுநோய் கண்டு இறந்தார். சுய வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் கதைகளிலும் பொது வாழ்விலும் ‘ஜோக்’குகளை உதிர்த்தார். பத்திரிக்கைக் காரர்களையும் ஏமாற்றிவிடுவார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போன நாவல் கிடைத்துவிட்டது என்று சொல்லி எல்லோரையும் ஏமாற்றினார். உண்மையில் அது அவரிடமே இருந்தது; தொலையவில்லை. APRIL FOOL ஏப்ரல் ஃ பூல் போன்றதொரு ஜோக் அது!
67 ஆண்டு எழுத்துப் பணியில் 25 நாவல்களை எழுதினார். பல பரிசுகளை வென்றார்.
இடதுசாரி சிந்தனை உடையவர் என்பதால் இவருடைய நாவல்களில் அமெரிக்க எதிர்ப்பும் இருக்கும் . நோபல் பரிசுக்கு முன்மொழியப்படுவோர் பட்டியலில் இவர் பெயர் இருந்தது; அது எட்டாக் கனியாகவே போயிற்று. ஆனாலும் ஷேக்ஸ்பியர் விருது, ஜெரூசேலம் விருது போன்ற ஏனைய இலக்கிய பரிசுகளை வென்றார் .
பிறந்த தேதி – அக்டோபர் 2, 1904
இறந்த தேதி – ஏப்ரல் 3, 1991
வாழ்ந்த ஆண்டுகள் – 86
எழுதிய நாவல்கள், கதைகள்:-
PUBLICATIONS
1935- THE BASEMENT ROOM AND OTHER STORIES
1938- BRIGHTON ROCK
1940- THE POWER AND THE GLORY
1948- THE HEART OF THE MATTER
1950- THE THIRD MAN
1951 -THE END OF THE AFFAIR
1955- THE QUIET AMERICAN
1958 – OUR MAN IN HAVANA
1961- A BURNT OUT CASE
1966 – THE COMEDIANS
–SUBHAM–




tags- ஆர்.கே.நாராயணன், கிரஹாம் க்ரீன், Graham Greene










