சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள்! (Post No.9887)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9887

Date uploaded in London – 24 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சென்னை A அலைவரிசை 720 HZ ச.நாகராஜனின் சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகளை 16-7-2021 முதல் 25-7-2021 முடிய ஒலிபரப்புகிறது. நேரம் காலையில் தமிழ்ச் செய்திகள் முடிந்தவுடன், சரியாக 6.55க்கு ஆரம்பிக்கும் காலைமலர் நிகழ்ச்சியில் முதல் ஒலி பரப்பாக இது அமையும். ஆன்லைன் நிகழ்ச்சியாக கணினி, ஐபாட் மூலமாகவும் இதைக் கேட்கலாம்.

தொடுப்பு : https://onlineradiofm.in/stations/all-india-air-chennai-pc

உரை எண் : 3 – 18-7-21 அன்று காலை ஒலிபரப்பப்பட்டது

சுற்றுப்புறத்தைக் காக்கும் வழிகள்!

சுற்றுப்புற சூழலைக் காக்க ஏராளமான எளிய வழிகள் உள்ளன.

சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எந்தப் பொருளையும் வேண்டாம் என்று உறுதிபடச் சொல்லும் மன உறுதி ஒவ்வொருவருக்கும் வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஆன பைகள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்க மாட்டேன் என்ற மன உறுதி இப்பொருள்களைச் சந்தைப் படுத்தலைத் தவிர்க்கும்.குளிர்பானங்கள், நீர், தேநீர், காப்பி ஆகியவற்றைப் பருகுவதற்கு பேப்பரிலான கோப்பைகளைத் தரும் போது அவற்றை வாங்க மறுப்பதும் பருகுவதற்கு தரும் ஸ்டிராக்களைத் தவிர்ப்பதும் எளிய செயல்களானாலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் அரிய வழிகளாகும்.

ஒரு T ஷர்ட்டை உருவாக்கத் தேவையான பருத்தியை வளர்க்க 700 காலன் தண்ணீர் தேவை என்பதை உணர்ந்தால் தேவைக்கு அதிகமானவற்றை வாங்க மாட்டேன் என்ற மனப் பக்குவம் உருவாகும். இது போல தேவைக்கு அதிகமாக நாம் வாங்க விழையும் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்ற நோக்கில் ஒவ்வொருவரும் பார்த்து வாங்க ஆரம்பித்தால் விற்பனைச் சந்தையின் போக்கும் மாறும்; ஒருவரின் நல்ல நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் அண்டை அயலாரும், நட்பும், சுற்றமும் உத்வேகமடைந்து இப்படிப்பட்ட பழக்கங்களை மேற்கொள்வர்.

பாக்கிங்கிற்காகப் பயன்படுத்தப்படும் ஏராளமான கார்ட்போர்ட் பாக்ஸ் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க, கூடுமான மட்டில் நமக்குத் தேவையானவற்றை உள்ளூர் உற்பத்தியாளரிடமிருந்தே வாங்க வேண்டும். எந்தப் பொருளையும் உள்ளூர் உற்பத்தியாளரிடம் வாங்குவது செலவையும் குறைக்கும், உற்பத்தியாளர்களையும் ஊக்குவிக்கும், சுற்றுப் புறச் சூழலையும் மேம்படுத்தும்.

உடலுக்கானாலும் சரி, தோட்டத்திற்கானாலும் சரி, வயலுக்கானாலும் சரி கெமிக்கல்களை – இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் இயலாவிடில் குறைக்க வேண்டும்.

அறிவியல் ஆய்வு தரும் தகவலின்படி ஒரு வாகனமானது 4.6 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடை ஒரு வருடத்தில் வெளியேற்றுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் எவ்வளவு நச்சு வாயுவை வெளியேற்றி சுற்றுப் புறத்தை மாசு படுத்துகிறது என்பதை எளிதில் ஊகித்து உணரலாம்.

அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுதல், சைக்கிளை அதிகம் பயன்படுத்தல் ஆகியவை சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்த வல்ல எளிய வழிகளாகும்.

தேவைக்கு அதிகமாக நீரைப் பயன்படுத்தலைத் தவிர்ப்பது நீர் வளத்தைப் பாதுகாக்கும் ஒரு வழியாகும். ஒழுகும் குழாய்களை உடனடியாகப் பழுது பார்த்தல் வேண்டும். குழாயைத் திறந்து விட்டுக் கொண்டே பல் துலக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஆகியவற்றைத் தவிர்ப்பதால் நீர் சேமிப்பு அதிகமாகும்.

சிந்தித்தால் சிறப்பான வழிகள் தோன்றும் என்பதில் ஐயமில்லை

***

INDEX

Plastic avoid

T shirt

Chemicals to avoid

Water harvesting

TAGS- பிளாஸ்டிக், சுற்றுப்புற சூழல்