ராமாயண நாட்டிய நாடகம், இந்தோநேஷியா
Article No.1739; Date:- 22 March, 2015
Written by S Nagarajan
Uploaded at London time காலை 7-02
தமிழ் திரைப்படங்களில் ராமர் – 14
ச.நாகராஜன்
லாலி! லாலி! ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே!
தாலாட்டில் ராமர்
தமிழ் திரைப்படங்களில் தாலாட்டுப் பாடல்களுக்கு தனி இடம் ஒன்று உண்டு, ‘
‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற சோகமான பாகப்பிரிவினை படப் பாட்டு ஒரு ரகம் என்றால் ‘தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே’ என்ற நாயகன் படப் பாடல் இன்னொரு ரகம்.
ஆனால் ராமரையும் கௌஸல்யையும் கம்பனையும் வால்மீகியையும், தியாகையரையும் பாடல் வரிகளில் இடம் கொண்ட லாலி லாலி பாடல் அற்புதமான ஒரு பாடல்.
தெலுங்கு படமான ஸ்வாதி முத்யத்தில் இந்த தாலாட்டுப் பாட்டை எழுதியவர் டாக்டர் சி.வி. நாராயண ரெட்டி. தமிழில் சிப்பிக்குள் முத்து படத்திற்காக எழுதியவர் கவிஞர் வைரமுத்து.அற்புதமாக இதைப் பாடியிருப்பவர் பி.சுசீலா.
வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்
ராம பக்தரான ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் 24000 கிருதிகளை இயற்றியவர். ஆனால் 700 கிருதிகளே நம்மிடம் இன்று உள்ளன. கம்பனோ பத்தாயிரம் பாடல்களில் ராமனைப் பாடிப் பாடி மகிழ்ந்தான். வால்மீகியோ 24000 ஸ்லோகங்களில் ராமனின் அமுதக் கதையை அமிர்தமாக வர்ஷித்தார். வால்மீகி ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் அன்றாடம் சொல்லும் தியான ஸ்லோகங்களில் வால்மீகிக்கு வணக்கம் தெரிவிக்கும் ஸ்லோகம் முக்கியமான ஒன்று; சுவையானதும் கூட!
கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் I
ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II
ஆருஹ்ய கவிதா ஷாகாம் – கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி
கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் – ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்
வந்தே வால்மீகி கோகிலம் – அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்
முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ராம நாமம் கூவும் குயிலைக் கொண்டாடுவது குழந்தையின் தாலாட்டிலிருந்தே ஹிந்துப் பண்பாட்டுக் குடும்பங்களில் ஆரம்பித்து விடுகிறது!
தெலுங்குப் பாடல்– லாலி லாலி
டாக்டர் சி.வி.நாராயண ரெட்டி எழுதிய தெலுங்குப் பாடலின் ஒரு சில வரிகளை முதலில் பார்ப்போம்:-
வடபத்ரசாயிக்கு வரஹால லாலி
ராஜீவ நேத்ருனுக்கி ரத்னால லாலி
முரிபால கிருஷ்ணுனிக்கி முத்யால லாலி
ஜகமேல ஸ்வாமிக்கி பகடால லாலி
கல்யாண ராமுனிகி கௌஸல்யா லாலி
யதுவம்ச விபுனுகி யசோதை லாலி என்று இப்படி அற்புதமான வரிகளுடன் தெலுங்குப் பாடல் அமைந்திருக்கிறது.
பாடலுக்கு மிக அற்புதமாக இசை அமைத்திருப்பவர் இளையராஜா.
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
இந்தப் படத்தில் ராமன் கதை கேளுங்கள் பாடலைத் தொடர்ந்து ராமனை நினைவூட்டும் இரண்டாவது பாடல் இது. தமிழில் இதே இசைக்குத் தக ஆழ்ந்த பொருளுடன் அமைக்கப்பட்ட பாடலைப் பார்ப்போம்:-
லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி ராஜாதிராஜனுக்கு இதமான லாலி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி ராஜாதிராஜனுக்கு இதமான லாலி குறும்பான கண்ணனுக்கு ஆ.. குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த)
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே
கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே கரு யானை முகனுக்கு மலையன்னை நானே கரு யானை முகனுக்கு மலையன்னை நானே பார்போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (வரம் தந்த)
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே ராமராஜனுக்கு வால்மீகி நானே ராமராஜனுக்கு வால்மீகி நானே ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ராதிகா துளியில் குழந்தையை ஆட்டுவதும், குழந்தையை முதுகில் சுமந்தவாறே கோலம் போடுவதும், தையல் மெஷினை இயக்குவதுமாக பின்னணிக் காட்சிகள் இருக்க பாடல் பல கருத்துக்களை முன்னணியில் முன் வைக்கிறது!
கௌசல்யையும் யசோதையும்
பாரதத்தில் பிறந்த ஒவ்வொரு அன்னையும் பிள்ளையைப் பெற்றவுடன் அந்த வரத்தைத் தந்தருளிய இறைவனுக்கு நன்றி சொல்வது வழக்கம். புத் என்ற நரகம் செல்ல விடாமல் தடுப்பதனாலேயே புத்திரன் என்று அழைக்கப்படுகிறான்.
ஆக அப்படி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி பாடல் இசைக்கப்படுகிறது. தன் மகனை ஒரு ராமனாக, கண்ணனாக, கஜமுகனாக, முருகனாக நினைத்துப் பாடுகிறாள் தாய். தன்னை வால்மீகியாக, கம்பனாக, ஆழ்வாராக, தியாகையராக நினைத்துப் பாடும் இந்தப் பாடலின் கருத்தை எண்ணி மகிழலாம்.
குறிப்பாக தியாகராஜ ஸ்வாமிகள் (யதுகுல காம்போஜி ராகத்தில்) பாடியுள்ள கீர்த்தனையான
“ஶ்ரீராம ஜெயராம ச்ருங்கார ராமயநி
சிஞ்சிஞ்ச ராதே ஓ மனஸா
தலுகு செக்குல முது பேட்ட கௌசல்யா முனு
தபமேமி ஜேசெனொ தெலியா”
என்ற கீர்த்தனையில் கௌசல்யை ராமனின் முத்தம் பெற்று அவனை வளர்க்க என்ன தவம் செய்தாளோ என்று உருகுகிறார்!
அதே போல, பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியுள்ள அருமையான பாடலான
“என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் – அம்மா வென்றழைக்க
என்ன தவம் செய்தனை
என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.
ஒரு தாலாட்டுப் பாடலில் பிரம்மாண்டமான பாரம்பரிய வரலாறுகளைச் சித்தரிக்கும் இந்தப் பாடல் தாலாட்டுப் பாடல்களில் சிறந்த ஒன்று என்று தயங்காமல் கூறலாம்!
*****************



You must be logged in to post a comment.