பாவாஹரி பாபா கதை! கல் மனமும் கரைந்தது!

thief

Article No.1748; Date:- 25  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  8-07

சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)

காசிபுரத்தில் குகை ஒன்றில் பாவாஹரி பாபா என்ற மஹான் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் பிரம்ம நிஷ்டையில் இருக்கும் போது ஒரு திருடன் குகைக்குள் வந்தான். அவருடைய பூஜா பாத்திரங்கள் அனைத்தையும் (பூஜைக்குப் பயன்படுத்தும் சாமான்கள்) மூட்டை கட்டிக் கொண்டு நழுவ முயன்றான். அந்த நேரத்தில், தியானம் கலைந்து பாபா முழித்துப் பார்த்தார்.

இதைக் கண்ட திருடன் பயந்து நடுக்கி மூட்டையைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான். பாபாவும் மூட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் பின்னால் ஓடினார். அவர் தொடர்ந்து வருவதைப் பார்த்த திருடனுக்கு பயம் அதிகரிக்கவே மேலும் வேகமாக ஓடினான். ஆனால் யோக சக்தியால் உடலைப் பக்குவமாக வைத்திருந்த பாபா, அவனை முந்திச் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார். அவன் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, “அன்பனே, இவை எனக்கு வேண்டாம். நீயே எடுத்துகொள்ளலாம்” என்று சொல்லி அவன் கைகளில் கொடுத்தார்.

அந்தக் கள்ளனின் கல் மனமும் உருகிவிட்டது. அன்றுமுதல் அவன் அவருடைய பக்தனாக மாறி, அவருக்குச் சேவகம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

(குறள் 71:– அன்பைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் இருக்கிறதா? அன்புடையார் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீர்த் துளிகளே உள்ளத்தில் கிடக்கும் அன்பினை எல்லோருக்கும் காட்டிவிடும்)

ascetic

Image of an acetic

மற்றொரு சமயம் ஒரு கிருஷ்ண சர்ப்பம் (நாகப் பாம்பு) அவரைக் கடித்துவிட்டது. அப்போது அவர் நிஷ்டையில் இருந்தார். யாருக்கும் பக்கத்தில் செல்ல பயம். அவர் இறந்தேவிட்டார் என்று எல்லோரும் எண்ணினர். அவர் நிஷ்டை கழிந்து ஒன்றும் நடவாதவர் போல நடந்துவந்தார். பாம்பு கடித்தும் எப்படி உயிருடன் வந்தீர்கள்? என்று பக்தர்கள் வியப்புடன் கேட்டனர். “கடவுளின் தூதர் என்னைப் பார்த்துவிட்டுப் போனார்” – என்று அவர் பதில் கொடுத்தார்.