இளவரசர் ஹாரிக்கு ‘பஞ்ச கன்யா’ பெண்கள் வரவேற்பு (Post No 2654)

harry with kunkum

Written by london swaminathan

 

Date: 22 March 2016

 

Post No. 2654

 

Time uploaded in London :– 12-20

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

panchakanya 3

நேபாள நாட்டிற்குச் சென்ற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரிக்கு ஐந்து இளம்பெண்கள் வரவேற்பு கொடுத்தது பற்றி நேற்று லண்டன் பத்திரிக்கைகளில் நிறைய படங்களும் விரிவான செய்தியும் வந்துள்ளன. அவைகள் மூலம் பல இந்துமத வழக்கங்களை நேபாளியர், அர்த்தம் தெரியாமலேயே பின்பற்றுவது தெரிந்தது.

 

எல்லா ஆங்கிலப் பத்திரிக்கைகளும் ‘பஞ்ச கன்யா’ என்பதை, ‘ஐந்து கன்னிப் பெண்கள்’ என்றும் ‘ஐந்து திருமணமாகாத பெண்கள்’ என்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததோடு ஐந்து என்பது நேபாளியருக்கு அதிர்ஷ்டகர எண் என்றும் எழுதியுள்ளன. ஆனால் மேற்கொண்டு எந்த விளக்கமும் இல்லை.

 

‘பஞ்சகன்யா’ என்பது இந்து மதத்தில் ஐந்து பதிவ்ரதைகளைக் குறிக்கும். அந்தக் காலத்தில் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் ‘பிராத ஸ்மரனம்’ என்ற புனிதர் பட்டியலை வாசிப்பார்கள்- அதாவது மனப்பாடமாக குளிக்கும்போதோ, பெண்கள் சமைக்கும்போதோ சொல்லுவார்கள். இப்பொழுது அதை, ஆர்.எஸ்.எஸ். இயக்க ஷாகாக்களில் மட்டுமே கேட்க முடிகிறது.

 

அஹல்யா, த்ரௌபதீ,சீதா,தாரா மண்டோதரி ததா

பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் சர்வ பாப விநாசனம்

–என்பது அந்த வடமொழி பாட்டின் வரிகள்.

இந்த ஐந்து பெண்களின் கதை தெரியாதோர் பாரத நாட்டில் இல்லை. சம்ஸ்கிருத ஸ்லோகம் தெரிகிறதோ, புரிகிறதோ என்பதைச் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஐந்து பெண்களின் மகத்துவத்தை அறியாதோர் இல்லை.அவர்களை நினைத்த மாத்திரத்தில் எல்லா பாபங்களும் அழிந்துவிடும் என்று கடைசி வரி கூறுகிறது.

prince-harry-nepal_3597889b

சங்க இலக்கிய நூலான பரிபாடலில், மதுரை திருப்பறங்குன்றத்துக்கு வந்த கணவன் மனைவி இந்திரன் – அஹல்யை-கௌதம மகரிஷி ஓவியத்தைக் கோவில் சுவரில் கண்டு விவாதித்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

 

இங்கே இந்த ஐந்து பேரின் வரலாற்றை எழுதப்போவதில்லை. இதிலுள்ள இரண்டு சூட்சுமங்களை மட்டும் ஆராய்வோம். பட்டியலிலுள்ள அகல்யை, திரவுபதி, சீதை, தாரா, மண்டோதரி – யாருமே கன்னிப் பெண் அல்ல. எல்லோரும் திருமணமானவர்கள். பின்னர் ஏன் பஞ்சகன்யா என்று சொல்லுகிறோம்? அவர்கள், மனதளவில் ஒரு கன்னிப் பெண் போல தூய்மையானவர்கள். வேறு ஆடவரை எண்ணாதவர்கள்; ‘செக்ஸ்’ என்பதை, சிற்றின்பக் கருவியாகப் பயன்படுத்தாமல் வம்ச விருத்திக்கு மட்டுமே பயன்படுத்துபவர்கள். அகல்யைகூட இந்திரனால் ஏமாற்றப்பட்டவளே தவிர தானாக அவனை நாடிச் செல்லவில்லை. மேலும் அஹல்யை கதையில், பாபம் செய்தோருக்கும் விமோசனம் உண்டு என்ற தாத்பர்யமும் – உட்கருத்தும் – பொதிந்துள்ளது.

இரண்டாவது சூட்சுமம்- ஆரிய,திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுக்கும் பாடல் இது. இந்துமத புராணங்களில் அசுரர்களும், தேவர்களும் காச்யப ரிஷியின் பிள்ளை என்று சொன்னபோதிலும், வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு அடிவருடிய திராவிட இயக்கங்களும் அசுரர்களை திராவிடர் என்றும் தேவர்களை ஆரியர் என்றும் முத்திரை குத்தி எழுதிவருகின்றனர். மேற்கண்ட பட்டியலில் மண்டோதரி என்பார், ராட்சச ராவணனின் மனைவி! தாரா என்பவளோ, குரங்கின அரசன் வாலியின் மனைவி. இவர்களை, தினமும் நினைக்கவேண்டிய புனிதர் பட்டியலில் பழங்காலத்திலேயே சேர்த்து வேற்றுமை பாராட்டாது எல்லாப் பெண்களும் சொல்லிவருவது, ஆரிய-திராவிட இனவெறிப் பிதற்றல்வாதிகளின் மூஞ்சியில் கரி பூசுகிறது.

 

ஆக, நேபாளத்தில் கொடுக்கப்பட்ட பஞ்சகன்யா வரவேற்பு, இது எல்லாவற்றையும் நினைவுபடுத்தும். நேபாளத் தலைநகரான காட்மண்டில் ஒரு புத்தர் கோவில் உட்புறம் முழுதும் தங்கத் தகடால் மூடப்பட்டுள்ளதால் அதையும் பொற்கோவில் என்றழைப்பர் (எல்லோரும் அறிந்த பொற்கோயில் சீக்கியர்களின் அமிர்தசரஸில் உளது; அதைவிட அதிக தங்கம் உடைய கோவில் வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவில்; என் முந்தைய கட்டுரைகளில் விவரம் காண்க). நேபாளத்தில் இந்த புத்தர் கோவிலுக்கும் ஹாரி சென்றுவிட்டு மஞ்சள் துண்டு, செங் குங்குமப்பொட்டு ஆகியவறுடன் கூர்க்கா வீடுகளுக்குச் சென்றார்.

ஆக இளவரசர் ஹாரியின் விஜயம், பஞ்சகன்யா பெருமையை அனைவருக்கும் நினைவுபடுத்தும்.

 

–சுபம்–

 

 

மண்டோதரியின் மாண்பு !

mando best
By s Nagarajan
Post No 988a; dated 19th April 2014
ராமாயண வழிகாட்டி; அத்தியாயம் 24

ராமாயணத்தில் வரும் அற்புதமான பாத்திரங்கள் அனைவரையும் சரி சமமாக கவிதா மயமாக்கி இருப்பது வால்மீகி ஒருவராலேயே செய்ய முடிந்த அற்புதம். இந்த வகையில் மண்டோதரியை அவர் சித்தரிக்கும் பாங்கே தனி!

அஹல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரீ ததா I

பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசினி: II

ஹிந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.
அஹல்யா, திரௌபதி, சீதா, தாரா. மண்டோதரீ ஆகிய ஐந்து கன்யாக்களின் பெயரை தினமும் நினைத்தால் மஹாபாதகங்களும் நாசம் அடையும் என்பது இதன் பொருள். இதில் நால்வர் ராமாயணத்தில் வரும் பாத்திரங்கள். திரௌபதி மஹாபாரதத்தில் வரும் பாத்திரம். ராமாயணத்தில் வரும் நால்வரும் ராமரை இன்னார் என்று அடையாளம் தெரிந்து கொண்டு பரம்பொருளே அவர் என்று நிர்ணயித்த மஹா பாக்கியசாலிகள். திரௌபதியோ கண்ணன் உண்மையில் பரம் பொருளே என்று அறிந்தவள். அவரைத் ஹ்ருதயகமலவாசா என்று துதித்தவள்.

மண்டோதரீ ராவணன் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்தவுடன் புலம்புகிறாள். அவனை வதம் செய்ய வந்தவன் சாதாரண மானுடன் அல்ல; பரம் பொருளே என்று அவள் கூறுகிறாள்
யுத்த காண்டத்தில் நூற்றுப்பதினான்காவது ஸர்க்கத்தில் 16,17,18,19 ஆகிய நான்கு ஸ்லோகங்களில் அவளின் பேரறிவு வெளிப்படுகிறது.

வ்யக்த மேஷமஹாயோகீ பரமாத்மா ஸநாதந: I
நாதிமத்ய நிதநோ மஹத: பரமோ மஹாந் II

தமஸ: பரமோதாதா சங்க சக்ர கதாதர: I
ஸ்ரீவத்ஸ வக்ஷா நித்ய ஸ்ரீரஜய்யச் சாச்வதோ த்ருவ: II

மாநுஷம் ரூபமாஸ்தாய விஷ்ணுஸ்ஸத்யபராக்ரம I
ஸர்வை: பரிவ்ருதோ தேவைர் வாநரத்வமுபாகதை: II

ஸர்வலோகேஸ்வரஸ் ஸாக்ஷாத்லோகாநாம் ஹிதகாம்யயா: I
ஸராக்ஷஸ பரிவாரம் ஹதவாம்ஸ்த்வாம் மஹாத்யுதி: II

mand5

ஏஷ – இவர் (ஸ்ரீராமர்) மஹாயோகீ பரமாத்மா ஸநாதந: – மஹாயோகியும் பரமாத்மாவும் புராணபுருஷரும் அநாதிமத்ய நிதநோ – ஆதியும் மத்தியும் அந்தமும் இல்லாதவரும் மஹத: பரமோ மஹாந் – பெரும்பொருளிலும் சிறந்த பெரும்பொருளூம் தமஸ: பரம: – இருளுக்கு (அஞ்ஞானத்திற்கு) அப்பாற்பட்டவரு தாதா – சிருஷ்டிப்பவரும் சங்க சக்ர கதாதர: -சங்கத்தையும் சக்கரத்தையும் திருக்கரத்தில் கொண்டவரும் ஸ்ரீவத்ஸ வக்ஷா – ஸ்ரீ வத்ஸமென்னும் மறுவை மார்பில் கொண்டவரும் நித்ய ஸ்ரீ –நித்ய லக்ஷ்மீ சமேதரும் அஜய்ய –அஜேயரும் சாச்வதோ த்ருவ: – எக்காலத்திலும் இருப்பவரும், மாறுபடாதவரும் ஸர்வலோகேஸ்வர: – அனைத்து லோகங்களுக்கும் ஈஸ்வரரும் மஹாத்யுதி: -மஹிமை மிக்கவருமாகிய சாக்ஷாத் விஷ்ணு: -சாக்ஷாத் விஷ்ணு பகவான்.

mand17

வ்யக்த – இது திண்ணம் ஸத்யபராக்ரம – ஸத்யமான பராக்ரம்ம் கொண்ட இவர் லோகாநாம் – உலகங்களுக்கு ஹிதகாம்யயா – நன்மை புரியத் திருவுள்ளம் கொண்டு மாநுஷம் ரூபே ஆஸ்தாய – மானிட உருவம் தரித்துக் கொண்டு வாநரத்வம் – வானர உருவத்தை உபாகதை: -அடைந்த தேவைர் ஸர்வை: – தேவர்கள் யாவராலும் பரிவ்ருத: – சூழப்பட்டு த்வாம் – உம்மை ஸராக்ஷஸ பரிவாரம் – அரக்க பரிவாரங்களுடன் ஹதவான் – கொன்று விட்டார்.

mand24

ராமாயணத்தின் மையக் கருத்தை இந்த நான்கே ஸ்லோகங்களில் நாம் காண்கிறோம். விஷ்ணுவுக்கு சஹஸ்ர நாமங்களைச் சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமம் அதி ரஹஸ்யமான அர்த்தங்களைக் கொண்டது. அந்த ஆயிரம் நாமங்களில் தேர்ந்தெடுத்த சிலவற்றை மண்டோதரீ இங்கு குறிப்பிடுவது ரஹஸ்யசாரமாகவும், சுவையுடன் கூடியதாயும், ராமரை விஷ்ணுவே என்று நிர்ணயம் செய்வதாயும் அமைந்துள்ளது.

தாரையும் கூட ராமரை பரம்பொருளே என்று இனம் கண்டவள். மண்டோதரியும் அப்படியே.

ராமாயணத்தின் ஜீவநாடியான விஷ்ணு நாமங்கள் இடம் பெறும் ஸ்லோகங்கள் என்பதால் இவை தனிச் சிறப்புடையவையாக ஆகின்றன; உயர்ந்து நிற்கின்றன!

Contact:— Swami_48@yahoo.com