மஹாகவி பாரதியார் நூல்கள் – Part 41 (Post No.4320)

Written by S.NAGARAJAN

 

 

Date:21 October 2017

 

Time uploaded in London- 5–45 am

 

 

Post No. 4320

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 41

சுப்பிரமணிய பாரதி – பிரேமா நந்தகுமார் எழுதியுள்ள ஆய்வு நூல்

 

ச.நாகராஜன்

 

 

டாக்டர் திருமதி பிரேமா நந்தகுமார் பாரதியாரின் நூல்களை நன்கு படித்த இலக்கிய ஆய்வாளர். பாரதி ஆர்வலர். அரவிந்தர் பால் பக்தி கொண்டவர். பாரதியார், அரவிந்தர் ஆகியோர் பற்றிய பல அரிய கட்டுரைகள் மற்றும் நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் படைத்தவர்.

 

ஆங்கிலத்தில் அவர் எழுதிய சுப்பிரமணிய பாரதி என்ற நூலை வி.எம்.சாம்பசிவன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா,-வின் வெளியீடாக் இந்த நூல் மார்ச் 1973இல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இரண்டு பாகங்களைக் கொண்டுள்ள இந்த நூல் 156 பக்கங்களைக் கொண்டுள்ளது.

 

முதல் பாகம் பாரதியாரின் வாழ்க்கையை விவரிக்கிறது. இரண்டாவது பாகம் பாரதி நூல்களைப் பற்றிய ஆய்வாக அமைகிறது.

 

அருமையான நூல்.

 

கோர்வையாக வாழ்க்கை வரலாற்றை ஆதாரங்களுடன் விவரிக்கும் பிரேமா நந்தகுமார், அவரது நூல்களைப் பற்றிய சிறப்புக்களையும் விளக்குகிறார்.

நூலில் மிக அருமையான செய்திகள் பலவற்றைக் காண்கிறோம்.

அவற்றில் சில:

 

 

சகோதரி நிவேதிதாவைச் சந்தித்து பாரதியார் விடை பெற்றுக் செல்கிறார். அப்போது..

 

“பாரதியார் விடை பெற்றுச் செல்கையில் நிவேதிதா தேவி தமது இமயமலைப் பயணத்தில் கிடைத்த சருகு ஒன்றை, தமது நினைவுப் பொருளாக வழங்கினார். பாரதி அதை பக்தியுடன் இறுதிநாள் வரை பத்திரப்படுத்தி வைத்திருந்தார். வறுமையில் உழன்ற காலத்தில் கூட பணத்துக்காக, அவர் அதைத் தர மறுத்து விட்டார். (பக்கம் 23)

 

ஸ்ரீ அரவிந்தரும், பாரதியாரும் கவிஞர்கள். வ.வே.சு. பிரபல சிறுகதை எழுத்தாளர். சீனிவாசாச்சாரியார் சிரத்தையுடன் இவர்க்ளின் உரையாடல்களுக்குச் செவி மடுப்பார். இவர்கள் நால்வரும் புதுச்சேரி கடற்கரையில் இலக்கியம், தத்துவம், துறவுநிலை குறித்து மணிக்கணக்கில் விவாதிப்பார்கள். (பக்கம் 37)

 

குவளைக் கண்ணன் பாரதியாரிடம் ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரம் பாடல்களைப் பற்றிக் கூறினார்.

 

“பாரதி உடனே சொன்னார் : — “அவவளவு தானே! நானே ஆறாயிரம் பாடல்கள் பாடுவேன். நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் அவர்கள் இயற்றினால் பாரதி ஆறாயிரம் நான் எழுதுவேன்” என்றார். இது வெறும் பேச்சல்ல.அடுத்த 40 நாட்களும் மௌன விரதம் பூண்டு தமது மாபெரும் முயற்சியில் இறங்கினார்”. (பக்கம் 47)

 

பாரதியார் புதுவையிலிருந்து சென்னை வந்தார்.

சென்னையில் அவரை வரவேற்ற ராஜாஜி கூறுகிறார்: “பாரதி ரயிலிலிருந்து இறங்கினார்; அவரைப் பார்க்க எனக்கு வருத்தமாயிருந்தது. முன்னர் அவரை நான் பார்த்தபோது, முழுமதி போல, அவரது முகம் ஒளி படைத்திருந்தது. இப்போது அந்த உண்ர்வைக் காணோம்; ஒரு கடும் பார்வை காணப்பட்டது. இந்தத் துயரமான மாறுதலைக் கண்டு மனம் நெகிழ்ந்தேன்.” (பக்கம் 59)

 

 

“அதன்படி மனைவியின் ஊருக்கு பாரதி, டிசம்பர் மத்திவாக்கில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து ரங்கசாமி ஐயங்காருக்கு எழுதிய கடிதம் ஒன்றிலிருந்து ஸ்ரீமதி அன்னிபெசண்டும்,டாக்டர் சுப்ரமண்ய அய்யரும், சி.பி.ராமசாமி அய்யரும் பாரதியின் விடுதலைக்கு உதவினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. (பக்கம் 69)

 

உதாரணத்துக்கு பாரதி ஆரிய-திராவிட சர்ச்சைப் பற்றிக் கூறியதை இங்கு குறிப்பிடலாம்”

 

“நண்பர்களே, ஆர்யர்களுக்கு முன் திராவிடர்களும் திராவிடர்களுக்கு முன் ஆதி திராவிடர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு முன், மிருகங்களும், மற்ற பிராணிகளும் வாழ்ந்திருக்கின்றன. அவற்றின் இடத்தில் நாம் தோன்றி வீடுகளைக் கட்டிக்கொண்டு பண்ணைகளை அமைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த் ஆதி காலத்தவர்கள் திரும்பி வந்து, தங்கள் நாட்டைக் கொடுக்க வேண்டும் எனக் கோரினால் நாம் அனைவரும் மூட்டை முடிச்சுகளோடு வெளியேற வேண்டியது தான்.” (பக்கம் 75)

 

 

தேசீயத் தலைவர்கள் மீது அவர் பாடிய பாடல்கள் 1921ம் ஆண்டுக்கு முன் இயற்றப்பட்டவை. இது பற்றி சி.ராஜகோபாலாச்சாரியார் எழுதுகிறார்:

“பாரதி பாட்டு வடிவில் அமைத்துத் தந்த தேசீய சிந்தனை, காந்தி யுகத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. விவேகானந்தர், தாதாபாய் நௌரோஜி, திலகர் ஆகியோர் இந்தியா பற்றிக் கொண்டிருந்த கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது.” (பக்கம் 100)

 

 

“இவ்விதமாக கண்னன் பாட்டு, பல பண் திற இசைவுடன் விளங்குகிறது. புவி வாழ்வை, தெய்வீ க வாழ்வாக மாற்றுவதற்குக் கடவுளே பூமியில் இறங்கி வந்தது போலத் தோன்றுகிறது. கண்ணன், ஒரு வேத ரிஷி; அர்ஜுனனின் நண்பன்;  ராதையின் காதலன்; வாழ்வளிக்கும் அன்னை; சற்குரு; சீடன் குவளைக் கண்ணன். ஆனால் என்றும் மறைந்து நிற்கும் பரம்பொருள். மனிதன் அணுகும் எல்லா வழிகளையும் கையாண்ட பின் பாரதி, இறுதியாக, ஆண்டவன் உருவில் கண்ணனைக் காண்கிறார்.” (பக்கம் 12)

பாஞ்சாலி சபதம் குறித்து பிரேமா நந்தகுமார் கூறுவது:

“திரௌபதியிடம் வீ ர ரசம் குடிகொள்கிறது. அவமானப் படுத்தப்பட்ட அரசி, ஆண்களின் உலகில் தனக்குரிய இடத்துக்காகப் போராடும் பெண்குலம், விடுதலை வேண்டிப் போரிடும் பாரதமாதா, புகழ் நிறைந்த ம்கா சக்தி ஆகிய நான்கும் அந்த அமர பாத்திரத்தில் ஒருங்கிணைந்து விடுகின்றன. “ (பக்கம் 133)

 

குயிலைக் காதலுடன் கு.ப.ராஜகோபாலன் ஒப்பிடுகிறார்.

குயில் பாட்டில் மெய்யுணர்வு வந்ததும் மறைந்து போகும் காதலை அவர் கீட்ஸின் (Grecian Urn)  கிரேசியக் கலயம் என்ற கதையில் வரும் பாத்திரங்களுடன் ஒப்பிடுகிறார். (பக்கம் 139)

 

இறுதியாக நவரத்ன ராமாராவின் சொற்கள் மிகவும் பொருத்தமான்வை:

 

புகழ் மிக்க தமிழ் மொழி வழங்கும் வரை பாரதியின் நாமம் நீடித்திருந்தாலும் கூட, அவரை அமரர் எனக் கூறுவது தவறாகாது.” (பக்கம் 154)

 

 

இப்படி பல அரிய கருத்துக்களைத் தொகுத்துத் தருகிறது இந்த நூல்.

 

பாரதியைப் பற்றிய அரிய இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் படிப்பது அவசியமாகிறது.

பிரேமா நந்தகுமாரின் ஆராய்ச்சி பாரதியைப் பற்றி நன்கு அறிய உதவும்.

***