
Post No.7769
Date uploaded in London – 1 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?- part 2

நேற்றைய கட்டுரையில் திருக்குறளில் வந்த பார்ப்பான், அந்தணர் குறள்களைக் கண்டோம். இன்று ஒரு அழகான பார்ப்பன மகனைக் காண்போம்.
சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உள . அதற்குப் பின்னர் நாலாம் நூற்றாண்டு முதல் திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் உருவாயின. கீழ்கண்ட குறுந்தொகைப் பாடல் சங்க கால நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் உளது.
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பினின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ மயலோ விதுவே
-குறுந்தொகை பாடல் எண் 156
– பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது

பாட்டின் பொருள்-
(தலைவியிடத்தில் ஆசைகொண்ட தலைவனை பாங்கன் இடித்துரைத்த போது , தலைவன் பாங்கனை நோக்கி நீ திட்டுவதால் பயன் ஒன்றுமில்லை என்றது )
“பார்ப்பன மகனே ! சிவப்பு நிறப் பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கிவிட்டு , அதன் தண்டோடு , கமண்டலத்தைக் கீழே வைத்துக் கொண்டு, விரத உணவு மட்டும் சாப்பிடும் பார்ப்பன மகனே ! என்றும் எழுதப்படாத வேதத்தைக் கற்று வந்தாயே , உன்னுடைய அருமையான அறிவுரைக்குள் பிரிந்து போன கணவன் மனைவியைச் சேர்த்து வைக்கும் மருந்து இருக்கிறதா ? நீ என்னைத் திட்டுவது அறியாமையால் வந்ததே” .
கருத்து – நீ என்னை இடித்துரைப்பதால் பயன் யாதும் இல்லை.
இந்த காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்வோம். காதலனுக்கும் காதலிக்கும் இடையே பிணக்கு; பிரிந்து போய்விட்டார்கள். பாங்கன் என்பது பார்ப்பன தூதன். அவன் வந்து காதலனை அல்லது கணவனைக் கடிந்து கொள்கிறான். அவன் உருவத்தை வருணித்து விட்டு, நீ என்னைத் திட்டுவதை நிறுத்து. நீ
கற்ற வேதத்துக்குள் இருவரையும் சேர்த்துவைக்கும் வசிய மந்திரம் ஏதேனும் இருக்கிறதா? வெறுமனே என்னைத் திட்டுவதால் பயன் ஒன்றுமில்லை.

பாடலில் வரும் ‘மருந்து’ என்பதை உ.வே.சாமிநாதையர் ‘பரிகாரம்’ என்று எழுதி அதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகளைத் தருகிறார் .
ஆனால் பாடலில் நான் சொல்ல வந்த விஷயம் வேறு-
பார்ப்பனர் மட்டுமே தூதர் வேலை செய்ய முடியும் என்று தொல்காப்பியமும் சொல்லும்; புறநானுறும் காட்டும். ஏனெனில் அவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்; பொய் சொல்ல மாட்டார்கள். சிலப்பதிகாரத்திலும் மாதவியிடமிருந்து கோவலனுக்கு மன்னிப்புக் கடிதம் கொண்டு வந்தது பார்ப்பனர் என்றும் படிக்கிறோம்.
இரண்டாவது முக்கிய விஷயம்– முருக்கு ; அதாவது பலாச மரம் எனப்படும் புரச மரத்தால் ஆன கம்பை , தடியை பார்ப்பனர்கள் / பிரம்மச்சாரிகள், சந்யாசிகள் வைத்திருப்பர்; கமண்டலமு ம் ஒரு உறியில் தொங்கும்; இதைப் பழந்தமிழ் நூலான தொகாப்பியமும் செப்பும்-தொல் .மரபு. 70 ; பேராசிரியர் உரை
மூன்றாவது முக்கிய விஷயம் – படிவ உண்டிப் பார்ப்பனன்- இது முல்லைப் பாட்டிலும் (வரி 37); அதாவது கண்ட நேரத்தில், கண்ட உணவைச் சாப்பிட மாட்டார்கள்.
அந்தணர் என்போர் அறவோர் , துறவியர் என்பதை வள்ளுவத்தில் கண்டோம். அதை உறுதிப் படுத்துகிறது இப்பாட்டு .
எழுதாக் கற்பு
வேதத்தை மிக அழகாக வருணிக்கிறார் பாண்டியன் நெடுங்கண்ணன் ; வேதத்தை எழுதவே கூடாது ; கேள்வியால் — காதில் கேட்பதால் மட்டுமே – ‘சுருதி’ – கற்க வேண்டும் என்பதை 2000 ஆண்டுக்கு முன்னரே மக்கள் பெருமை படக் கூறினர் .
‘கற்பு’ என்பதை கற்ற விஷயம் என்று பழைய உரை கூறுகிறது ஆனால் எனக்கு வேறு ஒரு கருத்தும் புல ப்படுகிறது . பெண்ணின் ‘கற்பு’ பற்றி தமிழும் சம்ஸ்கிருதமும் விதந்து ஓதுகின்றன. ‘எழுதாக் கற்பு’ என்பதை எழுதினால் அதன் கற்பு , அதாவது புனிதத் தன்மை , போய்விடும் என்று கருதித்தான் பாண்டியன் நெடுங்கண்ணன் அந்தச் சொல்லை இங்கு போட்டாரோ !
மற்ற இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ் புலவர்கள் வேதம் என்பதைக் குறிக்க ‘நான் மறை’, ‘அரு மறை’, ‘வேதம்’ என்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர் .
Xxx

திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31 உருவான கதை !
திருக்குறளில் வரும் மொழி மாற்றத்தைக் காட்டி மொழியியல் ரீதியில் அது பிற்கால நூல் என்று பேராசிரியர் வையாபுரிப பிள்ளை நிரூபித்தார். ஆயினும் திருக்குறள் பற்றிய மகாநாட்டில் காரசார விவாதம், வெளிநடப்பு நடந்தவுடன் கி.மு. 31
தான் அவரது ஆண்டு என்று ‘கட்டைப் பஞ்சாயத்து’ செய்தனர். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
எல்லிஸ் துரை , ஜி யூ போப் போன்ற கிறிஸ்தவர்கள் செயின்ட் தாமஸ் சென்னை விஜயம் பற்றிய கட்டுக் கதைகளைப் பரப்பிவிட்டு திருவள்ளுவருக்கு ஏசு கிறிஸ்துவை நன்றாகவே தெரியும் என்று பரப்பிவிடனர் . அவர்கள் மண்டையில் ஆணி அறைந்து சவப்பெட்டிக்குள் அடக்கி வைக்க தமிழர்கள் போட்டார்கள் ஒரு போடு! “ஏசுவுக்கு 31 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்டா ! எங்கள் வள்ளுவன் என்று அடித்துப் பேசினர்” . கிறிஸ்தவர் கூட்டமும் அடங்கியது. வள்ளுவரும் உயிர்தப்பினார். அந்தக்கால மகாநாட்டு பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தோருக்கு விவரம் தெரியும். ஆனால் அவர்கள் அவ்வளவு கஷ்டமே பட்டிருக்க வேண்டாம். திருக்குறளின் கடவுள் வாழ்த்திலேயே 7 குறள்களில் உருவ வழிபாட்டுடன்தான் கடவுள் வாழ்த்தைத் துவக்கினார். பின்னர் துறவறவியலில் 140 குறள்களில் பகவத் கீதையின் 700 ஸ்லோகங்களை ஜூஸ் பிழிந்து ஒரே கிளாஸ்ஸில் தமிழனுக்குக் கொடுத்து விடுகிறார் .முதல் குறளையும் கடைசி குறளையும் ஸம்ஸ்கிருதச் சொல்லில் அமைத்து சம்ஸ்கிருதம் அழியக்கூடாதென்று சபதம் செய்கிறார். ஒவொன்றுக்கும் அதிகாரம் என்று சம்ஸ்கிருதப் பெயர் சூட்டுகிறார் . நூ ற்றுக் கணக்கான குறள்களில் சம்ஸ்கிருதச் சொற்களை பயன்படுத்திவிட்டு “டேய் தமிழா ! கவலைப் படாதே ! திருக்குறள் உள்ளவரை இந்து மதமும் அழியாது; சம்ஸ்கிருதமும் அழியாது” என்று மனதில் நினைத்துக் கொண்டு சமாதி ஆனார்.
–subham–
tags — திருவள்ளுவர் ஆண்டு, பார்ப்பன மகனே, குறுந்தொகை, அந்தணர் என்போர் யார்?- part 2