கங்கை ஆடிலென்? காவிரி ஆடிலென்? அப்பர் கேள்வி; பட்டினத்தார் முத்திரை (Post No.3605)

Written by London swaminathan

 

Date: 4 FEBRUARY 2017

 

Time uploaded in London:-  15-41

 

Post No. 3605

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேச மஞ்சரியில் ஒரு அழகான பொன்மொழி உள்ளது.

 

“கங்கை நதி புனிதமானதே. ஆனால்க ங்கையில் நீந்தும் மீன்கள் எல்லாம் சுவர்க்கத்துக்குப் போவதில்லை”

 

ஏன்? என்று சிந்திப்போம்.

 

இறந்த சடலத்தை கங்கையில்  வீசி எறிந்தாலும், காசியில் சடலத்தை எரித்தாலும் சுவர்கத்துக்குப் போய்விடலாம் என்று குறுக்கு வழியில் சிந்திப்போர் உண்டு. இது உண்மையானால் கங்கையில் வாழும் நண்டு, முதலை, தவளை, மீன்கள் எல்லாம் சுவர்கத்துப் போகவேண்டுமே! போகாது ஏனெனில் அவற்றின் மனதோ லட்சியமோ அதுவல்ல. இது போலவே எத்தனை புனித நீர்த்தலங்களுக்குச் சென்று நீராடினாலும் மனம், மொழி, மெய் மூன்றிலும் கடவுளை அடையும் நாட்டம் இருந்தால்தான் சுவர்கத்தின் கதவுகள் திறந்து இருக்கும்.

 

தமிழ் சங்க இலக்கியத்திலும், சிலப்பதிகாரத்திலும், அதற்கெல்லாம் முந்தைய சம்ஸ்கிருத இலக்கியஙகளிலும் ராமாயண மஹாபாரத இதிஹாசங்களிலும் 18 புராணங்களிலும் தீர்த்த யாத்திரை பற்றிய குறிப்புகளும் மகிமையும் உள்ளது. உண்மைதான். ஆனால் அதன் உட்பொருளை உனர்ந்து செயல்படுவோருக்கே கை மேல் பலன்.

 

இதை யார் சொல்கிறாரர்கள்? ஏராளமான தலங்களுக்குச் சென்று தரிசித்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏனைய அடியார்களும் சொல்கிறார்கள்.

புனித யாத்திரை செய்தவர்களே சொல்லும்போது அதை நம்பாமல் இருக்க முடியுமா?

 

இதோ அப்பர் வாக்கு:-

கங்கை யாடிலென் காவிடி யாடிலென்

கொங்கு தண்குமரித்துறை யாடிலென்

ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்

எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே

–ஐந்தாம் திருமுற

 

இதில் வேறு ஒரு விஷயத்தையும் அறிய முடிகிறது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் கங்கை, காவிரி முதலிய நதிகளிலும் கடலிலும் நீராடியதும், கொங்கு, கன்யாகுமரி முதலிய இடங்களுக்குப் போனதும் தெரிகிறது. மாஹாபாரதப் போரில் ஈடுபடாத பலராமன் நாடு முழுதும் வலம் வந்ததையும் ஆதிசங்கர, மத்வர், ராமனுஜர், குரு நானக் முதலியோர் நாடு முழுதும் சுற்றி பல இடங்களைத் தரிசித்ததையும் நாம் அறிவோம். இந்துக்களில் புனித நீராடாத மஹான்கள் வெகு சிலரே! ஆயினும் அதன் உட்பொருளை அறியா,மல்– சுற்றுலா போவது போல –செல்பவருக்கு பலன் ஒன்றும் இல்லை.

 

இதைப் பட்டினத்தாரும் அழகாகச் சொல்லி, அப்பர் சொன்னது சரியே என்று முத்திரை குத்துகிறார்.

 

பட்டினத்தார் திருவாரூருக்குத் தரிசிக்கச் சென்றார். இவர் திருவாரூரை நோக்கி நடக்கையில் மக்கள் எல்லோரும் அரோஹரா அரோஹரா என்று கோஷமிட்டுக் கொண்டு  எதிர் திசையில் சென்றனர். எதற்காக?  வேறு ஊரில் உள்ள இறைவனுக்கு நடக்கும் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காக!!

 

பட்டினத்தாருக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. அடக் கடவுளே! திருவாரூரில் பெரிய இறைவன் குடி இருக்கையில் இவர்கள் வேறு ஊருக்கு செல்வது ஏனோ என்று வியக்கிறார். மக்களில் பெரும்பாலோர் யாத்திரை போவது, சுற்றுலா போவதாகும். தங்களிடம் உள்ள நகை நட்டு, புடவைகளை மற்றவர்களிடம் காட்டுவதற்காகவும் அல்லது புதிய இடங்களில் புதிய பொருட்களை விலைக்கு வாங்கி வீண் பெருமையும் பகட்டும் பாராட்டுவதற்காகவும் — என்பது பட்டினத்தாருக்குத் தெரியாமல் இல்லை. இதோ அவரது பாடல்:-

 

ஆரூரர் இங்கிருக்க

அவ்வூர்த் திருநாளென்

றூர்கள்தோறும்

உழலுவீர்; — நேரே

உளக்குறிப்பை நாடாத

ஊமர்காள்! நீவீர்

விளக்கிருக்கத் தீத்தேடுவீர்

 

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தானாம் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. இதே போல விளக்கு எரிந்து கொண்டிருக்கையில் அடுத்த வீட்டுக்குச் சென்று நெருப்பு கேட்பவரும், தீப்பெட்டி கேட்போரும் உண்டு!

 

திருவாரூர் தியாகேசனை விட்டுவிட்டு வேறு இடத்திற்குச் செல்வோர் ஏன் செல்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. அவர்கள் அனைவரும் விளக்கிருக்கத் தீத்தேடுவோரே!

 

–Subham–

 

 

பாகற்காயின் தீர்த்த யாத்திரை: ஒரு சுவையான சம்பவம்!

ashta vinayak

அஷ்ட சித்தி விநாயக ஸ்தலங்கள், மஹாராஷ்டிரம்.

Article Written by London swaminathan

Date: 6 November 2015

Post No:2304

Time uploaded in London :– 6-12  AM

(Thanks  for the pictures) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்?

கொங்கு தண் குமரித்துறை ஆடில் என்?

ஓங்கு மா கடல் ஓத நீர் ஆடில் என்?

எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே. (5-99-2 அப்பர் தேவாரம்)

புனித யாத்திரை போவது அவசியம்தான். ஆனால் அதை அர்த்தமில்லாத சடங்காகவோ, சுற்றுலாவாகவோ நடத்தக் கூடாது. காசி, கயிலாயம், பத்ரிநாத், கேதார்நாத், திருப்பதி, சபரிமலை, கன்யாகுமரி என்று யாத்திரை போவோரை நினைத்து அப்பர் பாடிய தேவாரத்தை மேலே கண்டோம். துகாராம் சுவாமிகளின் கதை ஒன்றைக் காண்போம்.

நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான, முக்தாபாய், ஏகநாத், நாம்தேவ், துகாராம், சமர்த்த ராமதாஸ் என்போர் மகாராஷ்டிர பூமியை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த பெரியோர்களாவர்.

இவர்களில் ஒருவரான துகாராம் செய்வித்த “பாகற்காய் யாத்திரை” கதையைக் கேளுங்கள். ஒரு முறை கிராம மக்கள் எல்லோரும் தீர்த்த யாத்திரை செய்ய முடிவு செய்தனர். துக்காராம் சுவாமிகளிடம் சென்று அவரும் வரவேண்டுமென்று வேண்டினர். அவர் தான் வரமுடியாதென்றும் ஆனால் தன் கொடுக்கும் பாகற்காய்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்று ஆறு, குளம், கடலில் நீராடும்போது அவைகளையும் குளிப்பாட்டி, கோவில்களுக்குச் செல்கையில் பாகற்காய்களையும் தரிசினம் செய்விக்கும்படி செய்யவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்.

கிராம மக்கள் ஆகையால் ஏன், எதற்காக என்று கேட்காமல் அப்படியே பாகற்காய்களை அவரிடம் பெற்று  தாங்கள் சென்ற எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர்; புனித நீராடச் செய்தனர். கடவுளரை தரிசினம் செய்யும் போதெல்லாம் அதையும் சந்நிதியில் வைத்தனர்.

ஓரிரு மாதங்களுக்குப் பின்னர் யாத்திரை முடிந்தது. எல்லோரும் பரம திருப்தியுடன் ஊருக்குத் திரும்பி துகாராம் சுவாமிகளின் காலில் விழுந்து நம்ஸ்கரித்துவிட்டு பாகற்காய்களையும் பத்திரமாக ஒப்படைத்தனர். அவர் சொன்னார்:

bitter gourd

நீங்கள் எல்லோரும் நான் சொன்னபடி செய்து பாகற்காய்களையும் கொண்டு வந்துவிட்டீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள் அனைவருக்கும் விருந்து தர விரும்புகிறேன். வருகின்ற வெள்ளிக் கிழமை எல்லோரும் என்னுடைய ஆசிரமத்துக்கு வாருங்கள் என்றார்.

அனைவரும் அறுசுவை விருந்துக்கு ஆசைப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமையன்று சந்தித்தனர். வடை, பாயசம், அப்பளம், பொறியலுடன் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. அப்பொழுது துகாராம் சுவாமிகள், யாத்திரைக்குப் போன பாகற்காயையும் பொறியலாகச் செய்து அனைவர்க்கும் இது பிரசாதம் என்று பரிமாறினார். அனைவரும் அதை வாயில் வைத்த அடுத்த கனமே “மகா கசப்பு” என்று முகம் சுழித்தனர்.

துகாராம் சுவாமிகள், வியப்புடன், கசக்கிறதா? என்ன அதிசயம்? எத்தனை புனிதத் தலங்களுக்கு எடுத்துச் சென்றீர்கள்! எத்தனை புனித நீர் நிலைகளில்  நீராட்டினீர்கள்! இன்னும் அதன் பிறவிக்குணமான கசப்பு மாறவில்லையா? என்று வியந்தார். எல்லோருக்கும் சுவாமிகளின் உட்கருத்து விளங்கியது. பின்னர் சொன்னார்: உள்ளன்போடும் தூய்மையோடும் இறைவனை நினைத்துக் கொண்டு செய்வதே தீர்த்த யாத்திரை. அது உல்லாசப் பயணம் இல்லை. மனதில் மாற்றமில்லாமல் செய்யும் யாத்திரை பாகற்காய் யாத்திரை போன கதை போலத்தான் என்றார்.

—சுவாமி ராமதாஸ் சொன்ன கதை

12 jyotirlinga

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன உவமை

பசுவினிடமுள்ள பாலானது, வாஸ்தவத்தில் அதன் சரீர முழுவதிலும் ரத்த ரூபமாய் பரவியுள்ளது என்றாலும் அப்பசுவின் காதுகளையோ கொம்புகளையோ பிசைந்தால் பால் வராது. அதற்கு அதன் முலைக் காம்புகளைப் பிடித்துத்தான் கறக்க வேண்டும் அதுபோல ஈசுவரன் இவ்வுலகில் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறான். ஆயினும் எல்லா இடத்திலும் அவனை உன்னால் காண முடியாது. பூர்வ பக்தர்களுடைய குண விசேஷம் நிரம்பிய புண்யஸ்தலங்களாகிய கோவில்களில்தான் அவன் சுலபமாய்த் தென்படுகிறான்.

வயிறு நிறைய புல்லைத் தின்ற ஒரு பசு ஓரிடத்தில் சாந்தமாகப் படுத்துக்கொண்டு அசைபோடுவதைப் போல, தீர்த்த யாத்திரைக்கு நீ போய் வந்தால், அந்தந்த திவ்ய ஸ்தலத்தில் உன் மனத்தில் எழுந்த தூய எண்ணங்களைப் பற்றிச் சிந்தித்து தனியிடத்தில் உட்கார்ந்து அவற்றிடையே ஆழ்ந்து போக வேண்டும். அவ்வாறின்றி அங்கிருந்து வந்ததும், அவ்வெண்ணங்கள் உன் மனத்தைவிட்டு அகன்று போகும்படி, நீ உலக விவகாரங்களில் தலையிட்டுக் கொள்ளக்கூடாது

பூமியின் நான்கு திக்குகளிலும் பிரயாணம் செய்தாலும் உண்மையான தர்மத்தை ஓரிடத்திலும் காணமாட்டாய். இருப்பதெல்லாம் உன் உள்ளத்திலேயே இருக்கிறது.

கங்கையில் குளிப்பதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமென்றால், கங்கை நதியில் வசிக்கும் மீன்களெல்லாம் மோட்சத்துக்குப் போய்விடுமே!

–ராமகிருஷ்ண உபதேச மஞ்சரி.