பிளாஸ்டிக்கை எதிர்த்து ஒரு போர்!(Post No.7751)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7751

Date uploaded in London – – 28 March 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் அலைவரிசை ‘A’யில் காலைமலர் நிகழ்ச்சியில் தினமும் காலை 6.55க்கு 1-3-2020 முதல் 10-3-2020 முடிய ஒலிபரப்பப்பட்ட பத்து சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வு உரைகளில் மூன்றாவது உரை

(3-3-2020 அன்று ஒலிபரப்பானது)

பிளாஸ்டிக்கை எதிர்த்து ஒரு போர்!

உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு புதுமைப் போரைத் தொடுத்துள்ளன. ஆம், அனைத்து நாடுகளும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக ஒரு போரை இணைந்து தொடுத்துள்ளன.

உலகை அழிக்கும் பேரபாயமான பிளாஸ்டிக்கை அறவே அகற்ற அனைத்து நாடுகளும் எடுத்த இந்த முடிவு பெரிதும் வரவேற்க வேண்டிய ஒன்று.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தான் பிளாஸ்டிக் மலைக்க வைக்கும் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. 900 கோடி டன்கள் என்ற மலைக்க வைக்கும் அளவு 1950ஆம் ஆண்டிலிருந்து பிளாஸ்டிக் உலகில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பிளாஸ்டிக் கழிவானது நான்கு இமயமலை அளவு உயரத்திற்குச் சமமாகும்.

இந்தியாவில் மட்டும் 25940 டன்கள் என்ற அளவிற்கு தினமும் நச்சுத் தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் தூக்கி எறியப்படுகின்றன. இது ஒன்பதினாயிரம் யானைகளின் எடைக்குச் சமமாகும்.

ஆரம்பகாலத்தில் ஆச்சரியமூட்டும் அற்புதப் பொருளாகக் கருதப்பட்ட பிளாஸ்டிக்கின் நச்சுத் தன்மைகளை விஞ்ஞானிகள் வெகு சீக்கிரம் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தனர்.

இரண்டாம் உலகப்போரின் போது மிக அதிகமாகப் பயன்பாட்டிற்கு வந்த பிளாஸ்டிக் பொருள்கள் பருத்தி, கண்ணாடி, கார்ட்போர்ட் ஆகியவற்றினால் ஆன பொருள்களைப் பின்னுக்குத் தள்ளின. இதன் விளைவாக பால் பைகள், தண்ணீர் பாட்டில்கள், குழந்தைகளின் பொம்மைகள், பல்வேறு பாக்கிங் பொருள்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும் அனைத்து உருவத்திலும் பிளாஸ்டிக் உலா வரத் தொடங்கியது.

பிளாஸ்டிக்கின் மிகப் பெரும் அபாயம் அது பூமிக்குள் மஃகி இயற்கையாக அழியும் ஒரு பொருள் அல்ல என்பது தான். இருநூறு வருடங்கள் ஆனாலும அது மஃகிச் சிதையாது.

பிளாஸ்டிக்கிலிருந்து உருவாகும் நச்சுப் பொருள்களை அறிந்த உலகம் விழிப்புணர்ச்சி பெற்றது; இப்போது 50 மைக்ரான் கனத்திற்கும் கீழான அனைத்து பிளாஸ்டிக் பைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

இப்போதே நம் உடலில் 3 விழுக்காடு என்ற அளவில் பிளாஸ்டிக் புகுந்து பல்வேறு வியாதிகளை உருவாக்குகிறது. உணவிலும் குடிக்கும் பானங்களிலும் இருக்கும் பிளாஸ்டிக் நமது உடலில் இயற்கையாக இருக்கும் ஹார்மோன்களை விட இன்று அதிகமாகி விட்டது. உடல் வளர்ச்சி தடைப்பட்டு தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் பிளாஸ்டிக்கே காரணம் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டு பிளாஸ்டிக்கை அனைவரும் தவிர்க்க வேண்டும்; ஆரோக்கியமான வாழ்வை நிலை நிறுத்த வேண்டும்!

tags — பிளாஸ்டிக் ,போர்

Script by S.Nagarajan (ச.நாகராஜன்