மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 2 (Post No.9991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9991

Date uploaded in London –  18 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அன்றிலிருந்து அவர், அற்புதமாக சீதாதேவி தானே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த மூலராமரின் பூஜையை உரிய முறையில் செய்து அனைவருக்கும் அக்ஷதை வழங்கி கடினமான ஸ்லோகங்களுக்கு விளக்கவுரையும் அளித்து வரலானார்.

நாடெங்கும் யாத்திரை மேற்கொண்டு ஏராளமான ஸ்தலங்களுக்கு அவர் விஜயம் செய்தார். செல்லும் வழியில் எல்லாம் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தார். உலகமே வியந்தது அவரது அருளாற்றலைக் கண்டு.

அத்வைனி என்ற இடத்தில் ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன் அவன் பெயர் வெங்கண்ணா. எழுத்தறிவு இல்லாத அவனுக்கு அருள் பாலித்த ராகவேந்திரர் அவனுக்கு அக்ஷதை பிரசாதம் வழங்கினார். அவன் ராகவேந்திரரின் நாமத்தை உச்சரித்து வரலானான்.

அந்தக் காலத்தில் அரசு புரிந்த சுல்தானின் பிரதிநிதியாக இருந்தவன் அஸதுல்லாகான் என்பவன். அவன் வெங்கண்ணாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னான். திகைத்துப் போன வெங்கண்ணா ராகவேந்திரரை நினைத்து வேண்ட, அவர் அருளால் அதை வெகு எளிதாகப் படிக்க முடிந்தது. இதனால் மகிழ்ந்த அஸதுல்லாகான் வெங்கண்ணாவை அன்புடன் அரவணைத்து ஆதரிக்கலானான். காலகிரமத்தில் அவன் திவானாக நியமிக்கப்பட்டான்.

இப்படி ராகவேந்திரர் ஆற்றிய அற்புதங்கள் ஏராளம். தஞ்சாவூரில் பல காலம் வசித்து வந்த ராகவேந்திரர் கும்பகோணத்திற்கு மீண்டும் வந்தார். ஒருநாள் அங்கு வந்த சில பிராமணர்கள், ‘ராகவேந்திரர் நினைத்ததை எல்லாம் தருபவராமே, நாம் சில பண்டங்களை நினைத்துக் கொண்டால் அவர் தருவாரா என்று பார்க்கலாம்’ என்று நினைத்துக் கொண்டனர். காவிரிக் கரையில் இருந்த அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பட்சணத்தை நினைத்துக் கொண்டனர். அப்போது ராகவேந்திரரின் காஷாயத்தை துவைப்பதற்காக வந்த அவரது சீடன் ஒருவன், “வாருங்கள், சீக்கிரம் வாருங்கள், உங்களுக்கான அனைத்து பக்ஷணங்களும் தயார்” என்றான்.

இதனால் திகைத்துப் போன அவர்கள் நாங்கள் நினைத்தது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டனர். அப்போது அவன் கையிலிருந்த காஷாயம் கீழே நழுவி விழுந்தது. அவன் உடனே, “நான் என்ன சொன்னேன். ஒன்றுமே சொல்லவில்லையே” என்றான். ‘இல்லை நீ சொன்னதை நினைத்துப் பார்’ என்றனர் பிராமணர்கள். அப்போது நழுவி விழுந்த காஷாயத்தைக் கையில் எடுத்த அந்த சிஷ்யன் உடனே அவர்கள் நினைத்ததை எல்லாம் சொல்ல ஆரம்பித்தான். அவர்களுக்கு உடனே புரிந்து விட்டது – அந்த சிஷ்யன் கூறுவது எல்லாம் அந்த காஷாயத்தை அவன் தொட்டதால் ஏற்பட்ட மகிமையாலேயே என்று. அவர்கள் மடத்திற்குச் செல்ல அங்கு அவர்கள் நினைத்த உணவு வகைகள் அனைத்தும் கிடைத்தன. அங்கு வந்த ராகவேந்திரர், “ வேண்டியது கிடைத்ததா?” என்று பரிவுடன் விசாரித்தார்.

இப்படி அன்றாடம் நடக்கும் அற்புதங்கள் ஏராளமாக இருந்தன; அவரது அருள் புகழ் நாடெங்கும் பரவியது.  எழுபத்தாறு ஆண்டுகள் வாழ்ந்து அருள் பாலித்த ஸ்வாமிகள் பிருந்தாவன பிரவேசம் செய்ய உத்தேசித்து மாஞ்சாலி என்ற கிராமத்தை உகந்த இடமாகத் தேர்ந்தெடுத்தார். ஏனெனில் அந்த இடத்தில் தான் பிரகலாதன் யாகம் செய்த இடம் என்பதை அவர் அறிந்திருந்தார். 1671ஆம் ஆண்டு சிராவண கிருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று அவர் ஜீவ சமாதி அடைந்தார். அந்த கிராமம் மந்த்ராலயம் என இனி அழைக்கப்படும் என்றும் அவர் அருளினார். அப்போது ஆண்டு வந்த சுல்தான் மசூத்கான் அந்த கிராமத்தை ராகவேந்திரருக்கு அளித்தான். பிருந்தாவன பிரவேசத்திற்கு முன்னர் அவர் அற்புதமான ஒரு உரையைத் தனது பக்தர்களுக்காக ஆற்றினார்.

மந்த்ராலயத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மண் மூலம் நாடெங்கும் சுமார் 300 பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவரை வணங்குவோர் அடையும் பலன்களை வார்த்தைகளால் சொல்லி விளக்க முடியாது.

துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் அவர் ஜீவனுடன் இன்றும் இருந்து அருள் பாலிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தினமும் அதிகாலையில் அவர் துங்கபத்ரா நதிக்கு நீராடச் செல்லும் பாதக்குறடுகளின் சப்தம் எழுகிறது. அதே போல அவர் மூலராமருக்கு பூஜை செய்யும் போது எழும் மணி ஓசையும் தினம் கேட்கிறது.

ராயர் என்று பக்தர்களால் பயபக்தியுடன் அழைக்கப்படும் ராகவேந்திரர் மதராஸ் பிரஸ்டென்ஸி என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பட்ட சென்னை ராஜ்யத்தில் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத் தலைவராக இருந்த சர் தாமஸ் மன்ரோவிற்கு தரிசனம் தந்த சம்பவம் சுவையான ஒன்று. (மன்ரோ பிறந்த தேதி : 27/5/1761 மறைந்த தேதி : 6/7/1827)

·                                                                          

·                                                                         தொடரும்

 tags- மந்த்ராலய மஹான், ஸ் ராகவேந்திரர்! – 2,  

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1 (Post No.9986)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9986

Date uploaded in London –  17 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாரந்தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 16-8-2021 அன்று ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

மந்த்ராலய மஹான் ஸ்ரீ ராகவேந்திரர்! – 1

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். மந்த்ராலயத்தில் இன்றும் ஜீவ சமாதியில் இருந்து கொண்டு அனைவருக்கும் அருள் பாலிக்கும் பெரும் மஹானான ஸ்ரீ ராகவேந்திரரைப் பற்றி இன்று காணப் போகிறோம். லக்ஷக்கணக்கான மக்களை இன்று வரை மந்த்ராலயத்திற்கு ஈர்த்து அருள் பாலித்து வரும் இவரது சரிதம் அற்புதமான ஒன்று.

கி.பி.1595ஆம் ஆண்டு பால்குண மாதம், சுக்லபக்ஷ, சப்தமி திதியில் தமிழகத்தில் சிதம்பரத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவனகிரியில் மத்வ சம்ப்ரதாய பிராமண குலத்தில் கௌதம கோத்திரத்தில் திம்மண்ண பட்டர் – கோபிகாம்பாள் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக அவதரித்தார்  ஸ்ரீ ராகவேந்திரர். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன். உரிய வயதில் குருகுலத்தில் சேர்ந்து அனைத்துக் கலைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றார். குடும்பமோ வறுமை சூழ்நிலையில் இருந்தது. செய்வதறியாது திகைத்த பட்டர் கும்பகோணத்திற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கே வித்யாமடத்தின் பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சுதீந்திரர் அந்தக் குடும்பத்தை அன்போடு வரவேற்றார். வேங்கடநாதனைப் பார்த்தவுடன் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போயிற்று. நமது மடத்தின் அடுத்த பீடாதிபதி வேங்கடநாதனே என்று அவர் மனதில் தீர்மானம் உருவாயிற்று. ஸ்ரீ மடத்தில் மூலராமருக்கு தினமும் சுதீந்திரர் செய்யும் பூஜையை லயிப்புடன் கவனித்து வந்தார் வேங்கடநாதன். உரிய வயதிலே சரஸ்வதி என்ற மங்கையை அவருக்கு மணம் முடித்து வைத்தனர் பெற்றோர். வறுமை நீங்காத நிலையில் தன் மனைவியுடன் ஸ்ரீ மடத்தில் அடைக்கலம் புகுந்தார் வேங்கடநாதன்.

வேங்கடநாதனின் பக்தியையும் இறைத்தன்மையையும், அவர் பாடங்களை கிரகித்து உள்வாங்கிக் கொண்ட பான்மையையும் அவரது மேதைத் தன்மையையும் கவனித்து வந்த சுதீந்திரர் அவரின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டார். இதனால் சுதீந்திரரரிடம் அவருடன் பயின்று வந்த மற்ற சிஷ்யர்கள் அவர் மீது பொறாமை கொண்டனர். ஒரு நாள் மத்வாசாரியரின் பிரம்ம சூத்ரத்தின் பாஷ்யத்தைப் பற்றி சுதீந்திரர் விளக்க ஆரம்பித்தார். இந்த பாஷ்யத்தின் விளக்க உரையாக ஸ்ரீ ஜயதீர்த்தர் என்பவர் நியாயசுதா என்ற நூலை இயற்றினார். ஸ்ரீ ஜயதீர்த்தரின் நியாயசுதாவின் பெருமையை விளக்க ஆரம்பித்த சுதீந்திரர் திடீரென்று தனது உரையை நிறுத்தினார். அவரால் மேலே தொடரமுடியவில்லை. ‘இன்றைய பாடத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்’ என்று கூறி அருளினார் சுதீந்திரர். அன்றிரவு சுதீந்திரர் தன்னால் எளிய விதத்தில் விளக்கவுரையை ஆற்ற முடியவில்லையே என்று எண்ணி வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். சிந்தனையில் ஆழ்ந்தவாறே வெளியில் சற்று சென்று வரலாம் என்று எண்ணிய அவர் சிஷ்யர்கள் உறங்கிக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார். அங்கு அனைவரும் உறங்கிக் கொண்டிருக்க வேங்கடநாதனை மட்டும் காணோம். அவர் தன் பார்வையை எல்லா திசைகளிலும் செலுத்த  அங்கு தூரத்தில் வேங்கடநாதன் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததையும் அவர் அருகில் ஓலைச்சுவடிகள் பல இருந்ததையும் அவர் கண்டார். மெதுவாக அந்த ஓலைச் சுவடிகளை எடுத்துப் பார்த்தவர்,. திகைத்துப் போனார். அன்று அவரால் விளக்க உரை செய்ய முடியாமல் இருந்த நியாய சுதா ஸ்லோகங்களுக்கான விளக்கத்தை மிக அருமையாக எளிமையாக எழுதி இருந்தார் வேங்கடநாதர். அந்த சுவடிகளை எடுத்துக் கொண்டு தன் இருப்பிடம் மீண்டார் சுதீந்திரர்.மறுநாள் காலையில்  வகுப்பு ஆரம்பமானது. அனைவரும் குழுமிய போது சுதீந்திரர் வேங்கடநாதன் எழுதிய ஓலைச் சுவடிகளைக் காண்பித்து தன்னால் விளக்க முடியாமல் இருந்த ஸ்லோகங்களுக்கு வேங்கடநாதன் எழுதிய உரையை விவரித்தார். அனைத்து சக மாணவர்களும் அதிசயித்துப் போயினர். இப்படிப்பட்ட பரிமள சுகந்தம்  வீசும் இந்த உரைக்கு ‘ஸுதா பரிமளம்’ என்ற பெயரைச் சூட்டுகிறேன். இதை இயற்றிய வேங்கடநாதனுக்கு ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தையும் வழங்குகிறேன் என்றார். அனைவருக்கும் வேங்கடநாதனின் பெருமை புரிய வந்தது.

ஒரு முறை கும்பகோணத்தில் நடந்த ஒரு விருந்திற்கு வேங்கடநாதர் அழைக்கப்பட்டார். விருந்தை அளித்தவருக்கு அவரது பெருமை தெரியாது. அவரை சந்தனம் அரைத்துத் தருமாறு கூறினார். சந்தனம் அரைக்கப்பட்ட பின் அனைவருக்கும் அது தரப்பட்டது. ஆனால் அதை பூசிக் கொண்ட விருந்தினர்கள் குளிர்ச்சியை அனுபவிப்பதற்கு பதில் ‘ஆ, எரிகிறதே எரிகிறதே’ என்று உடல் எரிச்சலால் அலறினர். இதனால் ஆச்சரியப்பட்ட விருந்தை அளித்தவர், வேங்கடநாதரை அழைத்துக் காரணம் கேட்க தான் சந்தனத்தை அரைத்த போது அக்னி சூத்ரத்தை ஜபித்ததாகவும் அதன் பயனாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது என்று கூறினார். உடனே வருண மந்திரத்தைக் கூறியவாறே சந்தனத்தை அரைத்து அதைத் தந்து அனைவரையும் பூசிக் கொள்ளச் சொன்னார். இப்போது அது மிக்க குளிர்ச்சியைத் தந்தது. விருந்தினர்கள் மகிழ்ந்தனர். அத்துடன் வேங்கடநாதரின் புகழ் எங்கும் பரவியது.

     வேங்கடநாதரை மடத்தின் பொறுப்பை ஏற்குமாறு சுதீந்திரர் கூறியருளினார். ஆனால் அவரோ குடும்பப் பற்றால் அதை ஏற்க மறுத்தார். இதனால் சுதீந்திரர் ஸ்ரீ யாதவேந்திரர் என்பவரை பூஜை செய்ய நியமித்து தனது இளவலாக நியமித்தார். காலம் சென்றது. ஒருநாள் சுதீந்திரருக்கு உடல் நலம் குன்றியது. ஸ்ரீ யாதவேந்திரரும் அருகில் இல்லை.

அடடா, காலம் காலமாகச் செய்து வரும் மூலராமரின் பூஜைக்குத் தடை வந்து விடுமோ என்று கவலைப்பட்டார் சுதீந்திரர். அன்று இரவில் அவர் கனவில் மூலராமர் தோன்றி, “உனக்குப் பின் அர்ச்சனை செய்ய தகுதியானவர் வேங்கடநாதனே” என்று கூறியருளினார். இதனால் மகிழ்ந்த சுதீந்திரர் மறுநாள் வேங்கடநாதனிடம் தன் கனவில் மூலநாதர் அருளிச் செய்த உரையைக் கூறி பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

     வேங்கடநாதர் சற்றுத் தயங்கினார். அன்றே சரஸ்வதி தேவி அவரது கனவில் தோன்றி அவர் யார் என்பதை விளக்கியருளினாள். பிரம்ம லோகத்தில் பாகவத சேவையில் ஈடுபட்டிருந்த சங்குகர்ணனே உலக நன்மையைக் கருதி ஒரு சாபத்தினால் கிருதயுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து பக்தியின் பெருமையை நிலை நாட்டினார். அடுத்து துவாபர யுகத்தில் பாஹலீக மன்னனாகப் பிறந்து விஷ்ணு பக்தனாக இருந்து பக்தியின் பெருமையை உலகறியச் செய்தார். அடுத்து கலியுகத்தில் ஸ்ரீ வியாசராஜராக அவதரித்து கிருஷ்ணதேவராயரின் அரச சபையை அலங்கரித்தார். இப்போது மக்களின் துயரம் நீங்க வேங்கடநாதனாகப் பக்தியின் பெருமையை அவர் நிலை நாட்டப் பிறந்துள்ளார்.

     தான் யார் என்பதை அறிந்த வேங்கடநாதர் தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக சுதீந்திரர் கூறியதற்கு உடனே ஒப்புக் கொண்டார். தன் மகனான லக்ஷ்மிநாராயணனுக்குச் செய்ய வேண்டிய உபநயனத்தை முடித்து விட்டு வருவதாக கூறி தனது கடமையை முடித்தார். மீண்டும் மடத்திற்கு வந்த அவருக்கு தஞ்சாவூரில் 1621ஆம் ஆண்டு பால்குன மாதம் சுக்கில பக்ஷம் துவிதியை திதி அன்று சுதீந்திரர் சந்யாசம் அளித்து ராகவேந்திர தீர்த்தர் என்ற திருநாமத்தையும் சூட்டினார்.

         *     தொடரும்

 tags – மந்த்ராலய மஹான்,  ஸ்ரீ,  ராகவேந்திரர், மந்த்ராலயம்