
Radio Talk written by S NAGARAJAN
Date: 24 November 2015
Post No. 2356
Time uploaded in London :– 6-05 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!
DON’T USE THE PICTURES;
THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
உலகெங்கும் மரங்கள் இன்று மடிய ஆரம்பித்துள்ளன.இதற்கு கனடாவிலும் ரஷியாவிலும் உள்ள அழிந்து வரும் காடுகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
கிரேக்க நாட்டிலோ பைன் (Pine) மரங்கள் அழிந்து வருகின்றன.ஆப்பிரிக்காவிலோ செடார் (Cedar) மரங்கள் அழிந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் (Eucalyptus) மரங்கள் உள்ள காடுகள் தீப்பற்றி அந்த மரங்கள் அழிந்துள்ளன. அற்புதமான அமேஸான் பிராந்தியமோ இரு முறை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது!

இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள விஞ்ஞானிகள் ஏன் இப்படி மரங்கள் மடிகின்றன என்று ஆராயப் புகுந்தனர். தங்கள் ஆய்வின் விளைவாக நீர் பற்றாக்குறை, பூச்சிகளின் தாக்கம் மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகிய காரணங்களே மரங்களின் அழிவுக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த மரங்களின் ஆய்வில் பெரும் விஞ்ஞானியும் நிபுணருமான மக்டவல் ஈடுபட்டுள்ளார்.உலகின் பிரம்மாண்டமான மர ஆய்வு மையம் ஒன்றை லாஸ் அலாமாஸில் (Los Alamos) நிறுவி பட்டுப் போகும் மரங்களுக்கான சிகிச்சையையும் அவர் அளித்து வருகிறார். 63 பின்யான் (Pinyon) மற்றும் ஜுனிபர் (Juniper) மரங்கள் இந்த மையத்தில் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ள 12 தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு உஷ்ணநிலை இனி வரப்போகும் ஆண்டுகளில் உயரப்போகும் 7 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர உலகெங்கும் உள்ள 81 இடங்களில் உள்ள காட்டில் வளரும் 226 தாவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வு மையத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் அதி நவீன சென்ஸர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சோதனை அளவுகளும் எடுக்கப்படுகின்றன. சில அளவுகள் மாதம் ஒரு முறை எடுக்கப்படுகின்றன.
இந்த பிரம்மாண்டமான ஆய்வை மேற்கொண்டுள்ள மக்டவல் மரங்களும் தாவரங்களும் பசியால் தண்ணீரின்றி மடிகின்றன என்ற வருத்தமூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.
காட்டுச் செல்வமும் அதற்கு ஆதாரமான நீரும் எவ்வளவு இன்றியமையாத தேவை என்பதை இந்த ஆய்வு உணர்த்துவதோடு புவி வெப்பமாகும் போது என்ன விபரீதம் ஏற்படும் என்பதையும் அறிவியல் ரீதியாக உணர்த்துகிறது. ஆகவே புவி வெப்பமாதல் என்ற மாபெரும் அபாயத்தைத் தடுக்க ஒவ்வொரு மனிதனும் முயல வேண்டும் என்பது தெளிவாகிறது.
****
You must be logged in to post a comment.