மிதிலையில் ராமன் கண்ட பரத நாட்டியம்!!

jan ren1

Dr Janaki Rangarajan, talented dancer from Tamil Nadu

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1487; தேதி 15 டிசம்பர், 2014.

நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்,
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க,
கை வழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார்
—மிதிலை காட்சிப் படலம், கம்பராமாயணம்

यतो हस्तस्ततो दृष्टिर्यतो दृष्टिस्ततो मनः ।
यतो मनस्ततो भावो यतो भावस्ततो रसः ॥

yato hastastato dṛṣṭiryato dṛṣṭistato manaḥ
yato manastato bhāvo yato bhāvastato rasaḥa

பரத நாட்டியம் கற்றுக்கொள்ளச் செல்லும் எல்லோரும் அறிந்த சம்ஸ்கிருத ஸ்லோகம் :

யதோ ஹஸ்தஸ் ததோ த்ருஷ்டி, யதோ த்ருஷ்டி ததோ மன:
யதோ மனஸ் ததோ பாவோ, யதோ பாவஸ் ததோ ரஸ:

பொருள்:–அபிநயம் பிடிக்கும் கைகளை கண்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். கண் பார்வை எங்கே இருக்கிறதோ அதில் மனம் லயிக்க வேண்டும். அப்படி மனம் லயிக்கும் போது முகத்தில் பாவம் (சரியான உணர்ச்சியை வெளிப்படுத்தும் பாவம்) தோன்றும். அதன் வழியே ரஸம் ( நவரஸ உணர்ச்சிகள் ) அமையும்.

jakani mudra
Dr Janakai Rangarajan, a popular dancer, performing around the world.

மேற்கூறிய சம்ஸ்கிருத ஸ்லோகத்தை அப்படியே கம்பனும் சொல்லுவதைக் கண்போம்:
நெய் திரள் நரம்பின் தந்த மழலையின் இயன்ற பாடல்,
தைவரு மகர வீணை தண்ணுமை தழுவித் தூங்க,
கை வழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல,
ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு கண்டார்

மகர யாழ் வாசிப்பதற்கு முன் அதன் நரம்பின் மீது நெய் பூசுவர். அது மழலைக் குரல் போன்ற இனிமையான ஓசை தரும். கை விரலினால் வீணையை மீட்க, அதற்கு அணுசரணையாக மத்தளம் முழங்கும் அதாவது எல்லாம் சரியாக சுருதி சேரும். இப்படிப்பட்ட அருமையான வாத்யக் குழு பாட, அங்கே நாட்டியம் ஆடவந்த மெல்லிடை அழகிகள் கைவழி (அபிநயம்) நயனம் (கண்கள்) செல்ல, கண்வழி மனமும் லயித்தது. இப்படிப்பட்ட அருமையான ஆட்டத்தை ராமனும் லெட்சுமணனும் கண்டனர். அவர்களை விசுவாமித்திர முனிவர் மிதிலா நகரத் தெருக்கள் வழியே நடத்திச் சென்றபோது இது நடந்தது.
இப்பொழுது மீண்டும் ஒரு முறை சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் படித்தால் கம்பனின் சொற்களின் மகிமை நன்கு புரியும்.

பயிற்சி இல்லாதோர் ஆடினால் இதில் ஏதோ ஓரிடத்தில் தவறு நிகழும். முதல் கோணல் முற்றும் கோணலாக அமையும். கண் போன போக்கில் மனம் போகாமல், மனம் போன போக்கில் கண் போகும்!

(ஞாயிற்றுக் கிழமை காலையில் ‘’ஸ்கைப்’’ வழியாக கம்பராமாயண வகுப்பு நடத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது கம்பனின் பாடலைப் படித்துப் பொருள் காண்பதற்குள், லண்டன் வாழ் திருச்சி கல்யாண சுந்தர குருக்கள் மேற்கூறிய சம்ஸ்கிருத ஸ்லோகத்தை நினைவு கூர்ந்தார்.)

contact swami_48@yahoo.com