கலைமகளோ செல்வக் கடல் மகளோ பூவின் தலைமகளோ!

2sitakalyan

Article No.1770; Date 3rd  April 2015

Written by S NAGARAJAN

Uploaded at 7-18 am (London Time)

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 16

ச.நாகராஜன்

வைதேகி ராமன் கைசேரும் காலம்!

 

பவளவல்லி கரம் தொட்டான் உவந்து!

பாரத தேசத்தில் பிறந்தோர் அனைவருக்கும் சீதையின் கல்யாணம் என்பது அவர்களின் வாழ்க்கையில் இணைந்து விட்ட ஒரு அற்புதமான விழா ஆகும். இன்று நடக்கும் கல்யாணங்களில் கூட சீதா கல்யாண வைபோகமே என்று பாடுவது கண்கூடு.

ஆக இப்படிப்பட்ட கல்யாணத்தைக் கவிஞர்கள் வர்ணிக்காமல் இருக்க முடியுமா!

இராமாயண வெண்பா என்ற அரிய காவியத்தை இயற்றிய மதுரையைச் சேர்ந்த மதுரகவி ஶ்ரீனிவாஸ ஐயங்கார் சீதையின் அழகை வர்ணித்து அதை ராமன் எப்படி எண்ணி மகிழ்ந்தான் என்பதை இப்படிக் கூறுகிறார் கடிமணப் படலத்தில்:

கலைமகளோ செல்வக் கடல்மகளோ பூவின்

தலைமகளோ என்னத் தழைந்து – குலவி

உடல் பூரித்து உள்ளம் உவந்தான் ஓண் செம் கேழ்

மடல் பூரித்து உற்ற தோள் மன்               கடிமணப் படலம், பாடல் 429

தேவாதி தேவனான ராமபிரானுக்கு தெய்வத் திருமகளான சீதையை செங்கை நீர் வார்த்து கன்யாதானம் செய்யும் புண்ணியத்தைப் பெற்றான் ஜனக மன்னன்.

தேவாதி தேவனும் அத் தெய்வத் திருமகளும்

ஓவாது உறைந்து ஆங்கு உயர்கமல்ப் – பூவாரும்

மங்கையுடன் மேவி மகிழ்நீர் எனச்சனகன்

செங்கைநீர் வார்த்தான் தெளிந்து                  பாடல் 448

இருவரும் ஒருவரின் ஒருவர் கரம் பற்றும் காட்சியே காட்சி!

அதை கவிஞர் வர்ணிக்கும் பாங்கு இது:-

வெய்ய கனல்வாய் விதித்த விதி யாவும்

செய்து முடித்துச் செழும் கரத்தான் – நெய்யமைந்த

ஆகுதிகண் தேர்ந்தான் அரும் பவளவல்லி கரம்

ஓகையோடு தொட்டான் உவந்து   பாடல் 450

IDOL RAMA

கங்கை அமரன்இளையராஜாஎஸ்.ஜானகி கூட்டணி

 

இந்த வைதேகி ராமன் கைசேரும் சோபன நிகழ்வை பகல் நிலவு படத்தில் வரும் ஒரு பாடல் சித்தரிக்கிறது. படம் வெளியான ஆண்டு 1985. படத்தை இயக்கியவரோ பிரபல டைரக்டர் மணிரத்னம். அவரை ஒரு நல்ல டைரக்டர் என இனம் காண்பித்த படம் இது.

சரத்பாபு ராதிகாவிடம் சலங்கையைக் காட்டி இது சலங்கை அல்ல; இதுவே மாங்கல்யம் என்கிறார். அதைக் காலில் கட்டிக் கொண்டு ராதிகா நடனமாடுகிறார். ஒரு அபிநயத்துடன் கூடிய பாடலாக இது மலர்கிறது. இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர் எஸ்.ஜானகி. பாடலை இயற்றியவர் கங்கை அமரன். நல்ல கூட்டணி தானே இது!

கோவில் பிரகார மண்டபத்தில் பிரதானமாக ராதிகா நடனமாடும் காட்சியமைப்பில் அவர் மிகவும் கஷ்டப்பட்டு பரதநாட்டியக் கலையைக் கற்றுக் கொண்டு ஆடிக் காட்டுவதைப் பார்க்கிறோம்.

ramakoti beauty

வைதேகி ராமன் கைசேரும் காலம்!

பாடல் இது தான்:-

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே     வையம் வானகம் யாவும் தோரணம்

மெய்யை மெய் தொடும் காதல் காரணம்

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே    ஆ..ஆ..

காவேரி நீர் போல ஓடும் ஆடும்

கல்யாண ராகங்கள் பாடும்

காணாத கோலங்கள் யாவும் காணும்

கண்ணொடு மோகங்கள் கூடும்

ஏதோ ஓர் பொன் மின்னல் என்னுள்ளிலே

ஏதேதோ கூறாதோ பூந்தென்றலே

காதோடு ஆனந்தம் கேட்கின்றதே

ஏன் என்று என் உள்ளம் பார்க்கின்றதே   (ஸ்வர வரிசை)

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே         (ஸ்வர வரிசை)

பூவான மிருதங்கம் எங்கும் பொங்கும்

புரியாத லயம் கூட சங்கம்

கூவாத குயில் தந்த சந்தம் சிந்தும்

குறையாத சுகம் எந்தன் சொந்தம்

நான் காணும் ஆனந்தம் ஆரோஹணம்

வான் தூவும் பூவெல்லாம் அவரோஹணம்

சங்கீத தாளங்கள் போடும் மனம்

சந்தோஷ ராகங்கள் பாடும் தினம்

மிதிலையில் வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

வையம் வானகம் யாவும் தோரணம்

மெய்யை மெய் தொடும் காதல் காரணம்

வைதேகி ராமன் கைசேரும் காலம்

தை மாத நன் நாளிலே

கோவில் பிரகார மண்டபம், தெப்பக்குள மைய மண்டபம் என எல்லா இடங்களிலும்

நடனம் தொடர்கிறது.  கதாநாயகியின் சந்தோஷமும் புரிகிறது!

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியின் மனநிலையைச் சித்தரிப்பதற்கும் அவ்வப்பொழுது ஏற்படும் திருப்பங்களுக்கு உதவவும் ராமரும் சீதையும் தொடர்ந்து கை கொடுத்து வந்திருக்கின்றனர்!

****************

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

ram hanuman

Hanuman in Indonesian Ramayana Ballet

Written by ச.நாகராஜன்

Article no. 1718; dated 15 March 2015

Up loaded at 9-57  London time

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 12

ச.நாகராஜன்

ஶ்ரீராமனின் ஶ்ரீதேவியே அனுமான் உன்னைக் காக்க..!

அஞ்சிலே ஒன்று பெற்றான்

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்

மஹாத்மா அனுமான்

IMG_0276

இப்படிப்பட்ட மாபெரும் வீரனை மஹாத்மன: என ராமரே போற்றிப் புகழ்கிறார். அவதார புருஷன் வாயிலாகவே மஹாத்மா பட்டத்தைப் பெற்றவர் அனுமன்! ராமரின் அணுக்கத் தொண்டனான இந்த அனுமனின்  செயலைக் குறிப்பிடாமல் தமிழ் திரையுலகம் இருக்க முடியுமா, என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் பிரபல கதாநாயகி ஶ்ரீதேவி நடித்த வெற்றிப் படமான ப்ரியா படம் 1978ஆம் ஆண்டில் வெளியான படம்.

இது நாவலாசிரியர் சுஜாதாவின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவரது கணேஷ் லண்டனில் சென்று ஆற்றும் சாகஸங்களைக் கதை சித்தரிக்கும். ஆனால் திரைப்படத்திற்காக நிகழ்வுகளின் களம் சிங்கப்பூராக மாற்றப்பட்டது.

நடிகை ஶ்ரீதேவி ஒரு சேரில் கைகால்கள் கட்டப்பட வாயில் பிளாஸ்திரி போட்டு பேச முடியாமல் தவிக்க எதிரிகளால் அடைக்கப்படுகிறார். படத்திலும் அவர் ஒரு நடிகை தான். காப்பாற்றும் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் தான் என்பது சொல்லித் தெரியவேண்டாம்.

அவர் ஶ்ரீதேவி இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லுகையில் ஒரு பாடல். வழக்கமாக காலம் காலமாக திரைப்பட ஃபார்முலா படி எதிரிகளின் கோட்டையில் உள்ளே மாறுவேடத்தில் நுழையும் ஒரு கதாநாயகன் ஒரு ஆடல் பாடலைச் செய்வது போலத் தான் இதுவும்!

Indonesia-2012-593_web-lrg

ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே

இளையராஜா இசை அமைக்க, பாடலைப் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார். கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் இது.

ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே

ஹனுமான் உன்னைக் காக்க

சிறையில் உன்னை மீட்க

கடல் தாண்டி வந்தானம்மா

எதிர்ப்போரை வெல்வானம்மா

ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா

பாடி பாடி அழைக்கின்றேன்

ஜாடையாக சேதி சொல்வாய்

பாதை ஒன்று கண்டுகொள்ள நீயும் பாடுவாய்

தயக்கம் என்ன, கலக்கம் என்ன

தேவி நீ குரல் கொடு

ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா

நேரம் பார்த்து நெருங்குவேன்

காவல் தாண்டி காக்க வந்தேன்

போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்

கவலை இல்லை மயக்கம் இல்லை

தேவி நீ குரல் கொடு

ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே

ஹனுமான் உன்னைக் காக்க

சிறையில் உன்னை மீட்க

கடல் தாண்டி வந்தானம்மா

எதிர்ப்போரை வெல்வானம்மா

ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா

பாகப்பிரிவினை சிவாஜி ஸ்டைலில் கையை மடித்துக் கொண்டு இன்னொரு கையில் ஒரு தடியுடன் நடந்து செல்லும் ரஜினி பாடுவதாக காட்சி அமைப்பு உள்ளது. வில்லனின் ஆட்கள் அவரை நெருங்கிக் கண்ணாடியை அகற்றி செக் செய்வதும் பாடலில் அனுமானைப் போல வருவேன் என்று அட்டகாசமாக அவர் தடியுடன் நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவதும் ரஜினி ரசிகர்களை நிச்சயம் குளிர்விக்கும். நவீன கடத்தல் கதையில் கூட ஶ்ரீராமனின் கதை ஞாபகப் படுத்தப்படுகிறது. ராமாயணத்தின் மொத்த வலுவும் இந்தப் பாட்டில் ஏற்றப்பட அதன் மூலம் கதை அமைப்பு சுட்டிக் காட்டப் படுகிறது.

IMG_0273

Ramayana Sculptures

பஞ்சு அருணாசலம்

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்து பின்னர் திரைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் பஞ்சு அருணாசலம். தயாரிப்பாளராக இருந்து அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்திய பெரிய பெருமை இவருக்கு நிரந்தரமாக உண்டு. ரஜினி, கமலஹாசன் ஆகியோரின் நடிப்பில் பெரும் ஹிட் படங்களை அளித்தவர் இவர். கதைக்கு ஏற்ப பாட்டு எழுதுவதில் வல்லவர் என்பதை இந்த ‘ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே ஹனுமான் உன்னைக் காக்க’ பாடல் ஒன்றே சிறந்த சான்றாகும்!

குறிப்பு :- (அனுமனைப் பற்றி ராமர் போற்றிய மஹாத்மா என்ற தலைப்பில் ‘ராமாயண வழிகாட்டி’ என்ற கட்டுரைத் தொடரில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஆறாம் கட்டுரையை மேலும் அதிக விவரங்களுக்காகப் படித்து மகிழலாம்)

*****************