நோயைக் காட்டி தப்பிய மன்னர்கள்! (Post No.3892)

Written by London Swaminathan

 

Date: 9 May 2017

 

Time uploaded in London: 19-57

 

Post No. 3892

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எதிரிகளைச் சமாளிக்க சாம, தான, பேத ,தண்டம் என்ற பல வழிகளைக் கையாளலாம் என்று அரசியல் நூல்கள் பகர்கின்றன. இது தவிர ஒரு வழி உண்டு. எதிரி நியாயமற்ற முறைகளைக் கையாண்டால் நாமும் ஏமாற்றிச் சமாளிக்கலாம். நோய் என்பதைக் காட்டி தப்பிய மன்னர்களும் உண்டு.

 

காஷ்மீரின் வரலாற்றை எழுதிய கல்ஹணர் என்பவர் ஜெயபீடன் (கி.பி.750) என்ற மன்னன் தப்பிய வரலாற்றைச் சொல்கிறார். கல்ஹணர் எழுதிய நூலின் பெயர் ராஜ தரங்கிணி

 

 

கஷ்மீரில் லூடா (LUTA) என்ற விநோத வியாதி உண்டு. இது வந்தால் உடம்பில் கொப்புளம் வந்து ஆள் மரணம் அடைவது உறுதி.

 

ஒருவகை விஷ சிலந்திப் பூச்சி உடம்பில் ஊர்ந்து சென்றால் இந்த வியாதி வரும் என்றும், இது தொற்று வியாதி என்பதால் யாரும் பக்கத்தில் நெருங்க மாட்டார்கள் என்றும் மக்கள் நம்பினர். லூடா என்றால் சிலந்தி என்று அர்த்தம். தமிழில் சிலந்தி நோய் என்று ஒன்று உண்டு. அது வேறு. இந்த லூடாவின் வருணனையைக் கேட்டால் பிளேக் என்னும் கொள்ளை நோய்தான் நினைவுக்கு வரும்.

 

ஒரு முறை ஜெயபீடன் எதிரிகள் கையில் சிக்கினான். அவர்கள் இவனைக் காவலில் வைத்தனர். அந்தக் காலத்தில் காஷ்மீரில் லூடா நோய் பரவி பெரும் பீதி ஏற்பட்டது. ஜெயபீடன் ஒரு தந்திரம் செய்தான். உடம்பில் தற்காலிக கொப்புளம் ஏற்பட எருக்கம் செடியின் பாலை தோல் மீது பூசிக்கொண் டான். கொப்புளம் வந்தால் அதைச் சமாளிக்க மாற்று மருந்துகளையும் வரவழைத்து தயாராக வைத்துக்கொண்டான். கொப்புளம் வந்தவுடன் உளவாளிகள் மூலம் எதிரி  அரசனுக்கு தகவல் போனது. அவன் உடனே பயந்து கொண்டு ஜெயபீடனை விடுவித்தான். ஜெயபீடன் தன்னுடைய நாட்டிற்குப் போய் பெரும்படையுடன் வந்து எதிரியை வென்றான்.

 

இது ராஜ தரங்கிணியின் நாலாவது தரங்கத்தில் உள்ள செய்தி. மற்றொரு இடத்தில் க்ஷேமகுப்தன் என்பவன், லூடா நோயால் இறக்கவே அவன் மகன் அபிமன்யுவைச் சிறு வயதிலேயே சிம்மாசனத்தில் அமர வைத்தனர் என்ற செய்தியையும் தருகிறான்.

அஷ்டாங்க ஹிருதய என்ற நூலில் இந்நோய் பற்றியும் சிகிச்சை முறைபற்றியும் உள்ளதாம்.

தமிழ்நாட்டிலும் வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் இப்படி நடந்ததுண்டு. அம்மை நோய் என்றால் பிரிட்டிஷ் காரர்களுக்கு பயம். அந்த

இடத்தை நெருங்கவே மாட்டார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள் எங்காவது ஒளிந்து கொண்டால், அவர்களைக் காப்பாற்ற, ஊர்க்காரர்கள் வீட்டு வாசல்களில் வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடுவராம். அம்மை நோய் பரவாமல் இருக்க இப்படிச் செய்வது வழக்கம். மேலும் இப்படி வேப்பிலை தொங்கும் வீடுகளில் நெருங்கிய உறவினர் தவிர யாரும் போகவும் மாட்டார்கள்.

 

பிரிட்டிஷாரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டபோது அவனை வெள்ளைக்காரர்கள் தூக்கிலிட்டனர். அப்பொழுது பாஞ்சாலக் குறிச்சி கோட்டையிலிருந்து தப்பிய ஊமைத்துரை முதலிய தலைவர்களும் இப்படி வேப்பிலை தந்திரம் செய்ததாகச் சொல்லுவர்.

 

ராணுவத்திலும் அலுவலகங்களிலும் இப்பொழுதும் யாருக்கோ உடம்பு சரியில்லை என்று சொல்லி லீவு  போட்டு வீட்டில் வேறு வேலை செய்வதில்லையா?அதுபோலத்தான் இதுவும்!

 

–Subahm–