உண்மைக் கதை- வானத்தில் இருந்து வந்த மணமகள்!(Post No.5460)

WRITTEN by London Swaminathan

swami_48@yahoo.com


Date: 
23 September 2018

 

Time uploaded in London – 9-18 AM (British Summer Time)

 

Post No. 5460

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

கண்டதும் காதல், திடீர்க் காதல், ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ போன்ற ராமாயணக் காதல், தமிழ் இலக்கியத்தில் வரும் புலிக்கு அஞ்சி ஆண்மகனைத் தழுவி ஏற்பட்ட காதல், ‘யானைக்குப் பயந்து முருகனைத் தழுவிய வள்ளி காதல்’– என்று எவ்வளவோ காதல் கதைகளைப் படிக்கிறோம். எண்வகைத் திருமணங்களில் காதல் திருமணமும்  ஒன்று என்று மநு நீதி நூலும் தொல்காப்பியமும் அங்கீகரித்துள்ளதை எழுதினேன். வெளி நாட்டில் நடந்த இரண்டு பிரமுகர் காதல், மேற்கூறியவற்றை எல்லாம் ருசுப்பிக்கிறது.

 

லாரிட்ஸ் மெல்சியோர் (Lauritz Melchior 1890-1973) என்பவர் பிரபல ஆபரா பாடகர். டென்மார்க்கில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து இசை மூலம் புகழ் பெற்றவர். அவர் வாழ்வில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்தது. அவருக்கு 35 வயதானபோது ஜெர்மனியின் மூனிச் நகரில் ஒரு தோட்டத்தில் பாடல் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அடுத்த கச்சேரிக்காக ஒரே பாடலைப் பலமுறை பல விதமாகப் பாடிப் பயிற்சி செய்தார். அதில் ஒரு வரி,

“வாராய், வாராய், அன்பே! என்னிடம் வருவாயே, பறந்து வருவாயே!

ஒளி வீசும் சிறகுகளில் பறந்து வருவாயே” — என்று  தோட்டத்தில் நின்றவாறு பாடிக் கொண்டிருந்தார்.

 

என்ன அதிசயம்!

திடீரென்று அவர் கைகளிலொரு பெண் வந்து விழுந்தார். அதுவும் வானத்திலிருந்து பறந்து வந்து விழுந்தார். அப்படி வந்தவர் பிரபல நடிகை மரியா ஹாக்கர் (Maria Hacke)r ஆவார். அவர் ஒரு ஸ்டன்ட்(STUNT) காட்சிக்காக பாராச்சூட்டில் வந்து குதிக்கும் காட்சிக்காக பயிற்சி செய்து கொண்டிருந்தார். அது திசை மாறி,  லாரிட்ஸின் தோட்டத்துக்கு வந்ததோடு நில்லாமல், பாடகரின் கையில் போய் விழுந்தது. அவருக்கும் ஒரே அதிசயம்.

 

கண்ணும் கண்ணும் கலந்தது!

 

“கையும் கையும் கலந்திடவே ஜாலியாகவே,

காதல் கதை பேசிடலாம் ஜாலியாகவே”–

என்று பாடிக்கொண்டே திருமணமும் செய்து கொண்டனர்.

 

மனைவி அமைவதெல்லாம் வானம் கொடுத்த வரம்- என்று அவரும் எல்லோரிடமும் சொன்னார்.

 

கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இதனால்தானோ!

 

XXX

நிகலஸ் ஷெங்க்( Nicholas Schenck (1881-1969) அமெரிக்காவின் கோடீஸ்வரர்களில் ஒருவர். ரஷ்யாவில் யூதர் குடியில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி எம்.ஜி.எம். (MGM) போன்ற பெரிய கம்பெனிகளை நடத்தி கோடி கோடியாகச் சம்பாதித்தவர். அவர் ஒரு முறை டாம் மெய்கன்ஸ் என்பவரின் கப்பலில் ஏறிக் கொண்டிருந்தார். தொலைவில் படகுத் துறையில் ஒரு அழகிய இளம் பெண் நிற்பதைக் கண்டார். அவர் மனதில் திடீரென்று ஒரு வெறி பிறந்தது. ஓடிப்போய் அந்தப் பெண்மணியைத் தண்ணீரில் தள்ளிவிட்டார். பிறகு அவரைப் பயம் பீடித்தது. ஏனெனில் அப்பெண்ணுக்கு நீந்தத் தெரியுமோ தெ ரியாதோ என்ற கவலை.

 

இந்தப் பெண்மணி மட்டும் வெளியே வந்தால், நம்மைத் திட்டித் தீர்த்து விடுவாள். முதுகில் ‘டப்பா கட்டி’ விடுவாரென்று எண்ணினார்.

 

அந்தப் பெண்மணி நீந்திக் கரை சேர்ந்து, அவரை நோக்கி ஓடி வந்தார்.  திட்டுவதற்குப் பதிலாக அவர், ஷெங்க் முன்னால் நின்று ஒரு புன்னகை செய்தார்.

 

சாதாரண புன்னகை அன்று. தெய்வீகப் புன்னகை. அதிலும் பெரிய புன்னகை; வஸீகரப் புன்னகை!

 

அதைப் பார்த்த ஷெங்க்,

அடக் கடவுளே! இப்படிப்பட்ட ஒரு தெய்வீகப் புன்சிரிப்பைப் பார்த்ததே இல்லையென்று கருதி அவர் மீது அன்பு பூண்டார். அது காதலாகக் கனிந்தது; திருமணமாக முடிந்தது!

 

XXX

சாமுவேல் புட்Samuel Foote(1720-1777) பிரபல நடிகர் ஆவார். நாடக நடிகர், மானேஜர் போன்ற பல பொறுப்புகளில் இருந்தவர். ஒரு நாள் எல்லா நடிகர்களும் அரட்டைக் கச்சேரியில் இறங்கினர். அன்றைய தலைப்பு- பிரபல நடிகையின் திருமணம். அந்த நடிகையின் கதையோ அதி பயங்கரக் கதை. நூறு பேருடன் கள்ளத் தொடர்பு! இப்படி அபக்கியாதி பெற்ற ஒருவரை ஒரு ஆண்மகன் திருமணம் செய்ய எப்படி முன்வந்தான் என்ற வியப்பு.

ஒரு நடிகர் செப்பினார்,

சேதி தெரியுமா? அவர் தனது கடந்த கால காமக் களியாட்டங்களை எல்லாம் அப்பட்டமாக ஒப்புக் கொண்டதால் அந்த ஆண்மகன் சம்மதித்தானாம்.

இன்னொருவர் மொழிந்தார்,

அட அதை விடுங்கள்; என்ன பொருத்தம், இந்தப் பொருத்தம்; கன கச்சித ‘மேட்ச்’

 

இன்னொரு நடிகர் இடைமறித்துப் பகர்ந்தார்,

அது மட்டுமல்ல; என்ன நேர்மை பாருங்கள்; என்ன துணிச்சல் பாருங்கள்!

 

பிரபல நடிகர் சாமுவேல் புட் சிரித்துக் கொண்டே சொன்னார்,

அடடா! என்ன ஞாபக சக்தி, அந்தப் பெண்ணுதான்! அவ்வளவு காதல் விஷயங்களையும் சொல்ல அவருக்கு எவ்வளவு நினைவாற்றல் இருந்திருக்க வேண்டும் !

 

XXX SUBHAM XXX