
Article Written S NAGARAJAN
Date: 6th August 2016
Post No. 3039
Time uploaded in London :– 6-14 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
100 வயது வாழ்ந்த பெரியோர்
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 11
ச.நாகராஜன்
சிரித்தவாறே விடை பெற்ற ஸு யுன் தன் பயணத்தைத் தொடர்ந்து டெங்சாங் என்ற இடத்தை அடைந்தார். அது பர்மாவின் எல்லையில் உள்ள நகரம். அங்கு தனது ஆலயத்திற்காக நிதி திரட்ட முனைந்தார் ஸு யுன்.
ஹுனான் கில்ட் ஹால் என்ற இடத்தில் தன் பைகளை அவர் வைக்கும் முன்னரே சிலர் அவரிடம் வந்து அவரை வணங்கினர்.
“பூஜ்யரே! எங்களுக்கு சூத்ரங்களைக் கேட்க ஆவலாக உள்ளது” என்றனர்.
“இங்கு சூத்திரங்களைச் சொல்வதற்காக நான் வரவில்லை” என்றார் ஸு யுன்.
“உங்களைப் போன்ற துறவிகள் சூத்திரங்களைச் சொல்வது வழக்கம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்” என்றார் அவர்களில் ஒருவர்.
“இந்தப் பகுதியில் உள்ள துறவிகளின் பழக்கம் பற்றி நான் ஒன்றுமே அறியேன்” என்றார் ஸு யுன்.
உடனே கில்ட் ஹாலின் தலைவர் இடைமறித்துக் கூறினார்”
“அன்புள்ள ஐயா! நீங்கள் இவர்களுக்காக சூத்திரங்களை நிச்சயம் சொல்ல வேண்டும். இவர்கள் புனிதர் என்று அழைக்கப்படும் ‘வூ’ வின் வம்சாவளியினர். அவர் 80 வயது வரை வாழ்ந்தவர். பல டஜன் குழந்தைகளைப் பெற்றவர். அவ்ர்களில் பல பண்டிதர்கள் உண்டு. அந்தப் பெரியவர் சில நாட்களுக்கு முன்னர் தான் காலமானார். இறப்பதற்கு முன்னால் தான் முன் பிறப்பில் ஒரு துறவியாக இருந்ததாகவும், தான் இறந்த பின் துறவிக்குரிய ஆடைகளை அணிவிக்க வேண்டும் என்றும் வீட்டில் உள்ள யாரும் அழக்கூடாது என்றும் எந்த ஒரு மிருகத்தையும் இறந்ததையொட்டி விருந்திற்காகக் கொல்லக் கூடாது என்றும், அங்கிருக்கும் டாயோயிஸ்ட் பண்டிதர்கள் யாரையும் ஈமச் சடங்கிற்காக அழைக்கக் கூடாது என்றும் கூறினார்.
ஒரு பெரிய துறவி இங்கு வருவார் என்றும் அவர் தன்னை முக்தி பெறச் செய்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதைக் கேட்டவுடன் மறைந்த அந்தப் புனிதரின் இல்லத்திற்கு வர சம்மதித்து ஸு யுன் அங்கு சென்று அவரின் ஆன்மா சாந்தியடையவும் பசியோடிருக்கும் ஆவிகளின் பசிக்கு உணவாகவும் சூத்திரங்களை ஓதினார்.

அந்த மாவட்ட அதிகாரிகள் அனைவரும் ஒருங்கு திரண்டு வந்து ஸு யுன்னிடம் அவர் அங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டினர்.
ஆனால் ஸு யுன் தான் காக் ஃபுட்டில் உள்ள ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிதி திரட்டவே அங்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு மகிழ்ந்த அவர்கள் கணிசமான நிதியைத் திரட்டி அவரிடம் கொடுத்தனர்.
ஸு யுன் தனது மலைக்குத் திரும்பினார். அங்கு ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்தார். அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் வாங்கி வழங்கினார். அவர்களுக்குத் தியானப் பயிற்சியை அளித்து ஒழுக்க முறைகளைக் கற்பித்தார்.
புத்தமத நெறிகளை போதித்தார்.
அந்த வருடம் ஆண் பெண் என இருபாலார் மற்றும் துறவிகள் என்று எண்ணிக்கை எழு நூறைத் தாண்டியது.
இந்த ஆலயத்தின் நெறிகளையும் செயல்பாட்டையும் பார்த்த ஏனைய மலையில் உள்ள ஆலயங்கள் அனைத்தும் இதே நெறிகளையும் ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தொடங்கின.
துற்வற ஆடைகளை முறைப்படி அங்குள்ள துறவிகள் அணிய ஆரம்பித்தனர்.
அனைவரும் ஸு யுன்னிடம் வந்து அவரது ஆலயத்தில் தங்கி அவரது போதனைகளைக் கேட்க ஆரம்பித்தனர்.
ஸு யுன்னுக்கு 65 வயது நிறைவடைந்தது.
***********.
You must be logged in to post a comment.