Written by London Swaminathan
Post No. 15,493
Date uploaded in Kumbakonam, India – 13 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 43
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 43
***
கும்பகர்ணன் விபீஷணன் பற்றி
எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து
இறைஞ்சல் புரி போதே … (அடைக்கலம் புக) எழுந்து வந்து
கும்பகர்ணனின் இளைய தம்பியாகிய விபீடணன் ராமனது எதிரில் வந்து வணங்கிய அந்தச் சமயத்திலேயே,
இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற
கொண்டல் மருகோனே … மனம் மகிழ்ந்து இலங்கை அசுரர்களின்
(ராணுவ) ரகசியங்களைச் சொல்ல, வெற்றி பெற்ற மேக நிறத்தினனாகிய ராமனின் மருகனே,
மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி
நின்ற குருநாதா … மழு ஆயுதத்தை விரும்பி ஏந்தும் சிவபிரான்
ஆர்வத்துடன் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த
பெருமாளே. … வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து,
பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே.
*****
இறைவனின் எட்டு குணங்கள்
உன் அடி வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர
குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப
அருளாதோ … உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும்முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே,குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை* உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ?
……………….
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி …… என
தாளம் தொகுதி … மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில்
வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட(ம்)
மத்தளம் இனம் பட்ட டக்கை பறை பதலை பல திமிலை
முதல் அதிர … பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில்,தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை,முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய,
* இறைவனின் எண் குணங்கள்:
1. தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினன் ஆதல்,
3. இயற்கை உணர்வினன் ஆதல்,
4. முற்றும் உணர்தல்,
5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,
6. பேரருள் உடைமை,
7. முடிவிலா ஆற்றல் உடைமை,
8. வரம்பிலா இன்பம் உடைமை.
***
தாமோதரன் பெயர் ஏன் ?
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி
விளையாடும் ஒரு போதில் … தாம் ஆசையுடன் கறந்த பாலைத்
தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில்,
தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன்
முராரி மருகோனே … தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்)
பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே,
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது … சிறந்த லக்ஷ்மி
போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி)
மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி
மாலாகி விளையாடும் புய வீரா … ஆசை பூண்டு விளையாடுகின்ற
புயங்களை உடைய வீரனே,
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் …
விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும்
மாயூர கிரி மேவும் பெருமாளே. … மாயூர கிரி எனப்படும் குன்றக்
குடியில்** வீற்றிருக்கும் பெருமாளே.
* தாமம் = கயிறு, உதரம் = வயிறு, கயிற்றினால் வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் ஆயினான்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே7 மைலில் உள்ளது.
***
பாரதியாரும் அருணகிரியும் கேட்ட வரங்கள்
உடுக்கத் துகில் வேணும் … உடுப்பதற்கு உடைகள் வேண்டும்.
நீள்பசியவிக்கக் கனபானம் வேணும் … பெரும் பசியைத் தணிக்க
உயர்ந்த சுவைநீர் வேண்டும்.
நல்ஒளிக்குப் புனலாடை வேணும் … தேகம் நல்ல ஒளிவீசும்
பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும்.
மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் … உடல் நோயை
அகற்ற மருந்துகள் வேண்டும்.
உள்இருக்கச் சிறுநாரி வேணும் … வீட்டுக்குள் இருக்க இளமையான
மனைவி வேண்டும்.
படுக்க யொர் தனிவீடு வேணும் … படுத்துக்கொள்ள ஒரு தனி
வீடும் வேண்டும்.
இவ் வகையாவுங் கிடைத்து … இத்தனை நலன்கள் யாவும் எனக்குக்
கிடைக்கப் பெற்று
க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி … குடும்பத்தனாகி, அந்த
வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி,
நீடிய கிளைக்குப் பரிபாலனாய் … பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக்
காப்பாற்றுபவனாகி
உயிர் அவமேபோம் … முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும்.
க்ருபைச்சித்தமு ஞான போதமும் … கருணை உள்ளத்தையும்
சிவஞான போதத்தையும்
அழைத்துத் தரவேணும் … நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள
வேண்டும்.
ஊழ்பவ கிரிக்குட் சுழல்வேனை … ஊழ்வினையால் வரும் பிறவி
என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை
ஆளுவது ஒருநாளே … ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ?
குடக்குச் சிலதூதர் தேடுக … மேற்குத் திசையில் சில தூதர்கள்
தேடட்டும் என்றும்,
வடக்குச் சிலதூதர் நாடுக … வடக்குத் திசையில் சில தூதர்கள்
தேடட்டும் என்றும்,
குணக்குச் சிலதூதர் தேடுகவென மேவி … கிழக்குத் திசையில் சில
தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி
குறிப்பிற் குறிகாணு மாருதி … குறிப்பினால் குறிப்பை உணரும்
அனுமனை
இனித் தெற்கொரு தூது போவது … இனி தெற்கு திசையில்
தூதனாக அனுப்ப வேண்டியது.
குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ … சொல்லி வைத்த
குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும்
தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்ரீவன் சொல்லி அனுப்ப),
அடிக் குத்திரகாரராகிய … அடியோடு வஞ்சகர்களாகிய
அரக்கர்க்கு இளையாத தீரனும் … அரக்கர்களிடம் தோற்று
இளைக்காத தீரனாகிய அனுமனும்
அலைக்கு அப்புறமேவி … அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள
இலங்கைக்குச் சென்று,
மாதுறு வனமேசென்று … சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை
அடைந்து,
அருட்பொற் றிருவாழி மோதிரமளித்து … ராமபிரானது அழகிய
பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து
உற்றவர்மேல் மனோகரம் அளித்து … மீண்டு வந்த அந்த
அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி*,
கதிர்காம மேவிய பெருமாளே. … கதிர்காமத்தில் வீற்றிருக்கும்
பெருமாளே.
* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.
பராசக்தியிடம் பாரதி கேட்டவை
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
1
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
2
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
***
வள்ளி பிறந்த கதை
அடவியிருடி அபிநவ குமரியடிமையாய … காட்டில் சிவமுனிவர்
உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி* வள்ளிக்கு அடிமையாகிச் சென்று
புனஞ்சென்று அயர்வோனே … அவள் இருந்த தினைப்புனத்துக்குப்
போய், தளர்ச்சி அடைந்தவனே,
அவசமுடன் அ ததி திரிதரு கவியாள … மயக்கத்துடன் ஒருநாள்
காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள**
அயில் புயங்கொண்டு அருள்வோனே … வேலினைத் தோளில்
ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே,
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள … தம் உடலின் இடது
பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள
ஏழைக்கு இடங்கண்டவர்வாழ்வே … ஏந்திழையாம் பார்வதிக்கு
இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே,
இதமொழி பகரினு மதமொழி பகரினும் … அடியேன் இனிய
மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப்
பேசினாலும், ஏழைக்கு இரங்கும் பெருமாளே. … இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே.
* சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி எனப் பெயரிட்டான்.
** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து, காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
–SUBHAM—
TAGS- பாரதியாரும் அருணகிரியும், வரங்கள் , திருப்புகழில் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 43 வள்ளி பிறந்த கதை



