WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,392
Date uploaded in Sydney, Australia – 4 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்.ஓர் ஆய்வு
(ஆர், சேஷாத்ரிநாதன்)

என்னுரை
நம்மில் பெரும்பாலோர் வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் படித்து இருப்போம். ஆனால் துளசி தாசரின் இராமாயணமாகிய இராம சரித மானஸ் படித்து இருக்கும் வாய்ப்புகள் குறைவு. வட இந்தியாவில் மக்களிடையே பிரபலமானது இந்த ராம சரித மானஸ். அவதி மொழியில் எழதப்பட்டது. இதை மிக மிகப் புனித நூலாகக் கருதுகின்றனர். காசி, சோமநாத் ஆலயங்களுக்குச் சென்றவர்கள் அங்கு நிறைய பேர் ஆலயத்தினுள் இராம சரித மானஸ் படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் எழுதிய இராமாயணத்தில் பால, அயோத்தியா, ஆரண்ய காண்டங்கலைத் தொகுத்து முகநூலில் வெளியிட்டு விட்டேன். வால்மீகியின் கிஷ்கிந்தாகண்டத்தைத் தொகுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டத்தை தொகுத்து விட்டேன். நான் முன்பு சொன்னது போல் இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல. கதையுடன் இணைந்த ஆய்வு. இதில் வால்மீகி, இராமாயணம், ஆத்யாத்ம இராமாயணம், நலுங்கு மெட்டு இராமாயணம் முதலிய இராமாயணங்களையும் ஒப்பிட்டுத் தொகுத்துள்ளேன்.
இந்த ஆய்வில் எனக்கு மிக உறுதுணையாக இருந்த நூல்கள்
1. திரு அஞ்சனி நந்த சரண் எழுதி கீதா பிரஸ் வெளியிட்ட மானச பியுஷ்
2. திரு அஜய் குமார் சவ்சாரியாவின் ராமசரித மானஸ்
இவர்களுக்கும் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் மனமார்ர்ந்த நன்றி.
**
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு – 2
முன்னுரை
முதலில் இராம லக்ஷ்மணர்களையும், பிறகு இராம நாமத்தையும், அதன் பிறகு சிவ பெருமான் உறையும் புண்ய க்ஷேத்ரமான காசியையும், கடைசியாக சிவ பெருமானையும் துதித்து. துளசிதாசர் கிஷ்கிந்தாக் காண்டக் கதையைத் துவக்குகிறார்.
மறை பொருளான பரம் பொருள் மனிதக் குழந்தையாகத் தோன்றியதையும், அந்த நடமாடும் தெய்வத்தைத் தாய் தந்தையரும், சுற்றத்தாரும், நண்பர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், புண்ணியாத்மாக்களும், பாவம் செய்தவர்களும், வாழ்த்தி, வணங்கி வழிபட்ட கதையைப் பால காண்டத்தில் கூறினார் துளசிதாசர்
அயோத்தியா காண்டத்தில் பரமனினும் உயர்ந்த பக்த சிரோமணி ஆகிய பரதன் கதையும், பக்தியின் பெருமையும் சொல்லப்பட்டது..
ஆரண்ய காண்டத்தில் யோகிகள், ஞானிகள், சித்தர்கள், மாரீச்சன், கழுகரசன், நாரதர், சபரி ஆகிய எல்லோரின் பக்தியின் பெருமையை உணர்ந்து, பரமனிடம் பக்தி தானம் கேட்டதையும் பரமன் உள்ளம் உவந்து அவர்களுக்கு பக்தி செய்யும் பெரு மனம் அளித்து அருள் பாலித்த வரலாற்றைக் கூறினார். அதுபோல மாயா சீதையை இராவணன் கவர்ந்து சென்ற வரலாற்றையும்(ராம சரித மானசில்) கூறினார். இப்போது கிஷ்கிந்தா காண்டத்திலும் பக்தியின் பெருமையே பேசப்படுகிறது.
கிஷ்கிந்தாக் காண்டச் சுருக்கம்
நாரத முனிவர் சென்ற பிறகு, இராமன் ஒரு மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பம்பா ஏரியின் கரையில். உள்ள ரிஷ்யமுக மலையை வந்தடைந்தார். இந்த மலையில் சுக்ரீவன் தனது தோழர்களுடன் வசித்து வந்தான். சுக்ரீவன் கிஷ்கிந்தா (குரங்குகளின்) இராச்சியத்தின் இளவரசன். இரண்டு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிதலால், சில காரணங்களால் அவரது மூத்த சகோதரர் வாலியால் ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது , அவர் ரிஷ்யமூக மலையின் உச்சியில் வசிக்க வந்தார்.
அந்த மலை அவருக்குப் பாதுகாப்பாக இருந்தது, ஏனென்றால் அவருடைய சகோதரர் முந்தைய சாபத்தினால் இந்த இடத்திற்கு வர இயலாதபடி ஒரு தடை இருந்தது. தொலைவிலிருந்து இராம இலக்ஷ்மணர்களை நோக்கிய சுக்ரீவன், அவர்கள் வாலியால் தன்னை அழிப்பதற்காக அனுப்பப்பட்டப் படை வீரர்கள் என நினைத்தான். அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து வருமாறு தனது நம்பகமான அமைச்சனான ஹனுமனை அனுப்பினான்.
ஹனுமான் அந்தணச் சிறுவன் வேடம் அணிந்து அவர்களை அணுகி விவரங்கள் கேட்டறிந்தான். தான் போற்றும் இராமனே இப்படி வீரனாக வந்துள்ளான் என்று, தனது அன்பான இறைவனை அடையாளம் கண்டுகொண்டு, ஹனுமன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். இராமன், தான் வனத்தின் அந்த பகுதிக்கு வந்த காரணத்தை ஹனுமனுக்கு விளக்க, ஹனுமன் சுக்ரீவனைப் பற்றிச் சொல்லி அவரைச் சந்திக்கும்படியும் சீதையைத் தேட சுக்ரீவன் உதவி புரிவான் என்றும் கூறினான்.
இராமரன் சுக்ரீவனைச் சந்தித்தான், இருவரையும் அறிமுகப்படுத்திய ஹனுமனின் ஆலோசனையின் பேரில், அவர்கள் நண்பர்களானார்கள். உரையாடலின் போது, சுக்ரீவன் தெரிந்து கொள்ள விரும்பியபோது எந்த மனிதனும் இதற்கு முன்பு வரத் துணியாத வனாந்தரத்தில் இராமனும் இலட்சுமணனும் ஏன் அலைந்து திரிந்தார்கள்? மற்றும் சீதை கடத்தப்பட்டது பற்றியும், இரண்டு சகோதரர்களும் அவளை எப்படித் தேடுகிறார்கள் என்பது பற்றியும் இராமன் அவருக்குச் சொன்னான். இதைக் கேட்ட சுக்ரீவன் இராமனுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தான், மேலும் சீதை இராவணனால் கடத்திச் செல்லப்படுவதைக் கண்டதாகக் கூறினான். அப்போது சீதை கீழே போட்ட நகைகளை தான் சேமித்து வைத்திருப்பதாகச் சொல்லி அவைகளை இராமனுக்குக் காண்பித்தான். இராமனும் அவை சீதையின் நகைகள் என்பதை உறுதி செய்தான்.
இராமன், சுக்ரீவனிடம் அந்த வனத்தில் தனியாக வாழ்வது பற்றி கேட்டபோது சுக்ரீவன், தனது சகோதரன் வாலி தன்னைத் தாக்கி, தனது மனைவியை அபகரித்துக் கொண்ட விவரத்தையும் சொல்லி வாலிக்குப் பயந்து அந்த மலையில் வாழும் விவரத்தைத் தெரிவித்தான். இராமன் அவனிடம் வாலியைக் கொன்று கிஷ்கிந்தையில் கௌரவமான முறையில் வாழ வைப்பதாக உறுதி அளித்தான். வாலியை யுத்தத்திற்கு வருமாறு அழைக்கச் சொல்லி எல்லோரும் கிஷ்கிந்தைக்குச் சென்றனர். .வாலிக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த யுத்தத்தில் இராமன் ஒரே பாணத்தால் வாலியைக் கொன்று சுக்ரீவனை கிஷ்கிந்தையின் மன்னனாக்கி வாலியின் மகனான அங்கதனை இளவரசனாக்கினான்.
சுக்ரீவன் தனது படை வீரர்களை எல்லாம் வரவழைத்து சீதையைத் தேடும் முயற்சியில் நான்கு திசைகளுக்கும் அனுப்பினான். அங்கதன் தலைமையில் ஹனுமன் உட்பட பலர் தென்திசை சென்றபோது இராமன் தனது கணையாழியை சீதையிடம் கொடுக்கும்படி ஹனுமன் கையில் கொடுத்தான். ஜடாயுவின் சகோதரன் சம்பாதி மூலம் சீதை இலங்கை அசோக வனத்தில் இருப்பதாக அவர்கள் தெரிந்து கொண்டனர். இலங்கையை அடைய பெருங் கடலைக் கடக்க வேண்டும். பல வீரர்களாலும் இயலாத நிலையில் ஜாம்பவான் ஹனுமன் ஒருவனால் தான் இதைச் செய்ய முடியும் என்று நினைத்து ஹனுமனை ஊக்கப்படுத்தி இலங்கைக்குச் செல்லச் சொல்கிறான்.
ஹனுமனும் அவ்வாறே சீதையைக் காண மகேந்திர மலையின் உச்சியிலிருந்து புறப்படுகிறான்.
ஹனுமான் முதன்முதலில் ஸ்ரீஇராமனை தரிசித்த கதையுடன் கிஷ்கிந்தாக் காண்டத்தை ஆரம்பிக்கிறார் துளசிதாசர்.
** தொடரும்







