
Post No. 15,436
Date uploaded in Sydney, Australia – 19 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx


25திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 25
25திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 25
***
திருநீலகண்டர் யாழ் மீட்டியது பற்றி
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய … செந்தமிழ்
ஞானம் உள்ள பாணர்குலப் பாவலர் (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
திருஞான சம்பந்தர் பாடலுக்கு ஏற்ப) இசையுடன் யாழை வாசித்த*
தென் திரு வானைக்கா உறை பெருமாளே. … அழகிய
திருவானைக்காவில் வீற்றிருக்கும் பெருமாளே.
* முன்பு, திருவானைக்காவில், சைவக் குரவர் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் தேவார இசை பாட, திருநீலகண்டர் அதற்கேற்ப யாழை மீட்டினார் – பெரிய புராணம்.
யாழ் என்ற கருவி எண்பது இடங்களுக்கு மேலாகவும் முரசு என்ற கருவி ஐம்பது இடங்களுக்கு மேலாகவும் சங்க நூல்களில் காணக்கிடக்கிறது
விழாக்காலங்களில் மக்கள் ஆடலையும் பாடலையும் கண்டு மகிழ்ந்த செய்தி மதுரைக் காஞ்சியில் உள்ளது ,
சேரிதோறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரை இ
வேறு வேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி -616-618
யாழும் குழலும் இசைத்து ஆடினார்கள், பாடினார்கள்,
ஆடல் பாடல் வரும் இடங்கள்
அகம்-4, 61, 206, 397; புறம்-29; பதிற்று-29, 56, 65; மதுரை-327/9;
***
முருகன் ஓட்டும் கப்பல் ; விஷ்ணு சஹஸ்ரநாமம்

தொனித்த நாத வேய் ஊது … ஒலி தரும் இசையுடன் கூடிய
புல்லாங்குழலை ஊதுபவனும்,
சகஸ்ர நாம கோபால சுதற்கு … ஆயிரம் நாமங்கள் கொண்டவனும், நந்தகோபனின் மகனுமான திருமாலின்
நேச மாறாத மருகோனே … அன்பு மாறுபடாத மருமகனே,
சுவர்க்க லோக மீகாம … தேவர் உலகம் என்ற கப்பலைக் காப்பாற்றிய மாலுமியே,
சமஸ்த லோக பூபால … சகல லோகங்களையும் பாலித்து அருளும் அரசனே,
தொடுத்த நீப வேல்வீர வயலுரா … அப்பொழுதுதான் தொடுக்கப் பெற்ற கடப்ப மலர்மாலையனே, வேல் வீரனே, வயலூரானே,
மனித்தர் ஆதி சோணாடு தழைக்க … மனிதர்கள் முதல் சகல
ஜீவராசிகளும் உள்ள சோழநாடு தழைத்திட
மேவு காவேரி மகப்ரவாக பானீயம் அலைமோதும் … வரும்
காவேரியின் பெரும் வெள்ள நீர் அலைகள் மோதும்,
மணத்த சோலை சூழ்காவை … நறுமணம் கமழும் சோலைகள்
சூழும் திருவானைக்காவை மேவியவனே,
அனைத்து லோக மாள்வாரு மதித்த சாமியே … சகல
லோகங்களை ஆள்பவர்களும் மதித்திடும் தெய்வமே,
தேவர் பெருமாளே. … எல்லாத் தேவர்களுக்கும் பெருமாளே.
***
மீண்டும் ஏழிசை பற்றி ஒரு பாடல்

ஏழிசைத் தமிழில் பயனுற்ற வெண் நாவல் உற்று அடியில்
பயில் உத்தம ஈசன் … ஏழிசைத் தமிழில் தேவாரப் பாக்களின் பயனைக் கொண்ட, வெண் நாவல் மரத்தின் கீழ் (திருவானைக்காவில்) விளங்குகின்ற உத்தமராகிய ஈசர்,
முக் கண் நிருத்தன் அளித்து அருள் பெருமாளே. … மூன்று
கண்களை உடையவர், ஊழிக் கூத்து நடனம் ஆடுபவராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே.

ஏழிசை /சப்த ஸ்வரங்கள்
ஸ -குரல் – ஆ -DO
ரி -துத்தம் – ஈ -RE
க – கைக்கிளை – ஊ -MI
ம-உழை – ஏ -FA
ப -இளி – ஓ – SOL
த – விளரி- ஐ -LA
நி- தாரம் -ஒள- TI
***
சட்ஜம் – மயிலின் ஒலி
ரிஷபம்- மாட்டின் ஒலி
காந்தாரம் – ஆட்டின் ஒலி
மத்திமம்- கிரவுஞ்சத்தின் ஒலி
பஞ்சமம்- குயிலின் ஒலி
தைவதம் – குதிரையின் ஒலி
நிஷாதம்- யானையின் ஒலி
உரைகாரர்கள் உரை எழுதுகையில் அந்தந்தப் பிராணிகளை ஏன் அந்த இடத்தில் கவிஞர் சொன்னார் என்று எழுதுகையில் இதைத் தொடர்புபடுத்துகின்றனர்.
காளிதாசனில் வரும் இசைக் குறிப்புகள்
इक्षुच्छायनिषादिन्यस्तस्य गोप्तुर्गुणोदयम्|
आकुमारकथोद्धातं शालिगोप्यो जगुर्यशः॥ 4-20 ரகு வம்சம்
நெல் வயல்களைக் காக்கும் பெண்கள் மன்னன் ரகுவின் புகழைப் பாடினார்கள் ; அவனது இளம் வயது தொடங்கி அவனது நற்குணங்கள் வரை எல்லாவற்றையும் பாடி மகிழ்ந்தார்கள் .
சங்கத் தமிழ் இலக்கியத்திலும் தினைப்புனத்தைக் காக்கும் பெண்கள் பாடிய செய்திகள் வருகின்றன .
ikṣucchāyaniṣādinyastasya gopturguṇodayam|
ākumārakathoddhātaṁ śāligopyo jaguryaśaḥ || 4-20
****
பெண்கள்தான் இசையை வளர்த்தனர் ;திருமண காலங்களில் மங்கள இசைப்பாடல்களை பாடினார்கள்
ஒரு அழகான காட்சியைக் காளிதாசன் வருணிக்கிறார்; . பெண்கள் தாளத்துக்கு மயில்கள் ஆடினவாம்
tīrasthalībarhibhirutkalāpaiḥ
prasnigdhakekairabhinandyamānam |
śrotreṣu saṁmūrcchati raktamāsām
gītānugam vāri mṛdaṅgavādyam || 16-64
तीरस्थलीबर्हिभिरुत्कलापैः प्रस्निग्धकेकैरभिनन्द्यमानम्।
श्रोत्रेषु संमूर्च्छति रक्तमासाम् गीतानुगम् वारि मृदङ्गवाद्यम् ॥ १६-६४
பெண்கள் ஆற்றுத் தண்ணீரில் கைகளை அடித்துத் தாள ஓசையை உண்டாக்கி விளையாடினார்கள் அவர்கள் பாடிய பாட்டுக்கு அது மிருதங்க இசையாக அமைந்தது . அதைக்கேட்ட மயில்கள் மேக முழக்கம் என்று எண்ணி அகவல் ஒலி எழுப்பி ஆடத் துவங்கின
இவ்வாறு இடி ஓசைக்கு மயில்கள் ஆடுவது தமிழிலும் உண்டு; சென்ற பகுதியில் கொடுக்கப்பட்ட கபிலர் பாடலுடன் இதை ஒப்பிடலாம்.
அதுமட்டுமல்ல இந்து வணிகர்கள் பாபிலோனியாவுக்கு மயில்களைக் கொண்டு சென்று மத்தளம் முழக்கி மயில்களை ஆடச் செய்தவுடன் மன்னர்கள் அசந்துபோன செய்தி ஜாதகக் கதைகளிலும் உள்ளது.
ஜாதகக் கதைகள், பாலி மொழியில், சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டவை.
அனல்வாதம் புனல் வாதம் கதைகள்
அரைக்கு ஆடை சுற்றார் தமிழ்க் கூடலில் போய் … இடுப்பில் ஆடையைச் சுற்றாது (கோரைப்புல்லைச் சுற்றும்) சமணர்கள் வாழ்ந்த, தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்கு (திருஞான சம்பந்தராகச்) சென்று,
அனற்கே புனற்கே வரைந்த ஏடிட்டு அறத்தாய் எனப் பேர்
படைத்தாய் … அங்கே (அவர்களை வாதில் வெல்ல) நெருப்பிலும், நீரிலும் (தேவாரங்கள்) எழுதப்பட்ட ஏட்டினை இட்டு, அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய்.
புனல் சேல் அறப் பாய் வயல் கீழ் அமர்ந்த வேளே …
நீரில் சேல் மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயல்களின் கீழ்ப்புறத்தில் வீற்றிருக்கும் செவ்வேளே,
திரைக் காவிரிக்கே கரைக் கானகத்தே சிவ த்யானம்
உற்றோர் சிலந்தி நூல் செய் … அலைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டில் சிவத் தியானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப் பெற்ற
திருக் காவணத்தே இருப்பார் அருள் கூர் … (திருவானைக்காவின்) அழகிய பந்தலின் கீழ் இருந்து வரும், அருள் மிக்க
திருச் சாலகச் சோதி தம்பிரானே. … அழகிய சிலந்தி வலைக் கீழ் விளங்குபவரான ஜோதி சொரூபமான சிவபிரானின் தலைவனே.
அரசியலில் ஈடுபட்ட சமணர்கள் பாண்டியனின் மனதை மாற்றி அவனை சமண மதத்துக்கு இழுத்தனர்; இதனால் உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் புகழ் மங்கியது சோழநாட்டிலிருந்து வந்து பாண்டியனுக்கு வாக்குப்பட்ட ராணிக்கு மிகவும் மன வருத்தம் உண்டாக்கியது
பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று பாண்டிய அரசி -வளவர்கோன் பாவை –மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த்து வைக்க திரு ஞான சம்பந்தர் வந்தார். . இதனால் ஆத்திரமடைந்த சமணர்கள் சம்பந்தரை அனல் வாதம் புனல் வாதம் புரிய அழைத்தனர்.அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார் சம்பந்தர்
அனல் என்றால்= தீ; புனல் என்றால் தண்ணீர்.
சமணர்கள் தங்களது சமண ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பலானது.திருஞானசம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதப்பெற்ற ஏட்டினை தீயில் இட்டார்.அந்த ஏடு தீயில் எரியாமல் அப்படியே இருந்தது.சமணர்கள் போட்ட ஏடு தீயில் எரிந்து சாம்பலானது இதன்பின் புனல் வாதத்தின்போது சமணர்கள் அத்திநாத்தி என்ற ஏட்டை வைகையில் இட்டபோது அது ஆற்றில் அடித்துச் சென்றது.ஆனால் சம்பந்தர் வாழ்க அந்தணர் என்ற ஏட்டை ஆற்றில் இட்டபோது அது ஆற்றின் போக்கை எதிர்த்து நீந்திச் சென்று ௧௨ மெயில் தொலைவில் உள்ள திருவேடகத்தில் கரை ஏறியது. அந்த ஏடு கரைஏறிய இடம்தான் மதுரைக்கு அருகில் உள்ள திருவேடகம். (திரு – ஏடு – அகம்). அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார் சம்பந்தர் . சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.
திருவானைக்காவல் சிலந்தி கதை
இந்தத் தலத்தில் ஒரு யானையும் ஒரு சிலந்தியும் இங்குள்ள ஸ்வயம்பு லிங்கத்தை பூஜை செய்து கொண்டு வந்தன. வெயில் படாமல் இருப்பதற்காக சிலந்தி லிங்கத்தின் மேலாக கூடு கட்டும். யானை தினமும் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு தனது துதிக்கையில் காவேரி தீர்த்தத்தை ஏந்தி வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்யும். இதனால் சிலந்தி கட்டிய கூடு கலைந்து விடும். சிலந்தி ஒரு நாள் இதைக் கவனித்துக் கடும் கோபம் கொண்டது. யானையின் துதிக்கையில் அது நுழைந்து கடிக்க ஆரம்பித்தது. யானை வலி பொறுக்காமல் புரண்டு மரணம் அடைந்தது. சிலந்தியும் மாய்ந்தது. இச்சிலந்தியே மறு ஜன்மத்தில் கோட்செங்கச் சோழனாகப் பிறந்தது. கோட்செங்கச் சோழன் யானை உள்ளே வர முடியாதபடி 70 மாடக் கோவில்களைக் கட்டுவித்தான்.
கோட்செங்கச் சோழன் 63 நாயன்மார்களில் ஒருவர்
இவர் அமைத்த மாடக் கோயில்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும் . தேவார ஆசிரியர் மூவர் பாடல்களிலும் அது காணப்படும். அது, திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தில்,
“மையகண் மலைமகள் பாகமாயிருள் கையதோர் கனலெரி கனல வாடுவார் ஐயநன் பொருபுனலம்பர்ச் செம்பியர் செய்யகணிறை செய்த கோயில் சேர்வரே” (செய்ய கணிறை-கோச்செங்கணான்) எனவும்
திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில், “சிலந்தியு மானைக்காவில் திருநிழற் பந்தர் செய்து உலந்தவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே” –
“சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை” – “சிலந்திதனக் கருள் புரிந்த தேவ தேவை” – “சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்” – “புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயினூலாற் புதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் வேய்ந்த சித்தியினா லரசாண்டு சிறப்புச் செய்து சிவகணத்துப் புகப் பெய்தார் திறலான் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளாவன்பு விரவியவா கண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர்மேய பரஞ்சுடரைக் கண்டடியே னுய்ந்தவாறே” எனவும்
சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரத்தில், “சிலந்தி குற்றஞ் செய்யினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்” – “கருவரை போலரக்கன் கயிலைம்மலைக் கீழ்க் கதறப் பொருவிர லாலடர்த் தின்னருள் செய்த உமாபதிதான் திரைபொரு பொன்னிநன் னீர்த்துறைவன் திகழ் செம்பியர்கோன் நரபதி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே” எனவும் வரும்.
இவற்றில் பெரும்பாலனவற்றில் நாயனாரின் பெயரைச் சொல்லாமல் சிலந்தி என்றே தேவார மூவர் குறிப்பிடுகின்றனர்
To be continued…………………..
Tags- கோச்செங்கட் சோழன், மாடக்கோவில்கள்,சிலந்தி,யானை , திருவானைக்கா, அனல் வாதம், புனல் வாதம், முருகன் கப்பல் மாலுமி, திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 25




