ச.நாகராஜன்
பண்டைய தமிழ் இலக்கியங்களான புறநானூறு, பரிபாடல் சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்களில் இசையின் நுணுக்க ங்களையும் இசையின் வலிமையையும் அதனால் நிகழ்ந்த அபாரமான சம்பவங்களையும், ஏராளமாகக் காண முடியும்.புறநானூற்றின் “தீங்கனி இரவமொடு” என்று ஆரம்பிக்கும் பாடல் இசை மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டு புண்பட்ட வீரனுக்கு இதமளித்ததைக் கூறுகிறது.
பெருங்கதை என்னும் காப்பியம் உதயணன் என்ற அரசன் யாழ் வாசிப்பதில் விற்பன்னன் என்பதைக் கூறி இசை பற்றிய பல செய்திகளைத் தெரிவிக்கிறது.உஜ்ஜயினி நகரத்தில் பட்டத்து யானை மதம் பிடித்து ஓட, தன் யாழை வாசித்து யானையின் மதத்தை அடக்கினான் உதயணன்.
அக்பர் சபையில் இருந்த பிரபல இசை விற்பன்னர் தான்ஸேன் தீபக் ராகம் பாடுவதில் வல்லவர். அவர் அதைப் பாடினால் இருக்கும் இடமெல்லாம் ஒளிரும். இதை நேரில் பார்க்க விரும்பிய அக்பர் தான்ஸேனை அதன் வலிமையைக் காண்பிக்குமாறு வற்புறுத்தினார். எவ்வளவோ மறுத்தும் அக்பர் மசியவில்லை. இறுதியில் ஒரு பெரிய ஏரிக்கரையின் முன் மேடையை அமைக்கச் சொன்னார் தான்ஸேன். விவரம் என்னவென்று தெரியாத அக்பரும் அப்படியே மேடையை அமைக்க ஆணையிட்டார். தீபக் ராகத்தை பல்லாயிரக்கணக்கானோர் குழுமி இருக்க அக்பர் முன்னால் உளமுருகப் பாடலானார் தான்ஸேன். என்ன ஆச்சரியம், திடீரென்று ராகத்தின் உச்ச கட்டத்தின் போது அவர் உடல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனே முன்னால் இருந்த ஏரியில் குதித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொண்டார் தான்ஸேன். மிகவும் வியப்படைந்த அக்பர் வருத்தமும் அடைந்தார். நிகழ்ந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு தான்ஸேனை தன் உச்சி மேல் வைத்துப் புகழ்ந்து மிகுந்த மரியாதை செலுத்தி வரலானார். இந்த சம்பவத்தை விரிவாக அக்பர் கால நூல்கள் எடுத்துரைக்கின்றன. இந்தச் சம்பவம் சைக்கிக் என்சைக்ளோபீடியாவிலும் இடம் பெற்றுள்ளது. ஆகவே இது உண்மையே என்பதை வரலாற்று ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன!
தான்ஸேனின் ஒவ்வொரு நரம்பும் நாடியும் இசை மயம். அவர் இறந்தவுடன் நடந்த நிகழ்ச்சி இதை நிரூபிக்கிறது. கர்நாடக இசையில் உள்ள தோடியைப் போல இந்துஸ்தானி இசையிலும் ஒரு ராகம் உண்டு. அதை இசைப்பதில் தான்ஸேனின் புதல்வர்களுள் ஒருவரான பிலாஸ்கான் வல்லவர். தான்ஸேன் இறந்தவுடன் துக்கம் தாளாமல் அவரைச் சுற்றி இருந்தோர் வருந்தி அழ பிலாஸ்கான் புதுவிதமான தோடி ராகம் ஒன்றைப் பாடலானார். இசைக்காகவே வாழ்ந்து இசையே ஓர் உருவமாக வடிவெடுத்திருந்த தான்ஸேன் சடலமாக இருந்த போதும் அந்த ராகம் இசைக்கப்பட்டவுடன் அவரது தலை மட்டும் அந்த இசையைப் பாராட்டும் வண்ணம் ஆடியது. இதைப் பார்த்தோர் அனைவரும் வியந்தனர்; பிரமித்தனர். ஆகவே அந்த ராகத்திற்கு பிலாஸ்கான் தோடி என்று பெயரிடப்பட்டது. இன்றும் பிலாஸ்கானியா தோடி.யைக் கேட்போர் இந்தச் சம்பவத்தை நினைவு கூர்வர்.
சாம வேதமே இசையின் அடிப்படை என்று வேத விற்பன்னர்கள் கூறுவர். ஸ,ரிக,ம,ப, த,நி ஆகிய ஏழு ஸ்வரங்களும் ஆகாயத்திலிருந்து ஒலிக்கக் கேட்டு பூமியில் இசையின் ஆதாரமாக வடிவெடுத்தது என்று மஹாபாரதம் கூறும்.ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு தேவதை இருப்பதாக நமது பண்டைய இசை நூல்கள் கூறுகின்றன.
இசை ஒலியைக் கூர்ந்து நுட்பமாகக் கேட்டு அனுபவித்தவர்கள் தமிழர்கள். சட்ஜம் மயில் அகவுதலையும் ரிஷபம் மாடு கத்துதலையும் காந்தாரம் ஆடு கத்துவதையும் மத்யமம் அன்றில் பறவை கூவுதலையும் பஞ்சமம் குயில் கூவுதலையும் தைவதம் குதிரை கனைப்பதையும் நிஷாதம் யானை பிளிறுவதையும் ஒத்து இருக்கிறது என்று தமிழர்கள் இனம் கண்டனர்.
திருஞானசம்பந்தரின் தேவாரமோ ஏராளமான அபூர்வமான பண்களைக் கொண்டதாக உள்ளது. யாழையும் முரிக்க வல்ல யாழ்மூரிப் பண்ணையும் அவர் இசைத்ததை அவர் வரலாற்றில் விளக்கமாகப் படித்து மகிழலாம். தேவாரச் சுவடிகளில் உள்ள தேவாரம் பண் முறை வைப்புடன் இருப்பதால் தேவாரம் இன்றும் பாரம்பரிய வழியிலேயே இசைக்கப் படுகிறது.
பாரதமெங்கும் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள இசைத் தூண்கள் ஹிந்து நாகரிகத்திற்கே உள்ள தனித்தன்மையுடைய இசைச் சின்னங்களாகத் திகழ்கின்றன!.மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,(வடக்கு கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன் இடப்புறம் திரும்பியவுடன் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ள இவற்றை இன்றும் காணலாம்)தாடிக் கொம்பு, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட பல இடங்களில் இந்த இசைத் தூண்கள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் இசைக்கப்பட்டவுடன் அற்புத ஒலியை எழுப்பும். இந்த அதிசய நாதஸ்வரம் இசையையும் சிற்பத்தையும் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கும் மாபெரும் “இசை-சிற்ப” அதிசயமாகும்.
தாளவகைகள் எண்ணில் அடங்காதவை. இருந்தாலும் உச்சபட்சமாக 175 தாளங்களை நம் முன்னோர் இனம் கண்டனர். ஆனால் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரோ இந்த 175 தாளங்களையும் கையாண்டதோடு அதையும் மீறிப் பல புதிய தாளங்களைத் திருப்புகழில் அமைத்துள்ளது இசையின் ஆழமும் அகலமும் எல்லையற்றது என்பதை விளக்கும் ஒரு செய்தியாக அமைகிறது.
சோழ மன்னனின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அதிசய சம்பவத்தை நாதமுனிகள் வாழ்க்கை வரலாறு விளக்குகிறது.அதைப் பார்ப்போம்.
This is the third part on Music written by Santanam Nagarajan of Bangalore.;already published in Bagya magazine. தொடரும்
********************
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.