ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015
கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.
முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:
த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி
முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி
——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81
பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.
வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும் கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.
முத்து கிடைக்கும் இடங்களைக் குறிப்பிடுகையில் தாம்ரபரணி நதி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளையும் பரளி என்னும் இடத்தையும் இவர் குறிப்பிடுதல் சிறப்புடைத்து.
வராகமிகிரருக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே- இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னர் — சாணக்கியன் எனப்படும் உலக மகா அறிவாளிப் பிராமணன் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலும் ‘பாண்டிய கவாடம்’ என்று பாண்டிய நாட்டு முத்தை சிறப்பிகின்றான்.
முத்து என்ற சொல்லும் பரல் (பேர்ள்) என்ற சொல்லும் சம்ஸ்கிருத வேத கால (முக்தா) இலக்கியங்களிலும், ஆங்கிலத்திலும் இருப்பது தமிழர் பெருமைப்படவேண்டிய விஷயம். பரளி என்ற ஊரின் பெயரில் இருந்து பரல் (முத்து) என்ற சொல் உண்டாகியதா அல்லது முத்து என்ற ரத்தினமே பரளி என்ற பெயரை உண்டாகியதா என்பதையும் ஆராய வேண்டும். பரளி என்ற ஊரும் ஆறும் கேரளத்தில் உள்ளது. லட்சத் தீவுகளில் பரளி என்ற தீவும் உளது.
வேத கால இலக்கியங்களில் வரும் முத்து பற்றிய சத்தான விசயங்களை கீழேயுள்ள எனது ஆய்வுக்கட்டுரையில் கண்டு கொள்க:
Pearls in the Vedas and Tamil Literature- posted by me on 17 May 2014
http://swamiindology.blogspot.co.uk/2014/05/pearls-in-vedas-and-tamil-literature.html
ரத்னங்களின் குணங்கள்
ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:
அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்
—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)
ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும். கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.
என்ன கிடைக்கும்?
ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி
ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81)
இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.
இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.
குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:
1)Lord Krishna’s Diamond in USA? – posted on 23 April 2012
https://tamilandvedas.com/2012/04/23/krishnas-diamond-in-usa/
2)அமுதசுரபி எங்கே? மயில் ஆசனம் எங்கே?
http://swamiindology.blogspot.co.uk/2012/05/blog-post.html
3)Gem Stones in Kalidasa and Tamil Literature
13th February 2012
http://swamiindology.blogspot.co.uk/2012/02/gem-stones-in-kalidasa-tamil-literature.html
அம்மனுக்கு முத்து அங்கி
தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.
அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.
17 வகை முத்து மாலைகளில் சில:
1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)
504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா
108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)
81 வடம் = தேவ சந்தா
64 வடம் = அர்த்த ஹார
54 வடம் = ரஸ்மி கலாப
32 வடம் = குச்ச
20 வடம் = அர்த்த குச்ச
16 வடம் = மாணவக
12 வடம் = அர்த்த மாணவக
எட்டு வடம் = மந்தர
ஐந்து வடம் = ஹார பலக
27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா
இவ்வாறு முத்துக்களின் பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.
எடைகள் பற்றிய வாய்ப்பாடு
ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:
விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:
விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்
சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே
கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:
20 வெள்ளிக் காசு= ஒரு காகினி
4 காகினி = ஒரு பணம்
4 பணம் = ஒரு சதுர்த்தம்
4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்
80 வெள்ளிக்காசு =ஒரு பணம்
20 பணம் = ஒரு கார்ஷா பணம்
8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி
20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்
14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்
முத்து விலை
5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச
16 மாச = 1 சுவர்ண
4 சுவர்ண = ஒரு பல
அரை பல = தரண அல்லது சுவர்ண
4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்
ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்
இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.
அடுத்த கட்டுரையில் நாகரத்தினம் (பாம்பின் தலையில் உள்ள ரத்தினம்), மாணிக்கம், மரகதம் பற்றி வராகமிகிரர் சொல்லுவதைக் காண்போம்.
—தொடரும்……………………………..







You must be logged in to post a comment.