ஆராய்ச்சிக் கட்டுரை எண் : 1981
தேதி : ஜூலை 8, ஆண்டு 2015
லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: காலை10-00
1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள சவுத் இந்தியன் சொஸைட்டி ஏற்பாடு செய்த கோச் டூரில் போர்ன்மவுத், ப்ளிமவுத் கடற்கரைக்குச் செல்லுகையில் ஸ்டோன்ஹெஞ்ச் சென்றோம். 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற திங்கட்கிழமை மீண்டும் சென்றேன். சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை எழுந்தது.முன்னை விடக் கூட்டம் கூடியிருக்கிறது. குறிப்பாக ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர்.
ஸ்டோன்ஹெஞ்ச் என்றால் என்ன?
15 பவுண்ட் நுழைவுக் கட்டணம் செலுத்துவோருக்கு ஒரு துண்டுப் பிரதி கொடுப்பார்கள். அதில் எழுதப்பட்ட விஷயம்:” ஸ்டோன்ஹெஞ்ச் என்பது ஒரு பழங்கால கோவில்; சூரியனுடைய சஞ்சாரத்தின் அடிப்படையில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு, மிகவும் நவீன விஷயங்களை அறிந்தோரால் எழுபப்பட்டது”.
இது லண்டனிலிருந்து 100 மைல் தொலைவில் ஏமிஸ்பரியில் இருக்கிறது. (பிரிட்டனில் பல ஊர்களின் பெயர்கள் “பரி” என்று முடியும். இதுசம்ஸ்கிருதச் சொல்= புரி. அதுவே தமிழில் ஊர் ஆனது. மேலும் பல ஊர்கள் “ஹாம்” என்று முடியும். இது கிராமம் எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் மரூஉ. பர்மிங்ஹாம், ஈஸ்ட் ஹாம், லூயிஸ் ஹாம் என்பர்.)
துண்டுப் பிரதிலுள்ள இரண்டு சொற்களைக் கவனியுங்கள்: கோவில், சூரியனுடைய செலவு/சஞ்சாரம்.
இதனாலும், இந்த இடத்தை “ட்ரூய்ட்ஸ்” என்னும் இனத்தாருடன் தொடர்பு படுத்துவதாலும் இதை இந்துக்களின் சின்னம் என்று நான் எண்ணுகிறேன். முதலில் “ஸ்டோன்ஹெஞ்ச்” பற்றிப் பார்ப்போம். படத்தைப் பாருங்கள். பிரம்மாண்டமான கற்கள் மீது அதே அளவுள்ள கற்களை ஏற்றி வைத்துள்ளனர். இது வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது சில கற்கள் (பாறைகள்) அங்கு இல்லை.
இதில் மர்மம் என்ன வென்றால், எங்கிருந்து இந்த பிரம்மாண்டமான பாறைகள் வந்தன? எப்படி அதைக் கொண்டு வந்தனர்? எதற்காக அதை சிரமப்பட்டு ஏற்றி வைத்தனர்? அதை ஏன் வட்ட வடிவில் அமைத்தனர்? யார் இதைச் செய்தனர்? எப்போது இப்படிச் செய்தனர்? அருகில் மலைகளே இல்லையே!
இதே கேள்விகளை நாம் ராஜ ராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் விஷயத்திலும் எழுப்பினோம். விடைகளைக் கண்டோம். அது போல ஸ்டோன்ஹெஞ்ச் விஷயத்திலும் தடைகள் எழுப்பி விடையும் கண்டுவிட்டனர். எனது கட்டுரை ஸ்டோன்ஹெஞ்சின் பெருமையைப் பேச எழுந்த கட்டுரை இல்லை. இந்துக்களுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று ஆராயும் கட்டுரை.நிற்க.
உலகில் இன்றுவரை சூரியனை வழிபடும் இனம் இந்து இனமே. போன ஆண்டு இராக் நாட்டு யஸீதி என்னும் பழங்குடிகள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதில் அவர்களும் இந்துக்களைப் போலவே மயில், அக்னி, சூரியன் ஆகியவற்றை வழிபடுவதைக் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் குறிப்பிடப் படும் ஐந்துவகை மக்களின் (பஞ்ச ஜனாஹா) ஒரு குழுவான த்ருஹ்யூ குழுவாகும். ரிக் வேதத்தில் வரும் பத்து ராஜா யுத்தத்துக்குப் பின்னர் அவர்கள் எல்லோரும் — அதாவது தோற்றுப்போன ராஜாக்களின் மக்கள், ஐரோப்பாவில் குடியேறினர். யது (யாதவ) என்னும் குலத்தை சேர்ந்த சிலர் அங்கு சென்று யூதர் ஆயினர். த்ருஹ்யூ குலத்தினர் ட்ரூய்ட்ஸ் ஆயினர்.
கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
சூரிய வழிபாடு
உலகில் சூரியனுக்குப் பல இடங்களில் கோவில்கள் உண்டு ஆனால் ஒரிஸ்ஸாவில் கொனாரக், காஷ்மீரில் மார்த்தாண்ட், குஜராத்தில் மதெரா முதலிய 13 சூரியன் கோவில்களில் பூஜைகள் நடைபெற்றன. இவைகளில் பல முஸ்லீம்களின் தாக்குதலால் அழிந்தன; பூஜைகள் நின்றன. ஆயினும் இந்துக்களின் சூரிய வழிபாடு நிற்கவில்லை.
1.பிராமணர்கள் நாள்தோறும் மூன்று முறை வேத மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபடுகின்றனர். அதற்கு த்ரி கால சந்தியா வந்தனம் என்று பெயர்.
2.சூரியனார் கோவில் முதலிய கோவில்களில் இன்றும் வழிபாடு நடக்கிறது. எல்லா தென்னிந்திய கோவில்களிலும் சூரிய, சந்திரர், நவக் கிரஹ சந்நிதிகள் உண்டு.
3.சூரிய சஞ்சாரம்: இது எல்லா ஜாதியினருக்கும் முக்கியமானது. சூரியனின் வடதிசைப் பயணத்தை (உத்தராயண புண்ய காலம்/மகர சங்கராந்தி/ பொங்கல்) எல்லோரும் கொண்டாடுகிறோம். சூரியனின் தென் திசைப் பயணத்தையும் (தட்சிணாயன புண்ய காலம்) எல்லோரும் கொண்டாடுகிறோம். இந்த இரண்டு நேரங்களில் தை, ஆடி அமாவசைகளில் எல்லா ஜாதியினரும் புனித நதி, கடற்கரைகளில் நீத்தாரை நினைந்து நீர்க்கடன் செலுத்துவர். தமிழர்கள் இன்று வரை இதைச் செய்துவருகின்றனர்.
இதே தான் ஸ்டோன்ஹெஞ்ச்சிலும் நடை பெற்றது. பிரிட்டன் என்பது குளிர் நாடாகையால் தட்சிணாயன புண்ய காலத்தை (தென் திசைப் பயணம்) பெரிதாகக் கொண்டாடினர். இப்பொழுதும் மிக நீண்ட பகல் பொழுதுடைய ஜூன் 21–ஆம் தேதி த்ரூய்ட்ஸ் என்ற பெயரில் வெள்ளாடை தரித்த ஒரு குழு விநோதச் சடங்குகளைச் செய்கின்றது.
இதுபற்றி கி.மு நாலாம் நூற்றாண்டில் ஒரு குறிப்பும் கிடைத்திருக்கிறது. பிரிட்டனில் ஓரிடத்தில் வட்ட வடிவக் கற்கோயில் இருப்பதாகவும் அது அப்பலோ கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் எழுதியுள்ளனர். அப்பலோ என்பது விஷ்ணுவைக் குறிக்க, கிரேக்கர்கள், வேறு சில இடங்களில் பயன்படுத்தியுள்ளனர். ஸ்டோன்ஹெஞ்ச் போல ஏவ்ஸ்பரியிலும் வட்டவடிவப் பாறைகள் உள.
ஆகவே, சூரியனுடைய போக்கின் அடிப்படையில், சூரியன் கோவில் கட்டப்பட்டிருப்பதாலும், அங்கே சூரிய வழிபாடு நடைபெற்றதாலும் இது இந்துக்களுடன் –- வேத கால த்ருஹ்யூக்களுடன் — தொடர்புடையது என்பது எனது துணிபு.
நாம் எல்லோரும் சூரிய நமஸ்காரம் என்று மந்திரத்துடன் பயிற்சியும் செய்கிறோம். அழிந்து போன இந்தப் பண்பாட்டை, ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நன்கு பரப்பியமையால் இப்பொழுது புத்துயிர் பெற்றுள்ளது.
இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் படித்து விட்டு லண்டன் வாழ் திருச்சி கல்யாண குருக்கள் தொலைபேசியில் சில விஷயங்களைச் சொன்னார்:
இந்துக் கோவில்கள் பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையாஇ நோக்கியே இருக்கும்.
நவக்கிரஹ சந்நிதிகள் வரும் முன்னரே சூரியன், சந்திரன் சந்நிதிகள் நம் கோவில்களில் உள.
மேலும், ஒரு கோவில் தட்சிணாயணத்திலோ, உத்தராயணத்திலோ கட்டப்பட்டால் அதற்குத் தக முகப்பு, சந்நிதிகளை அமைக்கும் வழக்கமும் உண்டு.
யாக சாலை பூஜைகளில் காலையில் துவங்கும் போது சூரிய பூஜை முதலில் செய்ய்ப்படும்.
இவை அனைத்தும் இன்று வரை நாம் செய்யும் சூரியவழிபாட்டுக்கு சான்று பகரும்.
நூற்றுக் கணக்கான எடையுடைய கற்கள்; பழங்காலக் குடிசைகளின் மாதிரி.
ட்ரூயிட்ஸ் – இந்து தொடர்பு
சில அறிஞர்கள் ஸ்டோன்ஹெஞ்ச் வட்டக் கற்பாறை அமைப்பையும் ட்ரூயிட்ஸ் இனத்தாரையும் தொடர்பு படுத்துவது கால வழூஉ ஆகும் என்பர். ஏனெனில் ஸ்டோன்ஹெஞ்சின் எல்லா அம்சங்களும் கி.மு. 1200 க்கு முந்தியவை. ட்ரூயிட்ஸ் இனக் குழுவோ கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டு முதலே அறியப்பட மக்கள் என்பது அவர்களுடைய வாதம். ஆனால் இதற்கு மறுப்புச் சொல்ல பல வாதங்கள் உள. மோசஸ் என்பவருக்கு இதுவரை வரலாற்று, தொல்பொருட் சான்றுகள் உலகில் கிடைக்கவில்லை. ஆயினும் அவரை அஸ்திவாரமாக வைத்து யூத மதம் என்ற மதமே இருக்கிறது!!! ஆகையால் தொல்பொருட் துறைச் சான்றுகள் இல்லை என்ற பெயரில் ட்ரூயிட்ஸ்களை ஓரம் கட்டுவதில் எந்த நியாயமும் இல்லை. நிற்க.
ட்ரூயிட்ஸ்கள் யார்?
அயர்லாந்து மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நிலப்பரப்புகள் ஒரு காலத்தில் கெல்டிக் (செல்டிக் என்றும் சொல்லுவர்) இனத்தின் கீழ் இருந்தது. இதில் பிராமணர்களைப் போல புரோஹிதர்களாக இருந்தவர்களே ட்ரூயிட்ஸ்கள். இவர்களைப் பற்றி ரோமானியர்களும், கிரேக்கர்களும் நிறைய எழுதிவைத்துள்ளனர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.முதல் நூற்றாண்டு வரையிருந்த அலெக்ஸாண்டர் பாலிஹிஸ்டர், தியோதரஸ் சிகுலஸ், ஜூலியஸ் சீசர், மூத்த பிளினி ஆகியோர் எழுதிய குறிப்புகளில் இருந்து நாம் அறிவது யாதெனின்:
1.இவர்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையோர்.
2.ஆத்மா நிரந்தரமானது; அழிக்கவொணாதது என்பர்
3.கடவுளருக்கு உயிர்ப் பலி, மனித பலி கொடுப்பர்
4.ஓக் மரங்களையும் மிசல்டோ மூலிகையயும் புனிதமாகக் கருதுவர்.
மேற்கூறிய அனைத்தும் வேதங்களில் உள்ளன. புருஷமேத யக்ஞம் என்னும் நரபலி சிந்து சமவெளி முத்திரையில் இருப்பது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே தனிக் கட்டுரை வரைந்துள்ளேன். ஆயினும் நாம் மாயன் நாகரீகம் போலவோ மத்தியக் கிழக்கு போலவோ இதை பெருமளவு நடத்தியமைக்கு ஆதாரம் இல்லை .பஹ்ரைன் முதலிய மத்தியக் கிழக்கு நாடுகளில் பீனீஷியர்கள் முதலியோர் லட்சக்கணக்கில் குழந்தைகளைப் பலிகொடுத்ததையும், பல்லாயிரக் கணக்கில் குழந்தைகள் கல்லறைகள் கண்டு பிடிக்கப்படுவருவது குறித்தும் வேறு ஒரு கட்டுரையில் தந்து விட்டேன்.
ஆக மேற்கூறிய சில அம்சங்களில் ட்ரூயிட்ஸ் இனம் இந்துக்களுடன் தொடர்புடைத்தே.
கடைசியாக ட்ரூயிட்ஸ் என்ற சொல்லின் பொருளும் இதை இந்துக்களுடன் தொடர்பு படுத்துகிறது. சிலர் இந்தச் சொல்லை ரிஷிகள் (மந்த்ர த்ருஷ்டா= ட்ரூயிட்ஸ்) என்பர். இன்னும் சிலர் தருவை (மரத்தை) வழிபட்டவர்கள் (தரு=ட்ரீ=டரு=ட்ரூயிட்ஸ்=மரம்) என்பர். ஆக த்ருஷ்ட (பார்வை), தரு (மரம்) என்பன எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள். இன்னும் சிலர் இது ‘ரென்’ இனப் பறவை, அல்லது மந்திரவாதி என்பர்.
ஆகவே ட்ரூயிட்ஸுக்கும் ஸ்டோன்ஹெஞ்சுக்கும் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்துக்களுடன் அவர்களுக்குள்ள தொடர்பு அவர்தம் புனர் ஜன்மம், ஆத்மாவின் அழியாத் தன்மை ஆகிய கொள்கையாலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஜூலியஸ் சீசர் முதலியோர் இவர்களை ‘பிதகோரியன்’ என்பர். அதாவது கிரேக்க நாட்டு தத்துவவித்தகண் பிதகோரஸின் கொள்கைகலைப் பின்பற்றுபவர்கள் என்பது பொருள். பிதகோரஸ், இந்திய உபநிஷதக் கொள்கைகளைக் கற்று கிரேக்க நாட்டில் பரப்பியதால் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாடில் , அலெக்ஸாண்டர் ஆகியோர் இந்து மதத்தில் பேரார்வம் செலுத்தியதை முன்னர் வேறொரு கட்டுரையில் கண்டதால் விரிவஞ்சி விடுக்கிறேன்.
படங்கள் திங்கட்கிழமை என்னால் எடுக்கப்பட்டவை; வெள்ளாடைதரித்தோர் படம் என்னுடையதன்று.










Parameswaraiyer Ambikapathy
/ July 8, 2015அன்பின் ஸ்வாமிநாதன் அவர்களுக்கு வணக்கம்!
ஸ்டோன் ஹென்ஜ் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளது.
அண்மையில் பேரு தேசத்தின் இன்கா இனத்தவரின் புராதன கட்டிடங்களைப் பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது (சென்ற வாரம் இந்த நாலாயிரத்து முன்னூறு மீட்டர் உயரமான மலையில் ஏறிவிட்டு வந்துள்ளேன்) — அவர்களும் பஞ்சபூத ஆராதனை செய்ததாக அறிந்து இவர்களும் இந்து கலாசாரத்தைச் சேர்ந்தவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தாங்கள் இதுபற்றி முன்னர் எழுதியுள்ளீர்களா? தவு செய்து அறியாதத தரவும்…தங்கள் அறிவுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.அன்புடன்அம்பிடாக்டர் ப அம்பிகாபதி
Date: Wed, 8 Jul 2015 09:00:04 +0000
To: aonedoctor@hotmail.com
Tamil and Vedas
/ July 9, 2015Thanks for your comment.
Yes I have written about it in Tamil and English.
Following are some of he articles; i have touched this subject in my articles on Egypt and Gondwana=Khandava vana
1.Amazing similarities between Mayas and Hindu Nagas, posted on April 28, 2012
2.Part 2 of the same article posted on 1 May 2012
3.Are Mayas Indian Nagas? posted on 28th April 2012.
I have listed 68 similarities.
Please read them.
If you have found anything new, please add them here in the comment column.