Article No. 2080
Written by London swaminathan
Date : 18 August 2015
Time uploaded in London :– காலை 6-18
ஒரு நாள் ஸ்ரீ வல்லபாசாரியார் தம் சிஷ்யர் தாமோதரதாசர் பின்தொடரக் காட்டுப் பிரதேசத்தில் சென்று கொண்டிருந்தார். வழியில் தென்பட்ட ஒரு கோரக் காட்சி அவரை மேலே செல்லவிடவில்லை. இறக்கும் தருவாயில் ஒரு மலைப் பாம்பு செயலற்றுக் கிடந்தது. அதன் உடலை ஏராளமான எறும்புகள் மொய்த்துக் கொண்டு கடித்தன.கொடிய சித்திர வதை! மலைப் பாம்பு வேதனை தாளாமல் உடலை நெளித்து நெளித்துத் துன்புறுவது கண்ணராவியாக இருந்தது. இரு மனிதர் கண்களிலும் நீர் ததும்பியது.
ஸ்ரீ வல்லபாசார்யார் பெருமூச்சுடன், கையிலிருந்த கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அந்தப் பாம்பின் மேல் தெளித்தார். அதற்கு நற்கதி கிடைக்கட்டும் என்று பரமனைப் பிரார்த்தித்தார். எறும்புகள் உடனே விலகிவிட்டன. மலைப் பாம்பும் நிம்மதியாக மரணத்தை வரவேற்றது. இருவரும் மேலே வழிநடந்தார்கள்.
ஸ்ரீ ஆச்சார்யரின் மனக் கலக்கம் நீங்காததைக் கண்ட சிஷ்யர் பணிவோடு காரணத்தை வினவவே, குரு பதில் சொன்னார்: “இந்த மலைப் பாம்பு போன பிறவியில் பிருந்தாவனத்தில் கண்ண பிரானின் திருக்கோயில் ‘மஹந்த்’ (தலைமை அர்ச்சகர்). இவனை நம்பி ஏராளமான சிஷ்யர்கள் அறப்பணிக்காக நிறைய பொருளுதவி செய்தார்கள். அவ்வளவையும் இந்த மனிதன் சுய சுக போகத்துக்கென்றே செலவு செய்துவிட்டு மடிந்தான். இந்தப் பிறவியில் அந்த சிஷ்யர்கள் எறும்புகளாக வந்து பழிதீர்த்துக் கொள்கிறார்கள். நிலைதவறிய குருவை எண்ணிப் பார்க்கிறேன். மனக் கலக்கம் மாறவில்லை.”
சிஷ்யரின் கோரிக்கைப் படி சிறந்த குரு யார் என்பதை விளக்கினார் வல்லபர்: “சிரத்தையோடு தினமும் தெய்வத்துக்கு எவர் திருத் தொண்டு புரிகிறாரோ, செருக்கு, சினம், வேட்கை ஆகியவை சிறிதும் இல்லாமல் எவர் வாழ்கிறாரோ, பகவானின் சொரூபத்தை உணர்ந்தவர் எவரோ, அத்தகைய அறிவாளியை மெய்யறிவு பெற விரும்பும் எவரும் குருவாகக் கொள்ளலாம்.”
(தமிழ்:எஸ். ராஜன், ஜூலை, 1964 மஞ்சரி)
You must be logged in to post a comment.