
Written by London swaminathan
Date: 16 February 2016
Post No. 2546
Time uploaded in London :– 9-43 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)
ஒரு மனிதனுக்கு ஒரு மாகாண கவர்னர், தவறுதலாக, அநியாயமாக மரணதண்டனை கொடுத்துவிட்டார். பாரசீக நாட்டில் (தற்போது ஈரான்) இது நடந்தது. மரண தண்டனைக் கைதிக்கு நம்பிக்கை போகவில்லை. இறுதிவரை முயன்று பார்ப்போம். நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா!
அந்த ஊரில் மரண தண்டனைக் கைதிகளை ஒரு தூணில் கட்டிவைத்து, தலையை ஒரே வெட்டாக வெட்டி விடுவர். நேரம் நெருங்கியது. கொலை வாளுடன் வந்தான் தண்டனையை நிறைவேற்றும் வெட்டியான். அப்போது, மரண தண்டனைக் கைதி ஒரு வேண்டுகோள் விடுத்தான். எனக்கு இந்தத் தூணில் மரணம் வேண்டாம். அடுத்த தூணில் கட்டிவைத்து என்னை வெட்டு என்றான்.
வெட்டியானுக்கு ஒரே சிரிப்பு. “ஏனப்பா? சாகப் போகிறவனுக்கு தலைக்கு மேலே, வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? உனக்கு எதற்கு அடுத்த தூண்?” என்று நகைத்தான். கைதியோ மீண்டும் மீண்டும் வேண்டினான். “சரி, போ! உன் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்” என்று அடுத்த தூணுக்கு அழைத்துச் சென்று கட்டிக் கொண்டிருந்தான். இதற்குள் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அந்த நாட்டு அரசன், அந்தப் பக்கமாகச் செல்லுகையில் இது என்ன பெருங்கூட்டம்? எனக்குத் தெரியாமல் எந்நாட்டில் என்ன நடக்கிறது? என்றான். உடனே எல்லோரும் கைதியின் விநோத வேண்டுகோளைத் தெரிவித்தனர். அரசனுக்கும் ஆச்சரியம். கூட்டத்தை விலக்கி, மரண தண்டனைக் கைதியுடன் பேசினான். அவன், தான் நிரபராதி என்றும், தனக்கு மரணதண்டனை அளித்தது தவறு என்றும் அழகாக எடுத்துரைத்தான். உடனே அவனை விடுதலை செய்ய அரசன் உத்தரவிட்டான்.
நம்பிக்கையை இழக்கக்கூடாது;முயற்சி திருவினை ஆக்கும்.
Xxx

சண்டை பிறந்தால் தீர்வு பிறக்கும்!
ஒரு ஊரில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். ஒரு குடியானவன், பக்கத்து ஊரில் ஒரு பசு மாட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதைப் பார்த்தான். இந்த மாட்டை இன்று இரவு திருடி விடுவோம் என்று அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான். போகும் வழியில் ஒரு ஆவியும் (பேய்) அவனைப் பின் தொடர்ந்தது. அது, அந்தக் குடியானவனைக் கொல்ல வேண்டுமென்று திட்டமிட்டது.
அந்தக் குடியனவனைப் பின் தொடரும் திருடனிடம் சென்று தனது திட்டத்தை தெரிவித்தது. திருடனுக்கு ஏக சந்தோசம். நமக்கு ஒரு துணை கிடைத்தது என்று ஜாலியாகப் பேசிக்கொண்டே சென்றான்.
குடியானவனின் வீடும் வந்தது. அவன் மாட்டைக் கட்டிவிட்டு, மனைவி மக்களைச் சந்தித்து அளவளாவினான். திருடனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். முதலில் பேயை (ஆவி) அனுப்பி, குடியானவனைக் கொல்லச் செய்தால் வீட்டிலுள்ள எல்லோரும் அழுது புலம்புவார்கள். எல்லோரும் விழித்துக் கொண்டால் பின்னர் மாடு திருடும் வேலை நடக்காது என்று எண்ணி, பேயே! நீ உன் திட்டத்தை எனக்குப் பின்னால் நிறைவேற்று; கொஞ்சம் பொறு — என்றான்.
பேய்க்கும் ஒரு சந்தேகம். இந்தத் திருடன் போய் முதலில் பசுவைத் திருடினால் அது, “மா, மே” என்று கத்தும். எல்லோரும் விழித்துக் கொண்டால் என் பாடு, திண்டாட்டமாகிவிடும் என்று எண்ணி, “ஏ, திருடா, கொஞ்சம் பொறு. நான் போய் என் வேலையை முதலில் முடிக்கிறேன்” என்றது.
இருவரும் ஒருவரை ஒருவர் வலியுறுத்தவே, அது வாக்குவாதமாகி மாறி கைகலப்பில் முடிந்தது. வீட்டிலுள்ள எல்லோரும் விழித்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டனர். ஊரே கூடிவிட்டது. திருடனும் பேயும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவே, ஊர் மக்கள் அனைவரும் கூடி, அவர்களை ஓட ஓட விரட்டினர். குடியானவனுக்கு மிக்க மகிழ்ச்சி.
–சுபம்–
You must be logged in to post a comment.