
விபரீத விமரிசனம்
சுப்புடுவுக்கே சுப்புடு!
Written by S NAGARAJAN
Date: 5 April 2016
Post No. 2695
Time uploaded in London :– 7-58 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
ச.நாகராஜன்

உலகத்திலேயே சுலபமான வேலை எது என்று கேட்டால் குற்றம் குறைகளைச் சொல்லுவது தான்!
இதற்கு நவீன காலப் பெயர் விமரிசனம்!
பத்து வருடங்களுக்கு முன்னர் சுப்புடுவை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
மனுஷனைக் கண்டாலே சங்கீத வித்வான்களுக்கு அலர்ஜி!
கிழி கிழி என்று கிழித்து விடுவார்.
இந்தக் ‘கிழிப்பைப் போடப் பத்திரிகைகள் அணி வகுத்துத் தயாராய் நிற்கும்.
எதிர்பாராத விதமாக ஓஹோ என்று சிலருக்குப் புகழ் மாலையும் சூட்டப்படும். அன்று அவர்கள் சாதகம் செய்தார்களோ இல்லையோ சாமியைக் கும்பிட்டார்களோ இல்லையோ நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும் அல்லது சுப்புடுவின் மூடைக் கெடுக்காமலாவது இருந்திருக்க வேண்டும்.
ஆனால் சுப்புடுவுக்கே சுப்புடு இருந்திருக்கிறார்கள், காலம் காலமாக!
பட்டென்று சம்யோசிதமாக விமரிசனம் செய்வது, பதிலடி கொடுப்பது, சாமர்த்தியமாக நிலைமையைக் கையாளுவது, நையாண்டி செய்யும் அதே சமயம் பிறர் மனதைப் புண்படுத்தாமல் இருப்பது என்று இப்படி பல ரகங்களிலும் பெரும் மேதைகள், சாமர்த்தியசாலிகள் இருந்திருக்கிறார்கள்.
சில உதாரணங்களை மட்டும் பார்த்து மகிழலாம்.
ரிச்சர்ட் அட்லிங்டன் என்று ஒருவர். சுப்புடுவுக்கே சுப்புடு இவர்!
விமரிசனங்களை அள்ளித் தெளிப்பார். ஜனங்கள் ரசிப்பார்கள். விமரிசனத்திற்குள்ளான்வர்கள் நெளிவார்கள்.
ஒரு சமயம் இவரிடம் ஒரு கவிதை விமரிசனத்திற்காக வந்தது.
வந்த கவிதை இது தான்:
A B C D E F
G H I J K L
M N O P Q R
S T U V W X
Y Z
பார்த்தார் மனிதர். இதற்கு என்ன விமரிசனம் செய்வது?
இப்படி எழுதினார் விமரிசனத்தை:
1 2 3 4 5
6 7 8 9 10
“I still think that was the most snappy review I ever wrote; but unfortunately, “The Times’ refused to print it” என்று எழுதியிருக்கிறார் அவர்..
பிரபல பத்திரிகையான டைம்ஸ் இதழே இதைப் பிரசுரிக்க தயங்கி விட்டது என்றால் அது எப்படிப்பட்ட விமரிசனம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்!
ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் வெளி வந்த விம்ரிசனம் பற்றிய துணுக்கு இது:
ஒரு புத்தகத்தை விமரிசனம் செய்தவர் எழுதிய விமரிசனம் இது:
“இந்தப் புத்தகத்தில் நான் ரசித்த ஒரே அம்சம் இதன் அகலமான மார்ஜின் தான்!”
என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ள அது பயன் படுமே! இந்தப் புத்தகத்தில் என்பதன் உண்மையான அர்த்தம் இந்த 270 பக்க அபத்த புத்தகத்தில் என்பது தான்!
என்ன இந்தக் கட்டுரையை சுப்புடு பாணியில் விமரிசிக்க ஆரம்பிக்கிறீர்களா! ஹி..ஹி. வேண்டாமே!
************
R.Nanjappa (@Nanjundasarma)
/ April 5, 2016விமர்சனம் உயர்ந்தகலை. ஆனால் அதை நளினமாகக் கையாளவேண்டும். விமர்சனம் செய்பவர்களுக்கு நெஞ்சில் நேர்மையும், வாக்கில் சுத்தமும் இருக்கவேண்டும். விமர்சனத்திற்கு உள்ளானவர்கள் தங்கள் குறை-நிறைகளைத் தெரிந்துகொள்ள உதவவேண்டும்:. பிறர் விஷயஞானத்தைப் பெறவேண்டும். யாரையும் புண்படுத்துவது விமர்சனமாகாது.
‘கல்கி’யின் விமர்சனங்களில் இதை நாம் காண்கிறோம். அவருக்குப்பின் தமிழில் யாரும் அப்படி விமர்சனம் எழுதவில்லை.
குமுதம் பத்திரிகையில் 50களில் சினிமா விமர்சனம் கச்சிதமாக இருக்கும். 1959ல் சாந்தாராமின் “ஸ்த்ரீ ” கலர் படம் வெளிவந்தது. 1943ல் அவரே அதே கதையை சகுந்தலையாக எடுத்திருந்தார். அவரே துஷ்யந்தனாகவும் நடித்தார்! அந்தக் கதையின் மீது அவருக்கு அப்படிப்பட்ட ஈடுபாடு! இதைக் குறிப்பிட்ட குமுதம், கடைசியில் ” அதே புராதனக் கொட்டாவி; ஆனால் உயந்த வண்ணம் தீட்டிய கொட்டாவி” என்று எழுதியது!
1958ல் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்” ரிலீசானது. அதற்குமுன் தஞ்சை ராமையதாஸ் எடுத்த சொந்தப்படம் வந்தது. இதற்கு விமர்சனம் எழுதிய குமுதம் “சத்து உண்டு:இனிமை இல்லை” என்று எழுதியது. வஞ்சிக்கோட்டை வாலிபனுக்கு எழுதும்போது. “வாலிபன் விஷயத்தில் இது தலைகீழ்ப்பாடம்” என்று எழுதியது! “பத்தினித் தெய்வம்” படத்திற்கு எழுதும்போது, “ஒவ்வோரிடத்தில் இசையில் பசையும் உண்டு” என்று எழுதியது! இத்தனை வருஷங்களாகியும் மறக்கமுடியாத சொல்லாட்சி!
சுப்புடு சார் சாடியதுதான் அதிகம்! அவர் எழுதியதை விமர்சனமாக ஏற்றுக்கொள்வது சற்று சிரமம்தான்!