
Written BY S NAGARAJAN
Date: 22 April 2016
Post No. 2751
Time uploaded in London :– 15-47
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
100 வயது வாழ்ந்த பெரியோர்
(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது120 வயது வாழ்ந்த புத்த துறவி ஸூ யுன் (Xu Yun or Hsu Yun) பற்றிய இரண்டாவது கட்டுரை இது.)
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -2
ச.நாகராஜன்
பொதுவாக தனது நீண்ட நெடும் வாழ்க்கையில் காலால் நடந்தே அனைத்து தலங்களுக்கும் சென்றிருக்கிறார் ஸூ யுன் (Xu Yun). நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் மட்டும் படகில் ஏறிப் பயணம் செய்வார்.
அத்துடன் அவருடைய அதிசயமான ஒரு பழக்கம் ஒவ்வொரு மூன்று அடிகளிலும் புத்த மதத்தின் த்ரி ரத்தினங்களுக்கு – மூன்று ரத்தினங்களுக்கு – நமஸ்காரம் செய்வார். புத்தமதத்தின் த்ரி ரத்தினங்கள் என்று போற்றப்படுபவை புத்தர், தர்மா, சங்கம்!
இப்படி வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மூன்று அடிக்கும் த்ரி ரத்தின நமஸ்காரம் செய்து சென்றதால் இவரது நடைப்பயணம் சற்று மெதுவாகவே நடந்திருக்கும் என்பதை ஊகிக்கலாம்.
ஏராளமானோர் இப்படி அதிசயிக்கத்தக்க விதத்தில் மூன்று அடிக்கு நமஸ்காரம் செய்வதைப் பற்றிக் கேட்டு வியப்பர். அவரைப் பற்றிய மரியாதை கூடி பயபக்தியும் அதிகமாகும் – கம்யூனிஸ்ட் கயவர்களைத் தவிர!
தனது வயிற்று உணவுக்கு இவர் பின்பற்றியது பை ஸாங் ஹுய்–ஹாய் (Master Bai zhang Hu-hai) என்பவரது வழியை. ஆங்காங்கே உள்ள ஆலயங்கள் மடாலயங்களுக்கு உரிய நிலத்தில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் பயிரை வைத்து வாழ்க்கையை நடத்துவது இவர் பாணி!
‘வேலை செய்யாத ஒரு நாள், உணவு அருந்தாத ஒரு நாள்’ என்பது இவரது கொள்கை. ஆகவே வாழ்நாள் முழுவதும் வேலை செய்து கொண்டே இருந்தார்.
ஸூ யுன் 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி க்வான் ஜோ (Quanzhou) என்ற இடத்தில் பிறந்தார். (1959ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி மறைந்தார்.)
அவரது தாயார் பிரசவ வேதனையால் துடித்து கடைசியில் ஒரு ‘பையை’ கருப்பையிலிருந்து வெளியேற்றினார்.
ஆசை ஆசையாக ஒரு மகன் பிறப்பான் என்று எண்ணியிருந்த அந்தத் தாய் தன் வயிற்றிலிருந்து ஒரு பை வெளியானதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
இன்னொரு குழந்தை தனக்கு பிறக்கவே முடியாது என்ற மனவிரக்தியில் ஆழ்ந்தார்.மயக்கமுற்றார்.
இந்த மனவேதனையில் உடனடியாக அவர் மரணம் சம்பவித்தது.
அடுத்த நாள் மருந்துகள் விற்கும் வயதான முதியவர் நடந்ததைக் கேட்டுப் பையைக் கீறினார்.
அதற்குள்ளிருந்து வந்தார் ஸூ யுன். இப்படி அவரது பிறப்பே அதிசயமாக அமைந்தது! குழந்தையை பாட்டி கண்காணித்து வளர்த்தார். மாமாவின் ஆதரவில் குழந்தை வளர்ந்து 11 வயது ஆனது.
பாட்டிக்கு ஒரு ஆசை டியான் மற்றும் டான் (Tian and Tan families) குடும்பங்களிலிருந்து குடும்பத்திற்கு ஒன்றாக இரு பெண்களைத் தன் பேரன் மணம் செய்து கொள்ள வேண்டும் என்று. ஆனால் அந்த ஆண்டு குளிர் காலத்தில் பாட்டி காலமானார்.
13ஆம் வயதில் வீட்டிலிருந்த புத்த மத நூல்களை ஸூ யுன் படிக்க ஆரம்பித்தார். தன் மாமாவுடன் நான் யுயே (Nan Yuye)என்ற இடத்திற்குச் சென்று பல புத்த மடாலயங்களுக்குச் சென்றார்.
பூர்வ ஜென்ம நல்வினையின் காரணமாக அவருக்கு வீடு திரும்ப மனம் இல்லாமல் போனது.
ஆனால் மாமாவோ கூட இருந்து அவரை வீடு திரும்ப வற்புறுத்தினார். வேறு வழியில்லாமல் வீடு வந்தார் ஸூ யுன்!
–தொடரும்
Raghavan Narayanasamy
/ April 23, 2016Dear sir, there is a mistake .the year of birth must be1840.