
Article Written S NAGARAJAN
Date: 22 July 2016
Post No. 2993
Time uploaded in London :– 5-58 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சுகமான கல்யாணி ராகங்களின் ராணி!
ச.நாகராஜன்
மனம் எரிச்சலாக இருக்கிறது. அனைவரின் மீதும் இனம் தெரியாத ஒரு கோபம். இது ஒரு வகை.
மனம் மிகவும் அல்பமாக இருக்கிறது. ஒரு பெருந்தன்மையான கம்பீர மனோபாவம் இல்லை. இது இன்னொரு ரகம்.
உற்சாகமே இல்லை; ஏனோ தானோவென்று எதையும் செய்யும் ஒரு மனோபாவமான நிலை! இப்படி ஒரு ரகம்.

ஆன்ந்த நிலையையே அறிய முடியவில்லை. மனம் இனம் தெரியாத ஒரு சோகமான மனநிலையில் இருக்கிறது.
சுற்றுப்புறச் சூழ்நிலையில் இருக்கும் இயற்கை அனுபவத்தை அனுபவிக்க்க் கொடுத்து வைக்கவில்லை. இப்படி இன்னொரு ரகம்.
இந்த அனைத்து ரக மனிதர்களும் அதிகம் செலவில்லாமல் குணமடையக் கூடிய ஒரு வழி உண்டு.
கல்யாணி ராகத்தில் உள்ள பாடல்களைக் கேட்க வேண்டியது தான்!
யூ டியூபில் சென்றால் இசை ராணி எம்.எஸ். சுப்புலெட்சுமி, மஹாராஜபுரம் சந்தானம், பாலமுரளி கிருஷ்ணா என்று எத்தனை அருமையான பாட்கர்களின் கல்யாணி ராகப் பாடல்களைக் கேட்க முடியும்!
கௌசிகி சக்ரவ்ர்த்தியின் கல்யாணி ராக பஜனைப் பாடல் வேறு இருக்கிறதே!!
இரவில் எதைக் கேட்டாலும் மறு நாள் காலை எழுந்திருக்கும் போது உலகமே ஒரே ஆனந்தம்.
பழைய மோசமான மனம் எங்கே போயிற்று. பெருந்தனமை, கம்பீரம், உற்சாகம், பக்தி, அன்பு அனைத்தையும் மனம் எப்படி ஒரே சமயத்தில் கொண்டது?
கல்யாணி ராகத்தின் மஹிமையே மஹிமை!
சுகமான கல்யாணி, ராகங்களின் ராணி!
65வது மேளகர்த்தா ராகம் இது.
ஏழு ஸ்வரங்களும் முறைப்படி கொண்ட ராகம். ஆகவே இது ஒரு சம்பூர்ண ராகம்!
காதல், பக்தி போன்ற நுட்பமான உணர்வுகளை முழு வீச்சில் காண்பிக்க வல்ல அற்புதமான ராகம் இது.
தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் கிருதிகள் இந்த ராகத்தில் பல அமைந்துள்ளன.
நிதி சால சுகமா? – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
அம்மா ராவம்மா! – ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்
ஹிமாத்ரி சுதே – ஸ்ரீ ஸ்யாமா சாஸ்திரிகள்
கமலாம்பா பஜரே – ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்
உன்னை அல்லால் – பாபநாசம் சிவன்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பட்டியல் நீளும்.
தமிழ் திரைப்படப் பாடல்களில் இதை எடுத்து இசையமைக்காத இசை அமைப்பாளர்களே இல்லை எனலாம்.

சில பாடல்கள் :
ஜனனீ ஜனனீ – தாய் மூகாம்பிகை – இளையராஜா
சிந்தனை செய் மனமே – அம்பிகாபதி
அமுதும் தேனும் எதற்கு – தை பிறந்தால் வழி பிறக்கும்
மன்னவன் வந்தானடி தோழி – திருவருட்செலவர்
வெள்ளைப்புறா ஒன்று – புதுக்கவிதை
இப்படி பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இதன் இந்தி வடிவத்தில் அருமையான பாடல்கள் ஏராளம் உள்ளன.
இவற்றை நெட்டிலும் பிடிக்கலாம்; இசை வடிவங்களிலும் வாங்கலாம்.
செலவு சிறிது; பயனோ பெரிது!
ராகங்களின் ராணிக்கு இன்னும் ஏராளமான பெருமைகள் உண்டு.
பல புத்தகங்களே வந்து விட்டன!
கல்யாணி என்றால் அனைத்து நலன்களையும் அளிப்பவள் என்று பொருள்!
உண்மை தான்!!
***********
R.Nanjappa (@Nanjundasarma)
/ July 22, 2016பயனுள்ள விஷயங்கள் சொல்லும் கட்டுரை.
பொதுவாக ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு முக்கிய “பாவம்” ( Bhava )உண்டு என்பார்கள்.கல்யாணி போன்ற ஸம்பூர்ண ராகங்கள் .பலவித பாவங்களை வெளிப்படுத்தும். இதற்கு பாடகரின் குரல், அல்லது வாத்யத்தின் “tonal quality ” முக்கியமானது. இதற்கும் மேலாக, சாஹித்யத்தின் பங்கு. ராக ‘பாவம்’, ஸாஹித்ய ‘பாவம்’. பாடகரின் குரல் வளம் ஆகியவை ஒன்று சேரும்போதுதான் நாம் அந்த ராகத்தின் முழு ஸ்வரூபத்தையும், அது வெளிப்படுத்தும் உணர்ச்சிப் பெருக்கையும் அனுபவிக்க முடியும்.
ஸ்ரீ தீக்ஷிதரின் க்ருதிகள் ராக ‘பாவத்தை” முக்கியமாகக் கொண்டவை. ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள் ராகத்துடன், தன் இறைஅனுபவத்தின் பல கூறுகளையும், நிலைகளையும் (mystical experiences and moods ) குழைத்து ஸாஹித்யமாக்கித் தந்திருக்கிறார். அதனால் அவர் க்ருதிகளில் ஸாஹித்ய ‘பாவம் ‘ மேலோங்கி நிற்கிறது! இதுவே நம்மை ஈர்க்கிறது! ஸ்வாமிகள் கல்யாணி ராகத்தில் 18 கீர்த்தனைகள் அருளியுள்ளார். ஓவ்வொன்றும் ஒவ்வொரு வித ‘பாவ’த்தை வெளிப்படுத்துகின்றன. இது ஒர் அற்புதம். ஆனால் பாடகர்கள் பொருள் உணர்ந்தும், ராக ‘பாவ’த்தில் ஊறியும் இருக்கவேண்டும்.
கச்சேரி ஃபேஷன் வந்துவிட்டபிறகு இப்போது யாரும் நிதானித்து, அனுபவித்துப் பாடுவதில்லை. தானே அனுபவிக்கவிட்டால், அதைப் பிறருக்கு எப்படி அளிப்பது? ” தன சௌக்யமு தா நெருகக யொருலகு தகுபோதன ஸுகமா ” என்கிறார் ஸ்ரீ த்யாகராஜர். ( ராமா நீயெட ). இப்போது பல வித்வான்களும் புத்தகம்/ நோட்டைப் பார்த்தே படிக்கிறார்கள். யாரும் எந்த ராகத்திலும் specialise செய்வதாகத் தெரியவில்லை. பின், ஸாஹித்ய ‘பாவ’மோ, ராக ‘பாவ’மோ எங்கிருந்து வரும்? ஏதோ இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில விதிவிலக்குகள் இல்லாமலில்லை.
பழைய சினிமா பாடல்களில், எம்.எல்.வி. பாடிய ” கொஞ்சும் புறாவே ” கல்யாணி ராகத்தில் அமைந்த மிக அருமையான பாடல். இதில் வயலின் பங்கும் அபாரம். இசை சித்தூர் வி, நாகையா. விஷயம் தெரிந்தவர் !
Santhanam Nagarajan
/ July 22, 2016அடடா! அற்புதமான விளக்கம்! உங்களின் விளக்கத்தைப் பார்த்தவுடன் ரமண மஹரிஷியின் வாழ்வில் நடந்த ஒரு சிறிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. வீணை வாசிக்கும் ஒரு பெண்மணி ரமண மஹரிஷியிடம் வந்தார். “தியாகராஜ ஸ்வாமிகளும் மற்ற சங்கீதம் பாடிய பெரியோர்களும் பாடித் தானே மோட்சம் பெற்றார்கள். நானும் அவர்களைப் போல சங்கீதம் பாடி மோட்சத்தை அடைய இயலுமா?” என்று கேட்டார் அவர். அதற்கு மஹரிஷி, “தியாகராஜரும் மற்ற பெரியோரும் பாடிப் பெறவில்லை. பெற்றதைப் பாடினார்கள். அதனால் தான் அவர்களின் கீர்த்தனைகள் இன்னும் உயிருள்ளதாக இருக்கின்றனர்: என்றார்.என்ன அற்புதமான் பதில்! இசையில் உள்ளம் உருகி லயித்துப் பாடினால் அனைத்து ராகங்களின் நல்ன்களையும் பாடகர் தர முடியும். நஞ்சப்பா அவர்களுக்கு ‘வழக்கம் போல’ எனது நன்றி! – நாகராஜன்