வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல் (Post No.3146)

hanuman-bomai

Written by london swaminathan

Date: 12 September 2016

Time uploaded in London: 6-27 AM

Post No.3146

Pictures are taken from various sources; thanks.

 

 

கம்பன் போகிற போக்கில் சில புதுத் தகவல்களை உதிர்த்துவிட்டுப் போவான்; அத்தனையும் முத்துக்கள்; வைரங்கள்; அவைகளைச் சேகரித்துப் பாதுகாப்பதும், படித்து சுவைத்து ருசிப்பதும் நம் கைகளில் உள்ளது.

 

அனுமனிடம், அவன் தந்தையான வாயு பகவான் இரண்டு முக்கிய விஷயங்களைச் சொல்லுகிறான். அதை அனுமன், சுக்ரீவனிடம் சொல்லி ராமனை நம்புங்கள் என்கிறான். அப்படியும் நம்ப முடியாவிட்டால் ராமனுக்கு ஒரு டெஸ்ட் TEST (குட்டித் தேர்வு) வைக்கலாம் என்கிறான். ஏழு மராமரங்களில் ஒன்றை அவனுடைய அம்புகளால் துளைக்கச் செய்வோம் என்கிறான்.

 

இதோ வாயு பகவான் சொன்ன ரகசியம்:-

 

 

என்னை ஈன்றவன் இவ்வுலகு யாவையும் ஈன்றான்

தன்னை ஈன்றவர்க்கு அடிமை செய் தவம் உனக்கு அஃதே

உன்னை ஈன்ற எற்கு உறு பதம் உளது என உரைத்தான்

இன்ன தோன்றலே அவன் இதற்கு ஏது உண்டு இறையோய்

 

பொருள்:-

 

தலைவா (சுக்ரீவா)! என்னைப் பெற்ற வாயுதேவன், இந்த உலகங்களை எல்லாம் படைத்த பிரம்மாவை தனது கொப்பூழிலிருந்து தோற்றுவித்த விஷ்ணுவுக்குப் பணி செய்; அதுதான் சிறந்த தவம்; அப்படி நீ செய்தால் எனக்கும் நல்ல நிலை கிட்டும் என்றான். இந்த இராமந்தான் அந்தத் திருமால்/விஷ்ணு

 

கடவுள்  என்பது எப்படித் தெரியும்?

 

உடனே அனுமன் கேட்டான்; அப்பா (வாயுதேவனே); விஷ்ணுவை நான் எப்படிக் கண்டு பிடிப்பது; எனக்குத் தெரியாதே; ஏதேனும் அடையாளங்கள் சொல்லுங்கள்;

 

(அனுமன் மனதில் எழுந்த சந்தேகங்கள்: –  அவர் என்ன கலர் சட்டை போட்டுக் கொண்டு வருவார்? கைகளில் பை (suitcase) கொண்டுவருவாரா? கண்ணாடி (Spectacles) போட்டிருப்பாரா? மீசை வைத்த ஆளா? என்ன உயரம்? குட்டையா? நெட்டையா?)

96910-kkish1

வாயுதேவன் சொன்னான்:

யாராவது கஷ்டப்பாட்டால் ஓடி வந்து உதவி செய்வான்; இது முதல் அடையாளம்.

 

அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே உன் உடலில் அன்பு சுரக்கும்; அளக்கமுடியாத காதல் உருவாகும். இது இரண்டாவது அடையாளம்

 

இதோ கம்பன் சொற்கள்:-

 

துன்பு தோன்றியபொழுது உடன் தோன்றுவன் எவர்க்கும்

முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் இயம்ப

அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை

என்பு தோன்றல உருகின எனின் பிறிது எவனோ

 

பொருள்:-

 

நீ கூறிய அவனை அறிதற்கு என்ன வழி? – என்று நான் தந்தையான வாயுதேவனிடம் கேட்டேன். அதற்கு அவன், “அப் பெரியோன் எல்லார்க்கும் துன்பம் உண்டாகும் போது உடனே தோன்றுவான். மேலும் அவனைக் கண்ட அளவில் உனக்கு மனதில் அன்பு உண்டாகுவதே சான்றாகும்”- என்று கூறினான். அவன் சொன்ன படியே இந்த இராம பிரானைப் பார்த்த மாத்திரத்தில் என் உடல் எலும்பும் காணாதவாறு உருகிவிட்டது. இதற்கு மேலும் சந்தேகம் வருமா?

 

ஒருவருக்குத் துன்பம் வந்தால் கடவுளை நாடுவதை கிருஷ்ணனும் பகவத் கீதையில் சொல்கிறான். அதிலிருந்து துன்பப் பட்டோருக்கு கடவுள் உதவுகிறார் என்பது தெளிவு.

 

கண்ணன் சொல்லுகிறான்:-

1.துன்பம் அடைந்தவர்கள்

2.ஞானத்தைத் தேடுவோர்

3.செல்வத்தை விரும்புவோர்

4.ஏற்கனவே ஞானியானவன்

ஆகிய நாலு வகையான மனிதர்கள் என்னை வழிபடுகின்றனர் (பகவத் கீதை 7-16)

 

பாண்டவர்களின் தாயான குந்தீ சொல்கிறாள்:-

துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் எனக்கு அடிக்கடி துன்பம் வரட்டும்; இதுவே என் பிரார்த்தனை– (பாகவதம்)

 

விஷ்ணு சஹஸ்ர நாமத்திலும் இறுதியில் “சங்கீத நாராயண

சப்த மாத்ரம் விமுக்த துக்காஸ் சுகினோ பவந்து” என்று சொல்லப்படுகிறது. நாராயண என்ற சப்தம் கேட்ட மாத்திரத்தில் துன்பம் பறந்தோடிப் போய்விடும்; சுகம் தழைக்கும்.

 

–சுபம்–

Leave a comment

Leave a comment