
Picture: Anand Bhairav Temple, Haridwar
Written by S NAGARAJAN
Date: 7 December 2016
Time uploaded in London: 5-31 am
Post No.3425
Pictures are taken from various sources; thanks
contact; swami_48@yahoo.com
ஹரித்வார் பற்றிய உண்மை நிகழ்ச்சி
பாம்புகள் காத்த பைரவர் ஆலயம்!
ச.நாகராஜன்
இந்திய வரலாற்றின் பழைய ஏடுகள் அதிசயிக்கத்தக்க செய்திகளைத் தரும் ஒன்றாகும். இவற்றை முறையாகத் தொகுப்பார் இல்லாததால் அனைவரும் இந்த அதிசயச் செய்திகளை அறிய முடியாமல் போகிறது. வரலாற்று ஏடுகளிலிருந்து ஹரித்வாரைப் பற்றிய ஒரு உண்மை சம்பவம் :
பிரிட்டிஷார் நம்மை ஆண்டு வந்த காலத்தில் சர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் இந்திய தொல்லியல் பிரிவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தார். 1870-71ஆம் ஆண்டுகளில் தன்னால் இயன்றவரை தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைச் சேகரித்தார். அவரது அறிக்கையில் ஹரித்வார் ஸ்தலம் பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டில் பிரபலமாக இருந்தது என்றும் அப்போது அங்கு கோவில் கட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பின்னால் வந்த தொல்லியல் நிபுணர்களும் அகழ்வாராய்ச்சி நிபுணர்களும் இந்த தலம் மிகப் பழமையானது என்றும் சுமார் 3750 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறியுள்ளனர்.
கி.பி,1206ஆம் ஆண்டில் குத்புதீன் ஐபக் அடிமை வம்சத்தை இந்தியாவில் நிறுவினான்.1320இல் கயாசுதின் துக்ளக் தனது துக்ளக் வம்சத்தை நிறுவினான். இதில் வந்த அமிர் ஜாஃபர் தைமூர் 1398இல் ஒரு பயணத்தை மேற்கொண்டான்.

யமுனை நதிக் கரையோரம் படைகளுடன் சென்ற அவன் வழியில் இருந்த கோவில்களை இடித்தான்.டெல்லி, பீஜானூர் வழியே கங்கைக் கரையோரமாக முன்னேறிய அவன் ஹரித்வார் நகரை அடைந்தான்.
அங்கிருந்த யாத்ரீகர்களை அடித்து விரட்டிய அவன் நேராக மாயாதேவி கோவிலுக்கு அருகில் இருந்த பைரவர் ஆலயத்தை நோக்கிச் சென்றான்.
அதை இடித்துத் தள்ள ஆணையிட்டான். ஆனால் உடனே அவன் கண்ட காட்சி அவனை நடுநடுங்க வைத்தது.
ஏராளமான பாம்புகளும் தேள்களும் அங்கு தோன்றின. அவனது படைகளுக்கு சரி நிகர் சமானமாக பாம்புப் படைகளைக் கண்ட அவனது படைவீரர்கள் அலறிப் பின் வாங்கி ஓடினர்.
நடுநடுங்கிய தைமூர் சமர்கண்ட் நோக்கிச் சென்று விட்டான். ஹரித்வாரும் பிழைத்தது. பைரவர் ஆலயமும் பாம்புப் படையினால் காப்பாற்றப்பட்டது!
தைமூருடன் சென்ற வரலாற்றாசிரியன் ஷர்ஃபுடீன் ஹரித்வாரைப் பற்றியும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளையும் தன் நினைவுக் குறிப்புகளில் பதிந்து வைத்துள்ளதால் நடந்த நிகழ்ச்சிகளை நம்மால் அறிய முடிகிறது!

Haridwar Temples
*******