Written by London swaminathan
Date: 9 January 2017
Time uploaded in London:- 9-35 am
Post No.3528
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
ராம கிருஷ்ண பரமஹம்சரும் பட்டினத்தாரும் ஒரு அருமையான விஷயத்தை நமக்கு எளிய, கண்கண்ட காட்சி மூலம் விளக்குகிறார்கள்.
தண்ணீர் குடத்தை தலையில் சுமந்து வரும் பெண்ணோ காய்கறிக்கூடை அல்லது மீன் கூடைகளை தலையில் சுமந்து வரும் பெண்களோ வழியில் யாரைக் கண்டாலும் நின்று கொண்டு அரட்டை அடிப்பார்கள். போகும், வரும் வழியில் இருக்கும் விஷயங்களை வேடிக்கையும் பார்ப்பார்கள். ஆயினும் அவர்கள் தலையில் உள்ள நீர்க்குடமோ, கூடையோ கீழே விழாது. இதைக் கரக ஆட்டத்திலும் கழைக்கூத்தாடி ஆட்டத்திலும் கூட பார்க்கிறோம். ஆனால் கரக ஆட்டக்காரிகளும் கழைக்கூத்தாடிகளும் அதற்காகவே சிறு வயது முதல் விசேஷப் பயிற்சி பெற்றவர்கள். குடும்பப் பெண்களும் கூட தலையிலுள்ள பாரம் கீழே விழாமல் பாதுகாப்பது ஒரு அதிசயமே. இது சந்யாசியின் மனத்தைப் போன்றது ஒரு யோகியின் மனத்தைப் போன்றது.
உலகிலுள்ள சாதாரண மனிதன் செய்யும் எல்லாத் தொழில்களையும் அவர்களும் செய்வார்கள். ஆனால் சந்யாசியின் சித்தம் மட்டும் , காம்பஸிலுள்ள முள் எப்போதும் வடக்கு திசையையே காட்டி நிற்பது போல இறைவனையே நோக்கி இருக்கும். இதை பகவத் கீதையிலும் எவ்வளவோ இடங்களில் கண்ணபிரான் வலியுறுத்துகிறான். நாம் சந்யாசியின் உண்மை இயல்பை அறியாமல் அவர்களையும் நம்மைப்போல ஒருவர் என்று நினைத்து விடக்கூடாது.
இப்போது பட்டினததார் பாடலைப் படியுங்கள்; நன்கு விளங்கும்:-
எத்தொழிலைச் செய்தாலும் ஏது அவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கு மோனத்தே — வித்தகமாய்க்
காதி விளையாடி இரு கைவீசி வந்தாலும்
தாதி மன நீர்க்குடத்தே தான்
–பட்டினத்தார் பாடல்
பொருள்:-
என்ன காரியம் செய்தாலும் என்ன நிலைமைக்கு உள்ளானாலும் முக்தி அடைந்த மஹான்கள் எப்போதும் மவுன நிலையில் இருப்பர் (மனத்துக்குள்); ஒரு பெண் அழகாக நடை நடந்து, இரு கைககளையும் ஒய்யாரமாக வீசி நடந்து வந்தாலும் அந்தப் பெண்ணுக்கு மனது முழுதும் தலையிலுள்ள நீர்க்குடத்தின் மேல்தான் என்பதை அறிவாயாக!
ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்
இதையே ராம கிருஷ்ண பரமஹம்சரும் எளிய மொழியில் செப்புவார்:-
காந்த ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டுமாதலால் கடலில் செல்லும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய மனம் ஈஸ்வரனை நாடி இருக்கும் வரையில் அவன் உலக வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் (சம்சார சாகரம்) திசை தப்பி போக மாட்டான்.
— ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்
நமது கிராமத்துப் பெண்மணிகள், ஒன்றன் மீதொன்றாக நாலைந்து தண்ணீர்ப் பானைகளைத் தலையின் மீது வைத்துக்கொண்டு நடந்து செல்லும்போது ஒருவரோடொருவர் தங்களுடைய சுகதுக்கங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு போகின்றனர். ஆயினும் ஒரு சொட்டுத் தன்ணீரைக்கூட சிந்த விடுவதில்லை. அது போலவே தர்ம மார்கத்தில் நடக்கும் மனிதனும் நடக்க வேண்டும். எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தாலும் , அவனுடைய மனம் உண்மை நெறியை விட்டுக் கொஞ்சமேனும் விலகாமல், அவன் சதா ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
— ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள்
பட்டினத்தார் பாடலையும் பரமஹம்சரின் பொன்மொழிகளையும் ஒப்பிடும்போது அது நம் மனத்தில் பசும ரத்தாணி போல பதியும்!
–subaham–
Jayan Dgl
/ February 26, 2020இது விவேகசிந்தாமணியின் 208ம் பாடல் என நினைக்கிறேன்.
208.மனதை நிலைநிறுத்து ********************************
எத்தொழிலைச் செய்தாலு மேதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கு மோனத்தே – வித்தகமாக் காதிவிளை யாடியிரு கைவீசி வந்தாலும் தாதிமன நீர்க்குடத்தே தான்.
தலையில் நீர்க்குடத்தை வைத்துச் சுமந்து செல்லும் தாதியானவள் அக்குடத்தைக் கைகளால் பற்றாது கைகளை வீசி விளையாடி நடந்து சென்றாலும், அவளின் உள் மனம், “எங்கே நீர்க்குடம் தவறி விழுந்துவிடப் போகிறதோ?” என்று அதன்மேலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்தி நடந்து வருவாள். அதுபோல, முக்தர்கள் எந்த்தொழிலைச் செய்யினும் அவர்களின் உள்மனம் எப்பொழுதும் பிரமத்தை நினைத்துக் கொண்டிருக்கும். ஆகவே, நாம் எத்தொழிலைச் செய்தாலும் மனத்தை இறைவனிடம் செலுத்த, பிறப்பில்லை.