
Written by S NAGARAJAN
Date: 4 March 2017
Time uploaded in London:- 5-26 am
Post No.3688
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 22
ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 7
ச.நாகராஜன்
ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்
குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்
- ஸ்ரீ மண்டயம் அழகிய சிங்கப் பெருமாளைப் பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்றை குமரி மலர் வெளியிட்டுள்ளது. கட்டுரையைக் கீழே காணலாம் :
ஸ்ரீ மண்டயம் அழகிய சிங்கப் பெருமாள்
சி.சுப்பிரமணிய பாரதி (1909)
சென்னப் பட்டணம் திருவல்லிக்கேணியில், சென்ற செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீமண்டயம் அழகிய சிங்கப் பெருமாள் காலஞ்சென்று விட்டாரென்ற மஹா துக்ககரமான செய்தி மறுநாள் நமக்கெட்டிற்று.
தேச பக்தர்கள் இருவகைப் படுவர். ஒருவகை அரங்கத்திலாடுவது. மற்றொரு வகை திரைக்குப் பின்னேயிருந்து புகழறியாமல் பாடுபடுவது. இவற்றுள் முன்னதினும் பின்னது சிறந்ததாகக் கூறலாமேயல்லது குறைந்ததாகக் கருதத் தக்கதன்று.
காலஞ்சென்ற ஸ்ரீஅழகியசிங்கப் பெருமாள் பின் வகுப்பைச் சேர்ந்திருந்தவர். சென்னை பச்சையப்பன் காலேஜில் இவர் பல வருஷம் ‘ஹெட்மாஸ்டர்’ வேலை பார்த்துக் கொண்டு வந்தார். இன்னும் பலவிதமான கடமைகளுடையவர்.
ஆனால் இவ்வளவு தொழிலுக்குமிடையே, தேசபக்தி தீபத்தை இவர் தமது நெஞ்சில் எப்போதும் அவியாமல் பாதுகாத்து வந்தார். இக்குறிப்பெழுதுபவருக்கு அழகிய சிங்கப் பெருமாள் தமது அனுபவ முதிர்ச்சி கொண்ட தற்போதனைகளாலும், நட்பினாலும் அப்போதப்போது செய்து வந்த உதவி கொஞ்சநஞ்சமன்று.
நமது ‘இந்தியா’ பத்திரிகை ஆரம்பம் செய்வதற்கு மூலகாரணங்களா யிருந்தவர்களிலே பெருமாளொருவர். கல்கத்தாவில் நிவேதிதா தேவியிடம் ‘வாலிபராகிய எங்களை எல்லாம் மேலிருந்து நடத்துவதற்குத் தக்க முதுமை கொண்ட தேசபக்தித் தலைவர்கள் சென்னப்பட்டணத்திலில்லையே, என்ன செய்யலாம்’ என்று நாம் கேட்டதற்கு, அந்த அம்மை, ‘அழகிய சிங்கப் பெருமாளிருக்கிறார். பொது விஷயங்களில் தமக்கு சம்சயங்களேற்படுமானால், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.
நமது தேசபக்தி முயற்சிக்குத் தாய் முயற்சியாகிய ஸ்வாமி விவேகானந்தரது வேதாந்தப் பிரசாரத்தினால் அழகிய சிங்கப் பெருமாள் அளவிறந்த சிரத்தை பாராட்டியவர்.
1898-ம் வருஷத்தில் விவேகானந்தர் யரோ ஒரு சாதாரண ஸந்யாசியாக வந்து தென்னிந்தியாவில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடிய ம்கிமையைக் கண்டுபிடித்து, நாட்டிற்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர் ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளே.
இவருடைய முயற்சிகளினாலேயே ஸ்வாமி அமெரிக்காவுக்குப் போய், ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப் படுத்தும்படி ஏற்பட்டது. அப்பால் ஸ்வாமியுடைய ஆக்கினைப்படி, இவர் ‘பிரம்மவாதின்’ என்றொரு வேதாந்த மாதப் பத்திரிகை ஏற்படுத்தி மிகத் திறமையுடன் சென்ற பதினைந்து வருஷங்களாக நடத்தி வந்தார்.
இவரை இழந்தது தேசமுழுமைக்கும் பெரு நஷ்டமாகும். மரிக்கும் பொழுது இவருக்கு வயது நாற்பத்து நான்கு. இப்படி அகாலத்தில் இவரைப் பிரிந்து வருந்தும் இவருடைய குடும்பத்தார்களுக்கு நாம் மனப்பூர்வமான அநுதாபம் தெரிவிக்கின்றோம்.
- ‘இந்தியா’
- 15-5-1909 தலையங்கம்
- அடுத்து குமரி மலரில் ஸ்ரீவிவேகான்ந்தரைப் பற்றி மஹாகவி எழுதிய நீண்ட வரலாறு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சக்கரவர்த்தினி இதழில் (ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதி) சென்னை 1906 மார்ச் தொகுதி 1, பகுதி 8 –இல் இக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
கட்டுரையின் தலைப்பு:-
ஸ்ரீமத் ஸ்வாமி விவேகானந்த பரமஹம்ஸர்
சுப்பிரமணிய பாரதி (1906)
மிக நீண்ட இந்தக் கட்டுரையில் ஸ்வாமிஜியின் பிறப்பு, குழந்தைப் பருவம்,இளமை, குரு தரிச்னம் ஆகிய தலைப்புகளில் வாழ்க்கை வரலாற்றைத் தந்துள்ளார் மஹாகவி.
கட்டுரையின் பிற்பகுதி கிடைக்கவில்லை என்ற குறிப்பும் குமரிமலரில் காணப்படுகிறது.
- அடுத்து ‘பவுத்த மார்க்கத்திலே மாதர்களின் நிலை’ சி.சுப்பிரமணிய பாரதி (1906) என்ற தலைப்பில் உள்ள கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
கட்டுரையின் கீழ் உள்ள குறிப்பு இது:-
சக்ரவர்த்தினி சென்னை
1906 பிப்ரவரி, தொகுதி 1, பகுதி, 7
(ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதி)
இன்னும் சில கட்டுரைகளை அடுத்துப் பார்க்கலாம்.
-தொடரும்